Friday, February 26, 2016

சூடான தேநீராய் ஷோபனாவின் கவிதை

 (சா. ஷோபனாவின் “ அடர் மௌனம்” கவிதை நூலை முன்வைத்து)  

“காலைப் பரபரப்பில்
குடிக்க முடியாமல் ஆறிபோன
தேநீராய் என் கவிதை”

என்று தனது கவிதைகளைப் பற்றி ஷோபனா எழுதுகிறார். இதில் ‘என்’ என்பது ஏறத்தாழ எல்லாப் பெண் படைப்பாளிகளுக்குமே பொருந்தக் கூடிய வார்த்தையாகவே படுகிறது. மூன்று வரிகளுக்குள் பெண் ஆளுமைகள் எதிர்கொள்ளும் தடைகளை, இன்னல்களை, வலிகளை எப்படி இவ்வளவு அழகாக இவரால் சொல்ல முடிகிறது என்பது வியப்பாய்தான் இருக்கிறது.

ஒரு பெண், அதுவும் குடும்பத் தலைவியாய் உள்ள ஒரு பெண் படைப்பாளியாய் உருப்பெறுவது என்பது ஆயிரம்தான் மாநாடுகள் போட்டு மறுத்தாலும் ஒரு ஆண் படைப்பாளியாய் உருப்பெறுவது மாதிரி அப்படி ஒன்றும் எளிதானதல்ல. ஆணுக்குள்ள அத்தனை தடைகளோடும் தான் ஒரு பெண் என்ற தடையையும் தாண்டித்தான் ஒரு பெண் தன்னை படைப்பாளியாய் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒரு கவியரங்கத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்தே கவிதை வாசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் எந்த வேலையும் பார்க்காமல் கவிதை எழுதுவதிலேயே கவனமாக இருப்பார். அந்த நேரத்தில் குழந்தை பாடத்தில் தனக்கிருக்கும்  சந்தேகத்தை தெளிவுபடுத்துமாறு கேட்டால் தான் கவிதை எழுதிக் கொண்டிருப்பதாகவும், எனவே தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் கூறி காலை சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் அனுப்பி வைப்பார். அவருக்கும் குழந்தைகளுக்கும் சுடுதண்ணீர் வைப்பதிலிருந்து, அனைவருக்கும் சமைத்து, பாத்திரங்கள் கழுவி, வீடு சுத்தம் செய்து, அனைவர்து துணியையும் சேர்த்தே துவைத்துப் போட்டு எஞ்சிக் கிடைக்கும் நேரத்தில்தான் இவர் கவியரங்கத்திற்கான கவிதையை எழுத வேண்டும். நாள்பூராவும் ஓய்வாய் அமர்ந்து கவிதை எழுதி வரும் ஆண்களை எல்லா வேலைகளையும் முடித்து கிடைக்கும் சன்னமான பொழுதில் கவிதை எழுதி மேடையில் நின்று காண்பிப்பது என்பது இருக்கிறதே, அப்பப்பா அதை அனுபவித்தால்தான் அதன் வலி புரியும்.

“முகமூடி” என்றொரு கவிதை. சந்தேகப் பிராணிகளை பகடி என்றால் பகடி அப்படி ஒரு பகடி செய்கிறார். இந்த சந்தேக சாம்பிராணிகள் மனைவியின் அலைபேசியை ஏதோ காரணம் சொல்லி வாங்கி எண்களை அழுத்துகிற சாக்கில் வந்த போன அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளின் வரலாறை ஆராயும். சோபனா எழுதுகிறார்,

“ முக்கியமான எதையோ
  பார்ப்பதான பாசாங்கில்
  தொடர்பு எண்களின்
  பெயர்களைப் பார்க்கிறாய்”

தெரியும்டா, என்ன செய்கிறாய் என்று. பார், மகனே, பார் என்பதான பகடி பெண்களின் வலியிலிருந்து பிறப்பது என்பதுதான் கொள்ள வேண்டிய விஷயம்.

“என்
ஒவ்வொரு அசைவையும்
 கண்காணிக்கும் கண்கள்
 முகமூடியை மீறியும்
 வெளியே தெரிவதை
 மறைக்க முடியவில்லையென
 உணராமல் இருக்கிறாய் பாவம்”

நீ கண்காணிப்பது தெரியும்டா, எனக்குத் தெரியாது என்று நினைக்கும் அசடே, நீ பாவம்டா என்கிற பகடி தொடக்கம்தான். கண்காணிக்கிறாய் என்பது தெரியும், இனியும் தொடர்ந்தால் செத்தடா மகனே என்பது எம் பெண்களின் அடுத்த நிலையாக இருக்கும், இருக்க வேண்டும்.

”தொலைந்த பொழுதுகள்” என்றொரு கவிதை.

‘எனக்கான உன் நேரம்
எப்போதோ மிக அரிதாய்”

என்று தொடங்குகிறார். மனைவியிடம் செலவு செய்வதற்கு அரிதாய் அவன் ஒதுக்கும் அந்த நேரத்தில் தனது சந்தோசத்தை, ரணத்தை, வலியை அவனோடு பகிர்ந்துகொள்ள துடிக்கும் அவளிடம்

“ ‘ம்’ என
 ஒற்றைச் சொல்லால்
 ஒதுங்கிச் செல்கிறாய்”

என்று முடிக்கிறார். தனக்காகவும் தன் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்காவும் தேய்ந்து அழியும் தனது மனுஷியிடம் பேச நேரற்று காட்டிக் கொள்ளும் ஆண்களை என்ன செய்வது?

“அடர் மௌனம்” இந்தத் தொகுப்பில் உள்ள மிக முக்கியமான கவிதைகளுள் ஒன்று.
இருவருக்கு இடையே இருக்கும் மௌனத்தை யார் உடைப்பது என்பதை மிக அழகியலோடு சொல்லும் கவிதை.

அவரது முதல் தொகுப்பு இது. முதல் தொகுப்பிற்கே உரிய மழலைத் தனங்களும் இவற்றில் உண்டு. இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு செதுக்கியிருக்கலாம் என்கிறமாதிரியான இடங்களும் தொகுப்பில் உண்டுதான். ஆனால் பெண்ணின் வலியை, அதன் ஆழம் கெடாமல் இவ்வளவு மென்மையான வார்த்தைகளால் சொல்வதென்பது யாருக்கும் சிரம்மான விஷயம்தான்.

மிக நல்ல தொடக்கம். சுறு சுறுப்பான குடும்பத் தலவி, நல்ல அலுவலர், அது கடந்தும் தான் சார்ந்த ஊழியர் சங்கத்தின் டிவிஷனல் பொறுப்பாளர் என்கிற எல்லா நிலைகளையும் தாண்டி கவிதைக்கும் அவர் எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்பது வியப்பாய்த்தான் இருக்கிறது.

ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம் இருக்கிறது. கவிதை வருகிறது, விடாது தொடர்ந்து எழுதுங்கள்.

“ஒவ்வொரு பறவைக்கும்
வானில் இடம் உண்டு”

என்று எழுதுகிறார். கவிதை வானில் இவரது கவிதைகளுக்கும் நிச்சயமாய் இடம் உண்டு.

தொடர்புக்கு,
ரங்கநாயகி பதிப்பகம்
33,ஏ, நித்யா நகர் இரண்டாவது தெரு,
கன்ன்ங்குறிச்சி
சேலம் 636008

4 comments:

  1. வலைப்பூவிலும் என் கவிதை நூலை அறிமுகம் செய்தமைக்கு மிக மிக நன்றி தோழர்

    ReplyDelete
    Replies
    1. நன்றியெல்லாம் வேண்டாங்க சோபனா. ஒரு கோப்பை தேநீர் அனுப்புங்கள்

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...