Thursday, February 11, 2016

17 முதல் முறையாக எழுதப் பட்ட இறுதிக் கடிதம்

இடுப்பில் மட்டுமே ஒரு அழுக்கு உடையோடு பார்ப்பதற்கு அவ்வளவாய் சகிக்காத ஒரு தோற்றத்தோடு விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தான் அந்த மனிதன். இளைஞர்களிடத்தே அவன் தான் உண்மை என்று நம்பியவற்றை உரத்த குரலில் எடுத்துக் கூறினான். கிறுக்கனுக்கு நெறுக்கமான தோற்றத்திலிருந்த அவனைப் பார்த்து கிரேக்க அதிகார வர்க்கம் ஆடிப் போய் அடங்கவொன்னா சினம் கொண்டது. ஒரு பித்துக் குளியைப் போல அவனறிந்த உண்மைகளைப் பேசிக் கொண்டிருந்த ஒரு எளிய மனிதனைப் பார்த்து கிரேக்க ஆதிக்க வர்க்கமும் அவர்களது மதமும் பயந்து போயின. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அதிகாரமோ மதமோ அல்லது வேறு எதுவோ, மக்களிடமிருந்து அந்நியப் பட்டுக் கிடக்கும் கட்டுமானம் எதுவாயிருந்தாலும் உண்மையைக் கண்டு கலங்கவே செய்யும். உண்மைகளையும் உண்மையை பேசுபவர்களையும் அவை அழித்துவிடவே முயலும்.

கிரீஸ் நாட்டின் நீதிமன்றத்தின் முன் அவனைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

1)   கிரேக்க கடவுளர்களை வாய்க்கு வந்தபடி தூற்றுகிறான்
2)   புதிய மத்த்தைப் பரப்பி இளைஞர்களைக் கெடுக்கிறான்

என்று அவன்மீது குற்றம் சுமத்தினார்கள். 500 பேர் கொண்ட விசாரனைக்குழு அந்த மனிதன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தது. அவர்களில் 280 பேர் அவனை குற்றவாளி என்றார்கள். 220 பேர் அவனை ரிரபராதி என்றார்கள். பெரும்பாண்மை விசாரனைக் குழு உறுப்பினர்கள் குற்றவாளி என்று முடிவெடுத்து விட்டதால் சாக்ரட்டீஸ் தண்டனைக்கு உரியவர் என்று முடிவெடுத்தார்கள். எனவே அவருக்கு என்ன தண்டனை தரலாம் என்றும் அவரையே கேட்டார்கள்.

நேரமாகிறது, நீங்கள் வாழச் செல்லுங்கள். நான் சாகச் செல்கிறேன்என்றான் அந்த ஞானக் கிறுக்கன்.

அவன் கோப்பையில் தரப் பட்ட விஷத்தைக் குடித்து செத்துப் போனான். அவனுக்கு நிறைய அறிஞர்கள் மாணவர்களாக இருந்தனர். ஆகவே அவனொரு ஆசிரியன்.

அன்றைக்கிருந்த மதக் கோட்பாடுகள் மனிதத்திலிருந்து மக்களை அந்நியப் படுத்துவதால் அவற்றை அம்பலப் படுத்தினான். தான் பொய் என்று கருதியதை பொய் என்று சொன்னான். தவறை தவறென்று சொன்னான் என்பதற்காக அவனை விஷம் கொடுத்துக் கொன்றார்கள்.

இது நடந்த்து கி.மு 399 வாக்கில்.

இது நிகழ்ந்து ஏறத்தாழ 2415 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்கிறான்

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கிடையே தகறாறு ஏற்படுகிறது. அந்தத் தகறாறு பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) பிரிவு மாணவர்களுக்கும் அண்ணல் அம்பேத்கார் மாணவர் அமைப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இடையேயும் நடக்கிறது. இதில் ஏபிவிபி அமைப்பு ஆர்எஸ்எஸ் அமைப்போடு தொடர்புடைய அமைப்பு.

1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப் பட்ட யஹூப் மேமனின் தூக்கிற்கு எதிராக சில மாணவர் அமைப்புகள் போராடின. அவற்ருள் அண்ணல் அம்பேத்கார் மாணவர் அமைப்பும் ஒன்று. இதற்கு எதிராக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் போராடுகின்றனர். இயல்பாகவே இரு சாராருக்கும் மோதலாக இது மாறுகிறது. ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் மத்திய இணை அமைச்சர் மாண்பமை பண்டாரு தாத்ரேயா அவர்களைடம் உதவி கோருகிறார்கள்.

 மாண்பமை பண்டாரு தாத்ரேயா அவர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்பமை ஸ்மிருதி ராணி அவர்களுக்கு கடிதம் எழுதியதாக நம்பச்ப் படுகிறது. அந்தக் கடித்த்தில் ஏபிவிபி மாணவர்களுக்கு ஆதரவாகவும்தேசவிரோத நடவடிக்கைகளில்ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு அந்தக் கடித்ததில் அவர் கோரிக்கை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் சமூகம் மற்றும் தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வந்ததாகவும் ஏபிவிபி இயக்கத்தினர் தாக்கப் பட்டதாகவும் தன்னிடம் புகார் மனு தரப் பட்டதாகவும் அதனை அப்படியே தான் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்ததாகவும், மற்றபடி அதன் பிறகு என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும், இதற்கும் தனது கட்சிக்கும் கொஞ்சமும் தொடர்பு கிடையாது என்றும் மாண்பமை பண்டாரு தாத்ரேயா கூறியதாக ஜனவரி 19 ஆம் தேதியிட்டதி இந்துகூறுகிறது.  

தான் இவ்விவகாரத்தில் தலையிடுவதற்கு முன்னமே தலித் மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு விட்டதாகவும் தான் தண்டனைக் குறைப்பு பற்றி பேராசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் திரு அப்பாராவ் அவர்கள் கூறியுள்ளார்.

நடந்துள்ளவைகளுக்கும் மத்திய அரசிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தாம் உண்மை கண்டறியும் குழுவினரின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும்மாண்பமை இராணி அவர்கள் கூறியுள்ளார்.

நமக்கொரு கேள்வி இயல்பாகவே துறுத்துகிறது. இவர்கள் யாருக்குமே தெரியாமல்தான் அந்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டார்களா? அதுவே தெரியாதென்றாலும் பாதிக்கப் பட்ட மாணவர்கள் கூடாரமடித்து நான்கு நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருப்பதை இவர்கள் அறிந்திருக்கவே இல்லையாஇவை இரண்டிற்கும் இவர்களது பதில் ஆம் என்றே இருக்குமானால் இவர்கள் அனைவரும் இவர்கள் எதை சொன்னாலும் நாம் அப்படியே நம்பிவிடுவோம் என்றா இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இது நேரெதிரான இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கக் கூடிய போராட்டம் என்பதை இந்தப் புள்ளியிலேனும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதற்கு பதில் எதைக் கொண்டேனும் பூசி மெழுகுவதற்கு முயற்சித்தோமெனில் வருங்காலங்களில் இதைவிட மோசமானதும் அசிங்கமானதுமான நிகழ்வுகளையே நம்மால் பார்க்க முடியும்.

மேமனின் தூக்கு என்பதை தேசிய கௌரவமாக ஒரு சாரார் பார்த்திருக்கிரார்கள். மறுசாரார் அதற்கு நேரெதிராக இருந்திருக்கிறார்கள். தூக்கு அர்த்தமற்றது, எனவே தூக்கினை முற்றாக ஒழிக்கப் பட வேண்டும் என்று கோறுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறதா இல்லையா. தூக்கு வேண்டும் என்று கோருவதற்கு ஒருவருக்கு உரிமை இருக்கும் பட்சத்தில் அதை மறுப்பதற்கு இன்னொருவருக்கும் உரிமை உண்டுதானே? இரண்டிற்கும் உரிமை உண்டு என்பதை நாம் முதலில் அங்கீகரித்தே ஆக வேண்டும். இன்னும் சொல்லப் போனால் கோட்சேவை நியாயவாதியாகவும் நிரபராதியாகவும் ஒரு பிரிவினர் வாய்ப்புக் கிடைக்கிற இடங்களில் எல்லாம் பதியவே செய்கின்றனர். இதற்கு வெகு ஜன ஊடகங்களும் உதவி செய்கின்றன. இது அவர்களது உரிமை. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதற்காக அவர்கள் அவர்களது கருத்தை சொல்லக் கூடாது என்று சொல்வதற்கு எனக்கென்ன உரிமை இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் என் கருத்தை கூறுவதற்கு எனக்கான உரிமையை இவர்கள் மறுப்பதே ஆகும்.

இப்போது ஊடகங்களில் நடக்கும் விவாதங்களின் தன்மை குறித்து மத்திய நிதி அமைச்சர் மாண்பமை அருண் ஜேட்லி அவர்களே மிகவும் நொந்துபோன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நேர்காணல் ஒன்று தெளிவு படுத்துகிறது.

ஊடக விவாதங்களின் வளர்ச்சி செய்திக்கும் கருத்துக்கும் இடையேயான கோட்டினை வலுவிழக்கச் செய்திருக்கிறதுஎன்று அவர் கூறியிருக்கிறார். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று சொல்வார்கள். ஆக செய்தி என்பது வரலாறு. கருத்து என்பது அந்த செய்தியின் மீதான நமது அபிப்பிராயம். இன்னும் கொஞ்சம் புரிகிற மாதிரி எளிமைப் படுத்தினால் செய்தி என்பதை ஒரு நிகழ்வாகவோ அல்லது செயலாகவோ கொள்ளலாம். கருத்து என்பது அந்த நிகழ்வின் அல்லது செயலின் மீதான நமது விமர்சனம்.

ஆனால் இத்தகைய விவாதங்களில் பலர் தத்தமது கருத்துக்களையே செய்தியாக நிறுவிட முயலவது நடக்கிறது. அவர்களுக்கு ஊடகங்களும் துணை போகின்றன என்பதைத்தான் மாண்பமை அருண்ஜேட்லி கூறுகிறார். பிரச்சினை என்னவெனில் அவரே கூசும் அளவிற்கு அவர் சார்ந்த கருத்துக்கு சொந்தக் காரர்கள்தான் இதை இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் சிலர் ரோஹித் தலித்தே இல்லை என்று வாதிடுமளவிற்கு செல்கின்றனர். இரண்டு பிள்ளைகளைப் பெற்ற நான் கேட்கிறேன், ரோஹித் ஒரு தலித் ஆக இல்லை என்றால் என்ன? அவனை தலித் இல்லை என்று நிறுவ முயல்வதன் மூலம் எதை சொல்ல வருகிறீர்கள். அவன் தலித் இல்லை என்றால் அவன் தற்கொலை குறித்து பேசக் கூடாதா? என் மகன் வயதொத்த பிள்ளை அவன். அவன் என்ன ஜாதியைச் சார்ந்தவன் என்றாலும் அவனை தற்கொலைக்கு தள்ளிய எவனையும் நான் கேள்வி கேட்கவே செய்வேன். காரணம் நான் ஒரு தகப்பன்.

ஒருக்கால் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்யாக இருந்து அவர்கள் சிங்கள இனத்தை அழித்துக் கொண்டிருந்தால் என் பேணா நிச்சயமாக சிங்களவர்களுக்காகத்தான் எழுதும்என்று தோழர் இன்குலாப் ஒரு முறை சொன்னார்.

நல்ல ஒரு கல்வி ஒடுக்கப் படும் மக்கள் யாராயினும் அவர்களுக்கு எதிராக நம்மைப் போராடத் தூண்ட வேண்டும். அந்தப் பக்குவத்திற்கு எது சரி என்று கண்டடைய வேண்டும். அதற்கு வகுப்பறைப் படிப்பு மட்டும் போதாது. நல்ல விவாதங்களும் வேண்டும்.

நல்ல கல்வி ஆரோக்கியமான விவாதங்களுக்கு மாணவர்களை உந்தித் தள்ளும். இங்கோ பாடப் புத்தகம் சொல்வதை அப்படியே மாணவனை நம்பச் சொல்கிறது. பாடப் புத்தகங்களை அவற்ரை எழுதுபவர்களின் சித்தாந்தம் முடிவு செய்கிறது. பாட நூல்களை எழுதுபவர்களை ஆளும் வர்க்கம் முடிவு செய்கிறது.

’I am happy dead than alive’ என்று எழுதி வைத்திருக்கிறான் அந்தக் குழந்தை. வாழ்வதைவிட சாவதே தனக்கு மகிழ்ச்சி தருவது என்று ஒரு அறிவியல் ஆய்வாளனை என்று எழுத வைத்திருக்கிற இந்தப் பாழாய்ப் போன கட்டமைப்பை தூக்கிக் கடாச வேண்டாமா? 24 வயது பிள்ளை, பெரிய அறிவியல் எழுத்தாளனாய் மாற ஆசைப் பட்ட பிள்ளையை தூக்குக் கயிறை எடுக்க வைத்த எதுவாயினும் அதை கடாச வேண்டாமா? அந்தக் குழந்தை ‘my first time of a final letter’ என்று குறிப்பிடும் தனது முதல் முறையாக எழுதிய கடைசிக் கடிதத்தில் ஒரு இடத்தில் ‘our feelings are second handed’ என்று விமர்சிக்கிறான். அது சரிதானே.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே பல்கலைக் கழகத்தில் இதே போன்றொரு ஆய்வு மாணவனை சாதி காவு கொண்டதாக செய்திகள் வருகின்றன. அப்போதே விழித்திருந்தால் இப்போது ரோஹித்தை நாம் இழந்திருக்க மாட்டோம். இப்போதும் விழிக்காவிட்டால் அடுத்தது யாராயினும் அவன் நம்மில் ஒருவரின் குழந்தைதான்

‘Do not trouble my friends and enemies on this after I am gone’ என்றொரு இடத்தில் அவன் எழுதுகிறான். தன் மரணத்தின் பொருட்டு அவனது எதிரிகளையும் யாரும் துன்புறுத்தக் கூடாது என்று கோருகிறான். தனது எதிரியைக் கூட, தன் சாவிற்கு காரணமானவனைக் கூட தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அந்தக் குழந்தை சொல்கிறான். ஆனால் காரணங்கள் அழிக்கப்பட வேண்டியவை.

எது குறித்தும் விவாதிக்கிற, விவாதித்து கண்டுணரும் விஷயத்தை ஒப்புக் கொள்கிற ஒரு கல்வித் திட்டத்தை சத்தமாய் கேட்போம்.




2 comments:

  1. //இது நேரெதிரான இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கக் கூடிய போராட்டம் என்பதை இந்தப் புள்ளியிலேனும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்//இது தான் உண்மை அய்யா . இந்த போரின் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றோமா என்று கூட சில நேரங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள் உணர்த்துகின்றது ...

    ReplyDelete
    Replies
    1. வேலை நிறைய இருக்குங்க கனி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...