Wednesday, February 17, 2016

18 விலை அதிகம் சரக்கு மோசம்

‘காட் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால் கல்வி என்ன செத்தா போய்விடும்?’ என்று கேட்ட என் தோழனை, ‘ஆமாம், செத்துதான் போகும், செத்தேதான் போகும்’ என்ற என் பதிலை விடவும் அதை சொன்னபோது எனக்கேற்பட்ட படபடப்பு மிகவும் பாதித்திருக்க வேண்டும். 

‘என்னதிது ஒரு சாதாரண விஷயத்திற்கு இவ்வளவு பதறுகிறாயே? நான்கூட உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தே போனேன்’ என்று சொன்ன என் தோழன் ஒரு முனைவர். இரண்டு விஷயங்கள் எனது முகத்தில் அறைந்தன.

உயர் கல்வியை உடனடியாக காவு வாங்கும் காட் ஒப்பந்தம் ஒரு சீரான வேகத்தில் மொத்தக் கல்வியையும் அழித்துப் போடும் என்ற விவரம் முனைவர் ஒருவரையே இன்னும் சென்றடையவில்லை என்பது.
ஒரு முனைவரையே இந்த ஆபத்து குறித்த தகவல் போய் சேராத பட்சத்தில் பொதுத் தளத்தில், சமூக வளைதளங்களில் நாம் என்னதான் செய்து கிழித்தோம் என்ற ஆற்றாமை.

அந்த நண்பரது அறிவாற்றலும் சமூக அக்கறையும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. வாசித்துக் குவிக்கிற வெறிகொண்ட வாசகர் அவர். இன்றைய பாடத்திட்டம், தேர்வுமுறை போன்றவற்றோடு வெகுவாக முரண்பட்டு அவற்றிற்கான எதிர்ப்பியக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். அப்படிப் பட்டவருக்கே இதன் பின் விளைவுகள் இன்னமும் போய்ச் சேரவில்லை எனில் சராசரி ஜனங்களுக்கு எப்படிப் போய்ச் சேரும்.

காட் ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டால் நாட்டில் புதிது புதிதாய், பெரிது பெரிதாய், தரமான உயர் கல்விக் கூடங்கள்  வந்து சேரும் என்று ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த மாயையின் கவர்ச்சிகரமான வெளிச்சத்தில் மத்திய மற்றும் நடுத்தர மக்களில் ஒரு பகுதியினர் அரசு இதை எப்போது செய்யும் என்றுகூட எதிர்பார்க்கவும் செய்கின்றனர்.

காட் ஒப்பந்தத்தின் வழியாக உயர் கல்வி நிறுவனங்களுக்கு வாசலைத் திறந்துவிடும் பிரிவில் கையெழுத்துப் போடும் உரிமை இந்த நாட்டின் கல்வி அமைச்சருக்கு இல்லை. அதை செய்ய வேண்டியது வர்த்தகத் துறை அமைச்சர் என்ற உண்மையே இந்தப் பிரிவின் சாரத்தை நமக்குத் தெளிவு படுத்துகிறது. 

இது மட்டுமல்ல, அயல்நாட்டு கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தும் கல்வி நிலையங்கள் சர்வதேசத் தரத்துடன்தானே இருக்கும் என்பதுகூட பொய்களைப் பிசைந்து செய்த ஒரு ஏமாற்றுப் பிம்பம்தான். 

2004 ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் மாண்பமை நரசிம்மராவ் அவர்கள் காட் ஒப்பந்தத்தில் விருப்பக் கையெழுத்திட்டபோது சில விஷயங்கள் பளிச்செனத் தெரிய ஆரம்பித்தன. காட் எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி நிதி முதலீட்டார்களின் நலன்தான் இதில் பிரதானம் என்பதைத் தெளிவு படுத்தியது. நடைமுறைப் படுத்தப் படும் திட்டம் வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. நடைமுறை பலனளிக்காவிட்டாலும் முதல் போட்டவனுக்கு நட்டம் வராமல் அந்தந்த அரசாங்கங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபட சொன்னது.

நாடே சந்தையாய் மாறிப்போன ஒரு சூழலில் கல்வி சரக்காகவும் மாணவர்கள் நுகர்வோராகவும் மாறிப் போக வேண்டும் என்கிறது. 

தரமான கல்வியும் மருத்துவமும் தேவை எனக் கோரும் மக்கள் அதற்கான செலவை செய்துதான் ஆகவேண்டும் என்று காட்டின் ஒரு ஷரத்து சொல்கிறது.  

நுகர்வோரைப் பற்றியோ அவனுக்கு கிடைக்கும் கல்வியின் தரம் பற்றியோ எந்தக் கவலையும் கொள்ளாத ழதே நேரம் முதலுக்கு மட்டும் சேதாரம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அந்நிய கல்வி என்பது வடிகட்டிய மூன்றாம்தர வியாபாரம்.

லாபமோ நட்டமோ அதுபற்றி நமக்கென்ன கவலை? அந்நிய மூலதனம் கொண்டு கட்டப்படும் கட்டமைப்பு தரமானதாகத்தானே இருக்கும் என்கிற சராசரி பொதுப் புத்தியையும் தவறென்று சொல்கிறது உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு கருத்து. ‘வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த, கல்விக்கு பெயர்போன பல்கலைக் கழகங்கள்கூட பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் கொஞ்சமும் தரமற்ற பல்கலைக் கழகங்களையே கட்டமைத்துள்ளன’ என்கிற உலக வங்கியின் 2000 வருடத்தின் ஆய்வறிக்கையின் ஒரு பகுதியை தோழர் நியாஸ் அவர்கள் இயல்வாகை வெளியிட்டுள்ள ‘களவு போகும் கல்வி’ என்கிற தனது குறுநூலில் வைத்திருக்கிறார். இந்தக் கருத்தை இடதுசாரிகளோ அல்லது அவர்களின் மாணவர் அமைப்புகளோ கூறியிருந்தால்கூட இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறலாம். காட் ஒப்பந்தத்தை ஆதரிக்கக் கூடிய இன்னும் தெளிவாக சொல்வது என்றால் கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எது ஒன்றும் சேவை அல்ல என்பதை அரசாங்கங்களுக்கு தெளிவாக அறிவுறுத்தக் கூடிய ‘உலக வங்கி’ தான் இதை சொல்கிறது என்பதால் இதில் சன்னமான அளவிற்குக் கூட பொய் இருக்க வாய்ப்பில்லை.

மேல்தட்டு வர்க்கமும், மத்தியதர வர்க்கமும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை வரவேற்பதற்கு அவை அரசு மற்றும் உள்ளூர் தனியார் பல்கலைக் கழகங்களை விடவும் தரமான கட்டமைப்போடு தரமான பேராசிரியர்களைக் கொண்டு நல்ல உயர் கல்வியை தம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான்.

‘குறைவான விலை தரமான சரக்கு’ என்பதுதான் மக்களை ஈர்க்கும் விளம்பரமாக ஒரு காலம் வரைக்கும் இருந்தது. இந்த விளம்பரம் மக்களை ஈர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டபோது ‘ஈகிள் சீயக்காய்’ நிறுவனம், ‘விலை அதிகம் சரக்கு நயம்’ என்கிற விளம்பரம் மூலம் மக்களை சலனப் படுத்துவதில் வெற்றி கண்டது. அதிக விலை கொண்ட சரக்குதான் தரமானதாக இருக்க முடியும் என்கிற ஒரு மோசமான விஷயத்தை பொதுப் புத்தியில் விதைக்கிற முயற்சியில் வெற்றி பெற்ற விளம்பர யுக்தி அது. இன்னொரு புள்ளிக்கு மேல் நகர்ந்து மக்கள் மத்தியில் நல்ல சரக்கை குறைந்த விலைக்குத் தர இயலாது என்கிற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்தது. இன்னும் கொஞ்சம் மேலே போய் குறைவான விலைக்கு கிடைக்குமானால் அது தரமற்றதாகத்தான் இருக்கும் என்றும் மக்களை பையப் பைய நம்ப வைத்தது.

இலவசமாக அல்லது குறைந்த செலவில் கிடைக்கிற காரணத்தினாலேயே பொதுக் கல்வி தரமற்றதாகத்தான் இருக்கும் என்று கட்டமைக்கப்பட்ட பொதுப் புத்தி மக்களை தனியார் கல்வி நிலையங்களை நோக்கி விரட்டித்தள்ளிய முக்கியமான காரணிகளுள் ஒன்றாகக் கொள்ளலாம்.

ஆனால் ‘விலை அதிகம் சரக்கோ மோசம்’ என்று உலக வங்கியே சான்றளித்த பின்பும் அதைத் தன் மண்ணில் கொண்டு வந்துவிடத் துடிக்கும் அரசாங்கத்தின் வெறிகொண்ட ஆசையைத்தான் அம்பலப் படுத்தி அதற்கெதிராக மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு ‘தேசம் காத்தலின்’ ஒரு கூறே ஆகும்.

இதைவிட மிக முக்கியமான ஆபத்தான ஷரத்தொன்றும் காட்டில் இருக்கிறது. Government procurement article X111 என்கிற காட்டின் ஷரத்தொன்றினை தோழர் நியாஸ் தனது ‘களவு போகும் கல்வி’ யில் வைத்திருக்கிறார்.

இந்த ஷரத்தைப் புரிகிறமாதிரி சொல்வது அவசியம் என்று தோன்றுகிறது. ‘ஒரே வகைக்குள் அடங்குகிற கல்வி நிலையங்களுக்கு ஒரே விதமான சலுகைகளை அரசாங்கம் வழங்க வேண்டும்’ என்கிறது அந்த ஷரத்து.

மேலோட்டமான ஒரு வாசிப்பில் இது சரியானதென்றே தோன்றும். எல்லா கல்வி நிலையங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றுகூட தோன்றும்.

‘ஒரே வகையான கட்டமைப்பிற்குள் அடங்குகிற’ என்றால் என்ன என்று பார்ப்போம். இலவசமாக கல்வி வழங்குகிற தனியார் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் யாவும் இவை இலவசமாக கல்வியைத் தருவதால் இவை யாவும் ‘ஒரே வகையான கட்டமைப்பிற்குள் அடங்குகிற’ தன்மை கொண்டவை.

ஒரே கட்டமைப்பில் அடங்குகிற கல்வி நிலையங்களுக்கு ஒரே மாதிரி அசலுகைகளைத்தான் அரசு வழங்க வேண்டும் என்று தெளிவு படுத்துகிறது காட். 

இலவசமாக கல்வியைத் தரும் தனது கல்வி நிலையங்களுக்கான இடத்தை அரசாங்கம் வழங்கும். மின்சாரம் மற்றும் தளவாட செலவுகளை அரசு ஏற்கும். இது சரியான நடைமுறை என்பதில் கிறுக்கனுக்கும் இரண்டாவது கருத்திருக்காது. காட் அமலுக்கு வந்தால் ஒரே வகை கல்வி நிலையங்களுக்கு ஒரே சலுகை என்பதும் அமலுக்கு வரும். இதன் பொருள் என்னவெனில் அந்நிய கல்வி நிலையமும் அரசு கல்வி நிலையமும் ஒரே வகைக்குள் அடங்குகின்றன. எனவே ஒரே வகையான சலுகைகளையே இரண்டு நிறுவனங்களுக்கும் அரசு வழங்க வேண்டும்.

எனில், அரசு கல்வி நிலையத்திற்கு அரசு நிலம் ஒதுக்கியதைப் போலவே அந்நிய கல்வி நிலையத்திற்கும் நிலத்தை அரசு இலவசமாக ஒதுக்க வேண்டும். மின்சாரத்தை தனது கல்வி நிலையத்திற்கு இலவசமாக வழங்குவது போலவே வெளிநாட்டு கல்வி நிலையங்களுக்கும் வழங்க வேண்டும். அவற்றிற்கு தளவாடச் சாமான்களை வாங்கிப் போட வேண்டும்.

இதைவிட நுணுக்கமாகப் பார்க்க வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. அது என்னவெனில், அரசாங்கமே கூட இலவசமாக கல்வியைத் தருவதில்லை ஏதோ ஒரு வகையில் ஒரு சிறிய தொகையினை அரசு மாணவனிடம் இருந்து வசூலிக்கிறது.  அல்லது மாணவனுக்கான கட்டணத்தை அரசு கட்டுகிறது.

ஒரு அரசு கல்வி நிலையம் ஒவ்வொரு மாணவனிடம் இருந்தும் கட்டணமாக 100 ரூபாயும்  அந்நிய நாட்டு கல்வி நிறுவனம் ஒரு லட்ச ரூபாயும் வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கட்டணம் என்ற ஒன்றை வசூலிக்கிற காரணத்தால் இரண்டு கல்வி நிலையங்களும் ‘ஒரே கட்டமைப்பிற்குள் அடங்குகிற’ கல்வி நிலையங்களாகின்றன. ஆகவே இரண்டிற்கும் ஒரே விதமான சலுகைகளைத்தான் அந்தந்த அரசாங்கங்கள் வழங்க வேண்டும் என்று காட் உத்தரவு இடுகிறது.

மின்சாரம், தளவாடம், தண்ணீர் போன்றவறோடு அந்நிய நாட்டு கல்வி நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ளாது. மெல்ல மெல்ல காலூன்றுவதில்தான் அவை ஆரம்பத்தில் கவனம் செலுத்தும். காலூன்றிய பிறகு அவை அடுத்த கட்டத்திற்கு நகரும்.

இவ்வளவும் கொடுத்தாயிற்று இனி அடுத்த கட்டத்தில் என்ன பெரிதான சேதாரம் வந்து கிழித்துவிடப் போகிறது?

இரண்டும் ஒரே கட்டமைப்பிற்குள் அடங்குகிற கல்வி நிலையங்கள். எனவே இரண்டிற்கும் ஒரே விதமான சலுகைகளைத்தான் வழங்க வேண்டும். அதைத்தான் வழங்குகிறோமே பிறகென்ன இருக்கிறது? 

இன்னுமொன்று இருக்கிறதே.

என்ன இருக்கிறது இதற்கும் மேலாக?

தனது கல்வி நிலையத்தில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறதே.

அதில் என்ன தவறு? தனது ஊழியர்களுக்கு அரசுதானே ஊதியம் வழங்க வேண்டும்.

அதென்னவோ சரிதான். ஆனால் இரண்டும் ஒரே கட்டமைப்பிற்குள் அடங்குவதாலும் இரணாஇயும் சமமாக பாவித்து ஒரே சலுகைகளையே வழங்க வேண்டும் என்று இருப்பதாலும் எங்களது ஊழியர்களுக்கும் அரசுதானே ஊதியம் வழங்க வேண்டும் என்று அவை கோர ஆரம்பிக்கும்.   

எனில், 

இடம் நாம் தரவேண்டும். தளவாடம் நாம் தர வேண்டும். மின்சாரம் நாம் தர வேண்டும். தண்ணீர் நாம் தர வேண்டும். இறுதியாக அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நாம் ஊதியம் தர வேண்டும்.

அப்போது அவன் என்னதான் தருவான்? அவனுக்கு நாம் ஏன் கம்பளம் விரிக்க வேண்டும்?

இதைத்தான் நாம் அரசிடம் கேட்க வேண்டும், ஒரே குரலில்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...