Wednesday, July 9, 2014

நிலைத் தகவல் 52

ஒரு ஊரில் ஒருவன் துப்பாக்கி ஃபேக்டரி வைத்திருந்தான்.

தாறு மாறான எண்ணிக்கையில் துப்பாக்கிகள் தயாராயின. அவற்றை விற்றால்தான் ஆகுமென்ற நிலை. என்ன செய்வதென்று யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு தெருவின் காரியக் காரரை அழைத்து விருந்து வைத்தான். விருந்தில் மது, கோழி, மீன், இரால் என்று அமர்க்களப் படுத்தினான். விருந்தில் சொக்கிப் போடயிருந்தவனிடம் அவனது பக்கத்து தெருக்காரர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது என்று போகிற போக்கில் போட்டு வைத்தான்.

ஒரே ஊர்க்காரனிடம் எச்சரிக்கை எதற்கு என்றவனிடம் ஒரே ஊர் என்றாலும் ஜாதியும் தெருவும் வேறல்லவா என்றான். கவனிக்கத் தொடங்கியவனிடம் பக்கத்து தெரு காரியக் காரன் இன்னொரு ஊரில் இருந்து நூறு துப்பாக்கிகளை வாங்கி வைத்திருப்பதாகக் கொளுத்திப் போட்டான். ஏதோ ஒரு புள்ளியில் இவர்களுக்கும் அவர்களுக்கும் வாய்த் தகறாறு என்று வந்தால் இவர்களுக்கு எதிராக அவன் துப்பாக்கியைப் பயன்படுத்தக் கூடும் என்று ஃபேக்டரிக்காரன் சொன்னபோது உள்ளே போயிருந்த சீமைச் சரக்கு பற்றிக் கொண்டடது.

அவர்கள் நூறு துப்பாக்கி வாங்கினால் தங்களால் 200 வாங்க முடியுமளென்று சொன்னவனை துப்பாக்கி குடோனுக்கு அழைத்துப் போனான். பக்கத்து தெருக்காரனின் சைக்கிளில் பஸ்ஸ்டான்ட் வந்து பஸ் ஏறி வந்தவன் திரும்பிப் போகும்போது மனசு நிறையப் பகையோடும் பார்சல் பார்சலாய் துப்பாகிகளோடும் திரும்பினான்.

பக்கத்து தெருக்காரனிடமும் இதே மாதிரி பேசி அவனுக்கும் இவனேதான் துப்பாக்கிகளை விற்றிருந்தான். எந்த வித சர்வீஸ் சார்ஜும் இல்லாமலே அவர்களுக்கிடையே பகையினை உருவாக்கினான்.

ஊர்களுக்கும் ஊர்களுக்கும் இடையில் பகைகளை உருவாக்கி துப்பாக்கிகளை விற்றான்.

எல்லோரும் சுட்டுக் கொண்டு செத்தார்கள். மகிழ்ந்து விரிந்தான்.

காசில்லாது யாரேனும் தவித்தார்களேயானால் கடனுக்கு அவர்களுக்கு துப்பாக்கிகளை விற்றான். கடனுக்கு வாங்கியவர்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும் எவ்வளவு ஆய் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்.

அமோகமாய் துப்பாக்கி வியாபாரம் களைகட்டிய போது அவனது பிள்ளைகளும் உறவினர்களும் இன்னும் இருக்கிற உள்ளூர்க்காரர்களும்கூட துப்பாக்கிகளை வாங்கினார்கள்.

சும்மாவே வைத்திருக்க முடியாமல் துப்பாக்கிகளை அவர்களுக்குள்ளாகவே திருப்பத் தொடங்கினார்கள். பள்ளிகளுக்குப் போய் மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டார்கள். பள்ளி போரடித்ததும் மருத்துவமனைகளுக்கு போய் சுட்டார்கள்.

நமக்குள்ளேயே சுட்டுக் கொள்ளக் கூடாது என்று சொல்லிப் பார்த்தான். யாரும் கேட்பதாக இல்லை.

ஒரு செவ்வாயன்று தன்னால் தன் மண்ணில் துப்பாக்கி கலாச்சாரத்தை நிறுத்த முடியவில்லை என்றும் தம் மக்கள் இது விசயத்தில் ஆன்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் புலம்ப ஆரம்பித்தான்.

இது இப்படித்தான் ஆகும் என்றாலும் எந்த மக்களும் இப்படி ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்டு சாவதில் நமக்கும் ஏகத்துக்கும் கவலைதான். அவர்கள் தங்களைத் தாங்களே ஆன்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றே நாமும் கேட்டுக் கொள்கிறோம்.

பி.கு

இது ஒரு புனைவுதான். ஒபாமாவின் செவ்வாய்க் கிழமை புலம்பலோடு யாரேனும் இதைப் பொருத்திப் பார்த்தால் நான் அதற்குப் பொறுப்பல்ல.

2 comments:

  1. முற்பகல் செய்யின் ....
    தம 2

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...