Friday, August 14, 2015

15 அவருக்கு சோனியா, இவருக்கு ஆர்.எஸ்.எஸ்

“நமது நாடு ஜப்பானோடும் சீனாவோடும் போட்டி போட்டு முன்னேற வேண்டுமென்றால் நல்ல மாணவர்கள் உருவாக வேண்டும். நல்ல மாணவர்கள் உருவாக வேண்டுமென்றால் அதற்கு நல்ல ஆசிரியர்கள் வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அத்தகைய நல்ல ஆசிரியர்களுக்கு கடுமையான பஞ்சம் இருக்கிறது” என்பதாக நமது பிரதமர் திரு மோடி அவர்கள் பேசியுள்ளதாக செய்தி ஊடகங்களின் வழி அறிய முடிகிறது.

மேம்போக்காகப் பார்த்தால் மிகுந்த அக்கறையோடும், தேசம் குறித்த கவலையோடும் பிரதமர் அவர்கள் பேசியுள்ளதாகத் தெரியும். ஆனால் அவரது இந்தப் பகுதியின் இறுதிப் பகுதி நமக்கு சில அய்யங்களைத் தருகிறது.
ஜப்பானோடும் சீனாவோடும் சகலத் துறைகளிலும் போட்டி போட்டு முன்னேற வேண்டும் என்பதிலோ, அதற்கு நல்ல மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும் என்பதிலோ, நல்ல மாணவர்களை உருவாக்க இந்த மண்ணை நேசிக்கிற, அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள் அவசியம் என்பதிலோ நமக்கு எள்ளின் முனையளவும் நமக்கு கருத்து மாறுபாடில்லை. ஆனால் அப்படிப் பட்ட ஆசிரியர்களுக்கான பஞ்சம் இருப்பது போன்ற அவரது கூற்றின் தொணியில் கொஞ்சம் உள்நோக்கம் இருப்பதாகவே நமக்குப் படுகிறது.
முதலில் எதையும் எதிகொள்ளும் ஒரு பலம் மிக்க எதிர்கால சமூகம் அமைவதற்கு நல்ல ஆசிரியர்களே அவசியம் என்கிற உண்மையை உரக்கச் சொன்னமைக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நல்ல ஆசிரியர் யார் என்பதைப் பார்க்கும் முன் நல்ல கல்வி என்பது எது என்பதைப் பார்த்துவிடுதல் அவசியம்.
“கல்“ என்றால் “தோண்டு” என்று ஒரு பொருளாகிறது. தோண்டுதல் என்பதை தேவையில்லாததை தோண்டி எடுத்து அப்புறப் படுத்துவது என்று கொள்ள வேண்டும். மண்ணைப் பிசைந்து அதிலிருந்து தேவை இல்லாததை தோண்டி எடுத்து அப்புறப் படுத்தினால் அழகான தோண்டி கிடைக்கும்.
ஒரு மனிதனில் இருந்து குறிப்பாக மாணவனிலிருந்து தேவை இல்லாதவற்றை தோண்டி எடுத்து அப்புறப் படுத்துதலே கல்வியின் வேலையாகும். இப்பொழுது எவை தேவை இல்லாதவை என்று ஒரு கேள்வி வருகிறது. இந்த இடத்தில்தான் நமக்கு பிரதமரின் கருத்தில் அய்யம் எழுகிறது. அச்சம், பொறாமை, பொய் கூறுதல், புறம்பு பேசுதல், களவாடுதல், வஞ்சித்தல், ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகமிழைத்தல், பெண்மையை இழிவு செய்தல், பாகுபாடு பார்த்தல், காலை வாரிவிடுதல், மத வெறி, சாதி வெறி போன்ற இழிவான குணங்களை ஒரு மணவனிடத்தில் இருந்து தோண்டி எடுத்து தூரப் போடுதலே கல்வியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.
இத்தகைய இழி குணங்களோடு தன்னிடம் வரும் மாணவனிடத்தில் இருந்து மேற்சொன்ன குணங்களை தோண்டி எடுத்து தூரப் போடுபவன் ஆசிரியன் ஆகிறான்.
இவற்றைத் தோண்டி எடுத்ததால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இவற்றிற்கு நேரெதிரான மேன்மையான குணங்களால் நிரப்ப முயல்பவன் நல்ல ஆசிரியன் ஆகிறான்.
மதவெறியற்ற, சாதியற்ற பெண்மையை மதிக்கிற, உழைப்பை மதிக்கிற ஒரு மனிதனை உருவாக்குதலே நல்ல கல்வியின் இன்றைய அடையாளங்களாக நாம் பார்க்கிறோம். இதை செய்பவனை நல்ல ஆசிரியனாகவும் நாம் அடையாளம் காண்கிறோம். விஞ்ஞானத்தின் துணை கொண்டே அதற்கு நேரெதிரான மேற்சொன்ன குணங்களை மாணவனுள் விதைக்கிற பிற்போக்குத்தனமே மத வாதிகளின் நல்ல கல்விக்கான அடையாளங்களாக நாம் பார்க்கிறோம்.
இதுமாதிரியான மோசமான காரியங்களை செய்யக் கூடிய ஆசிரியர்களுக்குத்தான் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாகத்தான் பிரதமர் பார்க்கிறாரோ என்பதே நமது அய்யம்.
வரலாற்றை உள்ளது உள்ளபடி சொல்லித் தருவது கல்வியின் கடப்பாடு ஆகும். எனில் வரலாற்றை உள்ளது உள்ள படி சொல்லித் தருபவனே நல்ல ஆசிரியன் ஆகிறான். ஆனால் இன்றைய எதார்த்த நிலை என்னவென்றால் புத்தகத்தில் இருக்கிற கூடுதாலான அல்லது குறைவானவற்றை போதித்தலே ஒரு ஆசிரியரின் வேலையாகிறது. இருப்பதையும் திரித்து மதச்சாயம் பூசப்பட்ட, உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத இன்னும் சொல்லப் போனால் முற்றிலும் பொய்யானவற்றைப் போதிக்கும் ஆசிரியர்களுக்குத்தான் பஞ்சம் இருப்பதாக பிரதமர் பார்க்கிறாரோ என்றுதான் பார்க்கத் தோன்றுகிறது.
குஜராத் பள்ளிகளில் போதிக்கப் பட்டு வரும் வரலாறு குறித்து 17.06.2014 அன்றைய “மெயில் டுடே” பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை மேற்கோள் காட்டி 18.06.2014 நாளிட்ட “தீக்கதிர்” வெளியிட்டுள்ள செய்திகள் நமது அய்யத்தை அதிகப் படுத்துகின்றன.
GCERT என்றழைக்கப் படுகிற குஜராத் கல்வி ஆராய்ச்சி மற்ரும்பயிற்சி கவுன்சிலும் மற்றும் GSBST என்றழைக்கப் படுகிறபள்ளிப் பாடப் புத்தகங்களுக்கான குஜராத் மாநில வாரியமும் இணைந்து ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலுமான மாணவர்களுக்கு தயாரித்தளித்துள்ள பாடப் புத்தகங்களில் வரலாறு ஏகத்துக்கும் திரிக்கப் பட்டுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சுட்டுக் கொல்லப் பட்டார் என்கிற பிழையான வரலாற்றைதான் குஜராத் பிள்ளைகள் படித்து வருகிறார்கள்.
இரண்டாம் உலகப் போர் என்றதுமே ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பான் நகரங்களை அமெரிக்கா கொஞ்சமும் மனிதாபிமானமே இல்லாமல் அணுகுண்டு வீசி அழித்ததைத்தான் எவரும் அறிவோம். ஆனால் குஜராத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் அமெரிக்காவின் மீது அணுகுண்டுகளை வீசியதாக வரலாறு சொல்லிக் கொடுக்கப் படுகிறது. அமெரிக்காவே இப்படி ஒரு பாடத்தை வைப்பதற்கு நிச்சயமாக வெட்கப் பட்டுத் தயங்கும் என்று நம்மால் நிச்சயம் நம்ப முடியும்.
உலகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும், இன்னும் சொல்லப் போனால் அமெரிக்க மாணவர்களேகூட அமெரிக்காதான் ஜப்பான் மீது அணு குண்டுகளை வீசியது என்கிற உண்மையைப் படிக்கும் போது குஜராத் மாணவர்கள் மட்டும் ஜப்பான்தான் அமெரிக்கா மீது அணு குண்டுகளை வீசியது என்கிற அப்பட்டமான ஒரு பொய்யை வரலாறு என்கிற பெயரில் படிக்கிறார்கள்.
இப்படிப் படிப்பதன் மூலம் உலக அளவில் குஜராத் மாணவன் தனித்து விடப் படும் ஆபத்து இருப்பது மட்டுமல்ல பாதிக்கப் பட்டவன் மீது கோவமும் பாதகத்தை செய்தவன் மீது அனுதாபமும் அவனுக்கு ஏற்படும்.
இதை இந்தியா முழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் பிரதமர் விரும்புகிறாரோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதை கொண்டு செல்லத்தான் ஆசிரியர்களுக்கு பஞ்சம் இருப்பதாகத்தான் பிரதமர் பார்க்கிறார் போலும்.
இப்படி ஒரு பாடத்தை வைப்பதை இன்னும் கொஞ்சம் நீட்டினால் வருங்காலத்தில் காந்தியின் கொலையினைக் கூட இவர்கள் நியாயப் படுத்தக் கூடும். கோட்சேவினைக் கூட மிகப் பெரிய நல்லவனாக தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.
சுற்றி சுற்றி இது குறித்தே நாம் பேசுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.
ஒரு பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கார் பெயரை வைப்பதற்கே கடுமையான எதிர்ப்பை எதனினும் மூர்க்கமாகக் காட்டியவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியினர். ஆனால் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி அவர்கள் வாஜ்பாய் அவர்களுக்கே மாரடைப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் ஒரு செய்தியை சொன்னார். அம்பேத்கார் அவர்களுக்கு வாஜ்பாய் அவர்களது ஆட்சிதான் பாரதரத்னா வழங்கியது என்று சொன்னார். அம்பேத்கார் அவர்களுக்கு பாரதரத்னா வழங்கி கௌரவித்தது வி. பி. சிங் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சத்தியமாக வாஜ்பாய் அவர்கள் அதை செய்யவில்லை. மோடி அவர்களைப் பார்க்கிலும் வாஜ்பாய் அவர்கள் பெருந்தன்மையானவர் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அம்பேத்காருக்கு பாரத ரத்னா கொடுக்குமளவிற்கு அவரது பெருந்தன்மை இருப்பதாக அவரே ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
இதை எல்லாம் ஏன் செய்ய வேண்டும் இவர்கள்? எப்படியேனும் வரலாற்றை திரித்து மதமயப் படுத்திவிட வேண்டும். மேன்மைமிக்க பன்முகத் தன்மை கொண்ட இந்த மண்ணின் கலாச்சாரத்தை மதமயப் படுத்திவிட வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.
பன்முகத் தன்மை என்பது இந்தியாவின் மேன்மைமிக்க மாண்பு. உலகமே வியந்து பார்க்கும் ஒன்று. இத்தனை மொழிகள், இத்தனை கலாச்சாரங்கள், வேறு வேறான உணவு வகைகள், ஆனாலும் அவற்றின் ஊடாக ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சங்கிலிப் பிணைப்பு. சாத்தியமே இல்லாத ஒன்று எப்படி இந்தப் பூமியில் சாத்தியப் பட்டிருக்கிறது என்று இந்தியாவின் எதிரிகளே வியந்து பார்க்கும் உன்னதமான மாண்பு.
அதை சிதைப்பது என்பதில் இவர்கள் வெறிகொண்ட தீவிரமானவர்கள் என்பதை சமூக வலைத் தளங்களில் இந்தியை மூர்க்கமாக அவர்கள் திணிக்க முயல்வதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
இன்னுமொரு மொழியைப் படிக்கக் கூடாதா என்று சிலர் கேட்கிறார்கள். ஒன்றல்ல ஒருவன் தன்னால் எத்தனை மொழிகளைப் படிக்க இயலுமோ அத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்தான். பிரச்சினை என்பதே இந்தியைப் படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில்தான் இன்னும் சிலர் இந்தியை எதிர்த்ததால்தான் தாங்கள் இந்தியைப் படிக்க முடியாமல் போனதாகவும் ஒருக்கால் அதைப் படித்திருந்தால் தங்களது வாழ்க்கை பிரகாசமாகியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள்து கருத்துப்படி இந்தியை எதிர்த்ததால்தான் தங்களது வாழ்க்கை கருகிப் போயிருப்பதாக சொல்கிறார்கள்.
மத்திய அமைச்சர் மாண்பமை ராதாக்கிருஷ்ணன் அவர்கள் கூட இந்தி திணிக்கப் படுவதை தாமும் எதிர்ப்பதாகவும் ஆனால் இந்தியை கற்றுக் கொள்வதை தடுப்பதை எதிர்ப்பதாகவும் சாரப்படும்படி பேசியிருக்கிறார்.
இந்தி கற்பதை யாரும் எப்போதும் எதிர்க்கவே இல்லை. தமிழ் மண்ணில் இந்தி பிரக்சார சபாக்கள் வளமையோடு தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. போக, எல்லா ஊர்களிலும் இந்தியை படிப்பதும் தேர்வெழுதுவதும், பி.ஏ, எம்.ஏ என்று இந்தியில் பட்டங்களை வாங்குவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதை யாரும் எப்போதும் தடுத்ததே இல்லை.
இந்திக்காக இவ்வளவு கவலைப் படும் தமிழர்கள் பலர் தமிழ் மண்ணில் நமது பள்ளிகளில் தமிழை என்று கூட அல்ல தமிழ் அல்லது தாய்மொழியை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும் என்பதை எதிர்ப்பதில் உள்ள அரசியலைத்தான் உணர்ந்து கொள்ள இயலவில்லை.
இந்தி நம் மீது திணிக்கப் படுவதை மட்டுமல்ல, ஒருக்கால் பீஹாரி மீதோ, வங்காளி மீதோ அல்லது வேறு யார் மீதோ தமிழ் திணிக்கப் பட்டாலும் அதை நாம் எதிர்க்கவே வேண்டும். எதிர்க்கவே செய்வோம்.
ஒரு மொழி, ஒரு மதம், ஒற்றைக் கலாச்சாரம் என்கிற அவர்களது மறைமுக செயல்திட்டம் திரை கழன்று வெளி வரத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது.
மன்மோஹனுக்கும் மோடிக்கும் இடையில் ஆறு வித்தியாசங்களை அல்ல அவர் பேச மாட்டார், இவர் பேசிக் கொண்டே இருப்பார், அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர், இவர் மதவாதி என்பதைத் தவிர மூன்றாவது வித்தியாசமே சாத்தியமில்லாதது.
மன்மோஹன் அவர்களை சோனியா அவர்களின் கைப் பொம்மை என்றும், சுயமாக எதையும் முடிவெடுக்கத் தெரியாதவர் என்றும் சொல்லப் பட்டதில் உண்மை இல்லாமல் இல்லை. அவரது இடுப்பில் கட்டப் பட்டிருந்த கயிறின் ஒரு முனை சோனியா அவர்களின் கைகளில்தான் இருந்தது. கயிறை எவ்வளவு நீளத்திற்கு சோனியா அவர்கள் அனுமதித்தாரோ அந்த நீளம் மட்டுமே மன்மோஹன் அவர்களால் பயணிக்க முடிந்தது.
மோடி அவர்களும் அப்படித்தான் என்பதையும், அங்கு சோனியா என்றால் இங்கு ஆர்.எஸ்.எஸ் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மோடியும் சுயமாக எதையும் செய்து விட இயலாது என்பதையும் அப்படித் தப்பித் தவறி ஆர்.எஸ்.எஸ் சொல்வதை மீறி அவர் ஏதேனும் செய்ய முற்சித்தால் அதே புள்ளியில் அவர் தூக்கி எறியப் படுவார் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த வெளிச்சத்தில் பார்த்தால்,
“நமது நாடு ஜப்பானோடும் சீனாவோடும் போட்டி போட்டு முன்னேற வேண்டுமென்றால் நல்ல மாணவர்கள் உருவாக வேண்டும். நல்ல மாணவர்கள் உருவாக வேண்டுமென்றால் அதற்கு நல்ல ஆசிரியர்கள் வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அத்தகைய நல்ல ஆசிரியர்களுக்கு கடுமையான பஞ்சம் இருக்கிறது” என்ற அவரது கூற்றைக் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூற்றாகத்தான் பார்க்க வேண்டும். எதிர்கொள்ள வேண்டும்

2 comments:

  1. அர்த்தமுள்ள பல செய்திகள் கிடைக்கின்றது கட்டுரையில்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...