Sunday, August 30, 2015

11 காலிருக்கு... செருப்பிருக்கு

”மரணத்திற்குப்
பிறகு
மறு பிறப்பு
இருந்திடுமோ
என்ற பயத்திலேதான்
நாங்கள்
தற்கொலைக்குக் கூட
முயலுவதில்லை”

என்று எழுதுகிறார் ராதா சிவா என்ற முகநூல் நண்பர். இதைவிட அழுத்தமாக தலித் மக்களின் வலியை உணர்த்திவிட முடியும் என்று நான் நம்பவில்லை.

வாழ இயலாமையின் ரணத்தை, அவலத்தை, மனிதனாய் வாழ விடாத கொடூர அயோக்கியத் தனத்தைதான் இதுவரை பார்த்திருக்கிறோம். இந்தக் கொடுமைகளை, அவமானம் தரும் வலியை சகிக்க மாட்டாமல் தற்கொலை செய்வதை பார்த்த்டிருக்கிறோம்.

இதுவும் பொறுக்க மாட்டாமல்,

தற்கொலையின் ஊலம் உனது ரணத்திற்கும் அவமானத்திற்கும் முடிவு கட்டவா பார்க்கிறாய் என மறுபிறப்பின் சிந்தனை தடுக்கிறது. மறு பிறப்பு என்று ஒன்று இருந்து, மீண்டும் தலித்தாய் பிறக்க நேர்ந்து விட்டால் மீண்டும் இதே கேவலங்களை செய்யத்தானே இந்தச் சமூகம் தள்ளும் என்கிற பயமேகூட பல தற்கொலைகளைத் தடுக்கிறது.

வழக்கம் போல ஒரு பின்னிரவு வேலை, நல்ல தூக்கக் கலக்கத்தோடு நண்பர்களின் வலைகளையும் முகநூல் பக்கங்களையும் மேய்ந்து கொண்டிருந்த போது தம்பி சமரன் பக்கத்தில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

இந்தப் படத்தைப் பார்த்ததும் தூக்கமும் கலக்கமும் எங்கோ பறந்தோட கோவம் மட்டுமே உடலெங்கும் அப்பிக் கொண்டது.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கைகளில் செருப்புகள். செருப்பு வாங்க இயலாமல் வெறுங்காலோடு பள்ளிகளுக்குப் போகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அப்படியே மனசு சுக்கல் சுக்கலாய் நொறுங்கிப் போகும். பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா மிதியடிகளை வழங்கியமைக்காகவே இவர்கள் செய்த பிழைகளில் ஒரு பத்துப் பன்னிரணடை தள்ளுபடி செய்தவன்.

கோவமும் கொந்தளிப்புமாய் அப்படியே உறைந்து போனேன்.

தெரு தாண்டும் வரை
கைகளில்
சுமக்கத்
தீர்ப்பளித்தீர்.

கோவம் வரும்
எங்களுக்கும்

எங்களுக்கு
கோவம் வரும் வேலை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்

கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை

கைகளில்தான்
இருக்கிறது

என்று எழுதினேன்.டிசம்பர் மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் படத்தையும் கவிதையையும் அட்டையில் போட்டோம்.

“இதெல்லாம் கொஞ்சம் அதிகமாத் தெரியல?”

நண்பர்கள் கேட்டார்கள்.

இது உண்மை என்பதை எவ்வள்அவு சொல்லியும் சிலர் நம்ப மறுத்தார்கள்.எங்கே நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டோமோ? நாமே கொஞ்சம் குழம்புமளவிற்கு சிலர் இதை நம்ப மறுத்தார்கள்.

27.01.2013 அன்றைய தீக்கதிர் அதற்கு முந்தைய நாள் கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய ஒரு போராட்டத்தைப் பற்ரிய செய்தியை வெளியிட்டிருந்தது.

“காலில் செருப்பு அணிந்து நடப்போம்”

என்ற பதாகையைப் பார்த்த போது, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்னமும் காலில் செருப்பணிந்து நடப்பதற்கு இன்னமும் போராட வேண்டி இருக்கிறது.

ஒரு கதை, கந்தர்வன் எழுதியது என்று நினைக்கிறேன். அந்தக் கதையில் ஆண்டை ஒருவன் எல்லா தலித்துகளுக்கும் துண்டு வாங்கிக் கொடுப்பான். அதைப் பார்த்த அவனது நண்பன் இவர்களுக்கு எதற்கு துண்டு என்று கேட்பான். அவன் சொல்வான், “அவனிடம் துண்டு இருந்தால்தானே நம்மைப் பார்த்ததும் இடுப்பிலே கட்டுவான்”

தன்னைக் கண்டதும் தோளிலிருந்து துண்டை எடுத்து இடுப்பிலே கட்டுவதை ரசித்துத் தொலைத்திருக்கிறது இந்த இடைச் சாதி சமூகம். இதன் நீட்சியாகத்தான் காலில் அணிந்து வந்த செருப்பை கைகளிலே சுமக்க வைத்தும் அழகு பார்த்திருக்கிறது.

பெரம்பலூருக்குப் பக்கத்தில் பேரளி என்றொரு கிராமம். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தலித் மாணவனை மரத்திலே கட்டிப் போட்டு சித்திரவதை செய்தனர். அந்த அளவு தண்டனைக்கு அவன் என்ன குற்றம் செய்தான்? வகுப்பிற்கு நேரமாகிவிடவே மிதி வண்டியை சற்ரு வேகமாக மிதிக்கிறான்.

அவனைக் கட்டி வைத்து சித்திரவதை செய்ததற்குகாரணமாக சொன்னார்கள்,

“என்ன தைரியம் இருந்தால் குடியானத் தெருவுல சைக்கிள ஓட்டிட்டு வருவான்?”

இதை எதிர்த்து சுபாஷனி அலி மற்ரும் பால பாரதி தலைமையில் மார்சிஸ்ட் கட்சி ஒரு சைக்கிள் பேரணியை நடத்த முயன்றபோது அதற்கு தடை விதிக்கப் பட்டது. அப்போது இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னார், “ எல்லாம் அமைதியாகத் தானே இருக்கிறது.ஏன் இப்படி வம்படித்துச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்புகிறீர்கள்?”

அவரது விளக்கம் இதுதான்,

பையன் சைக்கிள் ஓட்டினான். அவர்கள் கட்டி வைத்து உதைத்தார்கள். இத்தோடு பிரச்சினை முடிந்து ஊர் அமைதியாக இருக்கிறது. ஏன் அந்த அமைதியைக் கெடுக்கிறீர்கள் என்பதுதானே?

இத்தனைக்குப் பிறகும் ஊர் அமைதியாக இருக்கும் என்றால் அது அசிங்கம் அல்லவா? இந்தக் கொடுமைக்குப் பிறகும் அமைதியாக இருக்க அது என்ன மயானமா?

இதை எதனினும் கொடிய வலியை கீழே உள்ள ஒரு செய்தி தருகிறது.

சத்திய மங்களம் பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் தலித் மாணாவிகளை மட்டும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. “உங்க அம்மாவும் அப்பாவும் செய்கிற வேலைதானே. கூச்சப் படாம செய்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு மாதம் ஒன்றிற்கு 500 கும் குறைவான சம்பளம்தான். எனவே இந்த வேலைக்கு யாரும் வர மறுக்கிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்தே தனியாக ஒரு சட்டம் போட வேண்டும்.

மாதம் முழுக்க பள்ளியில் உள்ள கழிவறைகள் அனைத்தையும் சுத்தம் செய்வதற்கு இவ்வளவு குறைவான ஊதியம் என்பது கொடுமையின் உச்சம். முதலில் அவர்களது நேர்மையான ஊதியத்திற்காக பொது மக்கள் இணாஇந்து போராட வேண்டும்.

( மனிதக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு நவீன எந்திரங்களை பயன் படுத்த வேண்டும் என்பதற்கான நீண்ட போராட்டம் என்பதே இலக்காக இருக்க வேண்டும்)

இந்தச் சூழலில் தங்கள் பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் பங்கு உண்டுதான். அந்த வகையில் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்வதில் இருவருக்கும் நிச்சயமாககடமை உண்டு.

மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குள் ஒரு முறை வைத்துக் கொண்டு இந்த வேலையைச் செய்தால் பாராட்டலாம். ஆனால் தலித் குழந்தைகள் மட்டுமே கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிலை பள்ளிகளிலேயே இருக்குமானால் அதை எப்படி சகித்துக் கொள்வது?

எனக்கொன்று தோன்றுகிறது.

அக்கறையுள்ள நண்பர்கள் ஒன்றிணைவது , முகநூல் மற்றும் ட்விட்டர் இருக்கும்போது இது ஒன்றும் சாத்தியம் இல்லாத செயல் அல்ல. கலை இலக்கிய பெரு மன்றம்,த.மு.எ ச, மற்றும் இடதுசாரிக் கட்சிகள், மற்றும் வி.சி போன்ற அமைப்புகளின் தோழர்கள் ஒருங்கிணைந்து தத்தமது பகுதியில் உள்ள பள்ளிகளை கண்காணித்தால் என்ன?

சட்டம் ஒன்றும் அவ்வளவு வலுவாக இல்லை. SC&ST PREVENTION OF ATROCITY ACT ன் மூலம் பதியப்படும் வழக்குகளில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான அளவு வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது என்று வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சொல்கிறார்.

எனவே இதை ஒழிக்க வேண்டுமெனில் அக்கறையுள்ள தோழர்கள் இயக்கமாய் ஒன்றிணைய வேண்டும்.

சாத்தியமானதே.

6 comments:

  1. தலித் குழந்தைகள் மட்டுமே கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிலை பள்ளிகளிலேயே இருக்குமானால் அதை எப்படி சகித்துக் கொள்வது?
    சுதந்திரம் பெற்று ஆண்டுகள் பலகடந்தும் தொடரும் கொடுமை
    வேதனை தோழர்

    ReplyDelete
    Replies
    1. இருக்கவே இருக்கு தோழர். ஏதாவது செய்ய வேண்டும்

      Delete
  2. உங்களை சந்திக்க முடியுமா ஐயா ...?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர். எப்போது சந்திக்கலாம்?. இது எனக்கான வரம் தோழர்

      Delete
  3. Unmai ...kodumaium kuda.....seiya vendum yethavathu

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கீதா. எதாவது செய்யவே வேண்டும்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...