உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்திருந்த நேரம். இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான இளைஞர்கள் ஏதோ இந்தியா தனது பிறவிப் பயனை அடைந்துவிட்டதாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் என்று சொல்லி அவர்களை மட்டும் தனிமைப் படுத்திவிடவும் முடியாது. ஆறிலிருந்து அறுபது வரைக்கும் என்றும்கூட சொல்லிவிட முடியாது. எண்பதைக் கடந்துவிட்ட, கிரிக்கெட்டை அதிகமாய் நக்கலடிக்கிற, எனது தந்தைகூட ”என்னடா ஜெயிச்சுட்டாய்ங்களா?” என்று கேட்டு இந்தியாவின் வெற்றியயைத் தனது பேரனோடு கொண்டாடுகிறார். டோனி அடித்தப் பந்து காற்றிலே பறந்து ஒன்று, இரண்டு, மூன்று,... ஆறாக எல்லைக் கோட்டையும் காற்றிலேயேக் கடந்ததுதான் தாமதம் என் பையன் எனக்கு மிட்டாய்த் தருகிறான். எவ்வளவு முன்னேற்பாடு பாருங்கள். கடந்த தீபாவளி அன்றுகூட எங்கள் ஊரில் இவ்வளவு பட்டாசுகளும் வான வேடிக்கைகளும் இல்லை. இரண்டு மணி நேரத்துக்கு வானத்தை வண்ண வண்ணமாய் கலங்கடித்து விட்டார்கள்.
“ ஒரு வருஷம் ரெண்டு வருஷமா. இருபத்தியெட்டு வருஷக் கனவாச்சே?” கலங்கக் கலங்க அவனது நண்பனிடம் உருகுகிறான் பதினேழே வயதான கிஷோர்.
எனது தந்தை வைத்தக் கண்ணை எடுக்காமல் தொலைக் காட்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. “ பதினோரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிற விளையாட்டுன்னு ஷா சரியா சொன்னாண்டா“என்று கிரிக்கெட்டை கேவலமாகப் பேசும் என் அப்பா அரை இறுதி ஆட்டத்தையும் இறுதி ஆட்டத்தையும் பந்து வீணாகாமல் ரசித்துப் பார்க்கிறார். என்ன ரசாயன மாற்றம் நடந்தது. செய்தியைத் தவிர வேறு எதையும் தொலைக் காட்சியில் பார்க்காத அப்பா எப்படி இப்படி ஆனார்?
ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே இதற்கு விடை கிடைத்தது.
“ இந்த தோனிப் பயலுக்கு ஒரு மெயில் அனுப்பனுண்டா” என்று உற்சாகமாய் சொல்லிக் கொண்டே என்னிடம் வந்தார். அடக்க முடியாமல் கேட்டே விட்டேன், “ ஏம்ப்பா, என்ன ஆச்சு உங்களுக்கு?”
“ இது விளையாட்டில்லடா, போர். ஜெயிச்சிருக்கோம். சும்மா இல்ல, அரை இறுதியில பாகிஸ்தான. அதக்கூட விடு, அது அந்த நாட்டுக்கு நாம கொடுத்த செய்தி. பைனல் நமக்கும் அவனுக்குமான யுத்தம். ஒண்ணர லட்சம் பேத்தக் கொன்னு நம்ம இனத்தையே அழிச்சவன ஜெயிச்சிருக்கோம்” கொஞ்சம் மிரண்டே போனேன். இவ்வளவு நீளமாய் விடாமல் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. உணர்ச்சிப் பிழம்பாய் மாறிப் போயிருந்தார்.
" நம்ம அப்பாவா இது?.” வீட்டிலிருந்த அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. யாரும் அப்பாவை இந்த நிலையில் பார்த்ததில்லை. கொத்து கொத்தாக் கொன்னு குவுச்சுட்டானுங்களே” என்பது மாதிரி அவ்வப்போது புலம்பிக் கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை, நமது இனத்தை அழித்தவனை நம்மால் ஒன்னும் செய்ய இயலவில்லையே என்ற அவரது ஏமாற்றத்தை, ஆற்றாமையை ஆதங்கத்தை ஏறத்தாழ லட்சம் பேர் நேரடியாகவும் , பல கோடி பேர் மறை முகமாகவும் பார்த்துக் கொண்டிருக்கும் போது தோனி துவைத்துத் துவைத்துத் தோற்கடித்ததைப் பார்க்கப் பார்க்க ஏதோ தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கை ராணுவத்தையே நமது பிள்ளைகள் மட்டையும் பந்தும் கொண்டு சின்னா பின்னப் படுத்தியதாய் ஒரு மகிழ்ச்சி.
” லட்சம் துப்பாக்கிய வச்சிருக்கிற ராணுவம் செய்யாதத ரெண்டு பேட்டையும் ஒரு பந்தையும் வச்சு தோனி சாதிச்சுட்டான்ல தாத்தா,” உணர்ச்சி வசப்பட்டு அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நானே பயந்து கொண்டிருந்தால் கிஷோர் குறுக்கேப் புகுந்து அவரை உசுப்பி விடுகிறான். இதைக் கேட்டதும் பேரனோடு கை குலுக்கி ஆமோதிக்கிறார்.
“அப்பா இது விளையாட்டுப்பா. இதுக்குப் போயி இப்படி டென்ஷனாகுறீங்களே,” என்று முடிக்கக் கூட இல்லை,” இந்தக் கம்யூனிஸ்டுகளே இப்படித்தாண்டா கிஷோர். அதனாலதான் அவங்களுக்கு தேச பக்தியப் பத்தி அத்வானியெல்லாம் வகுபெடுக்கிறான் ,” என்று சீறவே ஆரம்பித்துவிட்டார். அவ்வளவுதான் வீட்டில் உள்ள அனைவரும் சிரிக்கிறார்கள். அவர்களுக்கு என்னையோ நான் எனது சொந்தக் கட்சியாய் மதித்து ஏறத்தாழ சார்ந்து வாழ்கிற கட்சியையோ யார் கிண்டலடித்தாலும் சிரிப்பு வரும். விடுங்கள் நாடே சிரிப்பாய் சிரித்துக் கிடக்கிறபோது நம்ம வீட்டில் நம்மை வைத்து கொஞ்சம் சிரித்தால் குறைந்தா போய்விடும்.
கொஞ்சம் வெப்பம் தனிந்தவராய் என்னிடம் வந்து அமர்ந்தார். எப்படி அவரிடம் தொடங்குவது என்று தெரியவில்லை.
“ அப்பா, மேச்ச முழுசாப் பார்த்தீங்களாப்பா?”
“ அந்தப் புள்ளையாண்டான் தோனி கடேசியா அடிச்ச ஆறு வரைக்கும் பார்த்தேன். அதுக்கு என்ன?”
“யார் யாரெல்லாம் மேச்சப் பார்த்தாங்கப்பா?”
“ இந்தச் சின்னப் புள்ள ராகுல் , அவன் எப்படி குதூகலமா இந்த வெற்றியக் கொண்டாடினான் தெரியுமா?”
”அப்புறம்?”
“ஏன், சோனியா, நின்னுக்கிட்டே கூட பார்த்துச்சே. எந்த வித்தியாசமும் இல்லாம எல்லோருக்கும் கையக் கொடுத்து மகிழ்ச்சியப் பகிர்ந்துகிச்சே”
வளர்க்க விரும்பாமல் நேரடியாய்க் கேட்டேன்,” ராஜ பக்ஷே உக்காந்திருந்தாரே பார்த்தீங்களாப்பா?”
“ ‘உக்காந்திருந்தாரே’ என்னடா?, உக்காந்திருந்தான். அவனுக்கெல்லாம் மரியாதைக் கொடுத்துக்கிட்டு”
”சரிப்பா, உக்கார்ந்திருந்தானே ,பார்த்தீங்களா?”
“ம்.. , பார்த்தேன்”
ரொம்பவும் உணர்ச்சி வசப் பட்டுவிடுவாரோ என்று பயந்து கொண்டேதான் சொன்னேன். நல்ல வேலையாக அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. எதையும் காது கொடுத்து அமைதியாக, உணர்ச்சி வசப்படாது விவாதிக்கும் பழைய அப்பாவாக மாறிக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்த்தது. ஆனாலும் விட்டுக் கொடுக்காமல்தான் பேசினார்.
“அதுக்கென்ன இப்ப அவுனுங்க கிழிந்து சின்னா பின்னமான கண்றாவிய அவன் நேர்ல பார்த்ததே ஒரு தண்டனைதானேடா?”
“இல்லப்பா, இதே இறுதி ஆட்டம் லண்டன்ல நடந்திருந்தா ராஜ பக்ஷே அங்கப் போய் உட்கார்ந்து இந்த ஆட்டத்தப் பார்த்திருக்க முடியாது தெரியுமா?”
”அதெப்படி?”
" அங்கிருக்கும் தமிழர்கள் அனுமத்திருக்க மாட்டார்கள்”
”அவங்களால என்ன செய்ய முடியும்?”
“ஆஹா”
“ செத்துப் போன பார்வதியம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போன, இழவுக்குப் போன திருமாவளவனையே அனுமதிக்காம திருப்பி அனுப்பின ராஜ பக்ஷேவ நாம நாற்காலி போட்டு கௌரவமா உக்கார வச்சு ஆட்டத்தப் பார்க்க அனுமதித்து இருக்கோம். இப்ப சொல்லுங்க”
எதுவும் பேசவில்லை அவர்.சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் எழுந்து தூங்கப் போய்விட்டார். நானும் வலைகளை மேயப் புறப்பட்டேன்.
யார் வலை என்று சரியாய் ஞாபகமில்லை அநேகமாக ஹேமாவின் வலையாக இருக்கவேண்டும். ஒரு செய்திப் பார்த்து அதிர்ந்தேன். ஒருக்கால் உலகக் கோப்பையை இலங்கை வென்றிருந்தால் அந்த வெற்றியை போரில் தமிழர்களைக் கொன்று குவித்த ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க இருந்தார்களாம். என்னக் கொடுமை இது. அந்நிய நாட்டை அல்லது எதிரிகளை விரட்டி அடித்து வெற்றி கொண்ட ராணுவ வீரர்களுக்கு என்றால் நாமும் வணங்கி வரவேற்கலாம். சொந்த மண்ணில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சொந்த மக்களை கொன்று குவித்து அட்டூழியம் செய்த ஒரு கும்பலுக்கு அர்ப்பணம் செய்ய இருந்த்த ஒரு தலைவனை
அலங்கார நாற்காலி போட்டு அமரவைத்து ஆட்டத்தைப் பார்க்க அனுமதித்திருக்கிறோம்.
மட்டுமல்ல, உலகக் கோப்பையை இலங்கை தோற்றதை அல்லது இந்தியா வெற்றி பெற்றதை தாங்க முடியாமல் கொதிப்படைந்து நான்கு தமிழக மீனவர்களைக் கொன்று போட்டிருக்கிறார்கள் என்றால் அந்தக் கோப்பை என்ன எங்கள் நான்கு மீனவர்களின் உயிர்களை விடப்பெரிதா? சரியா, தவறா என்றெல்லாம் தெரியாது. அது பற்றியெல்லாம் எனக்கு கவலையுமில்லை.ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது மண்ணின் நான்கு மீனவர்களின் உயிரென்பது எந்தக் கோப்பையையும் விடப் பெரியது.
அதைவிடக் கொடுமை இந்த நான்கு பேரின் கொலை பற்றி உடனே தெரிய வந்திருந்தும் தேர்தல் முடியும் வரைஇந்த செய்தியைக் கசியவிடாமல் பார்த்துக் கொண்டார்கள் என்பது மட்டும் உண்மையாக இருப்பின் அதை அந்த நான்கு கொலைகளைவிடவும் பெரியக் குற்றமாய்தான் என்னால் பார்க்க முடியும்.
முள் வேளியில் விலங்குகளைவிடக் கேவலமாய் நடத்த்ப் படும் மக்களை, தேவைப் படும் போதெல்லாம் அவர்களைக் கேவலமாக நடத்தி அதைப் பார்த்து மகிழ்ந்து களிகூறும் கயவர்களை, நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாதா?
தமிழ் இனமே இல்லாது போகவேண்டும் என்பதை எழுதாத இலக்காகக் கொண்டுள்ளனர் என்று வருகிற செய்தியும், அதற்காக தமிழ் யுவதிகளை சிங்கள ஆண்களைக் கொண்டு வன்புணரச்செய்து, அவர்களைக் கர்ப்பமாக்கும் அட்டூழியம் தொடர்கிறது என்றும் வருகிற செய்திகள் உண்மையாய் இருப்பதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. நானும், சுத்தத்தை கட்டுடைத்து கலப்புகளை எதிபார்க்கும் பெரியாரை நேசிப்பவன் தான். ஆனால் இந்தக் கலப்பு அசிங்கமானதும், அயோக்கியத் தனமானதும் ஆகும். நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதா?
இப்போது ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. உறுப்பு நாடுகள் கோரிக்கை வைத்தால் ராஜ பக்ஷேவை சர்வதேசக் குற்றவாளியாக நிறுத்தி விசாரிக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கிமூன் சொல்கிறார். ரஷ்யா, சீனா, பொன்ற நாடுகள் கூட இது விஷயத்தில் நேர்மையாக நடந்துகொள்ளும் என்று எதிர் பார்க்கமுடியாது. காரணம் இந்தப் பாவத்தில் நிச்சயம் அவர்களுக்கும் பங்கு உண்டு.
இந்தியாவின் நிலையும் அதுதான்.பாவத்தில் பெரும் பங்கு இந்தியாவினுடையது. எனவே இந்தியாவும் இந்தக் கோரிக்கையை முன்னெடுக்காது.
எனில் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதா?
ஐ.நா சபையின் அறிக்கையை குப்பைக் கூடையில் போடுவேன் என்று ஒரு இலங்கை அமைச்சர் கொக்கரிக்கிறார்.
நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா?
நாமென்ன செய்வது?
வேறென்ன, முதலில் ஒன்று சேர்வது.
ஒன்று சேர்ந்து?
இந்திய அரசை கோரிக்கையை முன்னெடுக்க வைப்பது.
“அது என்ன அவ்வளவு சுலபமா?”
”சுலபமல்லதான்”
”அப்புறம்?”
ஆனால் நம்மால் முடியும்.
--
Hars off to you sir. Great writing
ReplyDeleteஉலக் கோப்பையின் பின்னே இருக்கும், இன மானம் சார் விடயங்களைப் பதிவில் சுட்டியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபோரில் வெல்ல முடியாவிட்டாலும், துடுப்பாட்டத்தில் இலங்கையை வென்ற பெருமிதம் எல்லோர் மனங்களிலும் ஏற்றுக் கொள்கிறேன்.
எங்கள் ஊர்களில் இந்தியா வென்ற மறு நாள் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தார்கள்.
இதனால் இராணுவம் கடுப்பாகி அடித்தது வேறு கதை.
ஆனால் போரில் வாழ்விழந்து, போய் இப்போது தான் துளிர்க்க ஆர்ம்பித்திருக்கும் மக்களுக்கு இலங்கையை வென்ற சேதியால் என்ன பயன்?
அவர்கள் வாழ்வு செழிக்க எல்லோரும் முயற்சி செய்ய வேண்டிய கடமை ஒன்றிருக்கிறது. அதனை உலகத் தமிழர்கள் தான் நிறை வேற்றி வைக்க வேண்டும்.
அருமையான பதிவு...
ReplyDeleteஉள்ளக்கிடக்கையை எழுதி இருக்கிறீர்கள்..
எங்கள் ஆதங்கமும் அதுவே..
ஆனால் அது தான் நடக்காதே..எதிர்பார்த்து
காத்திருந்தது போதும் நமக்கு
@கோபி
ReplyDeleteமிக்க நன்றி கோபி.
தொடர்ந்து சந்திப்போம்
@நிரூபன்
ReplyDeleteமிக்க நன்றி நிரூபன். உங்கள் உதவியால் தமிழ் மணம் மூலம் கொஞ்சம் நண்பர்கள் . மிக்க நன்றி. தமிழ் 10 காணோம். ஃபேஸ் புக்கில் எப்படி இணைப்பது?
@மைந்தன் சிவா
ReplyDeleteமிக்க நன்றி மைந்தன் சிவா. உங்கள் ப்ளாக் போனேன். இளைஞர்கள் . அப்படித்தான். ஜமாயுங்கள்.
மீண்டும் உங்களின் இயல்பான மொழிநடையோடும் வடிவத்தோடும் வந்திருக்கிறது இக்கட்டுரை. சமச்சீர் கல்விதிட்ட பாடங்கள் குறித்து மெட்ரிக்குலேசன் பெருமக்கள் குலவையிடுகிறார்களே அது பற்றி ஒரு கட்டுரை நீங்கள் எழுதினால் சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.
ReplyDelete,/// அது அந்த நாட்டுக்கு நாம கொடுத்த செய்தி. பைனல் நமக்கும் அவனுக்குமான யுத்தம். ஒண்ணர லட்சம் பேத்தக் கொன்னு நம்ம இனத்தையே அழிச்சவன ஜெயிச்சிருக்கோம்” கொஞ்சம் மிரண்டே போனேன். இவ்வளவு நீளமாய் விடாமல் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. உணர்ச்சிப் பிழம்பாய் மாறிப் போயிருந்தார்.// // வணக்கம் அண்ணா நானும் ஒரு ஈழத்தமிழன் தான், என் எதிர்பார்ப்பு கூட இவ்வாறு தான் இருந்தது. அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள். பதிவை இன்ட்லியில் இணைக்கவில்லையா???
ReplyDeleteமன்னிக்கவும் தமிழ் 10 இல் தான் பதிவை இணைக்கவில்லை போல . இணைத்துவிடுங்கள் பாஸ்
ReplyDelete@மைந்தன் சிவா
ReplyDeleteஎது நடக்காது? எதுவும் நடக்கும்.
@விஷ்ணுபுரம் சரவணன்
ReplyDeleteநன்றி சரவணன்.
அவசியம் எழுத வேண்டும்.
@கந்தசாமி.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்.
நல்ல பதிவு.
ReplyDeleteஐக்கிய நாடுகள் சபை ஒன்றும் செய்யாது. அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. பேசிப் பேசியே காலத்தை கடத்துவார்கள். அது அமெரிக்க அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது தான். இவ்வளவு பிரச்னைக்கும் அமெரிக்காவும் காரணம் தான்.
நன்றி
@Rathnavel
ReplyDeleteஅன்பின் அய்யா,
வணக்கம்.
சலிக்க சலிக்க சபித்தாலும் அமெரிக்காவின் மீதுள்ள சாபம் குறையாது. ஆனாலும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடிந்தால் அந்த அளவில் அது வெற்றிதானே அய்யா. தவிரவும் அந்த அளவு முன்னேறினாலே பிறகு சில சாத்தியங்கள் சாத்தியமே.
மிக்க நன்றிங்க அய்யா.
நல்ல பதிவு சார்
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்,
உங்கள் முகவரி என்னிடம் உள்ளது. நூல் அனுப்ப வேண்டும். பிரதிகள் வந்தவுடன் அனுப்புகிறேன்.
எது நடக்காது? எதுவும் நடக்கும்!
ReplyDeleteபிரச்சினையே ஒன்று சேர்வதில்தான். அது மட்டும் நிகழ்ந்துவிட்டால் எதுவும் சாத்தியம்தான். மிக்க நன்றி தோழர். குமாருடைய வலை முகவரி என்ன?
ReplyDeletewww.bharathikumar.blogspot.com/
ReplyDeleteநன்றி தோழர்
ReplyDeleteநல்ல பதிவு.எங்கோ படித்ததாக நினைவு.முதலில் இவர் அழையா விருந்தாளி பின்பு இவருடன் வந்த பலருக்கு அனுமதி இல்லை என்ற மற்றொன்று.தவிர இலங்கை அணியில் ஒரு தமிழரும் விளையாண்டார். ஆக விளையாட்டை அரசாங்க அக்கிரமங்களுடன் தொடர்புபடுத்தவதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை
ReplyDeleteபிறந்ததிலிருந்து இலங்கை அணியின் தீவிர ரசிகன் நான்.உலகக்கோப்பையை தவற விட்டபோது அழுததும் உண்டு. புதிய கருத்து புதிய சிந்தனை.தமிழனாய் இருந்து செய்யவேண்டிய கடைமையை உணர்த்துவதாய் இருக்கிறது
ReplyDeleteஒன்று சேர்ந்தால் முடியாததில்லை.. அரசியல் ஆதாயத்தில் ???
ReplyDeleteஉண்மைதான் நம்மால் முடியும். இந்தியாவை பேச வைக்க நம்மால் முடியும். என் இன சகோதரிகள் கற்ப்பழிக்கப்படுகிறார்களே, இந்தியாவே நீ பார்த்து கொண்டு என்ன செய்கிறாய் என்றால் “தாயை கொன்று சகோதரிகளை காப்பதா” என்று இறையாண்மைவாதிகள் என்னையே கேட்கிறார்கள். எந்த ஊரில் அய்யா தன் பிள்ளைக்கு வன்கொடுமை நடக்கும் போது தாய் பார்த்து கொண்டிருப்பாள். நான் தமிழன், என் தாய் நாடு இந்தியா என்றால் ஏன் அய்யா இந்த தமிழனுக்காக இந்தியா குறள் கொடுக்ககூடாது.
ReplyDeleteஒற்றுமை.... எப்படி வரும்... அது பெரும் கனவாய் தான் இருக்குமோ என்ற அச்சம் என்னுள் எப்பொழுதும் உண்டு... திருமாவளவன் இலங்கை தமிழனுக்காக போராடுகின்றான் எனில் அது அவர் சார்ந்த சாதிக்காக தானே இருக்கும் நான் எப்படி அவரை ஆதரிக்க முடியும் என என்னிடம் ஒரு வேற்றுச் சாதிக்காரன் கேட்டபொழுது உடைந்தே போனேன்...
ReplyDeleteஇலங்கைத் தமிழர்களுக்காக இங்குள்ளவர்கள் நடத்தும் போராட்டத்தைப் பார்க்காமால், போராட்டம் நடத்துபவரின் சாதியையும் மதத்தையும் பார்க்கும் அளவிற்க்கு அறியாமை மிக்கவர்கள் அதிகாமய் இருக்கின்றனரோ என்ற அச்சம் தான் ஒற்றுமை என்பது வெறும் கனவாய் இருந்து விடுமோ எனத் தோன்ற வழி செய்கின்றது.
முதலில் இலங்கை தமிழர் பற்றிய செய்தியோ காட்ச்சியோ வந்தால் சேனலை மாற்றி மானாட மயிலாட பார்பவர்கள் என் அருகில் உள்ள வீடுகளிலே இருக்கின்றார்கள் என்பது தான் நிதர்சனம். எங்கு தவறு நடந்தது... யார் மேல் குற்றம் என்பதை மக்களிடத்தில் கொண்டு சேர்க்காமல் இருட்டடித்தது யார்... ராஜீவ் காந்தியில் கொலைக்குப் பின்னால் இருக்கின்ற கேள்விகளை சென்ற வாராம் சீமானின் மேடை உரையை கேட்ட பின்பு தானே எனக்கே தெரிந்தது... இரண்டு வாரத்திற்க்கு முன்பு வரை ராஜீவ் காந்தியை கொண்றது விடுதலைப் புலிகள் மட்டும் தான்... அது அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று தானே நானே பலருக்கு சொல்லிக்கொண்டு இருந்தேன்...
கொலை செய்பவனை விட கொலை செய்ய தூண்டுபவனுக்கும் அதை வெற்றிகரமா நடத்த உதவுபனுக்கும் தான் தண்டனை அதிகம் எனச் சொல்லும் இந்தியா ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னால் இருக்கும் கருப்பு பக்கத்தை மக்களிடம் மறைத்ததே ஏன்?
அந்தக் கேள்விகளை மக்கள் மனதில் பதிய வைக்கத் தவறியது யார்? கடவுளைப் பற்றி காலம் காலமாய் சரியாக வாய்மொழியாய் கடத்தி அடுத்த தலைமுறையினர்களில் மனதில் பதிக்கப் போய் தானே இன்று கடவுள் இன்டர்நெட்டிலும் இருக்கின்றார்...!
ஒன்று திரள வேண்டும் என்பதற்க்கு முன் ஒன்று திரளுவதற்க்கான காரணங்களை முதலில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்... அதற்க்கு இளைஞர்களுக்கு விரிவாக நடந்த அனைத்து விசயங்களையும் பரப்ப வேண்டும்...!
இப்பொழுது கூட ஒன்று திரளுவோம் எனக் கூறுகின்றீர்கள்... எங்கே எப்படி யாருடைய தலைமையின் கீழ்... எதுவுமே இல்லையே...?
ஒற்றுமை.... எப்படி வரும்... அது பெரும் கனவாய் தான் இருக்குமோ என்ற அச்சம் என்னுள் எப்பொழுதும் உண்டு... திருமாவளவன் இலங்கை தமிழனுக்காக போராடுகின்றான் எனில் அது அவர் சார்ந்த சாதிக்காக தானே இருக்கும் நான் எப்படி அவரை ஆதரிக்க முடியும் என என்னிடம் ஒரு வேற்றுச் சாதிக்காரன் கேட்டபொழுது உடைந்தே போனேன்...
ReplyDeleteஇலங்கைத் தமிழர்களுக்காக இங்குள்ளவர்கள் நடத்தும் போராட்டத்தைப் பார்க்காமால், போராட்டம் நடத்துபவரின் சாதியையும் மதத்தையும் பார்க்கும் அளவிற்க்கு அறியாமை மிக்கவர்கள் அதிகாமய் இருக்கின்றனரோ என்ற அச்சம் தான் ஒற்றுமை என்பது வெறும் கனவாய் இருந்து விடுமோ எனத் தோன்ற வழி செய்கின்றது.
முதலில் இலங்கை தமிழர் பற்றிய செய்தியோ காட்ச்சியோ வந்தால் சேனலை மாற்றி மானாட மயிலாட பார்பவர்கள் என் அருகில் உள்ள வீடுகளிலே இருக்கின்றார்கள் என்பது தான் நிதர்சனம். எங்கு தவறு நடந்தது... யார் மேல் குற்றம் என்பதை மக்களிடத்தில் கொண்டு சேர்க்காமல் இருட்டடித்தது யார்... ராஜீவ் காந்தியில் கொலைக்குப் பின்னால் இருக்கின்ற கேள்விகளை சென்ற வாராம் சீமானின் மேடை உரையை கேட்ட பின்பு தானே எனக்கே தெரிந்தது... இரண்டு வாரத்திற்க்கு முன்பு வரை ராஜீவ் காந்தியை கொண்றது விடுதலைப் புலிகள் மட்டும் தான்... அது அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு என்று தானே நானே பலருக்கு சொல்லிக்கொண்டு இருந்தேன்...
கொலை செய்பவனை விட கொலை செய்ய தூண்டுபவனுக்கும் அதை வெற்றிகரமா நடத்த உதவுபனுக்கும் தான் தண்டனை அதிகம் எனச் சொல்லும் இந்தியா ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னால் இருக்கும் கருப்பு பக்கத்தை மக்களிடம் மறைத்ததே ஏன்?
அந்தக் கேள்விகளை மக்கள் மனதில் பதிய வைக்கத் தவறியது யார்? கடவுளைப் பற்றி காலம் காலமாய் சரியாக வாய்மொழியாய் கடத்தி அடுத்த தலைமுறையினர்களில் மனதில் பதிக்கப் போய் தானே இன்று கடவுள் இன்டர்நெட்டிலும் இருக்கின்றார்...!
ஒன்று திரள வேண்டும் என்பதற்க்கு முன் ஒன்று திரளுவதற்க்கான காரணங்களை முதலில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்... அதற்க்கு இளைஞர்களுக்கு விரிவாக நடந்த அனைத்து விசயங்களையும் பரப்ப வேண்டும்...!
இப்பொழுது கூட ஒன்று திரளுவோம் எனக் கூறுகின்றீர்கள்... எங்கே எப்படி யாருடைய தலைமையின் கீழ்... எதுவுமே இல்லையே...?
மிக்க நன்றி தோழர்
Delete//எனது மண்ணின் நான்கு மீனவர்களின் உயிரென்பது எந்தக் கோப்பையையும் விடப் பெரியது// wonderful line
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநம் தமிழர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் வெல்லுவோம்.நான்கு மீனவர்களை கொன்றதை ஊடகங்களும் மூடி மறைத்துவிட்டன.தங்கள் கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDelete