Saturday, April 23, 2011

தமிழகம் வாசிக்கிறது

”  நகைக்கடைகளை விடவும் புத்தகக் கடைகளில் அதிக விற்பனையும் லாபமும் கிட்டுகின்றன.”

என்ன மூச்சு நின்று விட்டதா?. என்னைக் கொன்றே போடலாம் என்று தோன்றுகிறதா?.

ஜனத்திரள் நிரம்பி வழியும் புத்தகக் கடைகளைப் பார்க்க 

ஏக்கமாய்த்தான் இருக்கிறது.வருடத்திற்கு ஒரு முறையேனும் நகைக்கடைக்கு, ஆறேழு முறையேனும் துணிக்கடைக்கு 
குடும்பத்தோடு போகும் நாம் மொத்த ஆயுளில் எத்தனை 
முறை குடும்பத்தோடு புத்தகக் கடைக்குப் போகிறோம்? ஜூன் 
மாதத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களுக்காக புத்தகக் 
கடை வரிசைகளில் நிற்பதோடு நமக்கும் புத்தகக் 
கடைகளுக்குமான உறவு சுருங்கிப் போகிறது.

“படித்து முடித்துவிட்டு சும்மா இருப்பதாகச்” சொல்லிக் கொள்கிற 

அவலம் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமே உரியது. பத்தாம் வகுப்பில் முப்பத்தொன்பது சதம் மதிப்பெண்களோடு தேற்சி பெற்றவன் 
ஏதோ தான் படித்துக் களைத்துவிட்ட களைப்பை உணர்வது 
என்பதும் நமக்கே  உரிய சோகம்.

படித்தவன் எப்படி சும்மா இருக்க முடியும்? சும்மா இருப்பவன் 

எப்படி படித்தவனாக முடியும்?

எதார்த்தம் இப்படி பல்லை இளித்துக் கொண்டு நிற்க, 

நகைக் கடைகளைவிடவும் புத்தகக் கடைகளில் அதிக 
விற்பனையும் அதிக லாபமும் எப்படி?

27.04.1997 தினமணியில் வந்துள்ள அறிஞர். தமிழண்ணல் 

கட்டுரையின் ஒருவரிதான் இந்தக் கட்டுரையின் தொடக்க வரி. 
இடைத் தொண்ணூறுகளில் “அமெரிக்கா வாசிக்கிறது” என்கிற 
இயக்கம் லட்சோப லட்சம் டாலர்கள் செலவில் தொடங்கப்பட்ட 
செய்தியும் நமக்கு கட்டுரையில் கிடைக்கிறது.

கற்றலும் வாசித்தலும் நுகர்பொருட்களே. அரசாங்கங்கள் 

இதற்கெல்லாம் மானியம் ஒதுக்கக் கூடாது . மீறி ஒதுக்கினால் 
உலக வங்கி நிதியுதவி நிறுத்தப் படும் என்று நேரடியாகவும் 
தனது எடுபிடியான உலக வங்கி மூலமாகவும் உலக 
நாடுகளுக்கெல்லாம் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு உத்தரவு 
போட்டு அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளது அமெரிக்கா.

பிசகற்று நுணுகினால் ஒரு உண்மை புரியும். கல்வி விலை 

பொருளானால் இருப்பவன் மட்டுமே கல்வியை வாங்க 
முடியும். கற்றலுக்கும் வாங்கலுக்கும் உள்ள இடைவெளி ஒரு 
குறுநூல் அளவுக்கு நீளும்.  கல்வியை காசின்றி கற்க மட்டுமே 
முடிந்த உழைக்கும் , ஏழை, ஒடுக்கப் பட்ட பகுதி மக்களால்
கல்வியைக் காசு கொடுத்து வாங்க முடியாது. மத்தியத் 

தரவர்க்கத்தை இது சற்று தாமதமாகத் தாக்கும்.

ஆக, மேற்சொன்ன உழைக்கும் மக்களிடம் இருந்து கல்வி களவு 

போகும். படித்தப் பணக்காரனுக்கு தன்னைப் பற்றி மட்டுமே 
சிந்திக்க முடியும். எனவே அடங்குதல் அவனது இயல்பாகப் 
போகும். ஆகவே பணக்காரன் படிப்பதால் அமெரிக்காவிற்கு 
ஆபத்தில்லை. ஆனால் , உழைப்பவன் படித்துத் தேர்ந்தால் 
அவனை அடக்க இயலாது. கலியைப் பள்ளியிலிருந்து 
சந்தைக்குத் திருப்பாமெரிக்கா விரும்புவது இதனால்தான். 
ஆனால் அமெரிக்கன் தடையின்றி செலவின்றி நிறைய 
வாசித்துவிட வசதி செய்வதுதான் “ அமெரிக்கா வாசிக்கிறது” 
இயக்கத்தின் னோக்கமாக இருக்க முடியும்.

தன் எல்லைக்கு எஞ்சிய உலகத்தில் அடிமைகள் மட்டுமே 

குவிந்துகிடக்க ஆசைப்படும் அமெரிக்கா, குறைந்த பட்சம் 
தனது குடிகளாவது அறிவார்ந்து இருக்க வேண்டுமென 
ஆசைப் படுவதற்காக நாமும் அவசரமாக அமெரிக்காவை 
ஒருமுறை பாராட்டி விடலாம். அமெரிக்காவைப் பாராட்ட 
எஞ்சிய நம் வாழ்வில் வாய்ப்பே கிட்டாமலும் போகலாம்.

பெசில்வேனியா பல்கலைகழகத்தில் இன்று வெளிவந்த 

தமிழ் நூல்களும் பைண்டு செய்யப்பட்டு , தூசு தட்டப்பட்டு 
அடுக்கி வைக்கப் பட்டுள்ளன.7,56,640 சதுராடிப் பரப்பளவில் 
பன்னிரண்டு தளங்களில் சிகாகோ நூலகம் இயங்குகிறது
போன்ற தகவல்களும் தமிழண்ணல் கட்டுரையில் 

கிடைக்கின்றன.

இதில் நமக்கும் மகிழ்ச்சிதான். நமது வருத்தெமெல்லாம் 

அமெரிக்காவின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து வளரும் நாடுகள்
 நூலகத்திற்கான செலவை நிறுத்திக் கொண்டதுதான்.

இன்று வெளிவந்த நூல்களும் வாங்கப் பட்டு, பைண்டு 

செய்யப்பட்டு சுத்தமாக பாதுகாக்கப் படுகின்றன 
அங்கே. தமிழகத்து நூல்னிலையங்களில் தமிழ் நூல்கள்
நுழையப் படும் அவஸ்தை நம் நெஞ்சில் வலியைத் தருகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் வாசகத் தளம் நீண்டு கொண்டும் 
இருக்கிறது. அகன்றுகொண்டுமிருக்கிறது. களகட்டும்
 புத்தகக் கண்காட்சிகள் இதற்கு சான்று. ஆனால், 
பெருகியுள்ள மக்கட் தொகையோடு விகிதாச்சாரப் படுத்த 
இந்த விரிதல் மிக மிகக் குறைவுதான். இந்த முரண்பட்ட 
விகிதாச்சாரத்தை நேர்படுத்த ஓரளவு பலம் கொண்ட சக்தி 
நூலகம்.

தமிழன் வாசிக்க வேண்டும் என்று நாம் ஏன் முட்டிக்கொள்ள வேண்டும்?

“தான்” சார்ந்த சிந்தனையை “சமூகம்” சார்ந்த சிந்தனையாக 
புத்தகங்கள் மாற்றிவிடும்.

ந.முருகேசபாண்டியன் அவர்கள் 1984 ல் ஈழ விடுதலைக்ககப் 
போராடும் ஒரு ராணுவக் குழுவின் தலைவரைச் சந்திக்கிறார். 
(அவர் வெளிப்படையாய் சொல்லவில்லை. ஆனாலும் 
அது பிரபாகரன் அவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள்
அதிகம்). இலங்கைத் தமிழர்களைச் சிதறாமல் ஒன்று திரட்டி 
தங்களது போராட்டத்தில் ஈடுபடுத்த எப்படி முடிந்தது என்ற 
கேள்விக்குத் தான் பெற்ற பதிலை அப்படியே “ யாழ்ப்பாண 
நூல்நிலையம் ஓர் ஆவணம்” என்ற நூலுக்கான தமது
மதிப்புரையில் தருகிறார்.

”யாழ்ப்பாணப் பகுதியில் கிராமங்கள் தோறும் தொடங்கப் 
பெற்ற வாசக சாலைகள் தான் ஈழப் போரட்டத்தின் மையம்,. 
அதாவது வாசக சாலையில் நூல்களை வாசிக்க ஆரம்பித்த 
இளைஞர்களின் மனநிலையில் ஏற்பட்ட விழிப்புணர்வு 
ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக 
மாற்றியமைத்து விட்டது.

உலகின் கழுத்தைப் பிடித்துத் திருகி அதன் கவனத்தைப் 
பல பத்து ஆண்டுகளாக வைத்திருக்கும் ஒரு பெரும் 
போராட்டத்தின் மையமே நூலகங்கள்தான் என்பது 
நூலகங்களின் அழுத்தமான முக்கியத்துவத்தை 
உணர்த்துகிறது. இதை சராசரி அரசியல்வாதிகள் 
உணர்வதில் சிக்கலுண்டு. சராசரிகள் படிக்கப் படிக்க 
அவனுக்குப் பாதிப்பு என்பதால் சராசரி அரசியல்வாதி 
இதில் அக்கறை காட்டுவதென்பது அத்தையின் தாடிதான். 
ஆனால் இடதுசாரி மனங்கொண்ட இளைஞர் மற்றும் மாணவர் 
அமைப்புகள் இதன் அழுத்தம் உணர்வது சமூக மாற்றத்திற்கான 
இந்த நொடித் தேவையாகும்.


தனது வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட பகல் பொழுதுகளைப் போர்க்களங்களிலேயே செலவு செய்த திப்பு இளைஞர்களையும் புத்தகங்களியும் இணைக்க அக்கறைப் பட்டிருக்கிறான். எத்தகைய வளமையும், பாதுகாப்பும் பாழாய்ப் போக ஒரே ஒரு படிக்காத 
தலைமுறை போதும். இது உணர்ந்த திப்பு, நூலகத்தின் மீது 
கவனம் குவித்துள்ளான்.


திப்பு வீழ்ந்ததும் நகைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களைச் 
சுருட்டிக் கொண்டு போன பறங்கியரின் நெற்றியடித்து பாடம் 
சொன்னது கீழையியல் ஆராய்ச்சியாளன் வில்கின்ஸ் கவர்னர் 
ஜெனரலுக்கு எழுதிப் போட்ட ஒரு கடிதம். அவன் எழுதினான், 
“ இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்த ஒப்பற்ற 
பொக்கிஷம் இது.” அவன் சொன்னது திப்புவின் நூலகத்தை.


அழகூட்டும் ஆபரணங்களையும் வளமை கூட்டும் 
செல்வங்களையும் பொக்கிஷமென நினைத்து ஞானப் 
பட்டறையை விட்டுப் போன அறிவினேழைகளாய் தங்களை 
உணர்ந்த பறங்கியர்கள் அதையும் கொண்டு போனார்கள்.


பொதுவாகவே ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட 
மண்பரப்பில் எஞ்சி நிற்கும் புராதன கலைச் சின்னங்களையும், நூலகங்களையும் அழித்துவிடுவார்கள். ஏனெனில் 
ஆக்கிரமிப்பிற்கெதிராய் மண்ணின் குடிகளை கிளர்ந்தெழச் 
செய்யும். நாளந்தா சிதைக்கப்பட்டதற்கும் , பாக்தாத்தை கைப்
 பற்றிய தைமூர் அங்குள்ள நூலகங்களை எரித்ததற்கும், 
புஷ் இராக்கில் இதையே செய்வதற்கும் இதுதான் காரணம்.


எனவே மின் உற்பத்தி, தொழில் வளர்ச்சி, ஆகியவற்றின் மீது 
செலுத்தப்படும் கவனமும், முக்கியத்துவமும் 
நூலகங்களின் கட்டமைப்பின் மீதும் திருப்பப்பட வேண்டும்.


இடதுசாரி சிந்தனைக் கொண்ட அமைப்புகள் குறிப்பாக, 
இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் தங்களது 
வேலைத் திட்டத்தில் நூலகங்களை உருவாக்குதல், 
பராமரித்தல், வளர்த்தெடுத்தல் என்பவற்றிற்கு கூடுதல் 
முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவர்கள் முடிவெடுத்து, 
இயக்கப் படுத்தி, ஒரே நேரத்தில் கல்லூரிகள், பள்ளிகள், 
ரயிலடிகள், பேருந்து நிலையங்கள் , கடைவீதி மற்றும் ஜனங்கள் 
திரளும் பகுதிகளில் உண்டியலடித்தாலே நூலகங்கள் உருவாகும். 
இவர்களது வல்லமையும் அர்ப்பணிப்பும் அத்தகையது.


நூலகங்கள் கட்டுவது, புத்தகங்கள் குவிப்பது என்பதோடு எதைப் 
படிப்பது, எதை விடுப்பது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். 
“கண்டதைப் படிக்க பண்டிதன் ஆவான்” என்பது முதுமொழி. 
கண்டதையும் கற்க ஏது நேரம் இன்று. நேற்றைவிடவும் 
வேகமாய்ச் சுழலும் இன்று சொல்லும் பாடம் இதைவிடவும் 
வேகமாய்ச் சுழலும் நாளை என்பதுதான். கிடைக்கிற சன்னமான 
நேரத்தில் எதை வாசிப்பது என்பதைத் தேர்ந்தெடுக்கும் தெளிவையும் வாசகனுக்கு கற்றுத் தரவேண்டும்.


மனிதனை ரசிகனாக்குகிற வேலையை ஊடகங்கள் 
பார்க்கின்றன. நாம் ரசிகனை வாசகனாக்க வேண்டும். 
இந்நிலையில் இருக்கிற வாசகனும் ரசிகனாவது ஆபத்தானது. 
வாசகனை ரசிகனாக்குவது உலகமயமாக்களின் ரகசிய வேலைத் திட்டங்களில் ஒன்று. இதன் விளைவிலொரு சிதறல்தான் 
பாக்கெட் நாவல். பேருந்து ஏறும் போது ஒரு பாட்டில் மினரல் 
வாட்டரும், ஒரு பாக்கெட்நாவலுமாய் ஏரி இறங்கும்போது 
இரண்டையும் கிடாசிவிட்டுப் போகும் பழக்கம் வளர்வதை 
அனுமதிக்கக் கூடாது. காலிக் குப்பியையும் புத்தகத்தையும் 
ஒன்றாக நினைக்கும் அயோகியத் தனத்தை மாற்றியே ஆக 
வேண்டும்.


வாய்ப்புக் கொடுத்தால் தமிழகம் வாசிக்கும்.


வாசிக்கும் தமிழகம் நிச்சயம் சாதிக்கும்.


சரி, என்ன செய்யலாம்?


(இது சில ஆண்டுகளுக்கு முன்னால் “இளைஞர் முழக்கம்” 
இதழில் வந்தது. சென்னையில் உருவான நூலகம் ஒன்று தவிர 
வேறு எந்த மாற்றமும் இல்லை என்பதாலும், பெரிதாய் இதை 
யாரும் அப்போதும் , பிறகு “அந்தக் கேள்விக்கு வயது 98”  என்ற 
எனது நூலில் வந்தபோதும் படித்துவிடவில்லை என்பதாலும் 
இதைப் ‘உலக நூலக தின ‘ அடையாளமாகப் பதிவு செய்கிறேன்.) 

7 comments:

  1. அருமையான பதிவு.
    ஆனால் இளைஞர்களிடம் பாடத்தைத் தவிர 'வெளியே' படிப்பது குறைந்து வருகிறது.

    ReplyDelete
  2. புத்தகங்கள் நம்மை நாடு கடத்தவும், உலகக் குடிமகன்/ள் ஆக்கவும் செய்கின்றன. ஜனரஞ்சகமான எழுத்துக்களை மட்டுமே அறிந்த பள்ளி வயதில் பதினொன்றாம் வகுப்பில் துணைப்பாட நூலில் இருந்த தனுஷ்கோடி ராமசாமியின் வெளிச்சம் என்ற சிறுகதை பரவசத்தையும், அதுபோன்ற எழுத்துக்களைத் தேடிப் படிக்கவுமான உந்தலைத் தந்தது. நல்ல எழுத்துக்களின் அறிமுகம் ஒரு முக்கியத் தேவையாகிறது. மாணவர்கள் கண்காட்சியில் வேலைவாய்ப்புக்கான அல்லது தொடர்பு ஆங்கிலம் போன்ற புத்தகங்களை மட்டும் வாங்குவது கவலைக்குரிய விஷயம். தவிர ஊடகங்களின் விரையும் பிம்பங்களுக்குப் பழகிய பிள்ளைகளுக்கு நிலையாய் இருக்கும் புத்தகத்தைப் படிப்பது சிரமம் என்று வேறு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இத்தனையையும் தாண்டி புத்தகங்கள் இயங்க வேண்டியுள்ளது ஒரு சவாலாக இருக்கிறது. கூடு பெண்கள் வாசிப்பரங்கம் என்ற ஒரு நட்புத் தளத்தில் நாங்கள் ஒவ்வொரு மாதமும் புத்தகங்களைக் குறித்து கலந்துரையாடுவோம் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இன்னொன்றும், புத்தகங்களின் விலையைவிட மனோபாவமே பிரச்சனையாக இருக்கிறது. நீங்கள் புத்தகங்களை விலை குடுத்தா வாங்குவீர்கள் என ஆச்சர்யமாக பேராசிரியை ஒருவர் கேட்டார்! இல்லை அவைதான் எனக்கு விலை அளிக்கின்றன என்று சொன்னேன். புத்தகங்களைத் திரட்டுவதன் மூலமும், சுழற்சியின் மூலமுமே நிறைய பேர்களுக்கு புத்தகங்களைச் சென்றடைய வைக்கலாம். நீண்ட பதிவிற்கு மன்னிக்கவும். உங்கள் பதிவு எழுதத் தூண்டிவிட்டது. உங்கள் அருமையான பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  3. ஐயா! எட்வின் அவர்களுக்கு வணக்கம்! மிகவும் ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட, கவனத்தில் கொள்ளவேண்டிய பதிவு இது. //பேருந்து ஏறும் போது ஒரு பாட்டில் மினரல் வாட்டரும், ஒரு பாக்கெட்நாவலுமாய் ஏரி இறங்கும்போது இரண்டையும் கிடாசிவிட்டுப் போகும் பழக்கம் வளர்வதை அனுமதிக்கக் கூடாது.// இந்த நிலை மாற நாம் ஏதேனும் ஒரு செயலை முன்னெடுக்கவேண்டும். அதில் நாம் இணைந்து இருப்போம். இந்த பதிவை உரிமையுடன் எனது வலைப்பதிவிலும் வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  4. @Rathnavel
    அன்பின் அய்யா,
    வணக்கம். மிக்க நன்றி. அய்யா தொடர்ந்து என்னை நெறிப் படுத்த வேண்டும். முழுவதுமாகப் பாடங்களைப் படிப்பது என்பது மட்டுமல்ல, ப்ளூ ப்ரிண்ட் பார்த்துதான் பல பள்ளிகளில் பாடமே நடத்தப் படுகிறது

    ReplyDelete
  5. @மிருணா

    மிக்க நன்றி தோழர்.உங்கள் வலையை தொடர்ந்து பார்க்கிறேன். நிலவு வருடிய நிழல் இலை, ஆஹா அஹா நிறைய எழுதுங்களேன்

    ReplyDelete
  6. //நாம் ரசிகனை வாசகனாக்க வேண்டும்//

    நல்ல கருத்து. தங்களைப் போன்ற, மிருணா போன்றவர்கள் நம்பிக்கை தரும் எழுத்தைக் கைக்கொண்டு இருகிறீர்கள்! எங்களின் வாசிப்பார்வத்தை அதிகரிப்பதாயுள்ளன தங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  7. @நிலாமகள்

    மிக்க நன்றி நிலா. இதெல்லாம் உங்களது பெருந்தன்மை

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...