Saturday, May 31, 2025

65/66, காக்கைச் சிறகினிலே, மே 2025

“சிதறிய பொருட்களில்
பரவிக் கிடக்கிறது
இறந்த எலியின் போராட்டம்”
தம்பி வைகறையின் இந்தக் கவிதை காட்சியாக விரிந்து என்னை பிசைந்துகொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தக் கவிதை என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது.
அறைக்குள் ஒரு எலி புகுந்துவிட்டது. அதை அடித்துக் கொல்வதற்கு கைகளில் கம்புகளோடு துரத்துகிறார்கள்.
அங்கும் இங்குமாக ஓடி ஒளிகிறது அந்த எலி. அது ஒளிந்துகொண்டிருப்பதாக இவர்கள் நம்புகிற இடங்களையெல்லாம் கலைத்துப் போடுகிறார்கள்.
அது வேறு இடத்திற்குப் போகிறது. அங்கும் இருக்கிற பொருட்களையெல்லாம் கலைத்துப் போடுகிறார்கள். மீண்டும் மீண்டும் எலி ஓடி ஒளிவதும் இவர்கள் கலைத்துப் போடுவதுமாக நகர்கிறது.
நீண்டதொரு தேடலுக்குப் பிறகு களைத்துப் போனவர்களாக எலி வேட்டையை நிறுத்துகிறார்கள்.
அறை முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. சே, இந்த எழவெடுத்த எலி என்ன பாடு படுத்திடுச்சு என்று அங்கலாய்க்கிறார்கள்.
அறைகள் முழுவதும் சிதறிக் கிடக்கும் பொருட்களை மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டுமே என்கிற அங்கலாய்ப்பு இவர்களுக்கு.
பொருட்கள் சிதறி அலங்கோலமாகக் கிடக்கும் அந்த அறைகள் என்பது அந்த எலியின் உயிர்காக்கும் போராட்டம். அவ்வளவு அழகாக அதைக் காட்சிப் படுத்தியிருப்பான் வைகறை.
இப்போது மொத்த இந்தியாவும் சிதறிக் கிடக்கும் அறைகளாகத்தான் காட்சியளிக்கிறது. பாஜக தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கைகளில் கிடைத்த ஆயுதங்களோடு எலிகளை முற்றாய் அழிக்க முடியாமல் களைத்துப் போனவர்களாக “சே நாசமாப் போன எலி, சிக்காம என்னபாடு படுத்துது” என்று புலம்புகிறார்கள்.
இங்கு எலிகள் என்பவை இந்தியாவின் விழுமியங்களைக் குறிக்கிற சொல் என்று கொள்வதுதான் சரியாக இருக்கும்.
இந்தியாவின் விழுமியங்களை பாஜகவும் RSS காரர்களும் ஒருபோதும் ஏற்பதில்லை. காரணம் இந்திய விழுமியங்களின் மையச்சரடு “மதச் சார்பின்மை”. RSS மற்றும் பாஜக சித்தாந்தத்தின் மையச்சரடு இந்துத்துவா.
மதச் சார்பின்மை மக்களை இணைக்கக் கோரும். மதப்பழமைவாதம் மனிதர்களைக் கூறுபோடத் துடிக்கும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நேர் எதிரிகள் RSS மற்றும் பாஜகவினர்.
பரந்த இந்து ராஷ்ட்ரமே அவர்களது சித்தாந்தத் தந்தையான கோல்வால்கரது கனவு. இதை அவர்கள் பகிரங்கமாகவே வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை.
ஆனால், அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சி பீடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவேதான் இதுகுறித்து உரக்கப் பேசமுடியாமல் தவிக்கிறார்கள்.
இந்திய அரசிலமைப்புச் சட்டத்தை காவி மைகொண்டு எழுதுவதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என்றால் மக்களை பதற்றத்தோடு வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
80 விழுக்காடு பெரும்பான்மை மக்களை 20 விழுக்காடு சிறுபான்மையிருக்கு எதிரியாக மாற்றுவது தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மையைக் கொடுக்கக்கூடும் என்று கருதுகிறார்கள். ஆகவே கலவரங்களை வாய்க்கிற இடங்களில் எல்லாம் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சமீபத்தில் சம்பல் பற்றி எரிந்தது நாம் அறிந்தது. அதற்கான தோற்றுவாயினை தோழர் மதுர் சத்யா ஒரு கூட்டத்தில் பேசக் கேட்க வாய்த்தது.
ஒரு RSS இளைஞன் தனது பயணத்தின் ஊடே ஒரு மசூதியைப் பார்க்கிறான். அது அவனை உறுத்துகிறது. அந்த மசூதி அவனை மிகவும் உறுத்துவதாக அவனது நண்பனுக்கு அலைபேசி வழியாக சொல்கிறான்.
வழக்கறிஞரான அவனது நண்பன் அந்த மசூதியின் இருப்பிட விவரங்களைக் கோருகிறான். இவனும் தருகிறான்.
இது நிகழ்ந்தபோது காலை பத்தே முக்கால் மணி இருக்கும் என்கிறார் சத்யா. விவரங்களை அலைபேசி வழியாக பெற்றுக் கொண்டதும் வழக்கிற்கான மனுவைத் தயார் செய்கிறான்.
ஒரு இந்து ஆலயம் இருந்த இடத்தில் அந்த மசூதி கட்டப்பட்டிருப்பதாக வழக்கைத் தொடுக்கிறான்.
வழக்கு அன்றே விசாரணைக்கு வருகிறது அன்றே தீர்ப்பும் வருகிறது. அந்த மசூதி இருக்கும் இடத்தில் இந்து ஆலயம் இருந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறுகிறது.
எனவே தொல்லியல் துறை அந்த இடத்தை சோதித்து அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிடுகிறது. தொல்லியல்துறை களத்திற்கு வருகிறது. அங்கு ஒரு இந்து ஆலயம் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அது ஆய்வறிக்கை தருகிறது.
இவை அத்தனையும் 40 மணிநேர அவகாசத்திற்குள் நடந்து முடிந்திருக்கிறது.
வேறென்ன சொல்வது. அன்பை பெடல் இல்லாத சைக்கிளிலும் வெறுப்பை ராக்கெட்டிலும் அனுப்பிப் பழகிவிட்டார்கள். இதன் விளைவு கடும் பதற்றமும் ஐம்பது அறுபது உயிர்ப் பலிகளும்.
வழக்குகளையும் ஆயுதங்களாக மாற்றக் கற்றிருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இதுபோல இன்னும் 40,000வழக்குகளைத் தொடுப்பதற்கான திட்டம் அவர்களிடம் இருக்கிறதாம்.
இது ஒன்றிற்கே இவ்வளவு பதற்றமும் உயிரிழப்பும் என்றால் நாற்பதாயிரம் வழக்குகள் எத்தனை பாதிப்புகளைக் கொண்டு வரும்? இந்த பதற்றத்தினால் அவர்களுக்கு என்ன பயன் என்ற கேள்வியும் வரும்.
இது சிறுபான்மை மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களை அச்சப்படுத்தும். இந்த அச்சம் வாக்குகளாக மாறும் என்று கருதுகிறார்கள்.
ஊழியர்கள் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள் என்றால் அரசோ சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் மூலம் பதற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது. அப்படி ஒரு அரக்கத்தனமான முயற்சிதான் வக்பு வாரியத் திருத்தச் சட்டம்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே வக்பு வாரியச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
2013 வாக்கில் வக்பு வாரிய சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. வக்பு வாரியச் சட்டத்தில் உள்ள ஷரத்துகளை மாற்றவோ திருத்தவோ கூடாது என்றுகூட இஸ்லாமியர்கள் ஒருபோதும் கோரியது இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில் வக்பு வாரியத்தில் இரண்டு பெண்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது இஸ்லாமியர்கள் அதை எதிர்க்கவெல்லாம் இல்லை.
இப்போது கொண்டு வந்திருக்கக்கூடிய திருத்தங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கின்றன.
வாரியத்தின் சொத்து வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இருக்கிற சொத்தை அரசின் சொத்தாக மாற்றிக்கொள்கிற ஏற்பாடாகவும் இந்தத் திட்டங்கள் இருப்பதால்தான் இதை எதிர்க்கவும் இதற்கெதிராக உச்சநீதிமன்றத்திற்கு செல்வதற்குமான தேவை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
வக்பு வாரியச் சட்டத்தில் இருப்பது 113 ஷரத்துகள். இதில் கிட்டத்தட்ட 48 ஷரத்துகளை இந்த அரசாங்கம் திருத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட 42 விழுக்காடு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. சரி பாதி ஷரத்துகள் திருத்தப்பட்டுள்ளன என்பது கிட்டத்தட்ட புதுச் சட்டம் போன்றதுதான்.
வக்பு அமைப்பிற்கு ஈரமனம் கொண்டோர்கள் யாராயினும் நன்கொடை அளிக்கலாம். திருத்தச் சட்டத்தின்படி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளேனும் இஸ்லாமியராக இருக்கக்கூடிய ஒருவரால்தான் வக்பு அமைப்பிற்கு நன்கொடை அளிக்க முடியும்.
இதன்மூலம் வக்பு வாரியத்திற்கு புதிதாக வரவெதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் இவர்களுக்கு இருக்கிற வக்கிரம் வெளிப்படுகிறது. ஒருபுறம் வரவைத் தடுக்கிற இவர்களது வன்மம் இதுவென்றால் இன்னொரு புறம் இருக்கிற வக்பு சொத்துகளை அரசாங்கம் எடுத்துக்கொள்கிற வன்மமும் இருக்கிறது.
இருக்கிற சொத்துக்களுக்கான பத்திர ஆவணங்களைக் கேட்கிறார்கள். பத்திரப்பதிவு தொடங்கும் முன்னரே வக்புவிற்கு வந்த சொத்துக்களுக்கு ஆவணங்கள் சாத்தியமே இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆவணம் இல்லாத சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்ட அரசின் சொத்துகள் என்கிறார்கள்.
தாவா ஏற்படின் இதற்கான விசாரணை அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவர் என்கிறார்கள். அது எப்படி அரசின் அதிகாரி அந்த நிலம் யாருடையது என்று விசாரிக்க முடியும் என்றால் அது அப்படித்தான் என்கிறார்கள்.
இந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
இவர்கள் மீதான வன்முறைகள், இவர்களுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றால் நொந்து போயிருக்கிற இஸ்லாமியர்களை இறுக அணைத்தபடி “இருக்கிறோம்” என்று சொல்லும் தொண்ணூறு விழுக்காடு இந்தியர்கள் நம் வயிற்றில் பால் வார்க்கிறார்கள்.
இந்த அன்பும் அணைப்பும் சங்கிகளின் வெறுப்பை சல்லி சல்லியாக நொறுக்கும்.
-- காக்கை
மே 2025
Like
Comment
Share

Wednesday, May 28, 2025

கங்கிற்கலைதல்


"அரச்சிடலாம்
துவையல்
இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வறுகடலை
கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்
காய்ச்சிடலாம்
கஞ்சியும்
எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
கங்க”
என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன்.
எதிர்த்த வீட்டு துர்க்கா அம்மாயி வீட்ல கங்கு வாங்குவதற்காக கரண்டியத் தூக்கிக்கொண்டுபோன அனுபவம் எனக்கு உண்டு.
இப்ப அதெல்லாம் அவுட் டேட்டட் ஆயிடுச்சுபோல என்று நினைத்திருந்தேன்.
தோழர் செஞ்சி தமிழினியன் எழுதிய “ஊத்தாம் பல்லா” நாவல் குறித்து நான் பேச வேண்டும் என்பதற்காகாக அந்த நாவலை தோழர் லார்க் பாஸ்கரன் அனுப்பியிருக்கிறார்.
செமையான நாவல்.
நூல் குறித்து பேசிவிட்டு எழுதுகிறேன்.
அதில் ஒரு இடம்,
மலையனூரம்மா கிழவி அடுப்பை பத்த வைக்கிறாள். கங்கு கேட்டு இருளாயி வருகிறாள் கரண்டியோடு. இருவருக்கும் இடையேயான உரையாடலைக் கேளுங்கள்.
“ஏண்டி இருளாயி, யாரு அடுப்ப பத்த வைப்பாங்கன்னு பாத்துகினே இருந்து கலகலன்னு புடிச்சு எரிய ஆரம்பிச்சதும் வந்தீர்ர, தாலிக்கிற கர்ண்டியையும், ஒரு கொக்காணையும் கையல் எடுத்துக்கீனு”
சிரித்துக்கொண்டே மலையனூரம்மாவிற்கு பதில் சொல்கிறாள் இருளாயி,
“இன்னா சித்தி பண்றது?” இந்த வாரம் தனியா வத்திப்பெட்டி வாங்கியாந்து போட்டேன். எந்த இடத்துல சில்லறை இருக்கும், எந்த இடத்துல வத்திப்பெட்டி இருக்கும்னு தினுசா தெரிஞ்சு கரைட்ட அத தூக்கி இடுப்புல சொருகிக்கிட்டு போய்ட்டா நான் என்ன பண்றது”
எவ்வளவு நுட்பம்
கஞ்சி காய்ச்ச கம்பு, சோளம் குருணை பிரச்சினைதான் பொதுவா பேசப்படும்
பத்த வைக்க வத்திப்பெட்டிக்கே பிரச்சினை தோழர்களே
புருஷனுக்கு பயந்து வத்திப்பெட்டியை ஒளிச்சு வைக்க வேண்டிய நிலையை எவ்வளவு நாசுக்கா வைத்திருக்கிறார் செஞ்சி தமிழினியன்
1970 பக்கமா கரண்டியோட அலைஞ்ச அனுபவம் உண்டு
இப்பவும் இருக்கு போல
முத்தம் செஞ்சி தமிழினியன்

Tuesday, May 27, 2025

கவிதை 10/2025

 அன்றொரு நாள்

கடலைப் பார்க்க
போனபோது
அங்கே
கடலிருந்தது

Monday, May 26, 2025

கவிதை 09/2025

 காந்தியை
வரைவதற்காக
அமர்ந்தவர்
வரைந்து முடித்தது
அச்சு அசலாக
அவரது சித்தப்பாவை

என்றாவது
யாரையாவது
வரைய ஆரம்பித்து
காந்தியையும் 
வரைந்து விடுவார்
அவர்

யாரை ஆரம்பித்து 
யாரில் முடித்தாலும்

அவை
ஓவியங்கள்

அவர்
ஓவியர்

கலகல திருமணம்


கலகல வகுப்பறை சிவா,

மனதிற்குப் பிடித்த தம்பிகளில் ஒருவர்

நன்றாக நினைவிருக்கிறது

இவரைப் பற்றி அறியவந்த நாளில் 
இவர் நடத்திக்கொண்டிருந்த பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்கிறேன்

என்னதிது, வந்து வகுப்பெடுங்கள் என்கிறார்

நேற்று (25.05.2025) அவரது பிள்ளையின் திருமணம்
முத்தம் குழந்தைகளே

இணைந்து மகிழ்ந்திருங்கள்

இரண்டு மகிழ்ச்சிகள்

பிள்ளைகளின் திருமணம் தரும் மகிழ்ச்சி ஒன்று

மனுஷன் கிழவனாகிறார் என்பது இரண்டு

தமிழ்மாறன் பணிநிறைவு விழா


 25.05.2025
அஸ்வின் ஹால்
பெரம்பலூர்

தமிழ்மாறன் பணிநிறைவு விழா

முத்தம் மாறன்

Sunday, May 25, 2025

தமிழ் மண்ணின் தொன்மை இந்தியாவின் தொன்மை

 கீழடி தொன்மை தமிழ் மண்ணின் தொன்மை

தமிழ் மண்ணின் தொன்மை இந்தியாவின் தொன்மை
பிற்கேன் ஒன்றிய சங்கிகள் இவ்வளவு பதறுகிறார்கள்?
தமிழ் மண்ணின் தொன்மை அவர்கள் கட்டமைக்க விரும்பும் பாரத தொன்மையை கேள்வி கேட்கும் என்பது அவர்களுக்குப் புரிகிறது
எனவே அவர்கள் பதறுகிறார்கள்
துயரம் என்னவெனில் தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளும் பதறுவதுதான்

Saturday, May 24, 2025

”மூத்த” என்பது வயது மட்டும்தானா?

 டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு ஊழல் என்றும்

இதோ ED உதயநிதியைக் கைது செய்யப் போகிறது என்றும் ஒரு பரபரப்பை சங்கிகள் கட்டமைக்கின்றனர்
டாஸ்மாக் சம்பந்தமாக மொத்தம் 47 FIR கள்
அவற்றில் 41 அதிமுக காலத்தைச் சார்ந்தவை
ஆனால் அதை வைத்து திமுக மீது ஒரு போலியான எதிர் பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சி செய்கிறது சங்கிக் கூடாரம் .
எல்லோரைப் போலவே உங்களுக்கும் அரித்திருக்கிறது மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களே
எல்லோரைப் போலவே நீங்களும் சொறிந்து கொண்டிருக்கிறீர்கள்
அந்த அரிப்பும் சொறிதலும் கேவலம் என்பதும் உங்களுக்குத் தெரிந்தே இருந்திருக்கிறது
என்ன, அதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்
நீங்கள் சொன்ன Cheap என்ற வார்த்தையை கேவலம் என்று சொல்லியிருக்கிறேன்
அவ்வளவுதான்
சரி , இதை இவ்வளவு சிரிப்போடா ஒத்துக் கொள்வீர்கள் ?
இரண்டை சொல்லுங்கள் மணி
என்ன அரிப்பு உங்களுக்கு?
சொறிந்து கொண்டதால் என்ன கிடைத்தது?
”மூத்த” என்பதற்கு வயது மட்டும்தான் அளவுகோலா மணி

எங்கள் ஊரில் மைசூர்பாக் மைசூர்பாக்தான்

 நாங்கள் நாளை உங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் தொடங்க இருக்கிறோம்

உங்கள் வாழிடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ, ராணுவ முகாம்களிலோ ஏதும் செய்ய மாட்டோம் என்று தாக்குதல் நடத்துவதற்கு முதல்நாள் பாகிஸ்தானிற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்
இதை அவரே சொல்கிறார்
இதை தேசபக்தி என்றும்
பாக் என உச்சரிப்பது தேசத் துரோகம் என்றும் சொல்கிறார்கள் சங்கிகள்
மைசூர்பாக்கை மைசூர்ஸ்ரீ என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறார்கள்
இன்று ஐந்து கடைகளில் நூறு நூறு கிராம் மைசூர்பாக் கேட்டேன்
கொடுத்தார்கள்
அதிலும் ஒரு கடையில் மைசூர்பாக் கேட்டது நீங்கதானே என்று கேட்டு என்னிடம் கொடுத்தார்கள்
ஆக எங்கள் ஊரில் மைசூர்பாக் மைசூர்பாக்தான்

Friday, May 23, 2025

சசி தரூரை காங்கிரஸ் சகிப்பது என்பது துயரம்

 பகல்காம் தாக்குதல்

அதை ஒட்டி இரு நாடுகளுக்குமிடையே நடந்த சண்டை
சண்டை நிறுத்தம்
இது கடந்து இது குறித்தான பாராளுமன்ற நிலைக்குழு
நிலைக் குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் சசிதரூர்
எழுதுகிறார்,
காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை
பாஜக வெளியுறவுக் கொள்கை
இரண்டும் வேறு வேறல்ல
இந்திய வெளியுறவுக் கொள்கைதான்
இதை அவர் எழுதிய அதே நாளில் 14,000 பாலஸ்தீனக் குழந்தைகள் உணவின்றி மரணிக்க இருப்பதாகவும்
உணவு அனுப்ப யாரையும் அனுமதிக்க இஸ்ரேல் மறுப்பதாகவும் செய்தி
பிறகு உணவு போனது வேறு
இது பாஜகவிற்கு உவப்பானது
அது இஸ்ரேல் சார்பானது
காங்கிரசும் அப்படியா தரூர்?
சசி தரூரை காங்கிரஸ் சகிப்பது என்பது துயரம்

Thursday, May 22, 2025

ட்ரம்பின் வரியுத்தம்


அமெரிக்க டாலரின் மதிப்பு 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்திருப்பதாக 13.04.2025 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது. இந்த செய்தியை வாசித்ததும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். சிலருக்கு தலை சுற்றியிருக்கக் கூடும், இன்னும் பலருக்கு மாரடைப்பே ஏற்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
”அமெரிக்க டாலரின் மதிப்புக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து பாதாளத்திற்குப் போனது” என்பது மாதிரியாகத்தான் வழக்கமாக செய்திகளை வாசித்துப் பழக்கப்பட்டிருக்கிறோம்.
அமெரிக்க டாலரின் மதிப்போடு ஒப்பிட்டுத்தான் உலக நாடுகளின் பணத்திற்கான மதிப்பே நிர்ணயம் செய்யப்படுகிறது. அதுபோல, யூரோ மற்றும் பிராங்குடன் ஒப்பிட்டுத்தான் அமெரிக்க டாலரின் மதிப்பு நிர்ணயிக்கப்டுகிறது.
பிராங்கோடு ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு இருந்த மதிப்பீட்டின் அளவிற்கு இறங்கி இருக்கிறது அமெரிக்க டாலர். அமெரிக்காவில் சில நகரங்களே திவாலாகிப் போன வரலாறு உண்டு. ஆனால் அப்போதுகூட இந்த அளவிற்கு அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததில்லை. அவ்வளவு வலுவான அமெரிக்க டாலருக்கு இப்போது ஏன் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது?
ட்ரம்ப்பின் தீர்வை வெறியே இதற்கான காரணம் என்கிறார்கள். பொருளியல் நிபுணர்கள் இதை “தீர்வைப் போர்” என்று அழைக்கிறார்கள்.
இந்தமுறை பதவி ஏற்றதும் ட்ரம்ப் கீழ்க்காணும் இரண்டு விஷயங்கள் குறித்து மிகவும் தான் கவலைப்படுவதாகக் காட்டிக் கொண்டார்,
1) பொருளாதார ரீதியாக உலக நாடுகள் அமெரிக்காவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன
2) அமெரிக்காவின் இறக்குமதி என்பது ஏற்றுமதியைவிட பெருமளவு அதிகமாக இருக்கிறது
என்பதே அவரது ஆதங்கமாக இருந்தது. இதை சரி செய்வதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் வல்லரசாக்கப் போவதாகவும் பெருமிதம் பொங்க கூறினார். இதை கீழ்க்காணும் இரண்டு வகைகளில் செய்ய இருப்பதாகவும் கூறிக் கொண்டார்,
1) இறக்குமதிப் பொருட்கள் மீதான தீர்வை வரியை அதிகப்படுத்துவது
2) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதே அளவிற்கு அமெரிக்காவிடம் இருந்தும் இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது
இந்த இடத்தில்தான் ”தீர்வை வரி” என்பது என்ன? அதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பவை குறித்தெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் உலகமயம் மற்றும் தாராளமயம் குறித்தும் கொஞ்சம் சன்னமாகவும் சரியாகவும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறுகளில் உலகமயம் மற்றும் தாராளமயம் துளிர்விட ஆரம்பிக்கின்றன. சுருக்கமாகவும் எளிதாகவும் சொல்ல வேண்டுமெனில் உலக நாடுகள் தங்களது சந்தைகளை தாராளமாக மற்ற நாடுகளின் பொருட்களுக்கு திறந்துவைக்க வேண்டும். உலகில் உற்பத்தியாகும் அனைத்தும் அனைத்து நாடுகளுக்கும் வருவதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. இதன் மூலம் உலகில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இது ஜனநாயகத்தின் முக்கியமான கூறு என்றார்கள். எல்லாவகையான பொருட்களும் கிடைக்கும்போது தரமான, தங்கள் பட்ஜெட்டிற்குத் தகுந்த மாதிரி பொருட்களை அனைத்து நாட்டு மக்களும் தேர்ந்தெடுக்க முடியும் என்றார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகச் சரியான விஷயம் என்பதாகவே படும். நுகர்வு என்கிற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டால் இது மிகவும் சரியானதும் ஆகும்.
நாம் எளிதாகப் புரிந்துகொள்வதற்காக இதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஏதோ ஒரு சிறிய நாடு இருக்கிறது என்று கொள்வோம். அந்த நாட்டில் வாழை நன்கு விளைகிறது. அவர்களுக்கு போதுமான அளவில் விளைகிறது.
இப்போது உலகமயம் தாராளமயத்தின் விளைவாக அந்த நாட்டிற்கு பக்கத்து நாட்டில் இருந்தும் வாழை வருகிறது என்று கொள்வோம். கெடு வாய்ப்பாகவோ நல்வாய்ப்பாகவோ இறக்குமதியாகும் வாழையின் விலை உள்ளூர் வாழையின் விலையைவிட மலிவாகவும் இருக்கிறது எனக் கொள்வோம். உள்ளூர் நுகர்வோர் எது மலிவோ அதை வாங்குவர். இது சரிதானே என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் உள்ளூர் வாழை விவசாயிகளை இது பாதிக்கும் அல்லவா?
எனவே வளரும் நாடுகள் இதை மூர்க்கமாக எதிர்த்துப் பார்த்தன. ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைப் புரிந்துகொண்டவுடன் இதை ஏற்பதற்கு ஒரு கால அவகாசத்தைக் கேட்டன. அந்த நாடுகள் இந்த சிக்கலை ஈடுகட்டுவதற்கு தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்காக அவர்கள் கேட்ட கால அவகாசம் இது.
இந்த அவகாசத்திற்குப் பிறகும் வெளியூரில் இருந்து வரும் சில பொருட்கள் சொந்த நாட்டின் பொருட்களுக்குப் போட்டியாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி இறக்குமதியாகும் பொருட்களினால் தங்களது பொருட்கள் பாதிக்கும்போது அந்தத் தொழில் நசியும். வேலைவாய்ப்பு பாதிக்கும். இதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அத்தகையப் பொருட்களின் மீது தீர்வை வரி போடப்பட்டது
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பேனாவின் சந்தை விலை மூன்று ரூபாய் என்று கொள்வோம். இந்தியாவில் தயாராகும் அதே பேனா மூன்றரை ரூபாய் என்றால் இந்தியப் பேனா விற்காமல் முடங்கும். அப்போது அதில் இருந்து மீட்க சீனப் பேனாவிற்கு 50 அல்லது 60 பைசா தீர்வை வரியாகப் போடுவது வழக்கம்.
இந்தத் தீர்வை வரிக்கு ஒரு அளவையும் உலகநாடுகள் தீர்மானித்திருந்தன. ட்ரம்ப் இரண்டாவது முறையாக வந்ததும் உலகநாடுகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான தீர்வையை குறைக்க வேண்டும் என்று மிரட்டினார். அல்லது அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கான தீர்வையைக் கூட்டுவேன் என்றார். இந்தியா உடனடியாக சில பொருட்களுக்கான தீர்வையை மிகக் கனிசமாகக் குறைத்தது.
அமெரிக்கா தீர்வையை ஏற்றினால் தாங்கள் இறக்குமதி செய்யும் அமெரிக்க பொருட்களுக்கான தீர்வையை அதே அளவு உயர்த்துவோம் என்று பல நாடுகள் ட்ரம்ப்பை எச்சரித்தன. மெக்சிகோவே எச்சரித்தது. நமது நாடு மட்டும் பம்மியது.
அனைத்து நாடுகளுக்குமான தீர்வையை கண்களை மூடிக்கொண்டு ட்ரம்ப் ஏற்றினார். மற்ற நாடுகளும் ஏற்றின. ஏற்றியதை இறக்கினார். மற்ற நாடுகளும் இறக்கின. இப்படியானதொரு கண்ணாமூச்சி விளையாட்டை ஆடுவதன் மூலம் அமெரிக்காவின் வருமானம் பெருகும் என்று நினைத்தார் ட்ரம்ப். மாறாக,
1) அமெரிக்காவில் இறக்குமதிப் பொருட்களின் விலை கணிசமாக ஏறியது
2) வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் விலையும் ஏறியது
இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இதில் உச்சம் என்னவெனில் ட்ரம்ப் சீனாவோடு விளையாடியதுதான். சீனப் பொருட்களுக்கு 125 விழுக்காடு வரியை விதித்தார். சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 125 விழுக்காடு தீர்வை விதித்தது. இதில் சீனப் பொருளாதாரத்தோடு அமெரிக்க டாலரும் சரிவைச் சந்தித்தது.
சீனாவில் சீனாக்காரர்கள் மட்டுமே முதலீடு செய்வதில்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள் அங்கிருந்து கிளம்பி வந்து அமெரிக்காவில் முதலீடு செய்யுங்கள். தீர்வையில் இருந்து தப்பலாம் என்கிறார் ட்ரம்ப். இது பைத்தியக்காரத்தனமானது. இதையே சீனாவும் சொல்லலாமே.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதே அளவிற்கு அமெரிக்காவில் இருந்தும் இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என்கிறார். இதில் என்ன தவறு என்று தோன்றும்.
இந்தியா அமெரிக்காவிற்கு ஏறுமதி செய்வது அங்கிருந்து இறக்குமதி செய்வதைவிட அதிகம். அந்த இடைவெளியை அமெரிக்காவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ட்ரம்ப்.
நம் ஊரில் கோதுமையின் சந்தை விலை இரண்டாயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாய்வரை இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தால் அதன் விலை 1,600 ரூபாயாக இருக்கும். மக்களுக்கு நல்லதுதானே என்று தோன்றும். ஆனால் கோதுமை விவசாயிகள் பிழைப்பு கெட்டு தற்கொலை செய்துகொள்ளும் சூழல் வரும்.
மட்டுமல்ல, விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையையும் மானியத்தையும் இந்தியா நிறுத்த வேண்டும் என்கிறது. இது இந்திய இறையாண்மையில் மூக்கை நுழைப்பதற்கு ஒத்ததாகும்.
இந்தியாவும் அதை செய்யத்தான் ஆசைப்படுகிறது. அதற்கு எதிராகத்தான் உழுகுடிகள் டில்லியில் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
உழுகுடிகளின் வீரஞ்செறிந்த போராட்டமும் ஆயிரம் பேரை பலி கொடுத்த தியாகமும்கூட ஒரு வகையில் அமெரிக்க பொருளாதார கட்டுப்பாடுகளுக்குக்கு எதிராக நடந்ததுதான்.
உலகத்தின்மீதான வர்த்தகப் போருக்கு எதிராக அமெரிக்க மக்களே ஒன்று திரண்டுகொண்டு இருக்கிறார்கள். அவர்களே இந்த அசிங்கமான போரை முடிவிற்கு கொண்டு வருவார்கள்.

பெண் ஏன் படிக்க வேண்டும்


 19.05.2025

பெண் ஏன் படிக்க வேண்டும்?

பெரம்பலூர்

Wednesday, May 21, 2025

கவிதை 08/2025

 தேநீரின் வயது

அறுபத்தியொன்று ஆண்டுகள்
பதினோறு மாதம்
ஒரு நாள் என்பதையே
நம்பமுடியாத உங்களால்
அதன் எடை
போட்டிருக்கும் உடையோடு சேர்த்து
ஐம்பத்தி ஒன்பது கிலோ என்பதை
நம்பவா முடியும்?
உங்களுக்குத் தெரியுமா
தேநீருக்கு
மீசை உண்டு
அதுவும்
நரைத்த மீசை

தேநீருக்கு
நிறைய பெயர்கள் உண்டு
ஒரு பெயர்
எட்வின்
தேநீரின் தோழர்களிடம்
தேநீருக்கு
ஒரு கோரிக்கை உண்டு
எட்வின் எனும்
தேநீரும் ஒருநாள்
மரிக்கவே மரிக்கும்
தேநீரின்
சிதைமீது
ஊட்டி காபி பாரிலிருந்து
வாங்கி வந்த
ஐந்து குவளை
தேநிரைக் கொட்டி
பிறகு தீமூட்டுங்கள்
தேநீரின் சிதை
எரியத் தொடங்குகையில்
மரித்த தேநீர்
உயிர்பெற்று இருக்கும்
All react

Tuesday, May 20, 2025

கவிதை 07/2025

 

ஏதிலிகளை
சத்திரங்கள்தான்
ஏற்கவேண்டுமெனில்
ஒரு சத்திரமே
என்
தாய் மண்ணாகட்டும்

Monday, May 19, 2025

கவிதை 06/2025

 

விரல்களுக்கிடையே
வியர்வை ஈரமாய்
மரணம்
ஒளிந்துகொண்டிருக்கிறது
அலைபேசியை எடுத்ததும்
பேச முடியாது
விசும்புவதென்பதுகூட
சாகாமல் இருக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான்
காரணம் வேறாயினும்
செத்தவர்களுக்காகவும் அழுகிறோம்
இன்னும்
சாகாமல் இருப்பதறிந்தும் அழுகிறோம்
அழுவதற்குத்
தெம்பில்லாதபோது
நான்
வாசிக்கிறேன்
வாசிக்க முடியாது கண்ணெரிந்தால்
உறங்குகிறேன்
வாசித்தலும்
உறக்கமும்
அழுகைதான் என்பது
பெருந்துயர்தான்
சாவுச் செய்தியின்
முகத்தில் முழிக்காத
ஒரு விழிப்புக்காக
செத்தே தொலைக்கலாம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...