“சிதறிய பொருட்களில்
தம்பி வைகறையின் இந்தக் கவிதை காட்சியாக விரிந்து என்னை பிசைந்துகொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தக் கவிதை என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது.
அறைக்குள் ஒரு எலி புகுந்துவிட்டது. அதை அடித்துக் கொல்வதற்கு கைகளில் கம்புகளோடு துரத்துகிறார்கள்.
அங்கும் இங்குமாக ஓடி ஒளிகிறது அந்த எலி. அது ஒளிந்துகொண்டிருப்பதாக இவர்கள் நம்புகிற இடங்களையெல்லாம் கலைத்துப் போடுகிறார்கள்.
அது வேறு இடத்திற்குப் போகிறது. அங்கும் இருக்கிற பொருட்களையெல்லாம் கலைத்துப் போடுகிறார்கள். மீண்டும் மீண்டும் எலி ஓடி ஒளிவதும் இவர்கள் கலைத்துப் போடுவதுமாக நகர்கிறது.
நீண்டதொரு தேடலுக்குப் பிறகு களைத்துப் போனவர்களாக எலி வேட்டையை நிறுத்துகிறார்கள்.
அறை முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. சே, இந்த எழவெடுத்த எலி என்ன பாடு படுத்திடுச்சு என்று அங்கலாய்க்கிறார்கள்.
அறைகள் முழுவதும் சிதறிக் கிடக்கும் பொருட்களை மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டுமே என்கிற அங்கலாய்ப்பு இவர்களுக்கு.
பொருட்கள் சிதறி அலங்கோலமாகக் கிடக்கும் அந்த அறைகள் என்பது அந்த எலியின் உயிர்காக்கும் போராட்டம். அவ்வளவு அழகாக அதைக் காட்சிப் படுத்தியிருப்பான் வைகறை.
இப்போது மொத்த இந்தியாவும் சிதறிக் கிடக்கும் அறைகளாகத்தான் காட்சியளிக்கிறது. பாஜக தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கைகளில் கிடைத்த ஆயுதங்களோடு எலிகளை முற்றாய் அழிக்க முடியாமல் களைத்துப் போனவர்களாக “சே நாசமாப் போன எலி, சிக்காம என்னபாடு படுத்துது” என்று புலம்புகிறார்கள்.
இங்கு எலிகள் என்பவை இந்தியாவின் விழுமியங்களைக் குறிக்கிற சொல் என்று கொள்வதுதான் சரியாக இருக்கும்.
இந்தியாவின் விழுமியங்களை பாஜகவும் RSS காரர்களும் ஒருபோதும் ஏற்பதில்லை. காரணம் இந்திய விழுமியங்களின் மையச்சரடு “மதச் சார்பின்மை”. RSS மற்றும் பாஜக சித்தாந்தத்தின் மையச்சரடு இந்துத்துவா.
மதச் சார்பின்மை மக்களை இணைக்கக் கோரும். மதப்பழமைவாதம் மனிதர்களைக் கூறுபோடத் துடிக்கும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நேர் எதிரிகள் RSS மற்றும் பாஜகவினர்.
பரந்த இந்து ராஷ்ட்ரமே அவர்களது சித்தாந்தத் தந்தையான கோல்வால்கரது கனவு. இதை அவர்கள் பகிரங்கமாகவே வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை.
ஆனால், அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சி பீடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவேதான் இதுகுறித்து உரக்கப் பேசமுடியாமல் தவிக்கிறார்கள்.
இந்திய அரசிலமைப்புச் சட்டத்தை காவி மைகொண்டு எழுதுவதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என்றால் மக்களை பதற்றத்தோடு வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
80 விழுக்காடு பெரும்பான்மை மக்களை 20 விழுக்காடு சிறுபான்மையிருக்கு எதிரியாக மாற்றுவது தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மையைக் கொடுக்கக்கூடும் என்று கருதுகிறார்கள். ஆகவே கலவரங்களை வாய்க்கிற இடங்களில் எல்லாம் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சமீபத்தில் சம்பல் பற்றி எரிந்தது நாம் அறிந்தது. அதற்கான தோற்றுவாயினை தோழர் மதுர் சத்யா ஒரு கூட்டத்தில் பேசக் கேட்க வாய்த்தது.
ஒரு RSS இளைஞன் தனது பயணத்தின் ஊடே ஒரு மசூதியைப் பார்க்கிறான். அது அவனை உறுத்துகிறது. அந்த மசூதி அவனை மிகவும் உறுத்துவதாக அவனது நண்பனுக்கு அலைபேசி வழியாக சொல்கிறான்.
வழக்கறிஞரான அவனது நண்பன் அந்த மசூதியின் இருப்பிட விவரங்களைக் கோருகிறான். இவனும் தருகிறான்.
இது நிகழ்ந்தபோது காலை பத்தே முக்கால் மணி இருக்கும் என்கிறார் சத்யா. விவரங்களை அலைபேசி வழியாக பெற்றுக் கொண்டதும் வழக்கிற்கான மனுவைத் தயார் செய்கிறான்.
ஒரு இந்து ஆலயம் இருந்த இடத்தில் அந்த மசூதி கட்டப்பட்டிருப்பதாக வழக்கைத் தொடுக்கிறான்.
வழக்கு அன்றே விசாரணைக்கு வருகிறது அன்றே தீர்ப்பும் வருகிறது. அந்த மசூதி இருக்கும் இடத்தில் இந்து ஆலயம் இருந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறுகிறது.
எனவே தொல்லியல் துறை அந்த இடத்தை சோதித்து அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிடுகிறது. தொல்லியல்துறை களத்திற்கு வருகிறது. அங்கு ஒரு இந்து ஆலயம் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அது ஆய்வறிக்கை தருகிறது.
இவை அத்தனையும் 40 மணிநேர அவகாசத்திற்குள் நடந்து முடிந்திருக்கிறது.
வேறென்ன சொல்வது. அன்பை பெடல் இல்லாத சைக்கிளிலும் வெறுப்பை ராக்கெட்டிலும் அனுப்பிப் பழகிவிட்டார்கள். இதன் விளைவு கடும் பதற்றமும் ஐம்பது அறுபது உயிர்ப் பலிகளும்.
வழக்குகளையும் ஆயுதங்களாக மாற்றக் கற்றிருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இதுபோல இன்னும் 40,000வழக்குகளைத் தொடுப்பதற்கான திட்டம் அவர்களிடம் இருக்கிறதாம்.
இது ஒன்றிற்கே இவ்வளவு பதற்றமும் உயிரிழப்பும் என்றால் நாற்பதாயிரம் வழக்குகள் எத்தனை பாதிப்புகளைக் கொண்டு வரும்? இந்த பதற்றத்தினால் அவர்களுக்கு என்ன பயன் என்ற கேள்வியும் வரும்.
இது சிறுபான்மை மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களை அச்சப்படுத்தும். இந்த அச்சம் வாக்குகளாக மாறும் என்று கருதுகிறார்கள்.
ஊழியர்கள் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள் என்றால் அரசோ சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் மூலம் பதற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது. அப்படி ஒரு அரக்கத்தனமான முயற்சிதான் வக்பு வாரியத் திருத்தச் சட்டம்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே வக்பு வாரியச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
2013 வாக்கில் வக்பு வாரிய சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. வக்பு வாரியச் சட்டத்தில் உள்ள ஷரத்துகளை மாற்றவோ திருத்தவோ கூடாது என்றுகூட இஸ்லாமியர்கள் ஒருபோதும் கோரியது இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில் வக்பு வாரியத்தில் இரண்டு பெண்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது இஸ்லாமியர்கள் அதை எதிர்க்கவெல்லாம் இல்லை.
இப்போது கொண்டு வந்திருக்கக்கூடிய திருத்தங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கின்றன.
வாரியத்தின் சொத்து வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இருக்கிற சொத்தை அரசின் சொத்தாக மாற்றிக்கொள்கிற ஏற்பாடாகவும் இந்தத் திட்டங்கள் இருப்பதால்தான் இதை எதிர்க்கவும் இதற்கெதிராக உச்சநீதிமன்றத்திற்கு செல்வதற்குமான தேவை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
வக்பு வாரியச் சட்டத்தில் இருப்பது 113 ஷரத்துகள். இதில் கிட்டத்தட்ட 48 ஷரத்துகளை இந்த அரசாங்கம் திருத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட 42 விழுக்காடு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. சரி பாதி ஷரத்துகள் திருத்தப்பட்டுள்ளன என்பது கிட்டத்தட்ட புதுச் சட்டம் போன்றதுதான்.
வக்பு அமைப்பிற்கு ஈரமனம் கொண்டோர்கள் யாராயினும் நன்கொடை அளிக்கலாம். திருத்தச் சட்டத்தின்படி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளேனும் இஸ்லாமியராக இருக்கக்கூடிய ஒருவரால்தான் வக்பு அமைப்பிற்கு நன்கொடை அளிக்க முடியும்.
இதன்மூலம் வக்பு வாரியத்திற்கு புதிதாக வரவெதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் இவர்களுக்கு இருக்கிற வக்கிரம் வெளிப்படுகிறது. ஒருபுறம் வரவைத் தடுக்கிற இவர்களது வன்மம் இதுவென்றால் இன்னொரு புறம் இருக்கிற வக்பு சொத்துகளை அரசாங்கம் எடுத்துக்கொள்கிற வன்மமும் இருக்கிறது.
இருக்கிற சொத்துக்களுக்கான பத்திர ஆவணங்களைக் கேட்கிறார்கள். பத்திரப்பதிவு தொடங்கும் முன்னரே வக்புவிற்கு வந்த சொத்துக்களுக்கு ஆவணங்கள் சாத்தியமே இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆவணம் இல்லாத சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்ட அரசின் சொத்துகள் என்கிறார்கள்.
தாவா ஏற்படின் இதற்கான விசாரணை அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவர் என்கிறார்கள். அது எப்படி அரசின் அதிகாரி அந்த நிலம் யாருடையது என்று விசாரிக்க முடியும் என்றால் அது அப்படித்தான் என்கிறார்கள்.
இந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
இவர்கள் மீதான வன்முறைகள், இவர்களுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றால் நொந்து போயிருக்கிற இஸ்லாமியர்களை இறுக அணைத்தபடி “இருக்கிறோம்” என்று சொல்லும் தொண்ணூறு விழுக்காடு இந்தியர்கள் நம் வயிற்றில் பால் வார்க்கிறார்கள்.
இந்த அன்பும் அணைப்பும் சங்கிகளின் வெறுப்பை சல்லி சல்லியாக நொறுக்கும்.
-- காக்கை
மே 2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்