Wednesday, October 31, 2018

சீன நிலா

சீனாவின் “செயற்கை நிலா”  குறித்து  கொஞ்சம் உரையாட இருக்கிறது.

”தூரத்து ஊரின் தெருவிளக்கு” என்று நிலவை பாரதிதாசன் எழுதியுள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இல்லை என்றாலும் அதனால் ஒன்றும் பாதகம் இல்லை. இதை யார் எழுதியது என்று யாரேனும் கூறினால் அதை சேர்த்துக் கொள்ளலாம்.

அப்படி யாரும் இதுவரை எழுதவில்லை என்றாலும் பாதகம் இல்லை. நான் இப்போது அதை எழுதியாகக்கூட இருக்கட்டும்

நிலா எல்லோருக்கும் பிடித்தமானதாகவே எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. அதுவும் தமிழ் மண்ணில் நிலாவிற்கு எப்போதும் உன்னதமான ஒரு இடம் இருக்கிறது.

எமது அன்னைகள் எமக்கு நிலாவைக் காட்டிதான் சோறு ஊட்டினார்கள்.

இடுப்பின் இடதுபுறம் பிள்ளை, பிள்ளையை வளைத்துப் பிடித்திருக்கும் கை விரல்கள் பிள்ளைக்கான அமுதுக்கிண்ணியை பிடித்திருக்க, வலதுகையின் ஆட்காட்டி விரல் தவிர்த்து மற்ற நான்கு விரல்களும் பாப்பா அல்லது தம்பிக்கான ஒரு கவளம் உணவமுதை கவ்வியபடி சுட்டு விரலால்   பிள்ளைக்கு நிலாவைக் காட்டி ரசனையில் பிள்ளை விழும் சந்தர்ப்பத்தில் லாவகமாக ஊட்டிவிட்டு உதடு துடைத்துவிடும் காட்சி எங்களின் அடையாளம்.

என் தாத்தனும் பாட்டியும் தங்களது குழந்தைப் பருவத்தில் இப்படித்தான் உணவெடுத்தார்கள். அவர்கள் எம் பெற்றோருக்கும் அவர்கள் எமக்கும் நாங்கள் எங்கள் பிள்ளைகட்கும் இப்படித்தான் ஊட்டினோம்.

”நிலா இங்கே வா வா” என்று அழைத்துப் பார்த்தோம். நிலவிற்குப் போனவர்கள் மொழியில் அதற்கான கனவு பதியப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாப் பாடலில் அந்தக் கனவை நாம் பதிந்து வைத்திருக்கிறோம்.

“நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர்நாள்
வருவேன்”

என்று பதிந்து வைத்தோம்.

வெட்டவெளி, இருட்டு, வானத்தை ஒருவன் அன்னாந்து பார்க்கிறான். உயரத்தில் வெகு தூரத்தில் ஒரு விளக்கு கணக்காய் நிலவு காய்கிறது. அது தூரத்து ஊரின் தெருவிளக்காய் நம் கவிஞனுக்குப் படுகிறது.

ஆக நிலவை தெருவிளக்காய் நம் கவிஞன் பார்த்திருக்கிறான். இதை சீன விஞ்ஞானி படித்தானோ என்னமோ தெரியவில்லை. தமிழ்க்கவி கண்ட கனவை நனவாக்கும் முயற்சியில் வெற்றியின் வெகு கிட்டத்திற்குப் போய்விட்டான்.

சீனாவில் பேரதிக எண்ணிக்கையில் தெருவிளக்குகள் உள்ளன. அவை இரவு வேளைகளில் தொடர்ந்து எரிகின்றன. இதனால் அரசுக்கான மின் செலவு எகிறிக்கொண்டு போகிறது. எப்படியாவது இந்த செலவினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சீன அரசு முடிவெடுத்த்து. செலவைக் குறைக்க வேண்டும் என்ற முடிவு தெருக்களை இருட்டுக்குள் தள்ளிவிடக்கூடாது என்றும் அது கருதியது.

இதற்கான மாற்று ஏற்பாட்டை ஆய்வு செய்யுமாறு அது “டியான் பூ நியூ ஏரியா சயின்ஸ் சொசைட்டி” என்ற அமைப்பைக் கேட்டுக் கொண்டது.

இந்த நிறுவனம் அரசு தம்மைக் கேட்டுக்கொண்டபடி ஒரு மாற்று நோக்கி தீவிரமாக ஆராயத் தொடங்கியது. அவர்களது ஆராய்ச்சி அவர்களை செயற்கை நிலாவை நோக்கி இட்டுத் தள்ளியது.

சூரிய ஒளியை உள்வாங்கி வெளிக்கக்கும் ஒரு ரிஃப்லெக்டர் போன்ற அமைப்புதான் நிலா என்ற உண்மை அவர்களை அதுநோக்கியே சிந்திக்க வைத்தது. அவர்களும் அதை நோக்கியே சிந்தித்தார்கள்.

சூரியனிலிருந்து வெப்பத்தை எடுத்து மின்சாரம் தயாரித்து அதிலிருந்து விளக்குகளை எரியவிடுவதைவிட சூரியனிலிருந்து ஒளியை எடுத்து பயன்படுத்துவது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

அதுகுறித்தே ஆராய்ந்தார்கள். இப்போது அவர்களது ஆய்வு முடிவுகளை அமல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். வானத்தில் செயற்கை நிலவை இருத்துவது. அந்த செயற்கை நிலவின்மேல் விழும் சூரிய ஒளியை சேமித்து இரவில் எடுத்துக் கொள்வது என்கிற முடிவில் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

பகலில் உள்வாங்கும் சூரிய ஒளியை இரவில் தெருக்களில் இறைக்கப் போகிறார்கள். தேவைப்படாத நேரத்தில் அணைத்து வைக்கவும் முடியும் என்கிறார்கள்.

ஒளியை சேமிக்க முடியும் என்பது எனக்குப் புதியதாய் இருக்கிறது.

2020 ஆம் ஆண்டு  நிலாவைவிட எட்டு மடங்கு ஒளியைத் தரக்கூடிய முதல் செயற்கை நிலாவை சீனா ”ஜிசாங் செயற்கைகோள் ஏவுத் தளத்தில்” இருந்து ஏவ உத்தேசித்திருக்கிற தகவலை 21.10.2018 நாளிட்ட ”தமிழ் இந்து” கூறுகிறது.

இது வெற்றி பெற்றால் அடுத்தடுத்து செயற்கை நிலாக்களை ஏவுவதற்கு சீனா திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

கம்பம் தேவை இல்லை, விளக்குகள் தேவை இல்லை, கம்பிகள் அறுந்து உயிர்ப்பலிகள் ஏற்படுமோ என்ற கவலை தேவை இல்லை.

சீனா தயாரித்துக் கொண்டிருக்கும் செயற்கை நிலா 50 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு ஒளி தரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதன் மூலம் 170 மில்லியன் அமெரிக்க டாலரை மிச்சப்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள். அதாவது 1700 லட்சம் அமெரிக்க டாலர்கள் மிச்சமாகும் என்று கணக்கிடுகிறார்கள்.

ஒரு டாலர் என்பது இந்திய மதிப்பில்  கிட்டத்தட்ட 80 ரூபாய். எனில், 50 சதுர கிலோமீட்டர் அளவிற்கான செயற்கை நிலா பயன்பாடு ஒரு லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் லட்சம் ரூபாய் மிச்சமாகும்.

எனில் மொத்த சீனாவும் இந்தப் பயன்பாட்டிற்குள் வரும்போது எவ்வளவு மிச்சமாகும். அவ்வளவு தொகையையும் ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் அந்தச் சமூகம் எவ்வளவு முன்னேறும்.

நினைக்க நினைக்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது,

என்றேனும் ஒரு நாள் நம் பிள்ளை செயற்கை சூரியனை ஏவக்கூடும்.

       
#சாமங்கவிந்து 34 நிமிடங்கள்
30.10.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...