Tuesday, October 16, 2018

வலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்

"Teachers who are reluctant to express or scared of expressing their views on issues that affect the society they are part of shouldn't call themselves educators. A society that is gifted with critical educators is a blessed society"
என்று இன்றைய “THE HINDU” வில் எழுதியிருக்கிறார் முனைவர் ஆல்பர்ட். இதைத்தான் நாமும் கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறோம் பேசத் தெரிந்த காலம் முதலாய்.
என்ன செய்வது? நாம் தமிழில் கத்துகிறோம். அவர் ஆங்கிலத்தில் கத்துகிறார். ஆயிரம் இருந்தாலும் ஆங்கிலத்திற்கு மவுசு அதிகம்தானே. இதையே டிசைன் டிசைனாக கத்திய நாமே அவர் ஆங்கிலத்தில் கத்துவதை மேற்கோள் காட்டுகிறோமே.
ஆங்கிலத்தில் அல்ல எந்த மொழியில் ஒருவர் இதைப் பேசியிருந்தாலும் இதை எடுத்தாளவே செய்வோம்.
தங்களது சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றி பேச மறுக்கிற அல்லது பேசப் பயப்படுகிற எந்த ஒரு ஆசிரியரும் தன்னை கல்வியாளர் என்று அழைத்துக் கொள்கிற அருகதையை இழக்கிறார்கள் என்கிறார் ஆல்பர்ட்.
நானெல்லாம் என்னை ஆசிரியர் என்றுகூட கொள்வதில்லை. உண்மையை சொல்வதெனில் நானொரு பள்ளிக்கூடத்து ஊழியன், அவ்வளவே.
நாம் மாதாமாதம் கட்டிய போட்ட சீட்டுப் பணத்தை எடுப்பதற்கு GST கேட்கிறார்களா?
எவ்வளவோ தள்ளி எடுக்கிறோம், கூடக் கொஞ்சம் தள்ளி எடுத்துட்டோம்னு போயிடுவோம். தெரியாமலா சொன்னாங்க எவ்வளவுதான் எண்ணெய தடவிகிட்டு உழுந்து பொறண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்னு. என்ன எழுதியிருக்கோ அதுதான் வரும் என்று ஒதுங்கிப் போகிற ஆசிரியர்களை நமக்குத் தெரியும்.
இதெல்லாம் நியாயமாப்பா? என்று கேட்டால், வேற என்ன செய்யச் சொல்ற? இதுக்காகப் போயி அவங்கிட்ட மல்லுக்கு நிக்கச் சொல்றியா? புடிக்கலையா இனிமேல் சீட்டுப் போடாம இருந்துக்கனும். படிச்ச நாம வம்புக்கு போறதெல்லாம் அழகல்ல.
தன்னைப் பாதிக்கிற விஷயத்திற்கே எதிர்வினையாற்ற மறுக்கிறவர் எப்படி அய்யப்பன் ஆலயத்திற்குள் பெண்கள் போகலாமா வேண்டாமா என்பது குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு வினையாற்றப் போகிறார்.
பெட்ரோல் விலை தினமும் தினமும் தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கிறதே என்றால் முடியலைனா சைக்கிளில் போகலாம்பா. காசும் மிச்சம். போக, உடம்பிற்கும் நல்லது என்கிற ஆசிரியர்களை எனக்குத் தெரியும்.
ரஃபேலில் ஊழல் பார்த்தாயா என்றால் அதனால நமக்கென்ன நஷ்டம் என்கிற ஆசிரியர்கள் நிறைய.
நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? நம்மக் கடிக்காம போனால் சரி என்கிற ஆசிரியர்கள் வலம் போகும் நரியும் நம்மை கடிக்கும், இடம் போகும் நரியும் நம்மைக் கடிக்கும் என்பதை முதலில் உணர வேண்டும்.
எது நடந்தா நமக்கென்ன எட்வின்? நமக்கு வர சம்பளத்துல பைசாவ குறைக்க ஒருத்தனாலயும் முடியாது. நம்ம வேலை எதுவோ அத மட்டும் பார்ப்போம் என்று ஒவ்வொருநாளும் என்னை நெறிப்படுத்த முயற்சி செய்து தோற்றுப்போகிற நண்பர்கள் ஏராளம்.
”படிச்ச நாம வம்புக்குப் போறதெல்லாம் அழகல்ல” என்கிறார்களே. எனில் எதுதான் அழகு?.
“நம்ம வேலை எதுவோ அதை மட்டும் பார்ப்போம்” என்கிறார்களே, அவர்களையும் உள்ளடக்கிய நம்ம வேலைதான் எது?
மேலே கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் ஒரே விடைதான்.
பாதிப்பு நமக்கு மட்டுமல்ல. அது எல்லோருக்குமானது என்கிறபோது அதற்கான எதிர்வினையை யாராவது பார்த்துக் கொள்வார்கள். நாம் நமது வேலையை பார்ப்போம். நமது வேலை பள்ளிக்குப் போவது ஒழுங்காக பாடங்களை நடத்துவது, பிள்ளைகளை படிக்க வைப்பது, மிக நல்ல மதிப்பெண்ணோடு அவர்களை தேர்ச்சிபெற செய்வது, உயர் கல்விக்கு அவர்களை வழிநடத்துவது, நன்கு சம்பாரித்து தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அவர்களை வழிநடத்துவது போன்றவை என்கிறார்கள்.
இவை நல்ல விஷயங்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் உயர் கல்வியே நமது பிள்ளைகளுக்கு கிடைத்துவிடக் கூடாது என்று அடம் பிடிக்கும் அரசுகளும் கனவான்களும் அசுர பலத்தோடு எழுந்து சண்டமாருதம் செய்துகொண்டிருக்கும்போது நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தோம் எனில் நமக்கு கல்வி இல்லை வேலை இல்லை வாழ்க்கையும் இல்லை என்று சொல்வார்கள். சொல்வார்கள் என்ன ஏற்கனவே சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
ஆயிரத்து இருநூறு மதிப்பெண்ணிற்கு ஆயிரத்தி நூற்றி எழுபத்தி ஆறு மதிப்பெண் பெற்ற நமது மகள் அனிதாவை அவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்து விட்டார்கள்.
இப்போதும் ஒதுங்கிப் போவோம் எனில் நேற்று அரியலூரில் நடந்தது நாளை நம் ஊரில் நடக்கும். நாளை மறுநாள் நமது தெருவிலும் அதற்கு அடுத்த நாள் நமது வீட்டிலும் நடக்கும்.
சராசரி ஆசிரியனுக்கு நல்ல துணை, நல்ல மக்கள், நல்லதொரு வீடு, நல்லதொரு மகிழுந்து என்று கனவு நீளும்
நல்ல ஆசிரியனுக்கு நமது கடமை பிள்ளைகளுக்கு ஒழுங்காக போதிப்பது என்ற வகையில் கனவு இருக்கும்
ஒரு மிகச் சிறந்த ஆசிரியனுக்கு தான் ஒரு கல்வியாளனாக வேண்டும் என்ற கனவு அவனைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும்.
ஆசிரியனுக்கும் கல்வியாளனுக்கும் என்ன வேறுபாடு என்று ஆல்பர்ட் சொல்வதை நாம் நம் பாஷையில் சொல்வோம்
நமக்கு மட்டுமா பிரச்சினை? அனைவருக்கும்தானே அது. எனில் அடுத்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் நாம் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை பார்ப்போம் என்று கருதினால் அவர் ஒரு நல்ல ஆசிரியர்.
அவர்களை மட்டுமா பாதிக்கும்? அவர்களை பாதிக்கும் எதுவும் நம்மையும் பாதிக்கும். எனவே சமூகத்தைப் பாதிக்கும் எது குறித்தும் மாணவர்களுக்குப் புரியும் பாஷையில் எடுத்து அம்பலப்படுத்துவதும் அதை கேள்வி கேட்டு எதிர்வினையாற்றும் உணர்வையும் தைரியத்தையும் பிள்ளைகளுக்கு ஊட்டினால் அவன் கல்வியாளான்.
விமர்சனம் செய்கிற கல்வியாளர்களைப் பெற்றிருக்கக் கூடிய சமூகம் ஆசிர்வதிக்கப்பட்ட சமூகம் என்கிறார் ஆல்பர்ட்.
நமக்கு ஏக்கமாய் இருக்கிறது.
#சாமங்கவிந்த நேரம் சரியாய்
15.10.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...