Saturday, May 12, 2018

65/66 காக்கைச் சிறகினிலே மே 2018


65/66, காக்கைச் சிறகினிலே

பாஜக காரன் என்றால் கற்பழிப்பான் என்கிறமாதிரியான ஒரு பொது சிந்தனை வந்திருக்கிறது. அது மன வேதனையைத் தருகிறதுஎன்று அந்தக் கட்சியைச் சார்ந்த திரு ராமசுப்ரமணியன் நொந்துபோய்க் கூறியுள்ளார். அவரது அந்தக் கூற்றை சமூக வலைதளங்களில் இளையப் பிள்ளைகள் போதும் போதும் என்கிற அளவிற்கு கலாய்த்துத் தீர்த்தனர்.

இப்ப வலிக்குதா? பாஜக காரன் என்றால் கற்பழிப்பான் என்ற பொதுப்புத்தி இவ்வளவு வலியைத் தருகிறதே உங்களுக்கு. இஸ்லாமியன் என்றால் தீவிரவாதி, குண்டு வைப்பான் என்ற பொதுப்புத்தியை கட்டமைத்து எத்தனை இஸ்லாமியக் குடும்பங்களை சிதைத்திருப்பீர்கள்?” என்று ஒரு சாரார் கேட்டனர்.

ஆமாம் அப்படி ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து எத்தனை இஸ்லாமியர்களை இவர்கள் சிறைப்படுத்தியுள்ளனர். அவர்களில் எத்தனைபேர் இருபது ஆண்டுகளுக்கும் மேல் சிறை இருந்தபிறகு நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் கழித்த இருபது ஆண்டுகளுக்கு யார் பொறுப்பேற்பது? தவறான வழக்குகளில் சிறைபட்டு விடுதலைப் பெற்றபிறகும் சிறையை விட்டு வெளியே வர இயலாமல் தவிக்கும் இஸ்லாமியர்கள் எத்தனை பேர்?

செய்யாத குற்றத்திற்காக வலியைச் சுமப்பதைக் காட்டிலும் செய்த குற்றத்திற்காக நீங்கள் அனுபவிக்கும் வலி அப்படி ஒன்றும் பெரிதல்ல.

பாஜக காரனெல்லாம் கற்பழிப்பவன் அல்ல, ஆனால் கற்பழிக்கிறவன் எல்லாம் பாஜக காரனாக இருக்கிறான் என்று பகடி செய்தனர் சிலர்.

இவர்களில் பெரும்பான்மையோர் இந்து மதத்தைச் சார்ந்த பிள்ளைகள் என்பதுதான் ஆரோக்கியமான விஷயம். மதவெறியானது கூராயுதங்களோடு களத்தில் நின்றாலும் எம் பிள்ளைகள் மதச்சார்பின்மையை கட்டமைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
***************************************************************************************    

  

பாலியல் வழக்குகளில் பாரதிய ஜனதா கட்சிக்கே முதலிடம் என்று தேசியத் தேர்தல் கண்கானிப்பு அமைப்பு கூறுகிறது. பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தபிறகு அது இந்த முடிவிற்கு வந்திருக்கிறது.

பாரதிய ஜனதாக் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களில் 12 பேர் மீதும், சிவசேனா கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் 7 பேர் மீதும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியச் சார்ந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுல்  6 பேர் மீதும் பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மாண்புமிகு என்று கௌரவமாக விளிக்கப்படுகிற மக்களின் பிரதிநிதிகள்மீது பாலியல் வழக்குகள் இருக்கின்றன அதுவும் இந்த தேசத்தை ஆளக்கூடிய பாரதிய ஜனதாக் கட்சியைச் சார்ந்தவர்கள் மீதே அதிக அளவில் வழக்குகள் உள்ளன என்பது உலக அளவில் நமக்கு எவ்வளவு தலைக்குனிவைத் தரும்.

நாம் மிகப் பெரிதாய் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை இவர்களிடமிருந்து. குறைந்த பட்சம் தங்களது கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தியவர்கள் என்கிற அளவிற்காவது அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மற்றவர்கள் இதுமாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு செய்திருக்க வேண்டாமா?
*************************************************************** 

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடத்தே பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் தூக்குத் தண்டனை என்று பிரதமர் அறிவித்த அன்று இரவே பெங்கலூருவில் இருந்து வந்துகொண்டிருந்த ரயிலில் ஒரு குழந்தையிடம் ப்ரேம் ஆனந்த் என்ற பாஜகவின் மாவட்டப் பொருப்பாளர் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தவறாக நடக்க முற்பட்டார், கைது செய்யப்பட்டிருக்கிறார், என்கிற வகையில் சட்டம் தன் கடமையைச் செய்யத் துவங்கி இருக்கிறது என்பதாக நகர்ந்துவிட முடியாது.

தூக்குத் தண்டனை என்று தெரிந்தபிறகும் அன்று இரவே ஒருவன் ஒரு குழந்தையிடம் வம்பு செய்ய முடிகிறது என்றால் அந்தத் தைரியம் எங்கிருந்து வந்தது?

2006 இல் நடந்த தேர்தலில் RK நகர் தொகுதி பாஜக வேட்பாளராம் அவன்.

நான் பாஜக காரன். கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவன். என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
****************************************************** 

ஆசிபா என்ற பெயர் தெரியாத இந்தியர்களே இருக்க முடியாது எனும் அளவிற்கு அந்தப் பெயர் உணர்வுள்ள மனிதர்களின் ரத்தமெல்லாம் ஊறிப்போயிருக்கிற பெயராகிப்போனது.

ஆசிபா என்ற ஏட்டே வயது பச்சிளங்குழந்தையை ஒரு கோயிலுக்குள் அடைத்து எட்டு பேர் கொண்ட மதவெறிக் கும்பலொன்று எட்டு நாட்கள் கதறக்கதற வன்புணர்ந்து கொன்றுபோட்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் சட்டமன்றத்தில் இருக்கும் ஒரே ஒரு மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் யூசுப்தாரிக் மட்டும் தனி ஒரு மனிதனாகப் போராடியிருக்காவிட்டால் ஆசிபாவும் காணாமல்போன குழந்தைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பாள். அந்த ஒரு மனிதனின் போராட்டம் அந்தக் குழந்தையின் கொலையை அம்பலப்படுத்தியது.

இதற்குத்தான் ஒற்றைப்படை எண்ணிக்கையிலாவது மக்கள் ஊழியர்களான கம்யூனிஸ்டுகள் மக்கள் மன்றத்திற்குள் இருக்க வேண்டும் என்று சொல்வது.

ஆசிபாவின்மீதான பாலியல் கொடுமையையும் கொலையையும் அரசியலாக்க வேண்டாம் என்று கொஞ்சம்கூட கூச்சமேயில்லாமல் லண்டனில் இருந்து மோடி அலறுகிறார்.

இதை பெரிது படுத்தினால் சுற்றுலா மூலம் வரும் அந்நியச் செலாவணி பாதிக்கும் என்கிறார் அருண்ஜேட்லி.

இதுமாதிரியான வல்லுறவுகள் தவிர்க்க முடியாதவை என்கிறார் ஒரு அமைச்சர்.

இவர்களுக்கெல்லாம் நாம் சொல்வது என்னவென்றால் ஆசிபாமீதான பாலியல் பலாத்காரத்தையும் கொலையையும் நாம் அரசியல் படுத்தவில்லை. மாறாக, ஆசிபாமீதான பலாத்காரமும் கொலையும்தான் அரசியல் என்கிறோம்.

சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீதான அச்சுறுத்தல் அரசியலை நாங்கள் கேள்வி கேட்கிறோம் அவ்வளவுதான் மோடி.

ஒரு பருக்கை சோறுகூட ஆசிபாவின் வயிற்றில் இல்லை என்கிறது அவளது உடற்கூறு பரிசோதனை. எனில் சோறுகூட போடாமல் அந்தப் பச்சிளங்குழந்தையை எட்டுநாட்கள் குதறியிருந்திருக்கிறார்கள்  அந்தக் கொடியவர்கள்.

"ஒருவன் கூட ஒருமுறை கூட முகத்தையே பார்க்கவில்லையா?" என்று கேட்டார் கலைமணி.

இது உணர்ச்சிவசப்பட்டோ, மதி இழந்த நிலையிலோ செய்யப்பட்ட நிகழ்வு அல்ல. இதன் பின்னால் தீர்க்கமான ஒரு கோட்பாடு உண்டு. இங்கு இருந்தீர்கள் எனில் இதே நிலைதான் எல்லோருக்கும் ஆகவே இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள் என்பதே அது.

இந்த வழக்கை விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வு அதிகாரி ஸ்வேதாம்பரி என்பவரை குற்றவாளிகளின் தரப்பிலிருந்து அணுகியிருக்கிறார்கள். “நீயும் பிராமணர் நாங்களும் பிராமணர். பிராமணர்கள் எந்தக் குற்றத்தையும் தர்மத்தைக் காக்கவே செய்வார்கள் என்பது நீங்கள் அறிந்ததுதான். தர்மத்தை நிலைநாட்ட சில செயல்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆசிபா கொலையும் அத்தகைய ஒன்றுதான். போக, பிராமண நீதியில் பிற ஜாதியினரைக் கொலை செய்வது தவறாகப் படாது. இது பிராமண நீதி. அந்தப் பெண்ணைக் கொலை செய்ததில் எந்த தர்மமும் கெட்டுவிடாது. எனவே எங்களைக் கைது செய்யக் கூடாதுஎன்று கோரியிருக்கிறார்கள்.

இந்த கோரிக்கை ஒன்றே போதும் இது உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறல்ல. நன்கு திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட பார்ப்பணிய ஆதிக்க அரசியல் இது என்று.

எந்த ஒரு அரசியலுக்கும் எதிர் அரசியல் ஒன்று உண்டு. அதை சரியாய் செய்வோம்.
********************************************************** 
இதை நான் எழுதி முடிக்கும் வரையில் SVசேகர் கைது செய்யப்படவும் இல்லை அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவும் இல்லை. இதழ் அச்சாகி வந்திருக்கும் நேரத்தில் ஏதேனும் நடந்திருக்கக் கூடும்.

ஊடகத்துறையில் இருக்கும் பெண்கள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுதான் அந்த இட்த்திற்கு வந்திருக்க முடியும் என்கிறார்.

ஆளுநர் ஒரு பெண் நிரூபரை கன்னத்தில் தட்டுகிறார். அந்த நேரத்தில்தான் தேவாங்கர் பேராசிரியர் விவகாரத்தில் ஆளுநரது பெயரும் அடிபட்ட நேரம். எனவே அதற்கு அந்தத் தோழி எதிர்வினையாற்றுகிறார். அதற்காக ஆளுநரும் மன்னிப்பு கேட்கிறார். ஆளுநரே மன்னிப்பு கேட்ட நிலையில்தான் சேகர் மேற்சொன்ன பதிவை போடுகிறார்.

தமிழகமே கிளர்ந்து எழவும் மன்னிப்பு கேட்கிறார். நண்பருடைய பதிவு , பார்க்காமல் பகிர்ந்து விட்டேன் என்கிறார். இதை தமிழசையே ஏற்க இயலாது என்று கூறிவிட்டார்.

அதை ஒட்டி ஊடகப் பிள்ளைகள் சிலர் பூட்டப்பட்டிருந்த சேகர் வீட்டுக் கதவு மீது கல்லெறிந்தனர். அவர்கள்மீது வழக்கு பதிவாகியிருக்கிறது. சிலர் அவன் தப்பா பேசினான் இவங்க கல்லால் எறிந்தார்கள். சரியாப்போச்சு என்கிறார்கள்.

என்னை ஒருவன் தப்பா பேசிட்டான். என்னால் ஏதும் செய்ய இயலாத நிலையில் தரையில் காலால் உதைப்பேன் அல்லவா. அதுபோலத்தான் இவர்கள் கல்லெறிந்த்து.

இரண்டும் ஒன்றல்ல.
*********************   

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...