அன்பிற்குரிய தமிழ் மடாதிபதிகளே,
வணக்கம்
தமிழ் பக்திமரபு என்னை அப்படி நெகிழ்த்தும். அதுமட்டுமல்ல உலகின் வேறு எந்த மொழியேனும் பக்திமரபினை தனது அடையாளமாகக் கொண்டிருக்கிறதா என்பது அய்யம்தான். அப்படியே இருந்தாலும் பக்தனையும் கடவுளையும் தமிழ் இணைப்பதுபோல வேறு மொழி இணைக்கும் என்று நான் நம்பவில்லை.
தமிழ் பக்திமரபு அனைவரையும் அணைக்கும், இணைக்கும். தமிழ் பக்திமரபு என்பது குறிப்பாக சைவ பக்திமரபு என்பது சனாதனத்திற்கு எதிரானது.
மடங்களின் அதிபர்களை கிட்டத்தட்ட சாமியாகவே பார்க்கிற அன்பு தமிழ் பக்தர்களின் அன்பு.
இந்த அன்பு, எதையும் கடந்தவர்கள் நீங்கள் என்று அவர்கள் கருதுவதால் வருவது.
அவர்கள் எளியவர்கள், ஆனால் கூர்மையானவர்கள்.
வெளிப்படையானவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். சரியோ தவறோ எதையும் முகத்திற்கு நேராகக் கேட்டுவிடக் கூடியவர்கள்.
திருவிளையாடல் புராணத்தில் இது இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சினிமாவில் பார்த்திருக்கிறேன்.
கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே இருக்கும் இந்த உறவை...
அது கற்பனை என்றே கொண்டாலும், விவரம் தெரிந்த நாள்முதலாக நான் கொண்டாடிக்கொண்டே இருக்கிறேன்.
குறுந்தொகையின் இரண்டாம் பாடலை இறைவன் சிவன் எழுதியதாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை நாம் கேள்வி கேட்கவேண்டிய அவசியம் நமக்கு இப்போது இல்லை.
தன் மனைவியின் கூந்தலில் இருந்து வரும் மணம் இயற்கையானதா அல்லது அவள் பூசும் வாசனை திரவியங்கள்வழி வருவதா என்கிற அய்யம் மன்னன் செண்பகபாண்டியனுக்கு வருகிறது. இந்த அய்யம் அவ்வளவு முக்கியமானதா என்கிற அறிவு பூர்வமான வினாக்களுக்குள் நாம் இப்போது போகத் தேவை இல்லை. அவனது அவையில் உள்ள சான்றோர்களிடம் இவனது அய்யத்திற்கான விடை இல்லை.
எனவே தனது அய்யத்தைத் தீர்ப்பவனுக்கு தக்க சன்மானம் தரப்படும் என்று அறிவிக்கிறான். இந்த சன்மானத்திற்கு ஆசைப்படும் ஒரு எளிய மனிதனின் வழியாக இறைவன் கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலை அனுப்பி வைக்கிறான்.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே”
செண்பகப் பண்டியனின் அரசவைக் கவிஞரான நக்கீரன் தருமி கொண்டு வந்திருக்கும் இந்தப் பாடலில் பிழை இருப்பதாக சொல்கிறார். இதை தருமி சொல்லக் கேட்டதும் சிவனுக்கு கோபம் வருகிறது. அவரே நேராக செண்பகப் பாண்டியனின் அவைக்கு வருகிறார்.
வந்திருப்பது தாம் வணங்கும் இறைவன் என்பது நக்கீரனுக்குத் தெரிகிறது. அந்தப் பாடலை எழுதியது தாம் தினமும் வணங்கும் இறைவனே என்றாலும் அதை ஏற்க மறுக்கிறார்.
இறைவனுக்கும் நக்கீரனுக்கும் விவாதம் நீள்கிறது. தன்னை தன் பக்தன் வென்றுகொண்டே வருவது இறைவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் எல்லை தாண்டுகிறார்.
கோபம் தலைக்கேற,
“அங்கம் புழுதிபட,
அரிவாளில் நெய்பூசி
பங்கம் பட இரண்டு கால் பரப்பி
சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும்
நக்கீரனோ
எம் கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்”
என்று வெடித்து விடுகிறார்.
“சங்குகளை அறுத்து வளையல் செய்து விற்று வயிறு வளர்க்கும் கடையனான நீ என் பாடலில் பிழை காண்கிறாயா?” என்ற இறைவனின் கோபத்தையும் நேராக எதிர்கொள்கிறார் நக்கீரன்.
நக்கீரர் சொல்வார்,
“சங்கருப்பதெங்கள் குலம்
சங்கரனார்க்கேது குலம்?”
இந்த இரண்டு வரிகளை நினைக்குந்தோறும் நெக்குருகிப் போகிறேன் சன்னிதானங்களே.
”சங்கரன் நீ
நீ குலமற்று இருப்பதுதானே நியாயம்
நீ எப்படி குல பேதம் சொல்லலாம்”
என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம் என்றே இந்த எளிய நாத்திகன் நினைக்கிறேன். ஆமாம் சன்னிதானங்களே, நக்கீரனாரின் கோபத்தை இந்த எளியவன் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.
படைக்கப்பட்ட எந்த இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே இப்படி ஒரு உறவை உலகில் எங்கும் பார்க்க இயலாது. எந்த ஒரு மொழியும் இறைவனையும் பக்தனையும் இப்படி படைத்தளித்ததில்லை. தமிழ் இந்த அதிசயத்தை செய்திருக்கிறது. இந்த இடத்தில் தமிழ் எதுவரைக்கும் நகர்ந்திருக்கிறது தெரியுமா சாமிகளே…
”திருவிளையாடல்” திரைப்படத்தில் இந்த உரையாடல் இறைவனின் இந்த ஆறு வார்த்தைகளோடு நிறைவுப் பகுதிக்கு நகரும். சிவன் சொல்வார்,
“நக்கீரனே! நின் தமிழோடு விளையாடவே யாம்
வந்தோம்”
அய்யோ, அய்யோ, ஒரு பக்தனின் மொழியை ரசித்து சுவைக்க ஏங்குகிறவனாக கடவுளைக் காட்டும் மொழி தமிழ். இதெல்லாம் புனைவு அல்லவா என்று யாரேனும் கேட்பீர்களேயானால், “இறைவனும் புனைவுதானே சாமிகளே” என்பதுதான் எனது பதில்.
”பித்தா
பிறைசூடி
பெருமானே
அருளாளா”
என்று சுந்தரமூர்த்தி சாமிகளையும் எங்கள் தமிழ் பாட வைக்கும். அதற்கு நேர் எதிராக
“தாவாரம் இல்லை
தங்க ஒரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி”
என்று சித்தனையும் பாட வைக்கும்.
நீங்கள் அரவணைக்க வேண்டியவர்கள்.
”ஏகன் அநேகன்” என்ற ஒப்பற்ற தத்துவத்தின் தூதுவர்கள் நீங்கள். அநேக பெயர்களில் இருக்கிறவன் ஒரே ஒருவன்தான். அவனை நாம் சிவன் என்கிறோம். இன்னொருவன் இன்னொரு பெயரில் அழைக்கிறான். அவ்வளவுதான் பிள்ளைகளே. அமைதியாக, ஒற்றுமையாக அணைந்து வாழுங்கள் என்று எங்களை ஆற்றுப்படுத்தி வழிநடத்த வேண்டியவர்கள் நீங்கள்.
எல்லோரிடமும் சமமாக அன்பு பாராட்ட வேண்டியவர்கள். ஒரு மதத்தின் பிரதிநிதி என்பது உங்களது முற்றான அடையாளம் அல்ல.
எல்லோருக்கும் பொதுவானவர்கள் நீங்கள்.
குல்லா தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்
சிலுவை தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்
குங்குமம் வைத்தவனும் உங்கள் பிள்ளைதான்
உங்களில் ஒருவர் தொப்பியோடும் தாடியோடும் ஒருவர் தன்னைக் கொல்ல வந்தார் என்று சொல்வது மட்டுமல்ல அதைக் கேட்டு மற்ற சன்னிதானங்கள் மௌனமாக இருப்பதும் தவறுதான்.
குன்றக்குடி பெரிய சன்னிதானத்தின் இறுதி இலக்கிய பொதுமேடை ஜெயங்கொண்டத்தில் நடந்த கலை இரவுதான். அன்று நடந்த வழக்காடு மன்றத்தில் அவரது கீழ் நானும் பேசினேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நான் எப்போதும் வாயருகே கை வைத்து மரியாதையோடுதான் அவரோடு பேசி இருக்கிறேன்.
காரணம் மதச்சார்பின்மை என்ற இந்திய அடையாளத்தின் ஒப்பற்ற முகவரி அவர்.
இப்படியாகவே இருங்கள்.
அன்போடு இருங்கள். அனைத்து சன்னிதானங்களுக்கும் என் அன்பும் நன்றியும்
அன்புடன்,
இரா.எட்வின்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்