நான் ஒரு முஸ்லிம் பெண்
ஆனால் பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு இஸ்லாமியப் பெண்
ஆனால் நான் தீவிரவாதி அல்ல"
என்று நமது கர்னல் சோபியா பேசுவதைக் கேட்க நேர்ந்தது. சோபியா இந்திய ஒன்றியத்தின் மிகப்பெரிய பொக்கிஷம். இந்திய ராணுவத்தில் கர்னல் பொறுப்பில் இருக்கக்கூடிய மரியாதைக்குரிய ஆளுமை.
சமீபத்தில் இந்தியாவிற்குள் அவ்வப்போது ஊடுருவி இந்திய இறையாண்மைக்கு ஊறு தந்துகொண்டிருக்கக் கூடிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை ராணுவத்தின் மூலம் எதிர்கொள்வதென்று ஒன்றிய அரசு முடிவெடுக்கிறது. அரசாங்கத்தின் இந்த முடிவை கையிலெடுத்த முக்கியமானவர்களுள் ஒருவர் கர்னல் சோபியா குரோஷி.
இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்களை ஒற்றை இரவில் சல்லி சல்லியாகத் தகர்த்து நொறுக்கியவர் சோபியா குரோஷி.
ராணுவரீதியாக பாகிஸ்தானிற்கு பேரதிக இழப்புகளைத் தந்தவர் சோபியா
நள்ளிரவு தாண்டிய ஒரு பொழுதில், ஒருமணி நேரத்திற்குள் ஒன்பது பாகிஸ்தானிய தீவிரவாத முகாம்களை இல்லாமல் அழித்தொழித்தவர் சோபியா
அந்த சோபியாவிற்கு தான் ஒரு பாகிஸ்தானி இல்லை என்றும் தான் ஒரு தீவிரவாதி இல்லை என்றும் தன்னை நிருபித்துக் காட்டவேண்டிய தேவை ஏன் வருகிறது?
“பகல்காமில் நமது சகோதரர்கள் 26 பேரை கொடூரமாகக் கொன்று குவித்துள்ளனர் பாகிஸ்தானிய தீவிரவாதிகள். நமது சகோதரர்களின் உடைகளை அவிழ்த்து அவர்கள் இந்துவா என்று உறுதி செய்துகொண்டு இந்தப் படுபாதகத்தை அந்த அயோக்கியர்கள் செய்திருக்கிறார்கள்.
நமது சகோரர்களின் உடைகளை அவிழ்த்துப் பார்த்து கொன்றவர்களின் உடைகளை அவர்களின் சகோதரியைக் கொண்டே அவிழ்க்கச் செய்து, அவரைக் கொண்டே கொன்றழித்திருக்கிறார் நமது பிரதமர்” என்று பேசியிருக்கிறார் திருமிகு விஜய் குன்வர் ஷா. இவர் மத்தியப் பிரதேசத்தின் மரியாதைக்குரிய அமைச்சர்.
விஜய் குன்வர் ஷாவின் கருத்துப்படி பகல்காமில் நம் மக்களைக் கொன்று குவித்தது பாகிஸ்தான் தீவிரவாதிகள். இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தவர்களில் முக்கியமானவர் சோபியா. விஜய் ஷாவின் கருத்துப்படி பகல்காமில் நம் மக்களைக் கொன்றழித்தவர்களின் சகோதரி சோபியா என்கிறாகிறது.
சோபியா ஒரு பாகிஸ்தானி என்றும் தீவிரவாதிகளின் சகோதரி என்றும் அவர் கூறுவதாகத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாகத்தான் சோபியா குரோஷி மேலே சொன்னதை சொல்லவேண்டி வந்தது.
விஜய் குன்வர் ஷா செய்தது குற்றம்
தான் ஒரு முஸ்லிம் என்பதை ஏற்பதாகவும் ஆனால் தான் பாகிஸ்தானியோ தீவிரவாதியோ அல்ல என்றும் சோபியா நிறுவ முயற்சிப்பது தேவையற்றது
இவை இரண்டிற்காகவும் இந்தியர்கள் கவலைகொள்ள வேண்டும்
ம.பி உயர்நீதி மன்றம் தானாக முன்வந்து அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிய வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. உடனடியாக விஜய் ஷா சுதாரித்துக் கொள்கிறார். தான் பேசியது யாரையேனும் புண்படுத்தி இருக்குமானால் தான் அதற்காக மன்னிப்புக் கேட்பதாகவும் கூறுகிறார்.
இவரது மன்னிப்பு போலியானது என்றும் அவர்மீதான விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. இது இந்திய மதச்சார்பற்ற தன்மைக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது.
இந்த நேரத்தில் பகல்காம் தாக்குதல் குறித்தும் அதன்பிறகு நடந்த “சிந்தூர் ஆபரேஷன்” குறித்தும் பாமரத்தனமாகவே உரையாடுவதற்கு சில இருக்கின்றன.
பகல்காமில் கொல்வதற்கு முன் கொல்லப்பட்டவர்களின் உடைகளைக் களைந்து அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பதை உறுதிசெய்த பின்புதான் அவர்களைக் கொன்றிருப்பதாக சங்கிகள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை மறுப்பதற்கும் இல்லை. சங்கிகளின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்காத அதே வேளையில் இதையொட்டி முன்னும் பின்னுமாக நாம் உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியமாகிறது.
இந்தியாவில் பேரதிகமாக ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் மண் காஷ்மீர். காஷ்மீரில் பணிபுரியும் அனைத்துவகை பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள். நூறு மீட்டர் இடைவெளிக்கு ஒரு பாதுகாப்பு வீரர் பணியில் துப்பாக்கியோடு நின்று கொண்டிருப்பதாகத்தான் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுவந்த நண்பர்கள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தானிற்கும் பகல்காமிற்கும் இடையிலான தூரம் ஏறத்தாழ 250 கிலோமீட்டர். எனில், பகல்காமில் கொலை செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து வருவதற்கு 250 கிலோமீட்டர், , கொலை செய்துவிட்டு பாகிஸ்தானிற்கு திரும்புவதற்கு 250 கிலோமீட்டர், என்ற வகையில் 500 கிலோ மீ ட்டர் தூரம் பயணித்திருக்கிறார்கள். நூறு மீட்டர் தூரத்திற்கு ஒருவர் என்று பாதுகாப்பு வீரர் நின்றுகொண்டிருக்கும் சூழலில் தீவிரவாதிகள் 500 கிலோமீட்டர் தூரத்தை எப்படி கடந்துசெல்ல முடிந்தது? இதில் உள்ள சூதின் முடிச்சை அவிழ்க்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிற்கு இருக்கிறது.
கொல்வதற்கு முன் கொல்லப்பட்டவர்களின் உடைகளைக் களைந்து முஸ்லீம் இல்லை என்று உறுதி செய்த பின்புதான் கொலை செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு மனிதனின் உடையைக் களைந்து அவன் இஸ்லாமியன் இல்லை என்று உறுதி செய்த பின்பு கொல்வதற்கு ஒரு மனிதனுக்கு இரண்டு நிமிடங்களேனும் ஆகும். எனில், 26 பேரை கொலை செய்வதற்கு குறைந்த பட்சம் ஒருமணி நேரமேனும் செலவாகி இருக்கும்.
இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள மண்ணில் இந்த ஒரு மணி நேரத்தில் எந்தவிதமான எதிர்வினையும் இல்லாது போனது எப்படி என்கிற அய்யம் குறித்த உரையாடலைத் தொடங்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
அய்யங்களைத் தெளிவு செய்யவேண்டிய அவசியம் ஒன்றிய அரசிற்கு இருக்கிறது.
இதற்கிடையில் இன்னொரு அதிர்ச்சியான செய்தி நமக்குக் கிடைத்திருக்கிறது. 22.04.2025 அன்று பகல்காம் தாக்குதல் நடக்கிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அதே பகல்காம் பகுதிக்கு பிரதமர் செல்வதாக இருந்ததாம். ஆனால் அங்கு ஒரு தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக “இண்டெலிஜென்ஸ்” பிரிவு ஒன்றிய அரசிற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக பிரதமரின் பகல்காம் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதை ஒன்றிய அரசு இதுவரை மறுக்கவில்லை. எனவே இந்தத் தகவல் உண்மை என்றே ஆகிறது.
சமீபத்தில் பகல்காமில் தாக்குதல் நடக்க இருப்பதான தகவல் ஒன்றிய அரசிற்கு கிடைத்திருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடக்க இருந்த பிரதமரின் பயணம் ரத்து செய்யப்படிருக்கிறது. இவை அனைத்தும் சரியானவை. ஆனால்,
1)
உளவுத்துறையின் அறிக்கை கிடைத்த பிறகும் பகல்காமில் பாதுகாப்பை ஏன் கெட்டிப்படுத்தவில்லை?
2)
தாக்குதலுக்கான சூழல் இருக்கிறபோது குறைந்தபட்சம் சுற்றுலாப் பயணிகளை ஏன் தடுக்கவில்லை?
இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் தார்மீகமான நியாயம் மட்டும் இருப்பதாக சுருக்கிக்கொள்ளக் கூடாது. இந்திய மக்களின் பாதுகாப்பும் இந்திய இறையாண்மையின் ஒரு முக்கியமான கூறு. அந்த வகையில் இந்திய மக்களின் பாதுகாப்பின் மீதான இந்த அலட்சியம் என்பதே இந்திய இறையாண்மையின் மீதான தாக்குதல்தான். எனில் இந்திய இறையாண்மையின் மீதான இந்தத் தாக்குதலில் அரசாங்கத்தின் பங்கு எத்தகையது?
இஸ்லாமியத் தீவிரவாதிகள் வந்தார்கள், பார்த்துப் பார்த்து இந்துக்களைக் கொன்றார்கள் என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சி செய்கிறார்கள்.
அந்த பாகிஸ்தானியத் தீவிரவாதிகளிடம் இருந்து தனது இந்து சகோதரர்களைக் காப்பாற்றுகிற முயற்சியில் ஒரு இஸ்லாமியக் குதிரைக்காரர் உயிரிழந்திருக்கிறார்.
அடுத்தநாள் அந்த குதிரைக்காரரின் தந்தையை செய்தியாளர்கள் சந்திக்கிறார்கள். உங்களது மகனது இறப்பின் வலி கொடியது என்று அவர்கள் முடிப்பதற்கு முன்னர் அந்த தந்தை இடைமறிக்கிறார் “இல்லை பிள்ளைகளே, எனது மகன் உள்ளிட்ட 27 குழந்தைகளின் மரணம் கையளித்த வலியில் துடிக்கிறேன்” என்கிறார்.
இந்த இஸ்லாமிய குதிரைக்காரரின் உயிர்த் தியாகமும் அவரது தந்தையின் கூற்றும் ஏன் பொதுவெளியில் வைக்கப்படவே இல்லை. நமக்குத் தெரிந்த அளவில் அந்த மனிதனின் மரணமும் அவரது தந்தையின் கூற்றும்தான் இந்தியாவின் அடையாளம்.
இவை குறித்து உரத்தும் தொடர்ந்தும் பேசவேண்டிய தேவை இருக்கிறது.
செய்வோம்.
******************************************************
n புதிய ஆசிரியன்
ஜூன் 2025
ஆனால் பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு இஸ்லாமியப் பெண்
ஆனால் நான் தீவிரவாதி அல்ல"
நள்ளிரவு தாண்டிய ஒரு பொழுதில், ஒருமணி நேரத்திற்குள் ஒன்பது பாகிஸ்தானிய தீவிரவாத முகாம்களை இல்லாமல் அழித்தொழித்தவர் சோபியா
இவை இரண்டிற்காகவும் இந்தியர்கள் கவலைகொள்ள வேண்டும்
ஜூன் 2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்