”அறம்” என்பது நமது கல்வியின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்று. மற்ற எந்த பூமியை விடவும் தமிழ் மண் அறத்தின்பால் விருப்பத்தோடு நிற்கக்கூடியது. அதனால்தான்
தனது பச்சைக் குழந்தைகளுக்கு எழுதச் சொல்லித்தரும் முன்பே ‘அறம்
செய விரும்பு’ என சொல்வதற்கு சொல்லித் தருகிறது
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ‘அறம் செய்’ என்று குழந்தைகளுக்கு சொல்லித் தரவில்லை,
‘அறம் செய விரும்பு’ என்று கற்பிக்கப்படுகிறது
அறம் செய்வதன்பது ஒரு செயல். அறம் செய விரும்பு என்பது ஒரு செயல். விருப்பத்தோடு அறத்தை செய்வதென்பது மற்றுமொரு செயல்.
இது மூன்றையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்வது பிழையானது
அறம் என்பது ஒரு செயல் என்பதை சொல்லித் தருகிறோம். அதன் பிறகு அந்த விழுமியங்கள் மிக்க அறத்தை செய்வதற்கு ஆசைப்பட வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம். உச்சமாக, விருப்பத்தோடு அதை செய்ய வேண்டும் என்று நாம் நமது குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம்
மற்ற இடங்களில் அறம் என்பது சட்டம், நிபந்தனை அல்லது இதுபோன்று கட்டாயமாக செய்ய வேண்டிய வேறு எதுவோ ஒன்று
தமிழ் மண்ணில் அறம் என்பது விருப்பம்
கல்வி கற்பதன் முக்கியமான இரண்டு நோக்கங்களாக
1)
அறத்தின் வழி நிற்பது
2)
அறம் மறுப்பதை செய்யாது நிற்பது
என்பவை முன்வைக்கப்படுகின்றன
சுருக்கமாகச் சொல்வதெனில் அறம் எவற்றை எல்லாம் செய்யச் சொல்கிறதோ அவற்றை விருப்பத்தோடு
செய்வதும், அறம் எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்று சுட்டுகிறதோ அவற்றை செய்யாது அவற்றினிடமிருந்து
விலகி நிற்பதும் கல்வியின் இரண்டு முக்கிய நோக்கங்களாகக் கொள்ளப்படுகிறது
“செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமையானும் கெடும்” என்கிறார் வள்ளுவர்
எனவே செயத் தக்கவற்றை செய்வதும் செயத்தக்க அல்லாதவற்றை செய்யாது இருப்பதும் அறம்
என்றும் கொள்வதற்கு இடமிருக்கிறது
இந்த இடத்தில் செயத்தக்க அனைத்தையும் என்று இதற்கு பொருள் கொள்வதைவிட செயத்தக்க
அறச் செயல்களை என்று கொள்ளுதல் நலம்
எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்பதற்கு முன்னமே நமது குழந்தைகளுக்கு “அறம் செய விரும்பு” என்று பிழையற சொல்வதற்கு கற்றுக்கொடுக்கப் படுகிறது
”பிழையற சொல்வதற்கு” என்பதை அடிக்கோடு போட்டு வாசிப்பது
உத்தமம்
இன்னும் ஒரு உண்மையை சொல்வதெனில் “அறம் செய விரும்பு” என்பது பல இடங்களில் அடித்தே சொல்லித் தரப்படுகிறது
எங்கள் காலத்தில் சிலர் சொல்லத் தெரியாமல் “அறம் செய விரும்பு” என்பதற்கு பதில் “அறம் செய இரும்பு” என்று சொன்னதும் உண்டு. அதற்காக டீச்சரிடம் அடி ஸ்கேலால் செமையாக வாங்கிய நினைவுகள் இப்போது நினைத்தால் சுவையானவை
அப்போது வலித்திருக்க்க் கூடும்
கொஞ்சம் நகைச்சுவையோடு பார்த்தால்,
அறம் செய இரும்பு என்பதும் சரிதான்
அடிப்பதற்கான ஸ்கேல் என்ற வகையில் அடி-ஸ்கேல் என்பதும் சரிதான்
அறம் செய விரும்பு என்பதை பிழையாக உச்சரித்தால் அடியே விழும் என்றால் அறம் என்றால் என்ன?
இந்த இடத்தில் இரண்டைப் பேசிவிடுவது மிகச் சரியானது
1)
அறம் செய விரும்பு என சொல்லக் கற்றுக் கொடுத்த அளவிற்கு அறத்தை செய்வதற்கு குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்தோமில்லை
2)
எது அறம் என்பதையும் குழந்தைகளுக்கு நாம் தெளிவாக சொல்லிக் கொடுத்தோம் இல்லை
உண்மையைச் சொல்வதெனில்,
திருக்குறள் அறம் என்று சொல்கிற ஒன்றை தங்களது விருப்பக் கடமையாக
செய்வதற்கு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தவே இந்தக் கட்டுரை
பொதுவாக உண்மை, நேர்மை, களவாடாது இருத்தல், புறம் பேசாது இருத்தல், சக மனிதனை எதன் பொருட்டும் இழிவுபடுத்தாது இருத்தல், பெண்மையையைப் போற்றுதல், சக மனிதனின் வலியைத் தன் வலியாகக் கருதுதல் போன்றவை எல்லாம் அறம் என்று கொள்ளப்படுகிறது
இந்தப் பட்டியல் இன்னும் ஆயிரம் சொற்களைக் கடந்தும் நீளக் கூடும்
எது உண்மை என்பதில்கூட மாறுபட்டு நிற்க முடியும். எது அறிவு என்பதில்கூட மாறுபட்டு நிற்க முடியும்
வள்ளுவரேகூட ”பொய்மையும் வய்மையிடத்து” என்கிறார். பொய்யான ஒரு சொல் நன்மையைத் தருமானால் அந்த சொல்தான் உண்மை வள்ளுவருக்கு
ஒரு உண்மையான சொல் சில நேரங்களில் ஒரு உயிரைக் கொல்லக் கூடும். பொய்யான ஒரு சொல் சில நேரங்களில் ஒரு உயிரைக் காப்பாற்றும். என்றால், அந்தப் பொய்தான் உண்மை என்கிறார் வள்ளுவர்
அது எப்படி ஒரு உண்மை உயிரைக் கொல்லும்?, ஒரு பொய் உயிரைக் காப்பாற்றும்?
ஒரு கலவரத்தைச் சந்திக்கிறோம். உயிரைக் கையில் பிடித்தபடி ஒரு இளைஞன் கிழக்குப் பக்கமாக ஓடி மறைகிறான். அவன் சென்ற சில நேரத்தில் ஒரு கூட்டம் வந்து ஒரு இளைஞன் இந்தப் பக்கம் வந்தானா என்று கேட்கிறது என்று கொள்வோம்
இல்லை என்று சொல்ல முடியாது. காரணம் அவன் இந்த வழியாகத்தான் அவன் வந்திருக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். இல்லை என்று பொய் சொன்னால் நம்மைக் கொன்று போடுவார்கள்.
ஆமாம் என்று உண்மையை சொல்கிறோம்
அந்த உண்மை நம்மைக் காப்பாற்றுகிறது
அவன் எந்தப் பக்கம் ஓடினான் என்று கேட்கிறார்கள். கிழக்குப் பக்கமாகப் போனான் என்பதுதான் உண்மை. அந்த உண்மையை சொன்னால் அவனைக் கொன்று போடுவார்கள்
தெற்குப் பக்கமாகப் போனான் என்று சொல்கிறோம். இது பொய். ஆனால் நாம் சொன்ன இந்தப் பொய்யினால் கிழக்குப் பக்கமாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியப் பிள்ளைப் பிழைத்துக் கொள்வான்
இப்போது நாம் முதலில் சொன்ன உண்மையும் உண்மை. இரண்டாவதாக சொன்ன பொய்யும் உண்மை
கிட்டத்தட்ட அறிவையும் இப்படியாக நம்மால் மாற்றிப் பார்க்க முடியும். அறிவு என்பது அறிவியலோடும், தொழில் நுட்பத்தோடும், மருத்துவத்தோடும், வானவியல் மற்றும் புயியல் நிபுணத்துவத்தோடும், தத்துவ ஆராய்ச்சிப் போன்றவற்றோடும் பொருத்திப் பார்க்கப்படுகிறது.
நாகசாகி, ஹிரோஷிமா போன்றா பேரழிவுகளை அறிவுதான் கொடுத்தது
இவற்றில் இருந்து முற்றாக மாறுபட்டு அறிவைப் பார்த்தவர் வள்ளுவர். “பிரிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை” என்றார்
அணுகுண்டு போடு. அனைத்தையும் அழி என்பதும் அறிவுதான். அடிபட்டுக் கிடக்கும் மனிதன் எதிரியே ஆயினும் அவனுக்கு மருந்திட்டு, ஆறுதலாகப் பேசி, அவன் வலி தீர பாடுபடு என்பதும் அறிவுதான். மனிதனை அழிவில் இருந்து காப்பாற்று என்பது இரண்டாயிரம் வருடத்து தமிழ் அறிவு
இவைபோல் அல்லாமல் அன்பு என்பதை இப்படிப் பிரித்துப் பொறுத்திப் பார்க்கவே இயலாது
அன்பு என்றால் எங்கும் அன்புதான்
அன்பை அறமாகக் கொள்ளும் மொழியும் மக்களும் இருக்கக் கூடும்.
அன்போடு இருத்தல் அறம் என்று மட்டும் சொல்லித் தரவில்லை தமிழ். “அன்புடுத்தி அலை” என்று சொல்வதோடு நின்றிருந்தால் தமிழும் சராசரிதான். அது கடந்தும் தமிழ் நமக்கு கட்டளையிடுகிறது
கொஞ்சமும் நெளிவு சுழிவு இல்லாமல் கறாராக சொல்கிறது
“என்பிலதனை காயும் வெயில்போல காயுமே
அன்பிலதனை அறம்”
எலும்பு இல்லாத உயிர்களை வெயில் சுடுவதுபோல் அன்பு செய்யாதவனை தண்டித்தலே அறம் என்கிறார் வள்ளுவர்.
திருடுதல் போல், கொலை செய்வது போல், கொள்ளையடிப்பது போல், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போல் அன்பற்று இருப்பதும் குற்றம் என்கிறது தமிழ் மரபு
அன்பற்று இருப்பதை தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறுகிறது. எலும்பே இல்லை என்பதற்காக வெயில் அந்த உயிர்களை சுடாமல் இருப்பதில்லை. அதுபோல அன்பு இல்லாதவர்கள் அவர்கள் எவ்வளவு பலவீனமானவர்களாக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
அன்பில்லாதவனைத் தண்டிப்பதே அறம் என்கிறது தமிழ் மரபு
அன்பற்றவனுக்கே இது கதி என்றால் வெறுப்பை விதைப்பவர்களை என்ன செய்வது
இந்த மன்னை ஆளும் மகா மனிதரே இது எண்பதிற்கும் இருபதிற்கும் நடக்கும் யுத்தம் என்கிறார்
இங்கு அவர்கள் எண்பது என்பது இந்துக்கள். இருபது என்பவர்கள் மற்ற சிறுபான்மையினர்
எண்பது இருபதை எதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை தனது மகத்தான பதவியின் மாண்பு கருதிக்கூட ஒளித்து மறைத்து சொல்லாமல் கூச்ச நாச்சமே இன்றி வெளிப்படையாகப் பேசும் வெறுப்பை எப்படி எதிர்கொள்வது என்று கவலைப்பட வேண்டும்
தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடவுளிடம் முறையிடலாம். அதில் எந்தப் பிழையும் இல்லை. அதை போட்டியில் இருக்கும் அனைவருமே செய்வதற்குப் பாத்தியதை உள்ளவர்கள் என்பதால் போட்டியில் நிற்கும் அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் செய்யக் கூடும். கடவுள் பாடு அவர்கள் பாடு அது என்பதால் நமக்கு அதில் பிரச்சினை இல்லை
ஆனால், அந்தக் கடவுளையே சிலர் போட்டிக்காக தங்கள் கைகளில் சுமந்து கொண்டு திரிவதும். கடவள் அவர்கள் கடவுள் என்றும். தம்மை ஆதரிக்காதவர்கள் அந்தக் கடவுளின் எதிரிகள் என்றும் அந்தக் கடவுளின் எதிரிகள் இந்த மண்ணின் எதிரிகள் என்று திரிக்கிறார்கள்
அப்படியாக அவர்கள் சுட்டும் எதிரிகள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று வெறுப்பை மனசாட்சியே இல்லாமல் விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்
ஆயிரக் கணக்கானோர் கொலை செய்யப்படுகிறார்களே என்ன சொல்கிறீர்கள் என்று அந்த மகத்தான தலைவரைக் கேட்கிறார்கள். அன்றைய குஜராத் ரத்தச் சகதியில் அவரது பங்கு குறித்தான கேள்வி அது
காரில் போகிறோம், ஒரு நாய் அடிபட்டு விட்டது, அதற்காக அழுதுகொண்டா இருக்க முடியும் என்கிறார் அந்தத் தலைவர்.
மணிப்பூரில் ஒரு பெண் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட காணொலிக் காட்சி வைரலாகிறது. பதறி அழுகிறோம். அந்த மண்ணின் முதல்வரைக் கேட்கிறோம்.
“அடப் போங்க, இது மாதிரி எத்தனையோ நடக்கிறது இங்கு. ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு இப்படிப் பதறினால் நான் என்ன செய்வது” என்பது மாதிரி பதில் தருகிறார்
அன்புடுத்தி அலவதற்கு பதில் வெறுப்புடுத்தி அலைகிறார்கள்.
அனைவரையும் வெறுப்புடுத்தக் கேட்கிறார்கள்
அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையே ஒரு யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது
எலும்பில்லாதவற்றை சுடும் வெயில்போல அன்பு இல்லாதவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பது வள்ளுவம்
அதுதான் தமிழ் மரபு
வெறுப்பாளர்களை அடையாளம் காண வேண்டியதையும், அன்பைத் தெரிவு செய்வதையும் சொல்லித் தர வேண்டும்
* காக்கை பிப்ரவரி 2024
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்