Monday, March 14, 2011

எங்கள் பாட்டன்களுக்கு நூற்றி ஐம்பது ஏக்கரில் சுடுகாடே இருந்தது

வாஷிங்டனுக்கு, டோக்கியோவிற்கு, மெல்போனுக்கு மற்றும் இன்ன பிற
பெருநகரங்களுக்கு எந்தெந்த விமான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை
விமானங்களை இயக்குகின்றன என்பது அத்துப் படியான அளவிற்கு நம்மில்
பலருக்கு நமது கிராமத்திற்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை நகரப் பேருந்துகள்
வந்து போகின்றன என்பது தெரியாது.

பல மைல்களுக்கு அப்பால் கிடக்கிற பிரமிடுகளின் மேன்மை குறித்து, தொன்மம்
குறித்து, மணிக் கணக்காய் சிலாகிப்பதில், பாரம் பாரமாய் எழுதிக்
குவிப்பதில் கொஞ்சமும் கஞ்சத் தனமே இருப்பதில்லை தமிழனுக்கு. அதில்
நமக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படிக்கு வருத்தமும் இல்லை. சாவதற்குள் ஒரு
முறையேனும் பிரமிடுகளைப் பார்த்துவிட்டு வந்துதான் சாக வேண்டும் எனப்
பிடிவாதாமாய் ஆசைப்படும் நண்பர்கள் எனக்கும் உண்டு. எரிச்சலே கொள்ளாமல்,
ஒரு புன்னகையோடு இவர்களைக் கடந்து போகும் பக்குவம்கூட நமக்கு
வந்துவிட்டது. ஆதிச்ச நல்லூர், மணல்மேடு மற்றும் காரைமேடு போன்ற நமது
தமிழ்க் கிராமங்களில் நடக்கும் போதே கால்களில் மிதிபட்டு உடைந்து அழிந்து
வரும், நமது தொன்மையும் மேன்மையும் மிக்க நாகரீகத்தின் சின்னங்களான
முதுமக்கள் தாழிகள் குறித்து எந்த அக்கறையும் இவர்களுக்கு இருப்பதில்லை
என்பதுதான் நமது கவலையே.

பெருந்தன்மையினால் தாராளமாய் பிசைந்து செய்யப்பட்ட மனிதனால்கூட மேற்சொன்ன
எந்த ஒரு ஊரிலும் இன்றைய தேதியில்கூட ஐயாயிரம் பேருக்கு மேல் வாழ்வதாய்ச்
சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட குக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நூறு
ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றி ஐம்பது ஏக்கரை ஒட்டிய நிலப் பரப்பில்
அமைந்துள்ள சுடுகாடுகளின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச ஆய்வாளர்கள்
அக்கறை கொள்ளாததில் நியாயம் இருக்கலாம். தமிழாய்ந்த தமிழர்களின் கவனம்கூட
இவற்றின் பக்கம் திரும்பாததுதான் உலகம் ருசித்த சோகங்களிலேயே தலையாய
சோகம். குருஷேத்திரப் போர் நடந்ததாகக் கூறப்படும் இடமருகில்கூட இவ்வளவு
பரந்த நிலப் பரப்பில் சுடுகாடு இருக்கிறதா? அல்லது இருந்து அழிந்து
போனதற்கான சுவடுகலாவது அல்லது புராணவழி  சான்றுகளாவது இருப்பதற்கான
ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்றால் அதுவுமில்லை.

எத்தனையோ லட்சாதி லட்சம் குதிரைகளும் யானைகளும் வீரர்களும் பங்கு
பெற்றதாகக் கூறப்படும் போர்க்களமான குருச்கேத்திரத்திற்கு அருகே காணக்
கிடைக்காத ஒரு நிலப் பரப்பு நிலத்தில், தமிழ் மண்ணில் சுடுகாடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன என்றால் என்ன பொருள்? இத்தனை பெரிய பரப்பளவில் சுடுகாடுகள் ஏதோ ஒரு புள்ளியில் தேவைப் பட்டிருக்கின்றன. எனில் பெரியதும் உக்கிரமமானடுமான போர்கள் அங்கே நடந்திருக்கக் கூடும் என்று கொள்வதற்கும் வாய்ப்புண்டு. 

இது உண்மையெனில் பொறாமை கொள்ளுமளவிற்கு மேன்மையும் அளப்பரிய வளங்களைக் கொண்டதுமான சாம்ராஜ்யங்கள் அங்கே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனில் இது குறித்த ஆய்வுகள் போதுமான வகையில் என்றுகூட அல்ல, இன்னும் தொடங்கப் படவே இல்லையே ஏன்?. உலக கவனம், இந்திய கவனம் என்பவற்றை எல்லாம் கூட ஆடித் தள்ளுபடி , பொங்கல் தள்ளுபடி அல்லது இது போன்ற ஏதாவது ஒரு தள்ளுபடி என்கிற வகையில் தள்ளுபடி செய்துவிடலாம். ஏனெனில் தமிழ்ச் சுடுகாடுகளின் தொன்மையேகூட அவர்களைக் கலக்கிப் புரட்டி வெட்டிச் சாய்த்திருக்கலாம்.அதையும் இதையுமென்றுஅலைந்தலைந்து ஆய்வு செய்யும் எங்கள் சான்றார்ந்த பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது குறித்து கவனம் சாயாததன் காரணம்தான் என்ன முயன்றும் பிடிபட மறுக்கிறது. 

மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா பற்றித் தமிழகத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் சரியாகவோ தவறாகவோ கூடுதலாகவோ சற்றுக் குறைச்சலாகவோ இருக்கலாம், ஆனால் நிச்சயமாகத் தெரியும். மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவற்றின் தொன்மைச் சிறப்புகள் குறித்து கற்றுத் தெளியாமல் நமது பிள்ளைகள் பள்ளிகளைக் கடந்துவிடக் கூடாது என்கிற கவனத்தோடு நமது கல்வித் திட்டம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதில் நமக்கெதுவும் பிரச்சினை இல்லை. இன்னுஞ்சொல்லப் போனால் இந்தியாவின்  கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் அதிலும் குறிப்பாக பண்டைய நகர நாகரீகம் ஆகியவற்றின் தொன்மச் சிறப்புகள் குறித்து நம் பிள்ளைகள் தெளிவுறக் கற்றுத் தேரவேண்டும் என்பதில் முரட்டுத் தனமான பிடிவாதமே நமக்குண்டு. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில்  உலகின் எந்த ஒரு நாகரீகத்தின் பழமை மற்றும் தொன்மச்  சின்னங்கள் குறித்தும் நம் குழந்தைகளுக்குத் தெளிவுறச் சொல்லித் தரவேண்டும் நம் எல்லை தாண்டிய ஆசையை யாரும் சந்தேகப் பட முடியாது. 

நமது ஆதங்கமெல்லாம், நமது தமிழ்மண்ணின் மையப் பகுதியான அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள உட்கோட்டையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் அந்தப் பூமிக்குக் கீழே புதையுண்ட நிலையில் கட்டடங்களும் சிலைகளும் காணப்பட்டு, போதிய பராமரிப்பும் ஆய்வுமின்றி அழிந்து வருவதைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லாதது குறித்துதான். ஆய்வாளர்களோ, கல்வியாளர்களோ, அரசுகளோ அது குறித்துப் போதிய அக்கறை காட்டாது மௌனிப்பதன் மர்மம் என்ன?. கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம் வரை செல்லும் கல்விச் சுற்றுலாக்கள்கூட அங்கிருந்து கிராம மக்களுக்கான நடை தூரத்திலிருக்கும் உட்கோட்டைவரை நீளாமல் போவதில் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. 

கிரஹாம் ஆன் கூக் என்ற அறிஞர் பூம்புகாருக்கும், நாகைக்கும் இடையே நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் பதினோராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகுந்த நுணுக்கமான நகர கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு நிலப் பகுதி இப்பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருக்கிறது என்பதைத்தெளிவு படுத்தினார். அது குறித்து, அது சரியல்ல என்கிற அளவில்கூட வாய் திறக்காமல் உலகச் சமூகம் மௌனித்துக் மர்மம் புரிகிறது. அதை உண்மையென ஒத்துக் கொண்டால் மெசபடோமியாவைவிடப் பழமையும் தொன்மையும் வாய்ந்த நாகரீகத்திற்கு சொந்தப் பூமி தமிழ்ப் பூமி என்ற உண்மையை ஒத்துக் கொள்வதாய் ஆகும். அதை அவர்களால் ஜீரணிக்க இயலாது. ஆயிரம்தான் தமிழ்ப் பூமியின் நாகரீகம் என்றாலும் அது இந்திய நாகரீகம்தானே?. பிறகேன் இந்தியச் சமூகமும் மௌனிக்கிறது?. இதையெல்லாம் விடுங்கள், உலகின் எந்தப் பகுதியில் எது கிடைத்தாலும் ஓடியோடி ஆய்ந்து அவற்றின் சிறப்புகளை பெருந்தன்மையோடு ஏற்று பறை சாற்றும் தமிழ் மண்ணின் அறிவு ஜீவிகளே,   இதை ஏற்கக் கூட வேண்டாம், சரிதானா என்கிற அளவிலேனும் இதை ஆய்ந்து பார்க்கவும் அஞ்சுவதன் பொருள்தான் என்ன? 

கேட்கலாம், "தமிழ்ப் பூமியின் தொன்மத்தை, மேன்மையை ஒப்புக் கொள்வதால் மட்டும் உங்களுக்கென்ன லாபம் வந்துவிடப் போகிறது?." திருப்பிக் கேட்கிறேன்," அது உண்மையெனில் அதை ஒத்துக் கொள்வதால் உங்களுக்கென்ன நட்டம் வந்துவிடப் போகிறது?"

தன் மொழியின், கலாச்சாரத்தின் தொன்மம் அறிந்த சமூகம் அவற்றை மதித்துப் புழங்கும். அதன் மூலம் அந்த மொழியும் கலாச்சாரமும் வளர்ந்து செழிக்கும். தனது மொழி மற்றும் கலாச்சாரத்தின் மேன்மை புரியாத சமூகம் எதுவாயினும் அவற்றைப் புழங்கத் தயங்கி அவற்றின் அழிவுக்குக் காரணமாகும். எனவேதான் கவலைப் படுகிறோம். 

கி.பி.அரவிந்தன் "இருப்பும் விருப்பும்" என்ற தனது நூலில் தாங்கள் தோற்றதற்கான காரணங்களை அலசுகிறார். அவர் சொல்கிறார், " தவறுகளில் இருந்து படிப்பினைப் பெற்று முன்னேறுவதுதான் போராட்டம்." ஆமாம், தனது தவறுகளைத் திருமாத் திரும்பச் செய்யும் இனமோ, சமூகமோ, சொந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடும் குழுவோ, அல்லது எதுவோ ஆயினும் அது அழிந்து போகும். 

காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நமது சின்னக் குழந்தை சாய்நா சொல்கிறார், " I won the gold because I did not repeat my mistakes."        

நன்றி : "கல்கி" மற்றும்  " சுகன் "

19 comments:

  1. தவறுகள் திருத்த்ப்படும்போது தக்க சன்மானம் பெறும். ஆனால் உறைக்காத தவறுகள் உணரப்படுவது எப்போதோ?

    ReplyDelete
  2. நம்பிக்கையோடு சங்கை ஊதி வைப்போம் தோழர்.

    ReplyDelete
  3. நிச்சயம் யோசிக்க வேண்டிய அருமையான கட்டுரை. இந்தக் கட்டுரையில் நீங்கள் செதுக்கி இருக்கின்ற ஏக்கத்தை பேராசிரியர் தொ.பரமசிவன் எங்களிடம் புலம்பியே தீர்த்திருக்கிறார். அவரோடு ஆதிச்சநல்லூருக்கு ஒருமுறை முக்கிய எழுத்தாளர்களோடு பயணப்படுகையில் அவர் சொன்ன தகவல்கள் என்னை ஆச்சரியத்தையும், மீள முடியாத துக்கத்தையும் கொண்டு வந்து சேர்த்தது. காரணம் ஆதிச்சநல்லூர் நம் முன்னோர்கள் கோலோச்சிய ஒரு ஊர். அங்கே நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், ஆண்டிருக்கிறார்கள். அந்த வரலாறு திட்டமிடப்பட்டே மறைக்கப்பட்டுள்ளது. மறக்கடிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரீகம் உலகில் மிகப் பெரும் நாகரீகம் என்று சட்டையை நமக்குள் நாம் தூக்கிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதை உலகுக்கு பறை சாற்ற வேண்டும். வரலாறு என்பது வெறும் வரலாறு மட்டுமல்ல. முன்னோர்கள் நமக்கு மீதம் விட்டுச் சென்றிருக்கிற பாதை, சொத்து. நில அபகரிப்பு வழக்கில் தமிழக அரசு காட்டும் ஆர்வத்தை கொஞ்சம் வரலாறு அபகரிப்பு விசயத்திலும் காட்ட வேண்டும்.

    ReplyDelete
  4. அன்பு தோழர் அவர்களுக்கு , அருமையான முன்மொழிவு. நம் கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டின் மீதும் அக்கறையுள்ள அனைவரையும் சிந்திக்கவைக்கும். தமிழர்கள் பண்புமிக்கவர்களாக இருப்பதற்கு அவர்களுடைய தொன்மையுமையான பண்பாடும் ஒரு காரணம். அதை அறிந்துகொள்வதும் பாதுகாப்பதும் அவசியம். நல்ல கட்டுரை. என்னால் முடித்தவரை இதை மற்றவர்கள் படிக்க செய்கிறேன்.

    ReplyDelete
  5. இஸ்ரேலியர்களை போல் நாம் நமக்கென தனிநாடு பெற்று இருகவில்லை , நமது வரலாற்று பெருமைகளை உலகுக்கு உணர்த்த நாம் வலுவான கட்டமைப்பையும் பெற்று இருகவில்லை....

    ReplyDelete
  6. ந‌ல்ல‌ ஆத‌ங்க‌த்தை கொட்டும் ப‌திவு. அர‌சு ந‌ம‌து தொன்மையை காக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும். த‌விர‌ த‌மிழ் நாடு என்ப‌து 1947 க்கு பிற‌குதானே த‌மிழ‌னை ப‌ற்றி ஆராய்ச்சி என்றால் அவ‌ன‌து கால‌டி ப‌ட்ட‌ அத்த‌னை இட‌த்தையையுமே பாகிஸ்தான்,ம‌லேசியா,இல‌ங்கை உட்ப‌ட‌ ப‌ல இட‌ங்க‌ளையும் செய்ய‌ வேண்டியிருக்கும்.அர‌சாங்க‌ம் குறைந்த‌ ப‌ட்ச‌ம் அத்கைய ஆராய்ச்சி செய்யும் மாண‌வ‌ர்க‌ளை ஊக்குவிக்க‌லாம்

    ReplyDelete
  7. அன்பு நண்பரே! மிகவும் நல்லதொரு பதிவு.
    "கல் தோன்றா, மண் தோன்றா காலத்திலும் முன் தோன்றிய மூத்தகுடி" என்று பெருமை பேசுவதில் உள்ள வீராப்பு, நம் தொன்மை சார்ந்த விஷயங்களை அறிவுப்பூர்வமாக அணுகுவதில் இல்லை என்பது வருத்தமான உண்மை. இது போன்ற விஷயங்களை எப்படி அரசு இயந்திரத்துக்கு தெரியப்படுத்துவது?
    அன்புடன் - ஜீவன்.

    ReplyDelete
  8. நல்ல விதை ஒன்றை விதைதுள்ளிர்கள் .இதன் பலன் விரைவில் ....................................

    ReplyDelete
  9. நல்ல பதிவு.
    நம்மைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கப்படவேயில்லை. நமது மக்களுக்கு விழிப்புணர்ச்சியும் காணாது. ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை.
    வாழ்த்துக்கள்.
    உங்கள் பதிவில் மின்னஞ்சல் மூலம் உங்கள் பதிவை பெறுவதற்கான இணைப்பை சேர்த்து விடுங்கள். நன்றி.

    ReplyDelete
  10. "தனது மொழி மற்றும் கலாச்சாரத்தின் மேன்மை புரியாத சமூகம் எதுவாயினும் அவற்றைப் புழங்கத் தயங்கி அவற்றின் அழிவுக்குக் காரணமாகும். எனவேதான் கவலைப் படுகிறோம்."
    சரியான பதிவு....

    ReplyDelete
  11. //மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவற்றின் தொன்மைச் சிறப்புகள் குறித்து கற்றுத் தெளியாமல் நமது பிள்ளைகள் பள்ளிகளைக் கடந்துவிடக் கூடாது என்கிற கவனத்தோடு நமது கல்வித் திட்டம் கட்டமைக்கப் பட்டுள்ளது. //

    பிறனது விழுமியங்களை ஏற்கச் செய்து,தமிழனை மூளை மழுங்கச் செய்யும் முயற்சி. அதை நம் மாநில அரசே மனமுவந்து செய்வதும், சம்பளத்திற்காக மறுப்பேதும் தெரிவிக்காமல் வாயையும்,...த்தையும் பொத்திக்கொண்டு வாழ்க்கையை ஓட்டும் வாத்திகளையும் நினைத்து வேதனை தான் மிஞ்சுகிறது.

    உங்களது கட்டுரை ஒரு துளி நம்பிக்கையைத் தொட்டு துவங்கி வைத்திருக்கிறது. வரவேற்கிறேன் வாத்தியாரே!

    ReplyDelete
  12. ////தனது மொழி மற்றும் கலாச்சாரத்தின் மேன்மை புரியாத சமூகம் எதுவாயினும் அவற்றைப் புழங்கத் தயங்கி அவற்றின் அழிவுக்குக் காரணம்...//

    இதை உணராததின் பலனாகத்தானே இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்தோம் ஒரு லட்சத்திற்கும் மேலான உடன் பிறப்புக்களை.

    நம் வரலாறும், பாரம்பரியமும் தெரியாமல் , தெரிந்துக்கொள்ளவும் விரும்பாமல் “டாஸ்மாக்” வாசலில் வாந்தியெடுத்து வீழ்ந்துக்கிடக்கும் நம் வருங்காலத் தூண்களை - வேறுவழியின்றி நாமே கொன்று விடுவதே மேல் என பல நேரங்களில் நினைத்ததுண்டு.

    ReplyDelete
  13. புறமுதுகை பார்க்கும் ஆசைதான் இங்கு உள்ளவர்களுக்கு அதிகம்... 65 வருடங்களுக்கு முன்புவரை சகோதர சகோதரியாய் பார்த்த நமக்கு இன்று பாக்கிஸ்தானியை எதிரியாய் பார்க்க தோன்றுகின்றது... ஒரு மலையாளி தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு எந்த கெடுதலையும் செய்யாத போதும்... ஒரு மாதிரியாய் தான் நாம் மலையாள சகோதரர்களை பார்க்கின்றோம்...! ஆனால் 200 வருடங்கள் நம்மை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி... லட்சக்கணக்கான மக்களை கொண்று குவித்த மேற்கு நாட்டு மக்களை பெருமை பொங்க பார்க்கின்றோம்... அவன் உபயோகப் படுத்தும் பொருட்களை (உதாரணத்திற்க்கு ரோலக் வாட்ச்) உபயோகப்படுத்த வேண்டும் என லட்சியம் வைத்துள்ளவர்கள் ஏராளம் ஏராளம்...! தவறு எங்கே என தேடிக்கொண்டிருப்பது நம்மைப் போல் சிலர் மட்டும் தான்...! அவர்கள் மேல் இவர்கள் கொண்ட மோகம் தான் மேற்கு நாடுகளின் மேலும் அதன் காலாச்சாரங்களின் மேலும் நம்மவர்களை மனம் லயிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது...

    என்ன செய்ய தோழரே... விதியின் விளையாட்டு... நம் தொன்மையையும், பண்பாட்டையும், நாகரீகத்தையும், பெருமையையும் பேசுபர்களை இந்த சமுதாயம் பைத்திக்காரனாய் தான் பார்க்கின்றது...! இவற்றைஎல்லாம் ஏறி மிதித்து தான் அடுத்தவன் பெருமையை எட்டிப் பார்க்கின்றோம் என எப்பொழுது ஒவ்வொருவருக்கும் தெரியப் போகின்றதோ...!

    ReplyDelete
  14. உங்களது சிந்தனைகளுக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கவேண்டும்

    ReplyDelete
  15. அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள், கடல் கொண்ட பூம்புஹார் மற்றும் மகாபலிபுரத்தில் கடலுக்கடியில் மறைந்துகிடக்கும் கட்டிடங்கள் மற்றும் மன்னார் வளைவளைகுடாவில் மறைந்து கிடக்கும் அதிசயங்கள் பற்றிய அகழ்வாரய்ச்சியை நாம் இன்னும் சரியாக விரிவாக மேற்கொள்ள முடியாமல் இருப்பதே இதற்கு சாட்சி

    ReplyDelete
  16. தொன்மையான நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் தாம் சொந்தக்காரராய் இருந்தாலும் அதனைப்பற்றி அறிவும் பெருமிதமும் இல்லாதவர்களாக தமிழர்கள் இருப்பதற்கு பல்லாண்டுகளாக அவர்கள் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்புகளும் அதனால் அவர்தம் அடிமனத்திற் படிந்திருக்கும் அச்ச உணர்வும் காரணிகளாக இருக்கலாம். இந்திய, மேற்கத்திய அறிஞர்கள் தமிழின் தொன்மையை ஒப்புக்கொள்ள மறுப்பதன் நோக்கம், தம்முடைய நாகரிகமே சிறந்த நாகரிகம் என நிறுவமுடியாது என்பதே ஆகும். இந்நிலையில் தங்கள் எழுதியிருக்கும் இக்கட்டுரை விரிவான உரையாடலுக்கான கதவுகளைத் திறக்கிறது. உரையாடலைத் தொடர்வோம் தோழர்!

    ReplyDelete
  17. நல்ல விஷயம்.. கண்டிப்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்..இதற்கென அரசு நிதி ஒதுக்கலாம்.. அகழ்வாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம்..

    யாராவது இயக்குனர் இருந்தால் ஆவணப்படம் எடுக்க சொல்லி மக்களுக்கு தெரியப்படுத்தலாம்..( அஜீத் நடித்த படம் உண்டே , கடலுக்குள் மூழ்கிய நகரம் பற்றி )


    பகிர்கிறேன் பதிவை..

    ReplyDelete
  18. வாழ்த்துகள் பதிவுக்கு

    ReplyDelete
  19. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    Siraj

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...