Tuesday, March 22, 2011

பள்ளி என்றும் கொள்ளலாம்...

ஒரு வழியாய் அவரது மகளுக்கு அந்தப் பேர் போன பள்ளியில் எல்.கே.ஜி சேர்க்கைக்கான நேர்காணலுக்கு கடிதம் வந்திருந்தது. ஏதோ ஜெயிக்கப் போகும் கட்சியில் வெற்றி வாய்ப்பு நிச்சயமாய் உறுதி செய்யப்பட்ட தொகுதியில் டிக்கட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். 

அவரது பதட்டம் தனித்து, அவரை ஒரு நிலைக்கு கொண்டு வரவே கொஞ்ச நேரம் ஆனது. ஆற அமர அவர் ஒரு வழியாய் நாற்காலியில் அமர்ந்ததும் அவரது கையிலிருந்த அழைப்புக் கடிதத்தை வாங்கிப் பார்த்தேன்.  அப்படியே வெல வெலத்துப் போனேன். 

அடுத்த நாள் நடக்கும் தேர்வில் தங்கள் மகள் தேர்ச்சி  பெற்றால் உடனடியாக  பள்ளிக் கட்டணம் , சீருடை, புத்தகங்கள், நோட்டுகள், டை, வில்லை , ஷூ , சாக்ஸ் , புத்தகப் பை, மற்றும் நன்கொடை என்கிற வகையில் 48000  ரூபாயை உடனே கட்டிவிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சேர்க்கை ரத்து செய்யப் படும் என்றும் சொல்லப் பட்டிருந்தது. இது போக இரண்டாம் பருவத்திற்கு வேறு சில ஆயிரங்களை கொட்டவேண்டும் என்று நண்பர் சொன்னார். 

"ஏம்ப்பா, இவ்வளவு பெரிய தொகைய வட்டிக்கு வாங்கி அழுது இங்க கொண்டு போய் சேர்க்கனுமா?. தம்பிய எல்லாம் நம்ம பள்ளிக் கூடத்துலதான சேர்த்தேன். நல்லாதானே படிக்கிறான்," 

"அடப் போப்பா உனக்கு இருக்கிற மன வலிமையோ, பக்குவமோ நமக்கு இல்லப்பா. மட்டுமல்ல, இந்தப் பள்ளிகூடத்துல சேக்கலன்னா அவ வீம்புக்குன்னு நாண்டுக்கிட்டே செத்தாலும் செத்துடுவா"

இதற்குமேல் பேசிப் பயனில்லை என்று தோன்றவே அதற்குமேல் அதற்குள் நான் போகவில்லை. 

"நீ வந்தாதான் நாளைக்கு வருவாளாமாம். அம்மா வேணாமாம் , அப்பாவும் வேணாமாம் , மாமாதான் வரணுமாம் . இண்டர்வியூக்கு வார புள்ளைங்களையும் ,பெற்றோரையும் கூட்டிட்டுப் போக எல்லா இடத்துக்கும் பள்ளி பேருந்து வருதாமாம். தேர்முட்டிக்கு சரியா எட்டு மணிக்கெல்லாம் வந்துடுப்பா " படபடன்னு சொல்லிட்டு கிளம்பினார்.

அவளுக்கு என்மேல் அவ்வளவு பிரியம் வருவதற்கு வே று ஒன்றும் காரணமில்லை. அவள் கேட்பதை காது கொடுத்துக் கேட்டு பதில் சொல்லும் எனது கோமாளித் தனமான அணுகுமுறைதான்.  

முன்னூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களாய் பள்ளிகள், பாலிடெக்னிக்குகள், கல்லூரிகள், ஆசிரிய பயிற்சி நிறுவனங்கள் , பொறியியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். இருநூறு பேருந்துகளுக்கும் மேல் அவர்களால் இயக்கப் படுவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். 

அடுத்த நாள் அவர்களுக்கும் முன்னமே தேர்முட்டியில் காத்திருந்தேன். வந்ததும் ஓடி வந்து தொத்திக் கொண்டாள். பேருந்திலும் இருக்கையில் அமராமல் என் மடியில் அமர்ந்துகொண்டாள். 

கேள்வி மேல் கேள்வி . இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கும் ஞானக் குழந்தைகளைத்தான் இது மாதிரி பிரமாண்டக் இருட்டுக் குகைகளில் தள்ளப் போகிறோமே என்றிருந்தது. 

பேருந்து வளாகத்துக்குள் நுழைந்ததுதான் தாமதம் , குழந்தை துள்ளிக் குதித்து மடியை விட்டு இறங்கினாள். 

எல்லோரும் இறங்கினோம். அழகான புல்தரை, ஆர்ப்பாட்டமான கட்டடங்கள், நேர்த்தியான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகள் என்று அசத்தலான சூழல். 

துள்ளிக் குதித்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபின் குழந்தை குதூகலித்தாள், " ஐ! எவ்ளோ பெரிய பஸ் ஸ்டாண்டு"


25 comments:

  1. அருமை. வீம்புக்கு நாண்டுகிட்டு செத்தாலும் செத்துடுவா...அப்படித்தான் ஆகிவிட்டது. மழலையர் பள்ளி என்பது மழலையைக் கொல்லும் மெதுவான விஷம் என்று யாருமே உணர்வதில்லை. எளிமையான எதார்த்தமான கதை.

    ReplyDelete
  2. //அவளுக்கு என்மேல் அவ்வளவு பிரியம் வருவதற்கு வே று ஒன்றும் காரணமில்லை. அவள் கேட்பதை காது கொடுத்துக் கேட்டு பதில் சொல்லும் எனது கோமாளித் தனமான அணுகுமுறைதான்.//

    எதிலும் நுட்பமான அரசியல் தெரிகிறது உங்கள் கண்களுக்கு...! எங்கள் பிரியத்தைக் கொள்ளை கொண்டு செல்லப் போதுமானதாய் அது.

    ReplyDelete
  3. யுகமாயினியில் வந்த சுவரோர வண்டை நினைவு படுத்திச் செல்கிறது இதில் வருகிற குழந்தையும் எட்வின்.

    குழந்தைக் கண்கள் உங்களுக்கு.

    எல்லாவற்றையும் இன்று படித்து முடித்து விடுவதாகத் தீர்மானம்.:)

    ReplyDelete
  4. அன்பின் நிலா தோழர்,
    வணக்கம்.
    சத்தியத்துக்கும் உங்களுக்கு நான்தான் தோழர் நிறையக் கடமைப் பட்டிருக்கிறேன்.
    உங்கள் வலையிலிருந்துதான் கொஞ்சம் தோழர்கள் என் வலைப் பக்கம் வந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. மிக்க நன்றி ஹரணி.
    இனி தொடர்ந்து அவ்வப்போது உங்கள் வலையினைப் பார்ப்பேன்.

    ReplyDelete
  6. மிக்க நன்றி தோழர் யசோதா

    ReplyDelete
  7. துள்ளிக் குதித்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபின் குழந்தை குதூகலித்தாள், " ஐ! எவ்ளோ பெரிய பஸ் ஸ்டாண்டு"

    உண்மையிலேயே பகட்டுதான் எதிலும் எடுபடுகிறது

    ReplyDelete
  8. அவசிய பகிர்வு ஆசிரியரே.

    ஒரு தலைமை ஆசிரியராக உங்களை மனதில் வைத்துக்கொண்டே இக்கட்டுரையைப் படித்தேன்.

    //அழகான புல்தரை, ஆர்ப்பாட்டமான கட்டடங்கள், நேர்த்தியான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகள் என்று அசத்தலான சூழல்//

    இந்த வரிகளுடனே இக்கட்டுரை நிறைவுற்றதைப்போல உணர்ந்தேன். அச்சிறுமி வியந்த “எவ்ளோ பெரிய பஸ்ஸ்டாண்ட்!” எனக்கு வியப்பேற்படுத்தவில்லை.


    1).நம் அரசாங்க கல்விநிலையங்கள் இதுபோல் மாற்றப்பட்டால் அரசாங்க பள்ளியிலேயே மானவர்கள் வந்து குவியத்தொடங்குவார்கள்.

    2).தனியார் பள்ளிகளுக்கு ‘பணமழை’ கொட்டுகிறது என்பதை (சும்மா) வாதத்துக்கு எடுத்துக்கொண்டாலும் கூட, “டாஸ்மாக்” வருமானத்தை தேர்தல் இலவசங்களுக்கு பயன்படுத்தும் கோடிகளை அரசாங்க பள்ளிக்கூடங்களை மேம்படுத்த செலவளித்தால் உங்களின் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தனியார் பள்ளிக்கூடம் போல் மாற்றிவிட முடியும் தானே?

    ReplyDelete
  9. ///Christopher said...
    துள்ளிக் குதித்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபின் குழந்தை குதூகலித்தாள், " ஐ! எவ்ளோ பெரிய பஸ் ஸ்டாண்டு"

    உண்மையிலேயே பகட்டுதான் எதிலும் எடுபடுகிறது ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  10. ///சத்ரியன் said...
    அவசிய பகிர்வு ஆசிரியரே.

    ஒரு தலைமை ஆசிரியராக உங்களை மனதில் வைத்துக்கொண்டே இக்கட்டுரையைப் படித்தேன்.

    //அழகான புல்தரை, ஆர்ப்பாட்டமான கட்டடங்கள், நேர்த்தியான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகள் என்று அசத்தலான சூழல்//

    இந்த வரிகளுடனே இக்கட்டுரை நிறைவுற்றதைப்போல உணர்ந்தேன். அச்சிறுமி வியந்த “எவ்ளோ பெரிய பஸ்ஸ்டாண்ட்!” எனக்கு வியப்பேற்படுத்தவில்லை.


    1).நம் அரசாங்க கல்விநிலையங்கள் இதுபோல் மாற்றப்பட்டால் அரசாங்க பள்ளியிலேயே மானவர்கள் வந்து குவியத்தொடங்குவார்கள்.

    2).தனியார் பள்ளிகளுக்கு ‘பணமழை’ கொட்டுகிறது என்பதை (சும்மா) வாதத்துக்கு எடுத்துக்கொண்டாலும் கூட, “டாஸ்மாக்” வருமானத்தை தேர்தல் இலவசங்களுக்கு பயன்படுத்தும் கோடிகளை அரசாங்க பள்ளிக்கூடங்களை மேம்படுத்த செலவளித்தால் உங்களின் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தனியார் பள்ளிக்கூடம் போல் மாற்றிவிட முடியும் தானே? ///

    பெரும்பான்மை அரசு பள்ளிகளில் வசதி கூடியுள்ளது தோழர்.

    நீங்கள் சொல்வதோடு மக்கள் மன நிலையும் மாற வேண்டும்

    ReplyDelete
  11. மனைவி என்று சும்மாவா பேர் வைத்தார்கள் முன்னோர்கள். மனைவி சரியான முடிவு எடுக்கவில்லை எனில் மனையில் இருக்கும் அனைவரும் பாதிக்கப் படுவார்கள் அல்லவா? தாய் மொழியில் படிக்காத எந்த குழந்தையும் வீரியமுள்ளவர்களாக வளருவதில்லை. உச்ச கட்ட மன உளர்ச்சிக்கு ஆளாகும் குழந்தைகள் இதுபோன்ற பள்ளிகளில் படித்தவர்கள் தான். தன் குடும்பத்தின் எதிர்காலத்தை கூட கருத்தில் கொள்ளாமல் வீம்புக்கு படித்தால் அந்த பள்ளியில் தான் படிக்க வேண்டும் என சொல்லும் பெண்களுக்கு சுதந்திரம் வேறு வேண்டுமா? வீட்டையும் கெடுத்து நாட்டையும் கெடுக்கவா?

    இவர்கள் அடுப்படி அடிமைகளாக இருப்பதே மேல் என இதுபோன்ற தருணங்களில் என்னத் தோன்றுகின்றது.

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  13. அழுக்கான சூழ்நிலை அமிர்தம் வேண்டாம்! அழகான சூழலில் கிடைக்கும் விஷம் நன்று என்பதைப் போல் உள்ளது சத்ரியனின் பின்னூட்டம்.

    ReplyDelete
  14. நல்ல பதிவு தோழர்... ஆனால் இதுகுறித்து உங்கள் நடையில் இன்னும் சற்று விரிவாகவே எழுதியிருக்கலாம்..
    குழந்தைகள் இப்பொழுது குழந்தைகளாகவே பார்க்கப்படுவதில்லையோ என்ற எண்ணம்தான் இப்பொழுதெல்லாம் மேலோங்குகிறது.. இன்றைய சமூகத்தின் வெறுப்பூட்டும் கல்விச்சூழலுக்குள் பாவம் குழந்தைகள் சிக்கித் தவித்துப் போய்விடுகின்றன..
    அழகிய வண்ணங்கள் கொண்ட பட்டாம்ப்பூச்சியின் சிறகுகளை லேசாய் கசக்கி அப்படியே அமர்த்தி விடுகிறோம்.

    ReplyDelete
  15. மழலை மொழி கொண்டு, நடு மண்டையில் குட்டு வைக்கும் தொழில்(மொழி)நுட்பம், உமக்கே உரித்தான ஸ்டைல் போல..!!! பல தருணங்களில், அற்பப் பதரே, அச்சிறு குழந்தை யோசிப்பது கூட உனக்குத் தோன்றாமல் போனது ஏன்..? என்ற அசரீரி கேட்காமலில்லை..! உமது “10 கிலோ ஞானத்தில்”, 0.001கிலோ கூட எங்களுக்கு இல்லாமற்தான் போய்விட்டது..!

    “அந்த கேள்விக்கு வயது 98”-ல் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தீங்க.. “ஏறத்தாழ எல்லோரும் ஆங்கிலக் கல்விக்குப் பிள்ளைகளை மடைமாற்றம் செய்த பின்னும் ஏதோ நாம் மட்டுமே நம்பிள்ளைகளை மட்டுமே வீணடித்துவிட்டோமோ…..” என்று. பலருக்கும் இந்த வீணடித்துவிடுவோமோ என்ற (தேவையில்லாத என்று சொல்லிவிட முடியாது) தேவைக்கு அதிகமான பயம்தான் என்று வைத்துக்கொள்ளலாம்(நானும் சேர்த்தி)..! உங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட துணிவானத் தெளிவு நிலைக்கு, நாங்களெல்லாம் தடவித் தடவித்தான் வந்து சேருவோம் போல..! சாண் ஏறினால் முழம் சறுக்குதே..!!!

    ReplyDelete
  16. தோழமையே... நல்ல பதிவு. இப்போதெல்லாம் பெரும்பாலான பெற்றோர்கள் கல்வி கற்க குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை... எனது குழந்தையை இந்தப்பாடசாலையில் சேர்த்திருக்கிறேன் என்று சொல்லி பெருமையடிப்பதற்காக சேர்த்துவிடுகின்றனர். ஆனால் குழந்தை அன்றிலிருந்தே ஆயுள் தண்டனைக் கைதியாவது தெரியாமல்.......

    ReplyDelete
  17. அருமையான பதிவு, உஙகழிடம் பிடித்ததே இந்த எழிமையான தமிழில் இனிமையான கட்டுரைகள்.
    நன்றி.

    ReplyDelete
  18. முத்து பாலகன்May 27, 2012 at 9:56 PM

    தின்னைப் பள்ளியின்
    தொன்மைக்குள்
    தொலைந்து போனதாக
    பிள்ளைச் சிறைகள்
    அலங்காரமாக…

    ReplyDelete
  19. நமது மக்களின் உள்ளத்தில் தற்போது இயல்பாக உள்ள சாதியம் சமூகம் குறிதத சிந்தனை போலவே கல்வியை குறித்த சிந்தனையும் உள்ளது. தற்கால அரசியல் பொருளாதார நிலைமையில் வாழ்விற்கான உத்தரவாதம் இல்லாத நிலையில் குறிப்பிட்ட பள்ளியில் பயின்றால் நமது குழந்தைக்கான கல்விக்கான உறுதி இருப்பதாக நம்ப வைக்கப்படுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. அது மிகவும் கவனத்தோடு கட்டமைக்கப்பட்ட பிம்பம். சிரமம்தான் எனினும் உடைத்தே ஆக வேண்டும். மிக்க நன்றி தோழர்.

      Delete
  20. கல்வியை குறித்த நல்ல சிந்தனையை மக்களிடத்தில் உருவாக்காதது யாருடைய தவறு

    ReplyDelete
    Replies
    1. நாம்தான் தோழர் செய்ய வேண்டும்

      Delete
  21. //இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கும் ஞானக் குழந்தைகளைத்தான் இது மாதிரி பிரமாண்டக் இருட்டுக் குகைகளில் தள்ளப் போகிறோமே என்றிருந்தது. //

    ReplyDelete
  22. //இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கும் ஞானக் குழந்தைகளைத்தான் இது மாதிரி பிரமாண்டக் இருட்டுக் குகைகளில் தள்ளப் போகிறோமே என்றிருந்தது. //

    என்ன செய்வது...

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது செய்வோம் தோழர். முடியும் நம்மால்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...