Wednesday, March 2, 2011

செய்யாமையானும்...

கட்டாயம் செய்தே இருக்க வேண்டிய ஒரு காரியம் அது. செய்யத் தவறி விட்டேன்.  அதற்காக வெட்கப் படுகிறேன். இப்படிப் பகிரங்கமாகப் பகிர்வதில் எந்தச் சங்கடமும் எனக்கில்லை.  வெட்கப் பட வேண்டிய விஷயத்திற்கு வெட்கப் படாமல் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பதற்கு நான் ஒன்றும் பாரதப் பிரதமர் மன்மோஹன்சிங் இல்லை.

உலகமே இதுவரை கண்டிராத , 'யாராலும் நினைத்தேப் பார்க்க முடியாத ஒரு பெரிய ஊழல் உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதே  என்று கேட்டால், "அட அதக் கேக்குறீங்களா?, அது தப்பு,அப்படியெல்லாம் செய்யக் கூடாது, என்று எவ்வளவோசொல்லிப் பார்த்தேன், தலையால தண்ணியே குடிச்சுப் பார்த்தேன். அந்த அமைச்சர் எதையும் கண்டுக்காம தப்பு செஞ்சா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?," என்கிற மாதிரி எதையாவது சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கோ அல்லது, "நீங்கதானே பிரதமர், நீங்கதானே அவரை அமைச்சரா நியமித்தது. அப்ப நீங்கதானே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,"  என்ற கேட்டால்," அட நீங்க ஒன்னு , அப்படியெல்லாம் எதையும் என்னால செய்ய முடியாது. வகுப்பாசிரியர் வரும் வரைக்கும் வகுப்பை சத்தம் போடாமல் பார்த்துக் கொள்ளும் வகுப்புத் தலைவன் வேலைதான் என்னுடையது. சத்தம  போடாதீங்கன்னு சொல்லலாம். மீறிச் சத்தம் போட்டால் 'ராமசாமி', 'கோவிந்தசாமி'  என்று பெயர் எழுதி வைக்கலாம். அதையும் கடந்து யாராச்சும் ரொம்பவும் குசும்பு செய்தா 'ராசா அ.வி' என்று எழுதிக் கொடுக்கலாம் என்கிற அளவுக்கும் சற்று குறைச்சலான அளவுக்கே அதிகாரங்களைக் கொண்ட , கைகள் கட்டப் பட்ட கூட்டணிப் பிரதமர் நான்'  என்கிற மாதிரி நழுவிப் போவதற்கோ நான் ஒன்றும் அவரளவுக்கு உசரமானவ்னில்லை. அப்படி நழுவுவதை ஈனத்தனமாக நினைக்கும், உப்பைக்  கொஞ்சம் அதிகமாய் உணவில் சேர்த்து சாப்பிடும் சாமானியன் நான்.

 "பத்து கிலோ ஞானம் " என்ற எனது இரண்டாவது நூலின் அறிமுகக் கூட்டத்தினை பெரம்பலூரில் தம்பி அம்மணி ஏற்பாடு செய்திருந்திருந்தார்.
பேராசிரியர்.இரா.சுப்பிரமணி அவர்களும் எழுத்தாளர் பாமரனும் மிகுந்த
பெருந்தன்மையோடு கலந்து கொண்டார்கள்.

 கூட்டத்திற்கு அடுத்த நாள் விஷ்ணுபுரம் சரவணன் பேசினார்.

"அண்ணா நேற்று இரவு பாமரன் பேசினார் "

"ஆஹா!, என்ன சொன்னார் சரவணன். நல்லபடியா ஊர் போய் சேர்ந்தாராமா?"

"வந்துட்டுப் போனதுல ரொம்ப மகிழ்ச்சி அவருக்கு.   "சண்முகம் எம் .பி.ஏ "
என்ற கட்டுரை குறித்து ரொம்பவே பேசினார். பத்தொன்பது கட்டுரைகளுமே
அருமையான பதிவுகள் என்று சொன்னார். ஒரே ஒரு வருத்தம்தான் அவருக்கு ...," என்று கொஞ்சம் தயங்கி நிறுத்தினார்.

" சும்மா சொல்லுங்க சரவணன். கவனித்துக் கொண்டதில் ஏதேனும்.." என்று
முடிக்கும் முன்னே என்னை இடை மறித்தார்.

"அசவுகரியங்களைப் பற்றியெல்லாம் அவர் எப்பவுமே பொருட்படுத்த
மாட்டாரேண்ணா. அதுமட்டும் இல்லாம அம்மணியின் உபசரிப்பிலும், அன்பிலும் அவர் ரொம்பவே நெகிழ்ந்து போயிருக்கார்."

"அப்புறம்?"

"இல்லண்ணே , ரெண்டு புத்தகங்களிலுமே "ஈழம்" பற்றி எதுவுமே இல்லாதது
அவரைக் கொஞ்சம் உறுத்தியிருக்கு. 'உசிரைப் பிசைகிற விஷயங்களை மட்டுமே எழுதுவேன் என்று எட்வின் சொல்றார். அப்படின்னா ஒரு லட்சம் தமிழர்கள் அழிக்கப் பட்ட கொடூரமான சோகம் நிச்சயம் அவரை உலுக்கி எடுத்திருக்குமே. அதை அவர் எழுதியிருக்க வேண்டாமா?. இதை  உரிமையோடு கேட்டதா எட்வின்ட்ட சொல்லுங்க' ன்னு சொன்னாருங்கண்ணே" என்று அவர் சொல்ல சொல்ல வெட்கத்தில் அப்படியே கூனிக் குறுகிப் போனேன்.       .

ஆமாம் நான் ஏன் எழுதவில்லை?

பாமரனோடோ, மற்றவர்களோடோ ஈழம் குறித்து ஏராளமான கருத்து முரண்பாடுகள் உண்டுதான்.ஆனாலும் எனது முரண்பாடுகள்கூட தேர்தலைப் புறக்கனித்ததன் மூலம் ராஜபக்சே அதிகாரத்திற்கு வர வாய்ப்பளித்தது, செல்லுபடியாகாத, இரண்டு பைசா நாணயத்தின் மதிப்புக்குக்கூட நம்பிக்கைக்குத் தகுதியில்லாத தமிழகத்து தலைவர்கள் சிலரை நம்பி அவர்களது ஆலோசனைகளை கேட்டது போன்ற அவர்களது அரசியல் நிலைபாடுகள் மீதுதானே தவிர அவர்களது தியாகத்தின் மீதோ, வீரத்தின் மீதோ அளப்பரிய மரியாதை எப்போதும் உண்டு.

இன்னும் சொல்லப் போனால் விமான நிலையத்தை வெற்றிகரமாக தாக்கி முடித்து, கொரில்லா போர்த் தொழில் நுட்பம் வானிலும் சாத்தியம் என புலிகள்
நிறுவியபோது இனிப்பு சாப்பிட்டுக்  கொண்டாடி இருக்கிறேன்.  'இதனை
ஜீரணிக்க இயலாத சக்திகள் எல்லாம் தானாகவே ஒன்று சேரும் . இதையும்
சேர்த்தே புலிகள் எதிர்கொள்ள வேண்டும். ஈழப் பிரிவினையை ஜீரணிக்க இயலாத அந்நிய சக்திகளுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அவர்களுக்கு ஒரு தெளிவும் உண்டு.

ஈழத்தின் உதயம் இலங்கையை கபளீகரம் செய்யும் அவர்களது வெறிகொண்ட பசியில் மண் அள்ளிப் போடும் என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தே இருந்தார்கள். ஈழம் உதயமானால் இலங்கையையும் அந்நிய சக்திகளிடமிருந்து அது காப்பாற்றும் . அது தங்களது இலங்கைக் கனவை தகர்த்துப் போடும் என்ற அவர்களது தெளிவுதான் ஈழத்திற்கு எதிராக அவர்களைத் தள்ளியது.  இந்த வகையில் ஒருக்கால் ஈழம் அமையாமல் போகுமானால் அது இலங்கையின் அழிவிற்கான தொடக்கப் படியாகத்தான் அமையும்' என்றெல்லாம் பின்னிரவு முழுக்க விஷ்ணுபுரம் சரவணனோடும் வெற்றியோடும் , சுகனோடும் மற்ற நண்பர்களோடும் அக்கறையோடு பேசிய நான் ஏன் அதைப் பற்றி எழுதவில்லை?.

வைகறை அய்யா ஏற்பாட்டில் ஓவியர்.வீர சந்தானம் , மூத்தத் தோழர். ஏ.எம்.
கோபு,  திராவிட எழுத்தாளர்களில் நான் பெரிதும் மதிக்கிற க.திருநாவுக்கரசு
அய்யா ஆகியோரோடு சேர்ந்து பேசுகிற ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது .

லண்டனில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் பேச அழைத்திருந்ததின் பேரில் லண்டன் சென்றிருந்த ராஜபக்க்ஷேவை ' நீங்கள் பேச வேண்டாம். இலங்கைக்கு உடனே திரும்புங்கள்.' என இங்கிலாந்து திருப்பி அனுப்பியிருந்த நேரம் அது.

மைனசுக்கும் வெகுக் கீழே இருந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது புலம்
பெயர்ந்த தமிழர்களின் வீரஞ்செறிந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக உயிர்
பிழைத்தால் போதும் என்று ராஜபக்சே இலங்கைக்குத் திரும்பியிருந்த நேரம்.

இந்த சம்பவத்தை என்றைக்கும்விட கொஞ்சம் தூக்கலான எள்ளலோடு ஒரு கால் மணி நேரம் என் பேச்சில் கொண்டாடியிருக்கிறேன்.  கூட்டம் முடிந்து மகிழுந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது வீரசந்தானம் அதுபற்றியே பேசிக் கொண்டு வந்தார்.

விடுதலைப் புலிகள் எந்தக் கட்டத்திலும் அப்பாவி சிங்கள மக்கள் மீது
ஆயுதங்களைத் திருப்பியதில்லை என்ற அவர்களது போர் அறத்தை , நேர்மையை அவர்களது கல்வி குறித்த பார்வையை சிலாகித்து பேசியிருக்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் போராடி நீங்கள் சாதித்ததில் எதை முதன்மையாய்க்
கருதுகிறீர்கள் என ஒருமுறை கேட்கப் பட்ட போது 'என் மக்களின் மனதிலிருந்து மரணம் குறித்த பயத்தை சுத்தமாய் அப்புறப் படுத்தி இருக்கிறேன்.' என்று  பிரபாகரன் சொல்லியிருந்ததாய் எங்கோ படித்திருக்கிறேன்.

மரணம் குறித்து மக்களது பயத்தை போக்குவதே ஆன்மீகத்தின் அதி முக்கிய
பணியாகும். பெரும்பான்மை ஆன்மீகவாதிகள் தோற்றுப்போன இந்த விசயத்தில் பிரபாகரன் எவ்வளவு லாவகமாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை மேடைகளில் நண்பர்களிடத்தில் மணிக் கணக்காய் பேசிக் கொண்டுதான் இருந்திருக்கிறேன்.

ஒரு வாரகால இடை வெளியில் ஒரு லட்சம் தமிழர்களுக்கும் அதிகமானவர்கள்  கொல்லப் பட்டபோது எல்லோரோடு நானும்தான் கொதித்தேன், அழுது தீர்த்தேன்.

சரி, இவ்வளவும் செய்த , பேசிய,  நான் அவற்றை எழுத்தில் ஏன் பதிவு
செய்யவில்லை?.  இதில் உள் நோக்கம் எதுவும் இல்லை, அப்படி இப்படி என
சொல்லி சமாளிக்க விருப்பம் இல்லை. அது நியாயமும் இல்லை.

"செயத் தக்க செய்யாமையானும் கெடும் " என்கிறானே . கட்டாயம் பதிந்திருக்க
வேண்டும். வெளியே சொல்லத் தயங்கியிருந்தாலும் இது குறித்த வருத்தம் கோவம் எல்லாம் என் நண்பர்களுக்கு இருந்திருக்கவே செய்யும். அது நியாயம் என்றும் படுகிறது.

இனி இது குறித்த எனது கருத்துகள்களை பேசுவதோடு நில்லாமல் எழுதவும் செய்வேன்.

செய்த பிழைக்காக வெட்கப் படுகிறேன். செய்த தவறுக்காக வெட்கப் படுவதில்
பெருமைப் படவும் செய்கிறேன், என்னை நேசிக்கிற நண்பர்களும் இதற்காகப்
பெருமைப் படலாம்.

2 comments:

  1. உண்மை எட்வின் அவர்களே,
    சில செயல்களைச் செய்யாமல் இருப்பதானாலே கெடும். எப்படி ஈழத்தைப் பற்றி இத்துனை நாட்கள் எதுவும் எழுதாமல் இருந்தீர்கள் என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது. கேட்டே விட்டார்கள் கடைசியாக நான் கேட்க நினைத்த அந்தக் கேள்வியை. இனியேனும் அதுகுறித்த பார்வையையும் காணலாம் எட்வின் அவர்களின் கைவண்ணத்தில்.

    புலியைச் சுமந்த வயிறைப் பற்றியும் ஒரு கவிதை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    நல்ல கட்டுரையை நீண்ட நாட்களுக்குப் பின் படித்த அமைதி..

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஆதிரா, யிசிச்சுப் பார்த்தா தவறாத்தான் தோணுது . சரி பண்ணிக்கிறேன்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...