Monday, January 15, 2018

காதுகொடுக்கும் கல்வித்துறை...

“கல்வி என்பது ஒரு வாளியை நிரப்புவது அல்ல, நெருப்பைப் பற்ற வைப்பது” என்று ஒருமுறை வில்லியம் பட்லர் ஏட்ஸ் கூறினார். அதை தமிழ்நாடு பள்ளிக் கலித்துறை மிகச் சரியாக உள்வாங்கி நடைமுறைப்படுத்தத் துவங்கி இருப்பதாகவே படுகிறது. அதன் பள்ளிக் குழந்தைகளுக்கான பாடநூல் தயாரிப்பு பணிகள் இதை உறுதி செய்கின்றன.
பள்ளிக் குழந்தைகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வரையறுப்பதும், வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கேற்ப பாடநூல்களைத் தயாரிப்பதும் வழமையானதுதான். அந்த வகையில் தற்போது நடைபெற்றுவரும் பாடநூல் தயாரிப்பு பணியும் புதுமையானதெல்லாம் இல்லை. ஆனால் அதன் பின்னால் இருக்கக்கூடிய வருங்கால சமுதாயம் குறித்த கனவு கலந்த திட்டமிடலும் நேர்மையும் நேர்த்தியுமான செயல்பாடுகளும் நிச்சயமாய் புதிது.
வழக்கம்போல் இல்லாமல் இந்தமுறை ஒரு பெருந்திரள் கருத்துக்கேட்புக் கூட்டம் இதற்காக நடத்தப் பட்டது. இப்படியும் அப்படியுமாக ஏராளமான விவாதங்களாய்கூட நிகழ்ந்தன. நடந்த விவாதங்களின் தரம், சார்பு போன்றவற்றின்மீது நமக்கு பார்வை உண்டு. ஆனால் நடந்த விவாதங்களையும் கூறப்பட்ட ஆலோசனைகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும் பள்ளிக் கல்வித்துறையும் கூர்மையாகக் குறிப்பெடுத்துக் கொண்ட மிகவும் புதியதும் ஆரோக்கியமானதும் ஆகும்.
அனைத்துவகையான ஊடகங்களும் இதைக் கொண்டாடின. ஆனால் இந்தக் கூட்டமல்ல இதற்கான தொடக்கம். இதற்கும் முன்னமே கோடையில் அனைத்துத் துறை வல்லுனர்களையும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உயரதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் ஆகியோர் சந்தித்தனர். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு அமர்வுகள் நடந்தன. எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பெற்றோர், பலதுறை வல்லுனர்கள் என்று ஒவ்வொரு அமர்விற்கும் ஆறுபேர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர். அனைத்துக் கூட்டங்களுக்கும் மேற்சொன்ன அதிகாரிகள் அனைவரும் வந்திருந்து ஆலோசனைகளை கவனத்தோடு கேட்டறிந்தனர். நான் கலலந்து கொண்ட அமர்வில் என்னோடு பிரபஞ்சன், பேராசிரியர் கல்யாணி, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார், எழுத்தாளார் இமயம் ஆகியோர் கலந்துகொண்டனர். புத்தகம் தயாரிப்பதற்கான பணியில் இத்தனை மெனக்கெடல்கள் இதற்கு முன்னர் நடந்திருக்குமா என்பது அய்யமே.
இப்படியாக துவங்கியிருக்கும் படப்புத்தகத் தயாரிப்புப் பணியை வாழ்த்துகிற அதேவேளை நமக்கான சில கோரிக்கைகளும் இருக்கின்றன.
நமது குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்கள் நம் மண்சார்ந்த கூறுகளோடு (NATIVITY) இருக்க வேண்டும் என்பது நமது முதல் கோரிக்கை. எடுத்துக்காட்டாக திசைவேகம் பற்றி பாடம் வருகிறபோது வழக்கமாக கடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் போல்ட் நூறு மீட்டர் தூரத்தை இத்தனை நிமிடத்தில் கடந்தார் என்று அவரது படத்தோடு பாடத்தை எழுதுவதற்கு பதில் பெரமபலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தகளப் போட்டியில் மாணவி ரம்யா நூறு மீட்டர் தூரத்தை என்று அவளது படத்தோடு வைத்தல் பொறுத்தமாக இருக்கும்.
அடுத்ததாக நமது நமது தொண்மச் சிறப்புகளை மாணவச் சமூகத்திற்கு கொண்டுசேர்க்கும் கருவிகளாக நமது பாடப் புத்தகங்கள் அமைய வேண்டும். வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் நமது தொன்மச் சிறப்புகளை நமது மாணவர்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதன் மூலம் தனது மண்ணின் தொன்மச் சிறப்புகளை அவன் அறிந்துகொள்வதன் மூலம் இந்த மண்ணை காப்பதற்குரிய தேவையை அவன் உணர்வான். மாறாக வறட்டுத்தனமாக முட்டுக்கொடுக்கிற காரியத்தைத் தவிர்க்க வேண்டும்.
ஆழ்கடல் ஆராய்ச்சி மையம் நாகப்பட்டினம், பூம்புகார், காரைக்கால் ஆகியப் பகுதிகளுக்கிடையில் ஆராய்ச்சி செய்ய உத்தரவிட்டது. ஆராய்ச்சியின் துவக்கத்திலேயே அந்தப் பகுதியில் கிடைத்த கற்களின் வயது எப்படிப் பார்த்தாலும் 4000 ஆண்டுகளுக்கு குறையாது என்று நம்பப்பட்டது. உடனே ஆழ்கடல் ஆராய்ச்சி மையம் நிதி இல்லை என்று கூறி ஆய்வினை நிறுத்தச் சொன்னது. அது அந்தப் புள்ளியில் வெளிப்பட்டிருந்தால் இந்தியாவின் தொன்மையான நாகரீகம் தமிழ் நாகரீகம் என்றாயிருக்கும்.
அமெரிக்காவின் ஃபோர்த் சேனல் உதவியோடு கிரஹாம் ஆன் ஹூக் தொடர்ந்த ஆராய்ச்சியின் முடிவு அந்த நாகரீகத்தின் வயது 11000 ஆண்டுகள் என்றது. அது முறையாக பிரகடனப் படுத்தப் பட்டிருப்பின் உலகின் ஆகத் தொன்மையான நாகரீகம் தமிழ் நாகரீகம் என நிறுவப் பட்டிருக்கும். ஆது செய்யப்படாததால் 6500 ஆண்டுகாலமே வயதுடைய மெசபடோமியா நாகரீகம் உலகின் தொன்மையான நாகரீகம் என்று நாமே கூறவேண்டிய நிலை இருக்கிறது.
”கல்” என்றால் தோண்டு என்று பொருள். தோண்டுதல் என்பது தேவையில்லாதவற்றை தோண்டித் தூர எறிவது. அதேபோல மனிதனிடம் இருக்கக்கூடிய தேவையில்லாத அழுக்குகளை தோண்டி எறிந்து அவனை பண்பட்ட மனிதனாக மாற்றுவதால்தான் அது கல்வி. அதைச் செய்து முடிக்கிற கருவிகளாக பாடப்புத்தகங்கள் அமைய வேண்டும்.
குழந்தைகளை பள்ளியிலிருந்து விரட்டுகிற காரியத்தை செய்யாமல் புத்தகங்களை வடிவமைப்பது அவசியம். ரொம்பச் சுறுக்கமாக சொன்னால் நிலாவை காட்டி குழந்தைகளுக்கு அம்மாக்கள் சோறுட்டுகிற மாதிரி பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு புத்தியை உட்டவேண்டும் என்று ரெண்டு கையேந்துகிறோம்.

நன்றி: தி இந்து 10.12.2017

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...