Tuesday, December 29, 2015

6 மாற்றுச் சான்றிதழ் அரசியல்

ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென அந்தப் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்என்ற தலைப்பு செய்தி மற்ற செய்திகளிலிருந்து என் கவனத்தை களவாடிக் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஒன்று, அந்தப் பள்ளி எனக்கு மிக அருகில் இருக்கிற பள்ளி. இரண்டு எனக்கு மிகவும் பரிச்சயமான பள்ளி.

ஆசிரியர் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் செல்லுமாறு கட்டாயப் படுத்தவே ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் எனவேதான் சம்பந்தப் பட்ட அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதாக அந்த செய்தி நகர்ந்தது.

அந்த செய்தியைப் படித்ததும் சராசரிப் பொதுப் புத்தியில் படியும் பிம்பம்தான் எனக்குள்ளும் படிந்தது.

அந்த மாணவன் பத்தாம் வகுப்பிலோ அல்லது பன்னிரெண்டாம் வகுப்பிலோ படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒழுங்காகப் படிக்காமல் அல்லது அடிக்கடி பள்ளிக்கு வராத மாணவனாக இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக என்ன செய்தும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டான் என்பது உறுதியானதும் அவனை மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் செல்லுமாறு அந்த ஆசிரியர் வற்புறுத்தி இருக்க வேண்டும். மனது உடைந்த அந்தக் குழந்தை தற்கொலை செய்திருக்க வேண்டும்.

இன்றைய சூழலில் மேற்காணும் செய்தியை வாசித்ததும் யாருக்குள்ளும் விழுகின்ற அந்தப் பிம்பம் பள்ளிக் கல்வி ஊழியனான எனக்குள் படிந்ததில் ஆச்சரியம் இல்லை. காரணம் இது இயல்பாக இன்று நடக்கக் கூடியது.

தேர்ச்சி பெறுவானா மாட்டானா என்ற இழுபறி நிலையில் உள்ள குழந்தைகளை மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் செல்லுமாறு எந்த ஆசிரியரும் கட்டாயப் படுத்துவதில்லை. அத்தகைய மாணவர்களை மெல்லக் கற்கும் மாணவன் என்று அடையாளப் படுத்தி அவன் மீது தனிக் கவனம் செலுத்த தொடங்குவது வாடிக்கை. தனிக் கவனம் என்பது வேறொன்றுமில்லை. எல்லாவற்றையும் அந்தப் பிள்ளை படித்து அந்தப் பிள்ளை சிரமப் படக் கூடாது என்பதால் ‘BLUE PRINT’ ஐ கையிலெடுப்பார்கள். நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது மதிப்பெண் பெறுமளவிற்கான உறுதி செய்யப் பட்ட பகுதிகளை மட்டும் வடித்தெடுத்து அதில் மட்டுமே அவனுக்குப் பயிற்சி கொடுப்பார்கள். இன்னும் சில ஆசிரியர்கள் அதற்கு முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு வினாத் தாட்களை எடுத்துக் கொண்டு அவற்றில் மீண்டும் மீண்டும் கேட்கப் பட்டுள்ள வினாக்களைத் தேர்வு செய்து அவற்றில் முக்கியமானவற்றை வடிகட்டித் தேர்வு செய்து, அவற்றுள் அந்தக் குழந்தையால் எவை முடியும் என்பதை உணர்ந்து ஏற்கனவே வடிகட்டப் பட்டவற்றை மீண்டும் வடிகட்டி அவற்றை மட்டுமே படிக்குமாறு செய்வார்கள். மார்ச் மாதம் நடக்கும் பொதுத் தேர்வு, ஜூன் மாதம் நடக்கும் உடனடித் தேர்வு, அக்டோபர் மாதத்தில் நடக்கும் தேர்வு ஒரு வருடத்திற்கு மூன்று தேர்வுகள் என்கிற வகையில் ஐந்து ஆண்டுப் பொதுத் தேர்வு வினாத் தாட்களின் எண்ணிக்கை என்பது பதினைந்து ஆகும். இது தேர்ச்சியினை உறுதி செய்கிற எளிதான முறை.

பல நேரங்களில் இதுமாதிரி பயிற்சி கொடுக்கப் பட்டஇழுபறிஎன்று அடையாளப் படுத்தப் பட்டு கவனம் குவிக்கப் பட்டு பயிற்சி கொடுக்கப் பட்ட மாணவர்கள் அறுபதிலிருந்து எழுபது விழுக்காடு மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்று விடுவதும் நிச்சயம் தேர்ச்சி பெறுவான் என்று எதிர்பார்க்கப் பட்ட மாணாவன் ஏதோ சில காரணங்களால் தேர்ச்சி பெற இயலாமல் போவதும்கூட வாடிக்கைதான்.

பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்யும் ஆசிரியர்கள் பெரும்பாலும் அதற்கு முந்தைய தேர்வு வினாத்தாள்களிலிருந்தான் வினாக்களை தேர்வு செய்கிறார்கள் என்கிற பொதுப் புத்தியை போகிற போக்கில் நம்மால் மறுத்துவிடவும் முடியாது. இந்த வகையில் ஐந்து வருட பொதுத் தேர்வு வினாத்தாள்களில் பயிற்சி பெறுவது என்பது பல நேரங்களில் நூறு விழுக்காடு மதிப்பெண்ணைக்கூட கொண்டு வந்து சேர்க்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த வகையில் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் நிச்சயமாக தேர்ச்சி பெறுவார்கள் என்று வகைப் படுத்தப்பட்ட மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெறுவதும் அவ்வப்போது நடக்கிற காரியம்தான்.

இதிலும் சில பள்ளிகளில் ஒன்பதாம் அல்லது பதினோராம் வகுப்பிலிருந்தே இந்தப் பயிற்சியை ஆரம்பித்து விடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்குரிய தைரியம் நமக்கில்லை.
இத்தனைக்குப் பிறகுமொரு குழந்தை தேர்ச்சிப் பெறமாட்டான் என்பது உறுதி செய்யப்படும் நிலையில்தான் இந்த மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது என்கிற அசிங்கமான, அயோக்கியத் தனமான நடைமுறையைக் கையிலெடுக்கின்றனர்.

இப்படி கோரப்பட்டு அல்லது நிர்ப்பந்திக்கப் பட்டு அல்லது மிரட்டப் பட்டு மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் அனைவரையும் பள்ளியை விட்டெல்லாம் அனுப்பிவிடுவதும் இல்லை. அவர்களில் பெரும்பான்மையோர் அதே வகுப்பிலேயே அதே சீறுடையிலேயே தொடர்ந்து படிப்பர். அந்த வகுப்பு மாணவர்களுக்கேக்கூட அந்த விவரெமெல்லாம் தெரியாது. ஆனால் தேர்வினை மட்டும் அந்தப் பள்ளி மாணவன் என்ற அடையாளத்தோடு எழுதாமல் தனித் தேர்வர் என்ற அடையாளத்தோடு தேர்வெழுதுவர்.

அந்தக் குழந்தை தேர்ச்சி பெற்றால் கொண்டாடுவார்கள். ஒருக்கால் தேர்ச்சிபெற இயலாது போனாலும் அது அந்த ஆசிரியரது, பள்ளியினது தேர்ச்சி விழுக்காட்டைப் பாதிக்காது என்கிற வகையில் அந்த ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் ஒருவிதமான நிம்மதிப் பெருமூச்சை விடுவதைப் பார்க்கிறோம்.

பன்னிரெண்டாம் வகுப்பினைப் பொறுத்தவரை பல இடங்களில் விலையில்லா மடிக்கணினி வழங்கப் பட்டதும் இதுமாதிரியான நடைமுறை சாத்தியப் படுவதாகத் தெரிகிறது.

இந்த மாற்றுச் சான்றிதழ் கலாச்சாரத்தின் வயதென்ன? நாங்கள் படிக்கிற காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நடைமுறை இல்லையே? நாங்கள் படிக்கிறபோது தேர்ச்சி பெற மாட்டான் என்று உறுதி செய்யப் பட்ட மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் வழங்கி அனுப்பியதில்லை. போராடிப் பார்ப்பார்கள். முடியாது என்று முடிவானால், மார்ச்சிற்கு மூன்று பாடங்களிலாவது தேர்ச்சி பெறு. மீதி இரண்டை அக்டோபரில் கடக்கலாம் என்கிற வகையில் பயிற்சியினைத் தர ஆரம்பித்து விடுவார்கள்.

எனில் அந்தக் காலத்து ஆசிரியர்களைப் போல் அல்லாமல் அக்கறையற்று இருக்கிறோமா இந்தக் காலத்து ஆசிரியர்கள்? இப்போது எவ்வளவுதான் கசந்தாலும் உண்மை என்கிற வகையில் இதை சொல்லித்தான் ஆகவேண்டும். அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கு மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமே இருந்தது. இந்தக் காலத்து ஆசிரியர்களுக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய தேவையும் இருக்கிறது. இன்னும் விளங்குகிறமாதிரி சொல்வதெனில் அந்தக் காலத்தில் நிறையத் தேர்ச்சி விழுக்காட்டினைத் தரக்கூடிய ஆசிரியர்கள் கௌரவிக்கப் பட்டார்கள். தேர்ச்சி விழுக்காட்டினைத் தர இயலாத ஆசிரியர்கள் தண்டிக்கப் படவோ, அவமானப் படுத்தப் படவோ இல்லை. ‘என்ன செஞ்சாலும் தேறவே மாட்டேன்னு சொல்றவன வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். இருந்தாலும் கொஞ்சம் கூடுதலா கவனிங்க. எல்லாரும் நல்ல ரிசல்ட்ட கொடுக்கறப்ப நாம மட்டும் கொடுக்கலைனா நல்லாவா இருக்கும்என்பதாகத்தான் அதிகாரிகளின் அணுகுமுறை இருக்கும்.

இப்பொழுதெல்லாம் நூறு விழுக்காட்டிற்கு அரைச்சதம் கால்சதம் குறைவான தேர்ச்சி விழுக்காட்டையும் கல்வித் துறை அதிகாரிகளால் ஏற்க முடிவதில்லை. அப்படி குறைவான தேர்ச்சி விழுக்காட்டினை எடுத்துள்ள ஆசிரியர்கள் அனுபவிக்கும் அவமானங்களும் எதிர்கொள்ளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் எத்தகைய எழுத்திற்குள்ளும் அடங்க மறுப்பவை. பணி மாறுதல், மெமோ, 17B, போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எதிர்கொள்கிறார்கள். இவை எல்லாம் கடந்த காலங்களில் குற்றங்களுக்கு கொடுக்கப் பட்ட தண்டனைகள். இப்போது இவை தேர்ச்சி விழுக்காடு குறைந்த ஆசிரியர்களுக்கு வழங்கப் படுகின்றன. எனில் மாணவன் ஏதோ காரணங்களால் தேர்ச்சி பெறாமல் போனால் அது ஆசிரியரின் குற்றமா?

சரி அதையே ஒரு வாதத்திற்காக ஏற்போம். இந்தப் பள்ளியில் குற்றம் இழைத்த ஆசிரியரை வேறொரு பள்ளிக்கு பணி மாறுதல் செய்வது எந்த வகையான தண்டனை? கேட்டால் இந்தப் பள்ளி பாதிக்காதா என்கிறார்கள். சரி இப்போதும் அவர் வேறு ஒரு பள்ளிக்குத்தானே போகிறார். இப்போது அந்தப் பள்ளி பாதிக்காதா?

இதைவிட அதிகாரிகள் ஆசிரியர்களை பேசுகிற பேச்சு இருக்கிறதே. ஒருமையில் அழைக்காத குறைதான். அதுகூட சில இடங்களில் நடக்கிறது என்கிறார்கள். அதுவும் வயதில் மிகவும் இளைய அதிகாரிகள் மிக மூத்த ஆசிரியர்களை இப்படி தரக் குறைவாக பேசுவது என்பது கல்வித்துறை அக்கறையோடு கவலைப் பட வேண்டிய விஷயம்.

ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். தமிழ்ப் பாடத் தேர்ச்சி விழுக்காடு குறித்த பரிசீலனைக் கூட்டத்தை ஒரு முதன்மைக் கல்வி அதிகாரி சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தினார். 276 மாணவர்கள் தேர்வு எழுதியதில் ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை. அதுவும் அந்தக் குழந்தை ஏதோ காரணங்களால் தமிழ் முதல் தாளினை எழுத வில்லை. இந்தக் காரணத்தை அந்த ஆசிரியை சொல்ல முற்பட்டபோது அதைக் காது கொடுத்துக்கூட கேட்காத அந்த அதிகாரிவெக்கமாயில்லஎன்று கேட்டிருக்கிறார். அந்த ஆசிரியை அழுதுகொண்டே திரும்பியிருக்கிறார். தற்கொலை செய்துகொள்ளாமல் அவர்களைக் காப்பாற்ற அவரது தோழிகள் அதிகமாக போராட வேண்டியிருந்தது.

பிறகு சங்கத்து தோழர்கள் அந்த அதிகாரியை அணுகி இது குறித்து கேட்டபோது வருத்தப் பட்டு மன்னிப்பையும் இதற்காகக் கோரினார். ‘இதுக்காக அந்தப் பொண்ணு இந்த அழுகை அழுவுதா. அப்பா மாதிரிதானே நானு. என்ன செய்யறது எட்வின் மேல இருந்து வருகிற அழுத்தம்.’ என்று சொன்னவர் அந்த ஆசிரியையை நேரில் சென்று பார்த்துஅப்பா திட்டுனா அழுவறதா இப்படி. மனசுல வச்சுக்காதஎன்று பேசிவிட்டு வந்தார்.

உண்மையிலுமே அப்பாவை ஒத்த அதிகாரி அவர். அவருக்கு வரும் அழுத்தம் அவர்போன்ற அதிகாரிகளையே இப்படி மாற்றிப் போடுகிறது என்றால் அதிகார போதையோடு இருக்கும் அதிகாரிகளின் நிலை என்ன.

இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சுயநிதிப் பள்ளிகள் தங்கள் கல்லாவை மனதிருத்தியுமே இந்த மாற்றுச் சான்றிதழ் நடைமுறையை கையெடுக்கின்றனர்.

1)   நன்கு படிக்க வேண்டும் என்கிற நிலையிலிருந்து அவசியம் தேர்ச்சி பெற வேண்டும், பேரதிக மதிப்பெண் பெற வேண்டும்என்கிற நிலைக்கு கல்வியின் போக்கு நகர்வது சீர்கேடுகளையே வருங்காலத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதை பள்ளிக் கல்வித்துறை அவசியம் உணர வேண்டும்.
2)   ஒவ்வொரு கல்வியாண்டிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எத்தனைபேர் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதும் அதில் நிர்ப்பந்தம் இருக்கிறதா என்பதையும் கண்டறிவது ஒன்றும் கல்வித்துறைக்கு கடினமான காரியம் அல்ல.
3)   அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப் பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
4)   தேர்ச்சி விழுக்காடு குறித்து ஆசிரியகளௌக்கு பேரதிக அழுத்தம் தருவதை கைவிட்டு சமூக அக்கறையுள்ள, நாட்டுப் பற்றுமிக்க குடிமகன்களை உருவாக்குகிற வேலையை செய்யுமாறு அவர்களைப் பணிக்க வேண்டும்.

வாட்ஸ் அப்பில் வந்த ஒரு செய்தியை பகிர்வது பொறுத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சின் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் இன்று பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் சச்சினைப் பற்றிய பாடம் இருக்கிறது.

சச்சினும் அவரது நெருங்கிய நண்பரான வினோத் காம்ளியும் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆடிய பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிதான் அவரை கிரிக்கெட் உலகின் கடவுளாக்கியது. அந்த ஆட்டத்தில் இருவருமாக சேர்ந்து எழுநூறு ஓட்டங்களுக்கும் மேலாக எடுத்ததாகப் படித்திருக்கிறேன்.

அவர் பொதுத் தேர்வில் தேர்ச்சிபெற மாட்டார் என்றுணர்ந்து அவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கியிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

அப்படி நிகழ்ந்திருப்பின் அவர் அந்தப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்திருக்கக் கூடும். அந்த வாய்ப்பை அவர் இழந்திருக்கும் பட்சத்தில் இந்த தேசமும் கிரிக்கெட் உலகமும் சச்சினை இழந்திருக்க்க் கூடும். எவ்வளவு இழந்திருப்போம்?

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நீச்சல் வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான்.

நான் அடிக்கடி மேற்கோளிடும் ஒன்றை இங்கும் பதிவது அவசியம் என்று படுகிறது.

யுனெஸ்கோவின் ஒரு அறிக்கை ‘the purpose of education is to include the excluded ‘ என்று சொல்கிறது. ‘கல்வி மறுக்கப் பட்ட ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்குள் கொண்டு வருவதே கல்வியின் நோக்கம்’     

பன்னிரெண்டு ஆண்டுகள் ஒரு குழந்தை பள்ளிக்குள் இருப்பதை பள்ளிக் கல்வித்துறை உத்திரவாதப் படுத்த வேண்டும்.              


       

2 comments:

  1. அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கு மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமே இருந்தது. இந்தக் காலத்து ஆசிரியர்களுக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய தேவையும் இருக்கிறது.

    நன்று சொன்னீர்கள்
    இதற்கு முடிபோ அல்லது தீர்வோ கிடையாதா தோழர்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் உண்டு தோழர். கூடுவோம், பேசுவோம், முடிவெடுப்போம்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...