Sunday, March 31, 2013

காலிருக்கு... செருப்பிருக்கு....

“ மரணத்திற்குப்
பிறகு
மறு பிறப்பு
இருந்துடுமோ
என்ற பயத்திலேதான்
நாங்கள்
தற்கொலைக்குக் கூட
முயலுவதில்லை”

என்று எழுதுகிறார் ராதா சிவா என்ற முக நூல் நண்பர். இதைவிட  அழுத்தமாக  தலித் மக்களின் வலியை உணர்த்திவிட முடியும் என்று நான் நம்பவில்லை.

வாழ இயலாமையின் ரணத்தை, அவலத்தை, மனிதனாய் வாழ விடாத கொடூர அயோக்கியத் தனத்தைதான் இது வரை பார்த்திருக்கிறோம். இந்தக் கொடுமைகளை, அவமானம் தரும் வலியை சகிக்க மாட்டாமல் தற்கொலை செய்வதை பார்த்திருக்கிறோம்.

இதுவும் பொறுக்காமாட்டாமல்,

தற்கொலையின் மூலம் உனது ரணத்திற்கும் அவமானத்திற்கும் முடிவு கட்டவாப் பார்க்கிறாய் என மறு பிறப்பின் சிந்தனை தடுக்கிறது. மறுபிறப்பு என்று ஒன்று இருந்து, மீண்டும் தலித்தாகப் பிறக்க நேர்ந்துவிட்டால் மீண்டும் இதே கேவலங்களை செய்யத் தானே இந்தச் சமூகம் தள்ளும் என்கிற பயமேகூட பல தற்கொலைகளைத் தடுக்கிறது.

 வழக்கம் போல ஒரு பின்னிரவு வேலை, நல்ல தூக்கக் கலக்கத்தோடு நண்பர்களின் வலைகளையும் முக நூல் பக்கங்களையும் மேய்ந்து கொண்டிருந்தபோது தம்பி சமரன் வலையில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.


                                                  

இந்தப் படத்தைப் பார்த்ததும் தூக்கமும் கலக்கமும் எங்கோ பறந்தோட கோவம் மட்டுமே உடலெங்கும் அப்பிக் கொண்டது.


பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கைகளில் செருப்புகள். செருப்பு வாங்க இயலாமல் வெறுங்காலோடு பள்ளிகளுக்குப் போகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அப்படியே மனசு சுக்கல் சுக்கலாய் நொறுங்கிப் போகும். பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா மிதியடிகளை வழங்கியமைக்காகவே இவர்கள் செய்த பிழைகளில் ஒரு பத்து பன்னிரண்டை தள்ளுபடி செய்தவன்.

கோவமும் கொந்தளிப்புமாய் அப்படியே உறைந்து போனேன்.


தெரு தாண்டும் வரை 
கைகளில் 
சுமக்க
தீர்ப்பளித்தீர்

கோபம் வரும்
எங்களுக்கும்

எங்களுக்கு 
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்

கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை

கைகளில்தான் 
இருக்குக்கிறது

என்று எழுதினேன். டிசம்பர் மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் படத்தையும்  கவிதையையும் அட்டையில் போட்டோம்.

“இதெல்லாம் கொஞ்சம் அதிகமாத் தெரியல”

நண்பர்கள் கேட்டார்கள்.

 இது உண்மை என்பதை எவ்வளவு சொல்லியும் சிலர் நம்ப மறுத்தார்கள். எங்கே நாம்தான் தவறாய் புரிந்து கொண்டோமோ? என்று நாமே கொஞ்சம் குழம்புமளவிற்கு சிலர் இதை நம்ப மறுத்தார்கள்.

27.01.2013 அன்றைய தீக்கதிர் அதற்கு முந்தின நாள் கரூரில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து கொள்ள மார்க்ஸிஸ்ட் கட்சி நடத்திய ஒரு போராட்டத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தது.

 “காலில் செருப்பணிந்து நடப்போம்”

என்ற பதாகையைப் பார்த்த போது, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்னமும் காலில் செருப்பணிந்து நடப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது.

ஒரு கதை. கந்தர்வன் எழுதியது என்று நினைக்கிறேன். அந்தக் கதையில் ஆண்டை ஒருவன் எல்லா தலித்துகளுக்கும் துண்டு வாங்கிக் கொடுப்பான். அதைப் பார்த்த அவனது நண்பன் இவர்களுக்கு எதற்கு துண்டு என்று கேட்பான். அவன் சொல்வான், “அவனிடம் துண்டு இருந்தால்தானே நம்மைப் பார்த்ததும் இடுப்பிலே கட்டுவான்.” 

தன்னைக் கண்டதும் தோளிலிருந்து துண்டை இடுப்பிலே கட்டுவதை ரசித்துத் தொலைத்திருக்கிறது இந்த இடைச் சாதி சமூகம். இதன் நீட்சியாகத்தான் காலில் அணிந்து வந்த செருப்பை கைகளிலே சுமக்க வைத்தும் அழகு பார்த்திருக்கிறது.

பெரம்பலூருக்குப் பக்கத்தில் பேரளி என்றொரு கிராமம். ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தலித் மாணவனை மரத்திலே கட்டிப் போட்டு சித்திரவதை செய்தனர். அந்த அளவு தண்டனைக்கு அவன் என்ன குற்றம் செய்தான். வகுப்பிற்கு நேரமாகிவிடவே மிதி வண்டியைசற்று வேகமாக மிதிக்கிறான்.

அவனைக் கட்டி வைத்து சித்திர வதை செய்ததற்கு காரணமாக சொன்னார்கள்,

“ என்ன தைரியம் இருந்தால் குடியானத் தெருவுல சைக்கிள ஓட்டிட்டு வருவான்?”


இதை எதிர்த்து சுபாஷன் அலி மற்றும் பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி ஒரு சைக்கிள் பேரணியை நடத்த முயன்றபோது அதற்கு தடை விதிக்கப் பட்டது. அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சொன்னார் “ எல்லாம் அமைதியாய்தானே இருக்கிறது. ஏன் இப்படி வம்படித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்புகிறீர்கள்?”

அவரது விளக்கம் இதுதான்,

பையன் சைக்கிள் ஓட்டினான். அவர்கள் கட்டி வைத்து உதைத்துள்ளார்கள். இத்தோடு பிரச்சினை முடிந்து ஊர் அமைதியாக இருக்கிறது. ஏன் அந்த அமைதியைக் கெடுக்கிறீர்கள்  என்பதுதானே.

இத்தனைக்குப் பிறகும் ஊர் அமைதியாக இருக்கும் என்றால் அது அசிங்கம் அல்லவா? இந்தக் கொடுமைக்குப் பிறகும் அமைதியாக இருக்க அது என்ன மயானமா?


இவை எதனினும் கொடிய வலியை கீழே உள்ள படங்கள் தரும்,








சத்தியமங்களம் பக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எடுக்கப் பட்டப் படம் என்று சொல்கிறார்கள்.

அங்கு தலித் மாணவிகளை மட்டும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்கள். “உங்க அம்மாவும் அப்பாவும் செய்கிற வேலைதானே. கூச்சப் படாம செய்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு 500 கும் குறைவான ஊதியம்தான். எனவே இந்த வேலைக்கு யாரும் வர மறுக்கிறார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்தே தனியாக ஒரு போராட்டம் நடத்த வேண்டும்.

மாதம் முழுக்க பள்ளியில் உள்ள கழிவறைகள் அனைத்தையும் சுத்தம் செய்வதற்கு இவ்வளவு குறைவான ஊதியம் என்பது கொடுமையின் உச்சம். முதலில் அவர்களது நேர்மையான ஊதியத்திற்காக பொது மக்கள் இணைந்து போராட வேண்டும். நமது குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் தூய்மையாய் இருத்தல் அவசியம் என்பதை உணர்ந்தால் இது சாத்தியமே.

இந்தச் சூழலில் தங்கள் பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் பங்கு உண்டுதான். அந்த வகையில் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்வதில் இருவருக்கும் நிச்சயம் கடமை உண்டு.

மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குள்  ஒரு முறை வைத்துக் கொண்டு அதன் வழி இந்த வேலையை செய்தால் பாராட்டலாம். ஆனால் தலித் குழந்தைகள் மட்டுமே கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிலை பள்ளிகளிலேயே இருக்குமானால் அதை எப்படி சகித்துக் கொள்வது.

எனக்கொன்று தோன்றுகிறது,

அக்கறையுள்ள நண்பர்கள் ஒன்றிணைவது. முகநூல் மற்றும் ட்விட்டர் இருக்கும் போது இது ஒன்றும் சாத்தியமில்லாத செயல் அல்ல. த.மு. எ. க.ச, கலை இலக்கிய பெரு மன்றம், இடதுசாரிக் கட்சிகள், மற்றும் வி சி போன்ற அமைப்புகளின் தோழர்கள் ஒருங்கிணைந்து தத்தமது பகுதியில் உள்ள பள்ளிகளைக் கண்காணித்தால் என்ன?

சட்டம் ஒன்றும் அவ்வளவு வலுவாக இல்லை." sc & st prevention of atrocity act" ன் மூலம் பதியப்படும் வழக்குகளில் 3 சதவிகிதத்திற்கும் குறைவான அளவு வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது என்று வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சொல்கிறார்.

எனவே இதை ஒழிக்க வேண்டுமெனில் அக்கறையுள்ள தோழர்கள் இயக்கமாய் ஒன்றிணைய வேண்டும்.

சாத்தியமானதே.

நன்றி : “ காக்கைச் சிறகினிலே ”

Thursday, March 21, 2013

என்ன வாங்கிவிடப் போகிறீர்கள்...



" நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில் 
கவிதை"

என்று ஒரு முறை எழுதினேன். எப்போதாவதுதான் அப்படி ஒரு அபூர்வமான வாய்ப்பு கிடைக்கும். கிடைத்தற்கரிய  அபூர்வமான வாய்ப்பு அன்று கிடைத்தது.

நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் குடித்து வரலாம் என்று கடைக்குப் போனோம். தேநீர் கேட்டால் ஆளுக்கொரு வடையையும் கட்டாயப் படுத்தித் தந்தார் கடைக்காரர்.

ஒரே உப்பு. வாயில் போட்ட துண்டு வடையைத் துப்பி விட்டு எஞ்சிய வடையை தொட்டியில் கிடாசிவிட்டு வடைத் தாளைக் கசக்கி எறியப் போனபோதுதான் அதில் கவிதை மாதிரி ஏதோ கண்ணில் பட்டது.

பார்த்தேன். கவிதையேதான்.

"பூக்களை 
விற்ற காசில்
என்ன
வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களை விட அழகாய்"

என்ற துருக்கிக் கவிதையோடு ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.

ஆஹா! என்னமாய் எழுதியிருக்கிறான். ஆமாம் பூக்களை விற்ற காசில் பூக்களை விட அழகாய் எதை வாங்கி விட முடியும்? அழகான அழகியல்.

ஒன்று துருக்கியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது துருக்கி படைப்புகளின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து வாசித்துவிட வேண்டும். இப்படியாக அந்தக் கவிதையின் அழகில் லயித்து மூழ்கத் தொடங்கிய போது எங்கோ ஒரு மூலையில் உறுத்தவும் தொடங்கியது.

இது மேல் தட்டு மற்றும் நடுத் தட்டு வர்க்கச் சிந்தனையல்லவா? நமக்குள்ளும் இது வந்துவிட்டதா? நாம் வரட்டுத்தனமான அழகியலுக்கு அப்பாற்பட்டவன் என்பதுதானே நமது அடையாளம். அது பொய்யா? என்று ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.

சாலை ஓரத்தில் வெய்யில் என்றால் காய்ந்து கொண்டும், மழை என்றால் நனைந்துகொண்டும் பூ விற்கும் பெண்ணிற்கு கவிழ்த்துப் போட்ட கூடையில் சுற்றப் பட்டுள்ள பூ முழுக்க விற்றால்தான் கந்து வட்டிக் காரனுக்கு அழுதது போக வீட்டில் உள்ள நான்கு வயிருகளுக்கும் அரை வயிறாவது நிறையும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வழக்கமாய் பேருந்துகள் நிற்குமிடங்களிலும், ரயில்வே கேட்டுகளிலும் சின்னஞ்சிறிய பையன்களும், பெண் குழந்தைகளும் கைகளிலே சின்ன சின்னதாய் மல்லிககை மற்றும் கனகாம்பரப் பூப் பந்துகளை வைத்துக் கொண்டு பூ விற்கும் காட்சிகளை பயணச்ங்களின் போது நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

எவ்வளவு கடினமான வேலை தெரியுமா இது? தேசிய நெடுஞ்சாலைகளை உயிரை வெறுத்துக் கடப்பதும், பேருந்து நின்று பயணிகளை அவசரம் அவசரமாய் ஏற்றி, இறக்கி விட்டு மீண்டும் கிளம்பும் முன் கிடைக்கும் அந்த சின்ன கால இடைவெளிக்குள் கஸ்டமர்களை பிடிக்க வேண்டும், பூவைக் கொடுத்து, காசு வாங்கி மீதியைத் தரவேண்டும். 

சில நேரங்களில் பூவைக் கொடுத்துவிட்டு அந்தப்  பிள்ளை, காசுக்காக காத்து நிற்கும் அவஸ்த்தை இருக்கிறது பாருங்கள், அதைச் சொல்லி மாளாது.பல நேரங்களில் காசைப் பெருவதற்குள் பேருந்து நகரத் தொடங்கி விடும்.காசினை வாங்குவதற்காக அந்த சிறுவர்கள் பேருந்தோடே கூட ஓடி வருவதையும் பார்க்க முடியும்.

பூவை வாங்கியவர்கள் காசை எடுத்து வெளியே எறிவதையும் நம்மால் பார்க்க முடியும். அதைபொறுக்க அந்த சிறுவர்கள் படுகிற அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா உசிரே போய்விடும். சரியான சில்லறை எடுக்க இயலாத சிலர் பூக்களை எறிந்துவிடுவதும் உண்டு. கீழே விழுந்த பூவை மீண்டும் விற்கவும் முடியாது.

சிலரோ இரண்டையும் செய்யாமல் போய் விடுவதும் உண்டு.

இந்தக் குழந்தைகளின் அவலத்தை, துயரத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

இந்தக் குழந்தைகளிடமும், பூக்காரப் பெண்களிடமும் போய்

"பூகளை விற்ற காசில் 
என்ன வாங்கிவிடப் போகிறீர்கள் 
பூக்களை விட அழகாய்?

என்று கேட்டால் நம்மை கொன்று போட மாட்டார்களா?

அவர்களைப் பொறுத்தவரை பூ என்பது ஒரு வணிகப் பொருள் என்கிற எல்லை தாண்டி அவர்களை இந்தச் சமூகம் எங்கே யோசிக்க அனுமதித்திருக்கிறது? பூக்களின் மலர்ச்சியையோ அழகையோ ரசித்து அனுபவிக்கிற அவகாசத்தை அவர்களது வயிறுகள் அவர்களுக்கு வழங்கியதே இல்லை.

எனில் இந்தக் கவிதை அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனதா? இதை ரசிக்க முடிகிறதே என்னால். என்றால் நான் உழைக்கும் திரளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறேனா?

இரண்டும் இல்லை. உழைக்கும் மக்களும் பூக்களின் அழகை, இந்தக் கவிதையின் அழகை ரசிக்கிற வாய்ப்பை பெறுகிற மாதிரி அவர்களது வாழ்க்கையை மாற்றித் தருகிற ஒரு போராட்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் போனதுதான் குற்றம்.

அந்தத் தாளில் இருந்த செய்தியை வாசித்தேன்.

கஸ்தூரி என்கிற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற மாணவி பள்ளிக்குப் போன நேரம் போக ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து பூ விற்கிறாள். வியாபாரம் இல்லாத நேரத்தில் அங்கேயே அமர்ந்து படிக்கிறாள். அங்குள்ள  ஆட்டோ ஓட்டுநர்கள் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பூ விற்ற காசைக் கொண்டுதான் அந்தக் குழந்தை படிக்கிறாள் என்பதாக அந்த செய்தி நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி அபாண்டமாக  பேசும் உத்தம சிகாமணிகளுக்கு இந்தச் செய்தி வாசிக்க கிடைக்குமானால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

" மலை வாழையல்லவோ கல்வி" என்கிறார் பாரதுதாசன். வாழைப் பழங்களிலே  மலை வாழை மிகவும் சுவையானது என்பதால் அப்படிச் சொன்னார். வாழைப் பழங்களிலேயே மலை வாழைப் பழம் மிகவும் அதிக விலையானது. கல்வியும் இன்று எதையும் விடவுமதிக விலையில் விற்பதால் "மலை வாழை அல்லவோ கல்வி" என்பது இன்னொரு விதத்திலும்  மிக அசிங்கமாகப் பொருந்தவே செய்கிறது. 

" சொட்டுக் குழம்புக்கும் 
சோற்றுக்கும்
கையிலொரு துட்டுக்கும்
கண்ணயர்ந்து தூங்குவதற்கும்
கட்டத் துணிக்கும்
நல்ல
பணக்காரணாக்கும் படிப்பு" 

என்றும் படிப்பு என்னத்தையெல்லாம் தரும் என்றும் சொன்ன பாரதி தாசன் மட்டும் படிப்பை வாங்க இந்தப் பிள்ளைகள் படும் பாட்டை பார்க நேர்ந்திருந்தால்  நொந்தே போயிருப்பான்.

பூக்களை விற்று அதைவிட அழகாய் என்ன வாங்கப் போகிறீர்கள் என்கிறான் கவிஞன். பூக்களை விற்றுதான் கல்வியை வாங்குகிறேன் என்கிறாள் குழந்தை கஸ்தூரி.

ஒருமுறை சமயபுரம் டோல்கேட்டில் பூ விற்கும் ஒரு சிறுவனைக் கேட்டேன்,

"இப்படி ரிஸ்க் எடுத்து ஓடி ஓடி பூ விற்க்கிறாயே, எதுக்குப்பா?"

"டியூஷன் பீஸ், எக்ஸாம் பீஸெல்லாம் கட்டனும் சார்."

சாலையில் உயிரையேப் பணயம் வைத்து பூக்களை விற்கும் குழந்தைகளின் வருமானம் எதற்காக செலவிடப் பட்டாலும் அது குறித்து மொத்த சமூகமும் கவலை கொள்ளவே வேண்டும்.

குழந்தைகள் கல்வி கற்பதற்காக இப்படி உயிர் போக உழைக்க வேண்டிய நிலமை கண்டு நாம் சத்தியமாய் வெட்கப் படத்தான் வேண்டாமா?

ஒன்று திரண்டு அரசைக் கேள்வி கேட்க வேண்டாமா?
அதற்கு தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு தாண்டி கொஞ்சம் சொரனையோடு கூடிய அக்கறை வேண்டு
ஆமாம் அது நமக்கு எப்போது வரும்?

Thursday, March 14, 2013

வைத்த பெயர் தெரியாமல்...


என்ன தெரிந்து என்ன

வகுப்பறையில் பசங்க
எனக்கு
வைத்த பெயர் தெரியாமல்

Saturday, March 9, 2013

சேலம் மகளிர் தின விழா






கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் சங்கமும் சேலம் அரசு மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி வந்தேன்.

தோழர் மோகனா மூலம் வந்த வாய்ப்பு.

“ அப்பா மோகனா ஆண்ட்டி”

வெள்ளச்சி நீட்டிய அலைபேசியை வாங்கினேன்.

“ சொல்லுங்க தோழர்”

“ கோவை மண்டல பொது இன்சூரஸ் ஊழியர் சங்கமும் சேலம் அரசு மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்தும் மகளிர் தின விழாவில் பேச இயலுமா?”

“ பேசலாம்”

” சரி, இன்னும் கொஞ்சம் நேரத்துல ஷோபனா பேசுவாங்க இது பத்தி”

“சரி”




மேலே உள்ள தோழர் ஷோபனா அலைபேசினார்கள்.

அருமையான ஏற்பாடு. ஏறத்தாழ அறுநூறுக்கும் அதிகமான குழந்தைகள். இடம் இல்லாமல் தரையிலும் அமர்ந்து கேட்டார்கள். 11.53 ற்கு ஆரம்பித்து 01.08 கு முடித்தேன்.





எத்தனை உற்சாகம், எத்தனை ஆர்வம். மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் பற்றி பேசியபோது ஒன்றிரண்டு குழந்தைகள் அழுவதைப் பார்த்தேன். இந்தக் குழந்தைகளோடு பேச ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தோழர் மோகனாவிற்கு மனதார நன்றியை சொல்லிக் கொண்டேன்.




தோழர்கள் குரு, கருப்பையா, சோபனா ஆகியோருக்கும் இந்த வாய்ப்பிற்காக நன்றி சொல்ல வேண்டும் . அப்படி ஒரு குழந்தைகளின் திரள்.

பொதுவாகவே கல்லூரி குழந்தைகள் கேட்க மாட்டார்கள், பொறுப்பற்றவர்கள் என்பதை நிராகரிக்கிறேன்.

எதைப் பேச வேண்டுமோ அதை, கேட்கிற மாதிரி பேசினால் கேட்கவே செய்வார்கள்.



Wednesday, March 6, 2013

ஆஷர்மில் பழநிச்சாமி


முப்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும். 

தோழர் ராஜாமணி எழுதிய “ ஆஷர்மில் பழநிச்சாமி” என்ற சிறிய நூலினை கையில் திணித்த அண்ணன் நந்தலாலா,.

“ இந்த மாத சோலைக் குயில்களுக்கு இது பற்றி எழுது” 

அப்போது திருச்சி த.மு.எ.ச விலிருந்து சோலைக் குயில்கள் என்றொரு கவிதை இதழை மாதா மாதம் கொண்டு வந்து கொண்டிருந்தோம்.

ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமைகளிலும் திருச்சி பழக்கடை பூங்காவில் ஒரு பதினைந்து இருபது பேர் கூடிவிடுவோம். நான், நந்தலாலா, புதிய கம்பன், பொன்னிதாசன், அண்ணன் முகில், முகவை அழகுடையான் போன்றோர் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாது பங்கேற்போம்.

எல்லோரும் கவிதை வாசிப்போம். வர இயலாதவர்கள் எங்களில் யாருக்கேனும் கவிதைகளை அனுப்பி வைப்பார்கள். அதையும் அங்கே வாசிப்போம். மனுஷ்யப் புத்திரன் கவிதைகளும் அங்கே அந்த காலத்தில் வாசிக்கப் பட்டதுண்டு.

கவிதை வாசிப்பு முடிந்ததும் எல்லோருடைய கவிதைகளையும் அண்ணான் முகில் சேகரிப்பார். பிறகு ஒரு நாள் அவரது வீட்டில் ஆசிரியர் குழு கூட்டம் நடக்கும். வந்துள்ள கவிதைகளில் இருந்து சினிமா பாட்டுப் புத்தகம் அளவில் வரும் சோலைக் குயில்கள் தயாரிப்போம்.

அந்த இதழுக்குத்தான் அண்ணன் விமர்சனம் கேட்டார்.

கல்லூரியில் எங்கோ படித்துக் கொண்டிருந்த நேரம். பழநிச்சாமி ஆஷர் மில்லின் உரிமையாளர் போலும் என்கிற சராசரிப் புரிதலைத் தவிர வேறு எதுவும் ஆஷர்மில் பழநிச்சாமியைப் பற்றிஅந்தப் புள்ளியில் என்னிடமில்லை.

உள்ளே போகப் போகத்தான் விரிந்தது பிரமிப்பு. பழநிச்சாமி அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர். தொழிற்சங்கத்தின் தலைவர்.

உரிமையாளார் பெயரோடு பொருத்திப் பேசப் படாத அந்த ஆலையின் பெயர் ஒரு ஊழியனோடு பொருத்திப் பேசப் படுகிறதென்பது அந்தக் காலத்தில் என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பொதுவாக தொழிற் சங்கத் தலைவர்கள் என்றால் வறட்டுத் தனமாக மோதும் குணம் கொண்டவர்கள் என்று என்னுள் செழித்து வளர்ந்திருந்த பிம்பத்தை அது சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டது.

அதில் வரும் ஒரு சம்பவம் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு நெளிவு சுழிவுடன் எதையும் வென்றெடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அப்போது இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் தடை செய்யப் பட்டிருந்த நேரம். பழநிச்சாமியின் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் விலை வைத்திருந்த நேரம்.

திருப்பூர் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை. மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அந்த நிலையிலும் அவருக்கு ஆசை.

எல்லோரும் அசந்து உறங்கிய முந்தைய இரவில் மாறு வேடத்தில் வந்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே மே தின வாழ்த்து சொன்ன ஒரு தட்டியை கட்டுகிறார்.

அடுத்த நாள் அங்கே ஒரு பெரும் திரள் கூடுகிறது. மாறு வேடத்தில் பழநிச்சாமியும் அங்கே இருக்கிறார். தட்டியை அகற்ற எத்தனித்த காவலர்கள் பின் வாங்குகிறார்கள்.  தட்டியின் கீழ் மூலையில் களி மண்ணால் வெடி போன்று செய்து கருப்புத் துணியால் சுற்றி திரி இணைத்து கட்டியிருந்தார்.

அதற்கு கீழே “தோழர்கள் தொட வேண்டாம். தொடும் துரோகிகள் அழியட்டும்” என்று எழுதியிருந்தார்.

எந்தக் காவலர் நெருங்குவார்.

அப்போது ஒரு ரயில் வருகிறது.

மாறு வேடத்தில் இருந்த பழநி சொல்கிறார்,

“ ரயில் வந்தால் அதிர்ச்சியில் வெடித்துவிடும் வெடி”

“ என்ன செய்யலாம்?”

“ரயிலை நிறுத்துங்கள்”

“எப்படி?”

“இந்தக் கொடிகளைக் காட்டுங்கள்”

தயாராய் வைத்திருந்த சிவப்புக் கொடிகளைத் தருகிறார்.

காவலர்கள் சிவப்புக் கொடிகளோடு ரயிலை நிறுத்த ஓடுகிறார்கள்.

சிரிக்கிறார் பழநிச்சாமி.

எந்தக் காவலர்கள் செங்கொடியை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் கைகளிலேயே  செங்கொடிகள்.

அவரது புன்னகை எவ்வளவு உன்னதமானது.

Saturday, March 2, 2013

காக்கைச் சிறகினிலே மார்ச் 2013



                                                                          இந்த இதழில்...

ச. வீரமணி .................................................“சவார்க்கரும் காந்தி கொலை வழக்கும்”                                                            

ஏகன்.............................................................“ விநோதினி சுட்டெரிக்கும் கேள்விகள்”

ய.மணிகண்டன்.............................“ கு.ப.ரா. பெயரில் அவர் எழுதாத படைப்புகள்”

ஏகலைவன்.............................“ இன அழிப்புக்கு எதிராக என்ன செய்ய வேண்டும்”

பேராசிரியர் சி. பத்மநாதன்.....“ கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பே                         இலங்கையில் செல்வாக்கு பெற்ற மொழி   தமிழ்”

நீல பத்மநாபன்...................           “ க.நா.சு வின் விமர்சனப் பார்வை”

தஞ்சாவூர்க் கவிராயர்.............“எரிக்மில்லர் என்றொரு கதை சொல்லி”

ச.மோகனா...........................”எதிர் உயிரி மருந்துகளும் எதிர் விளைவுகளும்”

இரா. எட்வின்...............................................“பெரம்பலூர் வாசிக்கிறது”

                                                                சிறுகதைகள்
                                                      
                                                                  சாந்தா தத்

                                                          சங்கர நாராயணன்

                                                      சிதம்பரம் ரவிச்சந்திரன்

                                                                   கவிதைகள்


                                                                   இன்குலாப்

                                                         ஈரோடு தமிழன்பன்

                                                                    நீலமணி

                                                                  கோசின்ரா
                 
                                                                   ஹரணி

                                                                    பூரணா

தொடர்பு கொள்ள

வி முத்தையா
288, டாக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி சென்னை 600005
பேச 9841457503
kaakkaicirakinile@gmail.com
                                                                                  

Wednesday, February 27, 2013

பெரம்பலூர் வாசிக்கிறது

பாக்தாத் வசப்பட்டு விட்டதால் ஏகத்துக்கும் மகிழ்ச்சி தைமூருக்கு. குதூகலத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான்.

சுற்றி நிற்பவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உற்சாகமும் துள்ளலுமாய் ஓடி வருகிறான் அவனது தளபதி.

“ இங்கிருக்கிற வழிபாட்டுத் தளங்களையெல்லாம் அழித்து விடலாமா மன்னா?”

பொதுவாகவே ஒரு நாடு வெற்றி கொள்ளப் பட்டபின் அங்கிருக்கக் கூடிய புராதன சின்னங்களையும் வழிபாட்டுத் தளங்களையும் அழித்துவிட்டு செல்வங்களை, அடிமைகளை, அழகு நங்கைகளை, அள்ளிக்கொண்டு போவதுதான் வழக்கம். எனவேதான் அப்படிக் கேட்டான்.

“ அவை என்ன செய்தன உன்னை?. இருக்கட்டும் விடு”

அழிப்பதற்கான அவனது நீண்ட பட்டியல் ஒவ்வொன்றாய் முற்றாய் நிராகரிக்கப் பட்டபின் கேட்டான்,

“ அப்புறம் என்னதான் செய்யட்டும் மன்னா? ”

எதையுமே அழிக்க வேண்டாம் என்றால் பிறகெதற்கு இவ்வளவு சிரமப்பட்டு கைப்பற்ற வேண்டும் என்ற கவலை அவனுக்கு.

“போ, போய் கல்வி நிலையங்கள், நூல் நிலையங்கள், அனைத்தையும் அழித்துப் போடு. கவனத்தில் கொள், பாக்தாத்தில் ஒரு புத்தகம் இருக்கக் கூடாது. கொளுத்திப் போடு”

“ இதில் என்ன லாபம் மன்னா? ” கொஞ்சம் அப்பாவியாய்த்தான் கேட்டான்.

“ முட்டாளே ! நூல்கள் மனிதனுக்கு புத்தியைத் தரும். புத்தி விடுதலைக்காக அவனைப் போராடத் தூண்டும். பாக்தாத் தொடர்ந்து நமது ஆளுகையின் கீழ் இருக்க வேண்டுமென்றால் இவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும். புத்தகங்கள் இதைக் கெடுத்துப் போடும். தொணத் தொணவென்று பேசிக்கொண்டு நிற்காமல் சொன்னதை செய் விரைவாய்”

தொண்ணூற்றி ஒன்பது விழுக்காடு சரியாய்தான் இருக்கும்.

ஆனாலும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கமில்லாத காலத்தில் எங்கோ வாசித்தது என்பதால் பெயர் அல்லது இடம் தவறாகவும் இருக்கலாம். இருந்துவிட்டு போகட்டும். அதனால் ஒன்றும் முழுகி விடாது.விஷயம்தான் முக்கியம்.

ஆக, அடிமைகளாகவே மக்கள் இருக்க வேண்டுமெனில் அவர்களிடமிருந்து புத்தகத்தை அப்புறப் படுத்திவிட வேண்டும்.

புத்தகங்களை வாசிக்காத மனிதன் தன் அடையாளம் இழப்பான். யாருக்கும் தானே விரும்பி அடிமையாவான்.

இதற்காகத்தான் யாழ் நூல் நிலையம் கொளுத்தப் பட்டது. உணர்வுள்ள தமிழ் பேசும் யாவரும் கண்ணீர் விட்டு அந்தத் தருணத்தில்அழுததும் அதனால்தான்.  ஈழத் தமிழினத்தின் அடையாளத்தை, சுயத்தை, வேட்கையை வேரறுக்கும் முயற்சியாகவே யாழ் நூல் நிலையம் கொளுத்தப் பட்டது.

எனில்,

சுதந்திரமாய் சிந்தித்து தமக்கான அடையாளத்தோடும், பகுத்தறிவோடும், எவனுக்கும் பணிய மறுக்கும் சுயமரியாதையோடும்,   மக்கள் இருக்க வேண்டும் என்று ஒரு அரசும் அரசு இயந்திரமும் விரும்பும் என்றால் அது தன் மக்களின் முன் புத்தகங்களைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.

பல ஊர்களில், ஏன், பல மாவட்டத் தலை நகரங்களில் நல்ல புத்தகக் கடைகளே இல்லை என்பதுதான் இன்றைய எதார்த்தம்.

வாசிக்கிற பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் நாம்தான் புத்தகங்களோடு மக்களை நோக்கிப் போக வேண்டும். புத்தகச் சந்தைகளை ஊர் ஊருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சந்தைக்குள் மக்களைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்.

இதுவெல்லாம் சாத்தியமா?

சாத்தியம் என்பதை புன்னகையோடு செய்து காட்டியிருக்கிறார் பெரம்பலூர் மாவட்ட ஆட்ச்சித் தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது.

அவர் பெரம்பலூருக்கு வந்தவுடன் வேறு எதைப் போலவும் வாசிப்புத் தளமும் இங்கு வறண்டு கிடப்பதை உணர்ந்து கொண்டார். ஒரு பெரிய நகரத்தின் பரப்பளவே கொண்ட இந்த மாவட்டத்தை சுற்றி சுற்றி எதை எதையோ செய்தவர் வறண்டு வெடித்துக் கிடக்கும் வாசிப்புத் தளத்தை வளப் படுத்த முடிவெடுத்தார்.

பெரம்பலூர் என்பது கல்வி நிலையங்களின் நகரம். எனவே கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து,

“ஒரு புத்தகத் திருவிழாவை இங்கு நடத்த வேண்டும். பத்து நாட்களுக்கு ஆகும் செலவை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இயலுமா? ”

“செய்துடலாம் சார்”

சென்ற ஆண்டு ஏறக்குறைய 50 கடைகளோடு புத்தகத் திருவிழாவைத் தொடங்கினார்.

ஒவ்வொரு நாள் செலவையும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள் ஏற்றன. தத்தமது மாணவர்களையும் ஊழியர்களையும் அவை தமது வாகனங்களில் கொண்டு வந்து சேர்த்தன. பார்வையாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிடவும் எகிறியது.

கடை எடுத்திருந்தவர்கள் புன்னகையோடு ஊர் கிளம்புமளவிற்கு வணிகம் அமைந்தது.

சென்ற ஆண்டின் அனுபவத்தை நன்கு படித்துக் கொண்ட ஆட்சித் தலைவர்
இந்த ஆண்டு ஒரு பெரும் பாய்ச்சலுக்குத் தயாரானார். அரசு ஊழியகளும் ஆசிரியர்களும் தங்களது குல தெய்வ கோயிலின் கும்பாபிஷேகத்தைப் போலவே பாவித்து சுழன்று சுழன்று உழைத்தார்கள்.

பப்பாசி வழிகாட்டுதலைப் பெற்றார். இந்த ஆண்டு 104 கடைகள். இதில் 64 பதிப்பகங்கள்.

உண்மையை சொல்லிவிட வேண்டும் சென்னை புத்தகக் காட்சியின் பிரமாண்டமே அசைத்துவிட முடியாத என்னை இந்தப் புத்தகத் திருவிழா நிறைய அசைத்துப் போட்டது.

என் மண்ணில் ஒரே இடத்தில் இத்தனைக் கடைகளா? குவியல் குவியலாய் இத்தனை நூல்களா? உணர்ச்சிவசப்பட்டதில் ஓரிரு துளி கசியவே செய்தது.

“ இது கொஞ்சம் அதிகமா தெரியலையா எட்வின்?” என்று கேட்கக் கூடும்.

சத்தியமாய் இல்லை. கை நிறைய புத்தகங்களோடு நடக்கும் எம் மண்ணின் இளைஞர்களையும் யுவதிகளையும் குழந்தைகளையும் பார்க்கும்போது நான் உணர்ச்சி வசப்படுவதை உணர வேண்டுமெனில் எங்கள் மாவட்டத்தின் வாசிப்பு வறட்சி பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இதில் இருக்கும் தன்னடக்கம் தினசரி மாலையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எனக்கு இல்லை. பெரம்பலூர்க் காரன் என்பதில் அதில் எனக்குத் திமிரே உண்டு. நிகழ்ச்சிகளை கண்கள் திறந்து காது கொடுத்து அனுபவித்தார்கள் எம் மக்கள்.

தினசரி மாலை ஆட்சியர் வந்து விடுவார். பதிப்பகத்து உரிமையாளர்களை வசதி எப்படி, எப்படி போகிறது என்பதை விசாரித்து அறிந்தார்.

தரமான, தீவிர இலக்கியங்களை மட்டுமே வெளியிடும் பதிப்பகங்களில் வியாபாரம் கொஞ்சம் மந்தமாகப் படவே ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து அது மாதிரி ஸ்டால்களில் ஆளாளுக்கு நூல்கள் வாங்க வேண்டும் என்றும், இல்லாது போனால் வரும் காலங்களில் இவர்கள் வராமாட்டார்கள் என்றும் சொன்னார்.இவர்கள் வராது போனால் தரமான நூல்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு வாய்க்காமல் போய் விடும் என்று புரிய வைத்தார். அது நல்ல பயனைத் தந்தது.

பிறகு போய் அரங்கில் அமர்ந்தால் முடிகிறவரை அமர்ந்து விருந்தினர்களை கை கொடுத்து அனுப்பிவிட்டுதான் திரும்புவார்.

அப்படித்தான் ஒருநாள் ஸ்டால்களை சுற்றி வரும்போது சந்தியா பதிப்பகத்தினுள்ளே நுழைந்தார். அவர்கள் எனக்கும் சின்னதாய் ஒரு கட்வுட் வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கிறார், என்னைப் பார்க்கிறார், அதைப் பார்க்கிறார்...என்னைப் பார்க்கிறார்,

“நான்தான் சார்”

“ கடை உங்களுதா? எப்படிப் போகுது?”

பதறிக் கொண்டு வந்தார் சந்தியா சௌந்திரராஜன்,

“ சார் அவர் எழுத்தாளர். இந்த ஊர்க்காரர்.”

”எங்க ஊர் எழுத்தாளருக்கு கட் அவுட்டா?” என்பது போல் பார்த்தார். இருபது நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

“நாளை நீங்க அவசியம் பேச வேண்டும்”

உத்தரவோடு விடை பெற்றார்.

அடுத்த நாள் ஆள் அனுப்பி அழைத்து பேச வைத்தார்.

பெரம்பலூரின் தொன்மச்சிறப்புகளைப் பற்றி பேசினேன். பெரம்பலூரின் வரலாறு எழுதப் படவேண்டும் என்று பேசினேன்.

அதற்கான ஒரு குழுவை அமைத்து வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆக புத்தகத் திருவிழாவின் உப விளைவாக பெரம்பலூர் வரலாறு வரப் போகிறது.

இன்னொரு பக்கம் உலகத் திரைப் படங்களும் குறும்படங்களும் தினமும் திரையிடப் பட்டன. வழிதக் கூட்டம் சொன்ன தகவல்கள் இரண்டு,

நல்லதைக் கொடுத்தால் நிச்சயம் பார்ப்பார்கள் என்பது ஒன்று.

குறும்பட ரசனை பெரம்பலூரில் தழைத்து வளரும் என்பது இரண்டு.

65000 புத்தகங்கள், 9500000 ரூபாய்க்கன விற்பனை என்பது எங்களுக்கு நம்பிக்கை தரும் விசயங்களே. 120000 பார்வையாளர்கள் , அதில் குறிப்பிடத் தகுந்த அளவு மாணவ மாணவியர் என்பது என்னைப் பொறுத்தவரை தித்திப்பான செய்திகளே.

கனரா வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ஸ்டால் எடுத்து புத்தகங்கள் வாங்க கடன் கொடுத்ததன என்பதை கண்ணால்பார்த்த என்னாலேயே இன்னும் நம்ப முடியவில்லை.

பெரம்பலூர் நூலக வாசக வட்டம் ஒரு ஸ்டால் எடுத்து நூல் தானம் கோரியது. மிக நல்ல அறுவடை. ஏறத்தாழ 45000 ரூபா மதிப்பிலான புத்தகங்களை மக்கள் எங்கள் ஊர் நூலகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குனர் தாமிரா பேச வந்திருந்தார். மிரண்டுப் போய் சொன்னார், “பெரம்பலூரில் நல்ல வாசகத் திரள் உருவாகும் பாரேன்”

நல்லவன் வாக்கு. பலிக்கும்.

இரண்டுமுறை வந்திருந்த மனுஷ்யப் புத்திரனுக்கு இந்தத் திருவிழாவில் கிடைத்த மகிழ்ச்சி வேறு எங்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

மற்ற ஊர்க்காரர்களைப் போல எங்களால் விமர்சனம் எல்லாம் செய்ய இயலாது. எங்களைப் பொறுத்தவரை வறண்ட மணற்பரப்பில் நா வறள பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு சுணை கிடைத்திருக்கிறது.

வருங்காலங்களில் எங்கள் பிள்ளைகள் ஏராளமாய் எதிர்பார்ப்பார்கள், நிறைய வளர்ந்து நிறைய விமர்சிப்பார்கள்.

அடுத்தமுறை உறவினர்களையும் நண்பர்களையும் புத்தகத் திருவிழாவிற்கு அழைக்க எண்ணியிருக்கிறேன். கும்பாபிஷேகத்திற்கும், கிடா வெட்டிற்கும் அவர்கள் அழைத்து போய் வெட்டிவிட்டு வரும் நாம் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற ஏக்கத்தை நேர் செய்ய ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது

ஸ்டால் எடுத்திருந்தவர்கள் சாப்பாடு, தேனீர் போன்றவற்றிற்கு மிகுந்த சிரமப் பட்டதை உடனிருந்து பார்க்க முடிந்தது. பார்வையாளர்களுக்கும் அதே சிரமம் இருக்கவே செய்தது. அடுத்த முறை உள்ளேயே நல்லதொரு கேண்டீன் ஏற்பாடு செய்யப் படுவது நல்லது.

இதைவிடவும் மிகுந்த அத்தியாவசியமானது கழிவறை வசதி.

அடுத்தது சில்லறைப் பிரச்சினை. இதை நானே ஆட்சியரிடம் சொன்னபோது என்ன செய்யலாம் என்று கேட்டார். சென்னையில் ஒரு வங்கி தினமும் சில்லறை பொட்டலங்களை ஸ்டால்களுக்கு விநியோகித்ததை சொன்னேன். கடைசி இரண்டு நாட்களில் இதற்கான முயற்சிகளை அவர் செய்திருந்தார்.

இவை கடந்து எதை வாங்குவது என்பதில் நிறைய குழப்பம் இருந்ததை உணர முடிந்தது. பட்ஜட்டுக்குள் எதை வாங்குவது என்பதில் தெளிவற்று தடுமாறியவர்களையும் பார்க்க நேர்ந்தது. 4000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினேன். அப்புறம்தான் “தோல் “ பற்றி தெரிந்தது. வாங்க பைசா இல்லை என்றார் நண்பர் ஒருவர்.

எதை வாங்குவது, தங்களது பட்ஜெட்டுக்குள் எதை எதை வாங்குவது என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனில் நல்ல நூல்கள் குறித்த புரிதலை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதனை இங்குள்ள இலக்கிய அமைப்புகள்தான் செய்ய வேண்டும். இதற்கு தொடர்ந்து கூட்டங்களை இவர்கள் நடத்த வேண்டும். இதற்கு எளிய வாடகையில் அரங்குகள் கிடைக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஆனதை சேய்ய வேண்டும். உள்ளூர் கல்லூரிக்ளும் இதில் தங்களது பொறுப்பை உணர வேண்டும்.

இவை எல்லாம் கடந்துஎங்களூர் புத்தகத் திருவிழா இரண்டு விசய ங்களை சொல்கிறது,

ஒன்று,

மாவட்ட ஆட்சியர்கள் நினைத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்கள் சாத்தியம்.

இரண்டு,

பெரம்பலூர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறது.

நன்றி : “காக்கைச் சிறகினிலே”


Tuesday, February 26, 2013

திண்ணியம்


ஆயிரம் பேர் கூடி நிற்க
ஆதிக்கம்
ஆணவம்
ஜாதித் திமிர்
ஏளனங்கள்
எகத்தாளங்கள்
இவற்றிடையே
அவமானம்
என்னைத் தின்னத் தின்ன
நான்
மலம் தின்றால் மட்டுமே
கிடைக்கும்
நீ
மலம் தின்ற அவஸ்தை

Monday, February 25, 2013

குற்றம் குற்றமே

முன்னுரை:

இந்தக் குறுங்கட்டுரை2008 ஆண்டு எழுதப் பட்டு எனது “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற நூலில் உள்ளது. அவசியம் கருதி இந்த முன்னுரையும் ஒரு பின்னுரையும் தரவேண்டி உள்ளது.

ஏறத்தாழ 600 ஆண்டுகளாக இல்லாத ஒரு வழக்கமாக இன்றைய போப்பாண்டவர் ஆக விரைவில் ஓய்வு பெறுகிறார். இந்த 600 ஆண்டுக்கால இடைவெளியில் ஒரு போப்பாண்டவரின் மரணத்தின் பொருட்டே புதிய போப்பாண்டவரை கத்தோலிக்கத் திருச்சபை கண்டிருக்கிறது. 

ஆக கத்தோலிக்கத் திருச்சபையில் ஒரு புதிய வரலாறினை இவர் படைக்கிறார். இயங்க இயலாத போது ஒதுங்கி ஒய்வெடுத்துக் கொண்டு புதிய ஒருவருக்கு இயங்க வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற அவரது சரியான முடிவினை தலை வணங்கி ஏற்கிறோம்.

அதே நேரம் திருச்சபை வரலாற்றில் இவரது பெயர் ஏற்கனவே ஒரு முக்கியமான இடத்தில் இடம் பெற்றுள்ளது. அதைத்தான் இந்தச் சின்னக் கட்டுரை பேசுகிறது.

.....................................................................................................................

“மதச் சார்பற்ற தன்மையுடைய விஞ்ஞானத்தின் பெயரால் நல்லிணக்கத்திற் கெதிரான இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது என அறிவிக்கிறோம் “

இது ஏதோ ஒரு மதவெறியைத் தூண்டக் கூடிய மத வெறியர் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கான அறிவிப்பு எனில் கவனம் குவிக்காமல் விட்டுவிடலாம்.

உலகத்தில் வாழும் மக்களில் பெரும் திரளான ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராகத் திகழும் போப்பாண்டவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி ரத்துச் செய்யப் பட்டுள்ளது என்பதும், அதுவும் அவரது ஆளுகைக்கு உட்பட்டுள்ளபல்கலைக் கழகமே அதைச் செய்துள்ளது என்பதை அறிந்தது , ஏன்? என்ற ஆவல் இயல்பாகவே பிடித்துத் தள்ள உள்ளே நுழைந்தேன்.

“எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி ” என்று சொல்வார்கள். உலகின் பெரும்பகுதி ரோமன் கத்தோலிக்கர்கள் என்ற பெரும்பான்மையின் செருக்கு மிகுந்த வெளிப்பாடாக நாம் இதைப் பார்க்கலாம். மேன்மைமிக்க வெளிப்பாடாக இதைக் கொண்டவர்களும் உண்டு. போப்பாண்டவரின் ஆளுமையும், செல்வாக்கும், உலகைக் கோலோச்சும் அந்த நிலை கொஞ்சமும் மாறாமல் இன்றும் அப்படியேத்தான் உள்ளது.

பிறகெப்படி இது சாத்தியப் பட்டது? ஏன் தேவைப் பட்டது?

லா சாட்னீஸா என்று ஒரு பல்கலைக் கழகம் ரோமில் உள்ளது.17.01.2008 அன்று போப்பாண்டவர் அவர்களின் அருளாசியுடன் அது அந்த ஆண்டிற்கான தனது மணியினஃஇத் துவங்கும் என்று முன்னர் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த அறிவிப்புதான் பின்னர் திரும்பப் பெறப் பட்டது.

சரி, அப்படி என்ன தவறினை இன்றைய போப்பாண்டவர் செய்துவிட்டார்?

1633 ஆம் ஆண்டு கலிலியோ மீது ஒரு விசாரனை நடத்தப் பட்டது. திருச்சபையின் முன் கலிலியோ நிறுத்தப் பட்டார். எதற்கந்த விசாரனை?

சூரியனை மையமாக வைத்து பூமி இயங்குகிறது என்று 1633 இல் கலிலியோ அறிவித்தார். கத்தோலிக்கத் திருச்சபையோ , பூமி நிலையானது, அசையும் தன்மை அற்றது என்று நம்பியது. நம்பவும் சொன்னது. நம்ப மறுத்தவர்களைத் தண்டிக்கவும் செய்தது.

இந்த நிலையில் கலிலியோ சற்று உரத்துக் குரலெடுத்து “ பூமி நிலையானது அல்ல, சூரியனைச் சுற்றி அது இயங்குகிறது” என்று அறிவித்தார்.  இவருக்கு முன்னரே கோபர் நிக்கஸ் இதைக் கண்டு பிடித்திருந்தார். காயம் படாமல், கழுமரம் ஏறாமல், அவஸ்தைக் கால ஜெபத்தோடு அமைதியாக செத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்கிருந்ததால், உயிருக்கு பயந்து அதை வெளியே சொல்லாமல் செத்துப் போனார்.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத கலிலியோ இதை கொஞ்சம் உரத்துச் சொன்னார். இது, திருச்சபையின் நம்பிக்கையை, விசுவாசத்திக் கேள்வி கேட்டதாக திருச்சபைக்குப் பட்டது. இது திருச்சபையின்பால் நம்பிக்கைக் கொண்டுள்ள கத்தோலிக்கர்களின் தேவ விசுவாசத்தை, கத்தோலிக்கக் கட்டமைப்பை உடைத்து விடுமோ என்று திருச்சபை அச்சப் பட்டது. திருச்சபையே விசுவாசத்தினால் கட்டப் பட்டது. “நம்பி விசுவாசிப்பவனைவிட நம்பாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான்” என்றும் சொல்லப் பட்டது. நம்பிக்கையைக் கேள்வி கேட்க அனுமதித்தால் அது விசுவாசத்தினால் மட்டுமே கவனத்தோடு கட்டமைக்கப் பட்டுள்ள திருச்சபையைக் குலைத்துப் போடும் என்று திருச்சபை நம்பியது. ஆகவே இதை அப்படியே விடுவது என்பது திருச்சபையை முடிவுக்குக் கொண்டு வருகிற ஒரு தொடர் செயலுக்கு கால்கோலும் என்று திருச்சபைக் கருதியது.

எனவே அன்றைய போப்பாண்டவர் தலைமையில் விசாரனைத் தொடங்கியது. விசாரனை என்பதை விட கட்டப் பஞ்சாயத்து என்ற பதமும், போப்பாண்டவரை அன்றைய நாட்டாமை என்பதுமே பொருத்தமாகப் படுகிறது.

பஞ்சாயத்து கலிலியோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. திருச்சபையின் அழுத்தமான குரல் தந்த பயத்தில் கொஞ்ச ஆடித்தான் போனார் கலிலியோ. வேடிக்கைப் பார்க்கத் திரண்டிருந்த ஜனத் திரளின் முன் கலிலியோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்றார். ஆனாலும் அப்படியான கருத்தைச் சொன்னதற்காக அவர் சிறைப் பட்டார். பிறகு பைத்தியம் பிடித்துச் செத்தும் போனார்.

ஏறத்தாழ 360 ஆண்டுகளுக்குப் பிறகு 1990 வாக்கில் எந்த மேல் முறையீடுமின்றியே இது மறு விசாரனைக்கு வந்தது. இப்போது திருச்சபை தனது முடிவினை மாற்றிக் கொண்டது.பூமிதான் சூரியனைச் சுற்ருகிறது என்ற கலிலியோவின் கருத்தினை ஏற்ரது.

சுருங்கச் சொன்னால் மதத்தை விஞ்ஞானம் வென்றது.

அப்போது தற்போதைய போப்பாண்டவர் பெனெடிக் 16 ஆம் கார்டினல் ரட்சசிங்கர் என்றழைக்கப் பட்டார். அப்போது நடந்த விவாததில் இவர் மட்டுமே 1633 இல் திருச்சபை எடுத்த முடிவு சரி, கலிலியோவின் கருத்துதான் தவறு. ஆகவே கலிலியோவின் கருத்தை திருச்சபை நிராகரிக்க வேண்டுமென்று விடாப் பிடியாக வாதிட்டார். நல்ல வேளையாக அன்றைய பெரும்பான்மை இவருக்கெதிராகப் போகவெ, திருச்சபை தனது கருத்தை மாற்றிக் கொண்டது.

விஞ்ஞானத்தின் சகல கனிகளையும் ருசித்துக் கொண்டிருக்கக் கூடிய மதப் பழமைவாதியான தற்போதைய போப்பாண்டவர் தங்களது பல்கலைக் கழகத்தில் நுழைவதை, அருளாசி பகர்வதை அதே பல்கலைக் கழகத்தைச் சார்ந்த கல்வியாளர்களின் எதிர்ப்பைத்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம்.

அவர்கள் நாத்திகர்களோ, திருச்சபைக்கு எதிரானவர்களோ அல்ல. தீவிர விசுவாசிகளே அவர்கள். இருதியாக பல்கலைக் கழகம் தவறு செய்தது போப்பாண்டவரே ஆயினும் அது தவறுதான் என்று முடிவெடுத்தது. போப்பாண்டவரின் நிகழ்ச்சியை ரத்து செய்தது.

முதலில் மதப் பழமை வாதிக்கும், மதப் பழமை வாதத்திற்கும் எதிராகத் திரண்டு கொதித் தெழுந்த அந்த 67 கல்வியாளர்களையும் சிரம் தாழ்த்தி, வணங்கி வாழ்த்துகிறோம்.

நியாயம் போப்பாண்டவருக்கு எதிர்த் தளத்தில் இருப்பதை உணர்ந்த திருச்சபை நியாயத்தின் பக்கம் நின்றதற்காக அதனை வணங்குவோம்.

இந்த நிகழ்வை இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்கள் அருள்கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், மதவாதிகளின் நெருக்கடியை, பழமைக் கூத்தை வெறி கொஉ எதிர்க்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறோம். அன்றைக்கே ஒருவன் தமிழில் சொன்னான்,

“நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

முடிவுரை:

போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் போப்பாண்டவராகவே மரணிப்பார் என்ற நடை முறையை மாற்றி இயலாமையை உணர்ந்து அடுத்தவருக்கு வழி விட்டிருக்கும் இன்றைய போப்பாண்டவரின் செயல் அவர் மிகவும் பக்குவப் பட்டிருக்கிறார் என்பதையே உணர்த்துகிறது. இந்தப் பக்குவத்தின் நீட்சியாக அவர் ஓய்வு பெறும் இந்த்த் தருவாயில் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

Sunday, February 24, 2013

செப்டம்பர் 05

செப்டம்பர் 05.

ஆசிரியர்கள் தினம்.

ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

மத்திய அரசும் மாநில அரசுகளும் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி அவர்களைக் கௌரவப் படுத்துவதாக வாங்கிய ஆசிரியப் பெருமக்களும் நாமும் நினைத்துக் கொண்டாடுகிறோம். அதில் பேச இருக்கிற விஷயங்களை இங்கு பேசத்தான் போகிறோம் என்றாலும் எது கடந்தும் நிறைய நல்ல ஆசிரிகளையும் அவ்விருதுகள் சென்றடைந்து பெருமை கண்டுள்ளன.

ஒரு நாள், முனைவர் ராதாக்கிருஷ்ணன் அவையை நடத்திக் கொண்டிருந்த போது அன்றையப் பிரதமர் நேரு அவர்கள் அன்றைய அமைச்சர் டி டி கே அவர்கள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவரைப் பார்த்து சொன்னாராம்,

“mr.nehru, go to your seat"

பவ்யமாய் எழுந்த நேரு அதைவிடவும் பவ்யமாய் சொன்னாராம்,

“yes sir, i am going sir"

நினைத்துப் பார்க்கவே இயலாதபடிக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. இன்றைக்கு இருப்பது போல் ஆறேழு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தனது சொந்தக் கட்சித் தலைமையும் சொல்கிறபோது உட்காரவும் சொல்கிறபோது எழுந்திரிக்கவும் ஒப்புதல் பெற்றபிறகே எதையும் பேச வேண்டிய நிர்ப்பந்தமும் அற்றவராக , இன்னும் சொல்லப் போனால் ஓராயிரம் விமர்சனங்கள் நமக்கு அவர் மீது இருந்த போதும்

அந்தக் கேள்விக்கு வயது 98

உலகில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன என்று சரியாய்த் தெரியவில்லை. ஆனால்தமிழைத் தவிரவேறு எந்த மொழிக்காகவும் தேகம் எரித்து செத்ததற்கான சான்று இல்லை.

தன்னை அழித்தேனும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவன் தமிழன்.

“தமிழ் மணி, தமிழ் நம்பி” என்று  பெயரைக்கூட மொழியோடு சேர்த்தே அடையாளப்படுத்தியவன் தமிழன். இதையும் வேறு எந்த மொழியிலும் பார்க்க முடியாது.

ஆனாலும் போயிருக்க வேண்டிய உயரத்திற்கு இன்னும் தமிழ் போகமுடியவில்லையே அது ஏன்? இன்னமும் நீதிமன்றத்தில், மருந்துச்சீட்டில்,ஆலயங்களில், அலுவலகங்களில் முழுமையாய் தமிழ் இல்லையே அது ஏன்?

இத்தனை இடங்களில் தமிழ் இல்லாத போதும் தமிழ் இன்னும் மாறாத இளமையோடு ஜீவித்திருக்கிறதே அது எப்படி? 

காரணம் மிக எளிதானது. மெத்தப் படித்த அறிஞர்களோ, அர்ச்சகர்களோ, அலுவர்களோ அல்ல, காட்டில், மேட்டில், கழனியில் உழைத்த பாமரத் தமிழனும், தமிழ்ச்சியும் பேசிப் பேசியே பாதுகாத்து வைத்துள்ள மொழி தமிழ் மொழி.

மொழி வளர்ச்சி குறித்தும் மொழிச் சீர்திருத்தம் குறித்தும் கவலைப் படுகிற சான்றோர்களிடம்கூட மொழிப்பாதுகாப்பு குறித்த அக்கறையும் புரிதலும் இருப்பதாய்ப் படவில்லை.மொழி வளர்ச்சியும், மொழிச் சீர்திருத்தமும் மிக மிக அவசியம்தான். ஆனால் மொழியின் வளர்ச்சிக்கும், சீர்திருத்ததிற்கும் மொழி உயிரோடு இருப்பதென்பது அதைவிட மிகவும் அவசியம்.

ஆங்கிலத்தில் பேசினால் அவன் உயர்ந்தவன், அறிவாளி என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.இன்றோ அதைவிட மோசமாய்ப் போய் ஆங்கிலம் பேசத் தெரியாதவனும் தமிழில் பேசுபவனும் தாழ்ந்தவன், முட்டாள் என்றே கொள்ளப் படுகிறது. நுனி நாக்கு ஆங்கிலம் என்பது அறிவின் அடையாளமாகவும், வேலைவாய்ப்பின் வாயிலாகவும் தவறாகக் கொள்ளப் படுகிற்து. 

லண்டனில் கிறுக்கன் ஆங்கிலத்தில்தான் உளறுகிறான் என்பதையும் பிச்சைக்காரன் ஆங்கிலத்தில்தான் பிச்சை கேட்கிறான் என்பதையும் எப்போதுதான் உணரப் போகிறோமோ தெரியவில்லை.

“தமிழ்த் தெரியாது என்பதே தனித் தகுதியாய்ப் போனது” என்பார் மேத்தா. எல்லாப் பாடங்களிலும் 95க்கு மேல்தான். தமிழ்தான் சுட்டுப் போட்டாலும் வரமாட்டேன் என்கிறது” என்று தங்கள் பிள்ளைகள் குறித்து வெளிப்படும் தமிழர்களின் பெருமிதம், உணர்வுள்ளவனை நிச்சயம் கொன்றே போடும்.

ஆங்கிலம் உலக மொழி. அதைக் கற்றுக் கொண்டால் சாளரம் திறக்கும். ஆகவே ஆங்கிலத்தை கூடுதலாக கற்று வைப்பது என்பது சரிதான். ஆனால் அதற்காக தமிழைப் புழங்குவதைத் தவிர்ப்பது என்கிற நிலைக்கு தமிழன் போனதுதான் சோகம்.

ஒரு பக்கம்  “தமிழில் எதுவுமே இல்லை” என்ற கூச்சல் கேட்கிறது.  இந்தக் கோஷ்டிக்கு மனப் பிறழ்வுக்கான மருத்துவம் பார்க்க வேண்டும். இன்னொரு பக்கம் “தமிழில் எல்லாம் இருக்கிறது” என்ற கூச்சல் காதுகளைக் கிழிக்கிறது. இந்தக் கூச்சல்தான் மிகவும் ஆபத்தானது. இதுதான் மொழியின் வளர்ச்சியய்த் தடுக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு இதைத் தள்ளிவிட வேண்டும்.

தமிழில் ஏராளம் இருக்கிறது, தேவையும் இருக்கிறது என்கிற புரிதல்தான் இந்த நிமிடத்தின் அவசியமாயிருக்கிறது.

புழங்காத எதுவும் அழிந்து போகும் என்பதை தமிழன் முதலில் உணர வேண்டும். வீட்டில், பணியிடத்தி, வெளியில் என்று எந்த இடத்திலும் தமிழ் தெரிந்தவர்களோடு தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும். தாய் மொழியய்ப் புழங்கு மொழியாக்க வேண்டும்.

சீதயைக் காண அசோகவனம் போகும் போது அனுமனுக்கு ஒரு தடுமாற்றம் வருகிறது. உலகின் ஆக அழகானவளும் இனிமையானவளுமாகிய சீதையிடம் அவளைப் போலவே அழகான, இனிமையான மொழியில் பேசவேண்டும் என்று முடிவெடுக்கிறான். அப்படியான மொழி எது என்பதில் குழம்பி , தெளிந்து இறுதியாய் அவளிடம் தமிழில் பேசினான் என்கிற தகவல் கவிஞர் மீனவன் எழுதிய “ பண்டைத் தமிழரும் பரதவர் வாழ்க்கையும்” என்கிற நூலில் கிடைக்கிறது. அனுமனுக்குப் புரிந்த தமிழின் அழகும் இனிமையும் தமிழனுக்கு எப்போது புரியப் போகிறது என்பதுதான் கேள்வி.

பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். அதுதான் அவர்களது முதல் சந்திப்பு. கதவைத் தட்டுகிறார். பாரதி வருகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்ந்து போவார், தமக்கும் மரியாதையாக இருக்கும் என்று நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார். 

“உன் அளவுக்கு அந்த ஆள் இங்கிலீஷ் பேசறாண்டா பாலு.  நீயே பேசி அனுப்பு” என்று வ.ரா விற்கு கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக் கொண்டெடெ பாரதி உள்ளே போகிறார்.

“சாமி உங்ககிட்டதான் பேசனும்”

திரும்பி வந்த பாரதி வ.ரா விடம் கேட்டார்,

“இன்னும் எத்தனை நாளைக்குத் தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள் ?”

இது நடந்தது 1910 ஆம் ஆண்டு.

“ இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்?” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்.

பின் குறிப்பு

இந்தக் கட்டுரை எழுதி “தமிழ் ஓசை” யில் வந்து பிறகு “அந்தக் கேள்விக்கு வயது 98” என்று நூலாகத் தொகுக்கப் பட்டபோத் பாரதியின் அந்தக் கேள்விக்கு வயது 98.  அந்தக் கேள்வியின் இன்றைய வயது 103.


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...