Tuesday, May 24, 2011

அவர்கள்... குழந்தைகள்...

தங்கையின் திருமண அழைப்பிதழை வைப்பதற்காக திருவையாறு சென்றுவிட்டு திரும்புவதற்காக திருவையாறு பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். வருகிற பேருந்துகள் எல்லாம் பிதுங்கிக் கொண்டு வந்தன. இரண்டு படிக்கட்டுகளிலும் ஒரு பேருந்துக்கான கூட்டம் தொங்கிக் கொண்டு போனது.சரியான முகூர்த்த நாள் என்பது தெரியாமல் புறப்பட்டது தவறாகப் போனது.

பேருந்து நிலயத்தில் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போனதே அல்லாமல் குறைந்தபாடில்லை. கும்பகோணம் போகிற பேருந்து காலியாகப் போனது. திருக்காட்டுப் பள்ளி, மற்றும் தஞ்சை போகிற பேருந்துகளும் காலியாகவே போயின. அதில் அமர்ந்து போகிறவர்களைப் பார்த்தால் ஒரு வித பொறாமையே வந்தது. ஆக இருக்கிற கூட்டமெல்லாம் அரியலூர் வருகிற கூட்டம் தான் போல. அந்த எண்ணமே ஒரு வித அயர்வை ஏற்படுத்தியது. பத்துப் பேருந்துகள் சுத்தமாய் காலியாய் வந்தாலும் இருக்கிற ஜனங்களுக்கு காணாது என்றே பட்டது.  சரி, உட்கார இடத்தோடு பேருந்து வருகிறவரை காத்திருப்பது என்று முடிவெடுத்தோம்.

ஓரமாய் மூடிக் கிடக்கும் ஒரு கடையின் படியில் அமரலாம் என்று போனோம். படிக்கட்டின் ஒரு மூலையில் ஏற்கனவே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. ஒரு இளைய ஜோடி அமர்ந்திருந்தார்கள். அவர்களது பையன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது அவன் மீதும் அவர்களுக்கு கவனம் இருக்கவே செய்தது. “: ஏய், மண்ணுல விளையாடாத , சிரங்கு வந்துடும். அப்புறம் டாக்டர்ட்ட தூக்கிட்டுப் போய் ஊசி போட்டுடுவேன்” என்று அவனது அப்பா சொன்னதுதான் தாமதம் “நான் பெரிய பையனா வந்து நம்ம ஸ்ப்லெண்டர எடுத்துட்டு போயி அந்தக் கொரங்கு மாமா மேல ஏத்தி அரைக்கப் போறேன்” என்று விளையாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமலே சொன்னான்.

இதைக் கேட்டதும் நானும் விக்டோரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். இருவர் மனதிலுமே ஒரு பழைய சம்பவம் மலரும் நிணைவாய் வந்து எங்கள் புன்னகையை ஆழமாய் அர்த்தப் படுத்தியது. 

அப்போது நாங்கள் பெருமாள் பாளையத்தில் குடியிருந்தோம்.கிஷோருக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். அவனுக்கான சளிப் பிரச்சினைக்கு மருத்துவர் நரசிம்மனிடம் ஹோமியோ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். அவரது மருத்துவமனை நொச்சியத்தில் இருந்தது. ஒரு முறை அவனை வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவரிடம் கிளம்பினோம். போகும் வழியெல்லாம் எதையாவது கேட்டுக் கொண்டே வருவான். நானோ விக்டோரியாவோ ஒருபோதும் அவனது கேள்விகளை அலட்சியப் படுத்தியதே இல்லை.

நொச்சியம் நெருங்கிய பொழுது சாலை ஓரத்தில் மரங்களில் தென்பட்ட குரங்குகளைப் பார்த்து விட்டான்.  குரங்குகளை பற்றிய கேள்விகளாய்க் கேட்டு ஒரு வழி செய்துவிட்டான். அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் இடையே நடந்த உரையாடல்களுள் ஒரு மெல்லியப் பகுதியைப் பார்ப்போம்,

“ பாப்பாக் குரங்கெல்லாம் ஸ்கூலுக்குப் போகுமா?

“போகும்”

“அவங்களுக்கு யார் ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பா?”

“ கொரங்கு மிஸ்”

”கொரங்கு மிஸ் அவங்கள ஸ்கேல்ல அடிப்பாங்களா?”

“மாட்டாங்க”

“ அப்புறம் ஏன் எங்க மிஸ் மட்டும் அடிக்கிறாங்க”

“ ஏன்னா அவங்க மனுஷ மிஸ்” (அய்யோ, விக்டோரியா எவ்வளவு ஆழமான பதிலை இவ்வளவு லாவகமாகவும் அலட்சியமாகவும் சொல்வதைக் கேட்டு சத்தியத்திற்கும் சிலிர்த்தே போனேன்) 

“ஓ!, பாப்பாக் கொரங்குக்கு சளிப் புடிச்சா யாரு மருந்து கொடுப்பா?”

“ கொரங்கு டாக்டர்”

இப்படியாக குரங்குகளைச் சுற்றியே அவர்களது பேச்சு சுழன்று கொண்டிருக்க மருத்துவ மனை வந்து விட்டது. காத்திருக்கும் தேவை அன்று ஏற்படவில்லை.

அவருக்கு கிஷோரை மிகவும் பிடிக்கும். “ஹாய் கிச்சு, எப்ப வந்தீங்க?”

” தம்பி சாருக்கு வணக்கம் சொல்லு”

“ சாரெல்லாம் இல்ல மாமாதான்.கிச்சு , எங்க மாமா பேர சொல்லுங்க பார்ப்போம்?”

சட்டென சொன்னான் “கொரங்கு மாமா”

சிரி சிரியென்று சிரித்தார். எங்களுக்கு மிகவும் சிரமமாய் போய்விட்டது. ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டோம். வரும் வழியில் குரங்குகளைப் பார்த்ததையும் , தொடர்ந்து அவன் குரங்குகளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்ததையும் அதன் விளைவாகத்தான் இப்படிப் பேசிவிட்டான் என்றும் நாங்கள் சொல்லச் சொல்ல அதையெல்லாம் சற்றும் சட்டை செய்யாதவராய் அவனுக்கு சாக்லெட் கொடுத்து தூக்கி வைத்துக் கொண்டு “ எங்க இன்னொரு தரம் சொல்லு” என்று அவனோடு விளையாடிக் கொண்டிருந்தார்.                 

அந்தக் குழந்தை “கொரங்கு டாக்டர்” என்று சொன்னதும் எங்களுக்கு பழைய நினைவு வந்துவிட்டது. விக்டோரியா அவனை நோக்கி கையை நீட்டி சிரிக்கவே விக்டோரியாவை நோக்கி தாவிக் குதித்து ஓடி வந்தான்.

“ தம்பிப் பேரு என்ன?”

“தனுஷ்”

“ஓ! என்னப் படிக்கிறீங்க”

“யு.கே.ஜி” என்றவன் என்னை நோக்கி கை நீட்டி “இவங்கதான் மாமாவா?”

“ஆமாம்”

“அய்ய, நல்லாவே இல்ல, வேணாம்”

“சரி என்ன செய்யலாம்?”

“கா விட்டு தொறத்தி விடுங்க ஆண்டி”

“ சரி செஞ்சுடலாம். நீ ஆண்டியக் கட்டிக்கிறியா?”

இதைக் கேட்டதும் “சரி” என்றவன் விக்டோரியாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “ஓ.கே வா?” என்றான்.

"ஓகே, ஓகே” விக்டோரியாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.

“ டேய் பெரியவங்கள அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன்ல” என்று சொல்லிக் கொண்டேஅவனை வாங்க
எழுந்து வந்தார். விக்டோரியா அவனைத் தராமல் இழுத்து வைத்துக் கொண்டு “ விடுங்க சின்னப் பிள்ளைதானே, போகவும் அவன் சரியாய்த் தானே சொன்னான்” என்று சொல்லவும் அவனது அம்மாவும் அப்பாவும் எங்களோடு சேர்ந்து சிரித்தனர். 

குழந்தைகளைக் கவனித்தால் எதையும் மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். சிரித்துக் கொண்டே கற்கலாம். எவனோ ஒருவன் அரை போதையில் உளறி இருக்கிறான் “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று. எந்தக் குழந்தைக்காவது இது புரியும் என்றால் அது சொல்பவனைக் கொன்றே போடும். இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு நிகர் எதுவுமே இல்லை.

அவர்கள் போக வேண்டிய பேருந்து வரவே அவனை வாங்கிக் கொண்டு கிளம்பினர். முத்தம் கொடுத்து டாடா சொல்லி விக்டோரியா அனுப்பிவைக்கவே பையன் காற்றிலே ஒரு முத்தம் அனுப்பினான். அதில் ஒரு துளி என் மீதும் விழுந்தது. அயர்வு முழுக்க பறந்தே போனது.

“ பேசாம அவங்க முகவரிய வாங்கி வச்சிருந்தா போயி அப்பப்ப கொஞ்சலாம்ல”

“அதுக்கு அங்க போகனும்னு அவசியமேயில்ல” 

”அப்புறம்”

“ஊர்ல இருக்கிற எல்லாக் குழந்தைகளுமே அவந்தான். எல்லாக் குழந்தைகளுமே ஒரே மோல்டுதாங்க” அப்பா, எவ்வளவு ஞானம். இவ்வளவு நாள் இதை எப்படி கண்டு கொள்ளாமல் போனோம்.

ஒரு வழியாய் எங்களுக்கும் ஒரு பேருந்து வந்தது. நின்று கொண்டுதான் போக வேண்டும். உள்ளே நுழைவதற்கு இடம் கிடைக்கவே ஏறி விட்டோம்.

ஏறிய பின்புதான் ஏன் ஏறினோம் என்று தோன்றியது. முன்னே இருப்பவர்களை பின்னே போகுமாறும் பின்னே இருப்பவர்களை முன்னே போகுமாறும் ஒவ்வொறு முறை நடத்துனர் தள்ளும் பொழுதும் ஒவ்வொருவரும் எரிச்சலடைந்து சிலர் அவரை கண்டபடி சபிக்கவே செய்தோம்.

ஒவ்வொரு நிறுத்ததிலும் ஏறிக் கொண்டேதான் இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் நடத்துனரை சபித்துக் கொண்டேதான் வந்தோம். “இப்படிச் சம்பாரிக்கறதுக்கு பதிலா...” என்றுகூட சிலர் அசிங்கமாய் திட்டவே செய்தனர்.  

சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து , கசங்கி , இதில் அடிக்கடி நடத்துனர் டிக்கட் போடுவதற்காய் இப்படியும் அப்படியுமாய் நுழைந்து போவது என்பதெல்லாம் சேர்த்து உயிரே போனது. 

இந்த நேரம் பார்த்து மழை வேறு வந்துவிடவே இன்னும் துயரம் அதிகமானது. எல்லா இடங்களிலும் ஒழுகியது. இரண்டு பக்கங்களிலும் ஜன்னல் கண்ணாடிகள் சரியாக வேலை செய்யாததால் சாரல் வேறு. ஏறத்தாழ குளித்தோம்.

 ஒரு வழியாய் பேருந்து அரியலூர் வந்தது. எல்லோருக்கும் அப்பாடா என்றிருந்தது. சிலர் அதை கொஞ்சம் சத்தமாகவே வெளிப் படுத்தினர்.

இறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை கேட்டான், “ இந்த பஸ் திரும்ப எப்பக் கிளம்பும்?”

“அதை ஏன் கேக்குற. எவ்வளவு ஒழுகுனாலும் உடனே கிளப்பிடுவாங்க”

“ பாவம் இல்ல அந்த கண்டக்டர்”

அதை யாரும் சட்டை செய்தார்களா என்று தெருயவில்லை. ஆனால் எனக்கு பொட்டில் அறைந்தது போல் இருந்தது.

ஆம் நாம் ஏன் இப்படி யோசிப்பது இல்லை. அல்லது குழந்தைகள் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறார்கள்?

அவர்கள் குழந்தைகள்.

எனக்கொரு ஆசை, என்னைத் தவிர எல்லோரும் குழந்தைகளாய் மாறிவிட வேண்டும். அல்லது என்னோடு தொடர்புடைய அனைவருமாவது குழந்தைகளாய் மாறிவிட வேண்டும்.

28 comments:

  1. ஏன்னா அவங்க மனுஷ மிஸ்” (அய்யோ, விக்டோரியா எவ்வளவு ஆழமான பதிலை இவ்வளவு லாவகமாகவும் அலட்சியமாகவும் சொல்வதைக் கேட்டு சத்தியத்திற்கும் சிலிர்த்தே போனேன்)

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழர் ராஜ ராஜேஸ்வரி.

    ReplyDelete
  3. சந்தோஷமான பதிவு தோழர். என்னவோ உருவத்துல கொஞ்சம் வளர்ந்துட்டோம் மத்தபடி குழந்தைகதான் நாமெல்லாம் நினைக்கிற மாதிரி நிறைய நேரம் விஷயங்கள் நடக்கும். அப்ப பயங்கரமா சிரிப்பு வரும்

    ReplyDelete
  4. \\\மிருணா said...
    சந்தோஷமான பதிவு தோழர். என்னவோ உருவத்துல கொஞ்சம் வளர்ந்துட்டோம் மத்தபடி குழந்தைகதான் நாமெல்லாம் நினைக்கிற மாதிரி நிறைய நேரம் விஷயங்கள் நடக்கும். அப்ப பயங்கரமா சிரிப்பு வரும்
    May 24, 2011 9:08 PM ///

    ஆமாம் மிருணா மிக்க நன்றி

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    சின்னக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். யோசித்து தான் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு ஒரு நாள் தொலைபேசியில் சொல்கிறேன்.
    அடிக்கடி எழுதுகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. \\\Rathnavel said...
    அருமையான பதிவு.
    சின்னக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். யோசித்து தான் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு ஒரு நாள் தொலைபேசியில் சொல்கிறேன்.
    அடிக்கடி எழுதுகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    May 24, 2011 10:05 PM ///

    மிக்க நன்றிங்க அய்யா. அடிக்கடி எழுதுவதால் அயர்வாய் வருகிறதா அய்யா?

    ReplyDelete
  7. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  8. உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் எட்வின். என்ன ஒரு நெகிழ்வான ஒரு பதிவு... மனம் லேசாக ஆகிவிட்டது. குழந்தைகள் மகிழ்ச்சியின் பிதாக்கள்... இயற்கையோடு நெருங்கி உறவாடும் பிஞ்சு மனம் கேட்கும் கேள்விகளுக்கு..முற்றிய நம் மனதிடம் பதிலில்லை... அவர்களிடம் ரசனைக்கு பஞ்சமில்லை,மகிழ்ச்சிக்கு அளவில்லை, குதூகலத்திற்கும் மோசமில்லை...ஆகவே நமக்கும்.
    மீண்டும் குழந்தையாய் மாறத்துடிக்கும் நம்மிடம் இருக்கும் கொஞ்சமான ரசனையில் வாழ்வோம்...
    நன்றி,
    புவி

    ReplyDelete
    Replies
    1. குழந்தைக்கு நிகர் எதுவுமே இல்லை தோழர். நான் குழந்தைகளின் முரட்டு பக்தன்

      மிகவும் நெகிழ்ந்து போனேன் . மிக்க நன்றி தோழர்

      Delete
  9. I presume kids are creative in terms of thoughts ... becoz they don't think in pattern of logic only based upon their real time feeling... if person knows child psychology am sure he or she wud be best person to manage group of people in any circumstance... Sir kishore is lucky kid becoz u and madam are teachers by profession willing to answer for questions he raised... how many parents can... when kids raise questions...???

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்.

      ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாய் இருப்பவன் தோழர்.னான் ஒரு ஆசிரியன் என்பதை ஒரு சின்ன அளவிலேனும் பிள்ளைகளிடம் காட்டுவதேயில்லை தோழர். எப்பவும் அவர்களின் தோழன் நான்.

      Delete
  10. அருமையான அனுபவ பதிவு அய்யா நன்றி...குழந்தைகளுடன் விளையாடும்போது நாமும் குழந்தைகளாகி விடுகிறோம்..அந்த மகிழ்விற்கு ஈடு இணை கிடையாது... அதைத்தானே வள்ளுவர் அனுபவித்து சொன்னார்- யாழ் இனிது..குழல் இனிது என்ப..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அய்யா.
      மிக்க நன்றி.

      Delete
  11. அருமையான பதிவு சார்..!!

    ReplyDelete
  12. எளிமையான வசனங்களில் தான் குழந்தைகள் தொடர்பாக பேசவேண்டும் என்பதில் மிக அக்கறையோடு இருந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது..

    குழந்தைகளைப் புரிந்து கொள்ளல்... அவசியமான கலை!


    AHILAN NADARAJAH

    ReplyDelete
  13. எளிமையான வசனங்களில் தான் குழந்தைகள் தொடர்பாக பேசவேண்டும் என்பதில் மிக அக்கறையோடு இருந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது..

    குழந்தைகளைப் புரிந்து கொள்ளல்... அவசியமான கலை!


    ReplyDelete
    Replies
    1. நானே எளியவன்தான் தோழர்.

      அய்யோ அது மிகப் பெரியதும் ஆக அவசியமானதுமான கலை.
      மிக்க நன்றி தோழர்

      Delete
  14. குழந்தைகள் உலகில் நாமும் சஞ்சரிக்கத் துவங்கினால் நாமும் குழந்தைகளாகி விடுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களாது மேலான வருகைக்கு நன்றி தோழர்.
      தொடர்ந்து சந்திப்போம். மிக்க நன்றி தோழர்.

      Delete
  15. மிகவும் அருமையான பதிவு . அதுவும் கடைசி 4 வரிகள் மிகவும் பிடித்தது எனக்கு , ஆனால் நாம் நினைத்தாலும் அப்படி மாறமுடியாது சார்.

    ReplyDelete
  16. உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையாகவும் , அற்புதமாகவும் , நம் சமூகத்தில் உள்ள அனைத்து தர மக்களின் மனதில் உள்ள என்னங்களைபிரதிபலிப்பதாகவும் உள்ளது சார்.உங்களையும் , உங்களின் மனதை கவரும் எழுத்துக்களையும் என்னாலும் ஆராதிப்பேன்.வாழ்க வளமுடன

    ReplyDelete
  17. வணக்கம் தோழர். கடந்த ஒருவாரமாய் ரொம்ப கனத்த இதயத்துடன் உலவிக்கொண்டிருந்தேன். இந்த குழந்தைககளின் உரையாடலை.கள்ளமில்ல நெஞ்சின் நேசத்தின் சொல்லாடலகளைப்பார்த்தவுடன்,,குழந்தைகள் இருந்தால், இந்த உலகம் சொர்க்கபுரிதான். த்ங்களின் அனுபவப் பகிர்வை தங்கள் பதிவு மூலம் படித்தவுடன், மனம் லேசாகி பறக்க முடிவெடுத்துள்ளது. தங்க்ளின்பதிவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும். அனைத்து குழ்ந்தைகளும் இயல்பானவை; கற்பனை நிறைந்தவை.. //
    குழந்தைகளைக் கவனித்தால் எதையும் மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். சிரித்துக் கொண்டே கற்கலாம். எவனோ ஒருவன் அரை போதையில் உளறி இருக்கிறான் “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று. எந்தக் குழந்தைக்காவது இது புரியும் என்றால் அது சொல்பவனைக் கொன்றே போடும். இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு நிகர் எதுவுமே இல்லை.// உங்களுக்கு ஏறபட்ட கிட்டத்தட்ட அதே அனுபவம் எங்கள் வாழ்க்கியிலும் நிகழ்ந்தது. நாலு வயது.மகனோடு திரையரங்கு சென்றிருக்கிறோம். அங்கே எங்களின் சக ஆசிரியர் நிற்கிறார். ஏ, மொட்டை மாமா என்கிறான்.எ ங்களுக்கு சர்வமும் அடங்கிவிட்டது. அவர் முகம் சுருங்கி, எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. தலை வழுக்கை என்பதாலேயே அவ்ரின் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இவன் வேறு கத்தி சொல்லி, நம்மை சிக்கலில் மாட்டி விட்டான். குழ்ந்தைக்கு எதுவும் தெரியாது, மனதில் இருப்பதை மறைக்காமல் சொல்லி விடுவார்கள். //
    ஆம் நாம் ஏன் இப்படி யோசிப்பது இல்லை. அல்லது குழந்தைகள் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறார்கள்?// நல்ல வினாதான். அதுதான் அவர்கள் குழ்ந்தைகள். நம்மைப்போன்ற போலித்தனம் அவர்கள் அறியாதது. குழந்தைகள் உலகில் வாழ்வோம்.. குழந்தைகளாய், மனதள்விலாவது.

    ReplyDelete
    Replies
    1. எதற்கு தோழர் இதயம் கனக்க வேண்டும்>?
      மிக்க நன்றி தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...