Tuesday, August 20, 2013

நிலைத் தகவல்...13



  • சௌத் ஏசியன் பாலாஜி தான் பேராசிரியர். சந்திரசேகர் எழுதிய “சீனா அன்றும் இன்றும்” என்ற நூலை வாசித்ததனால்தான் இடதுசாரியாய் மாறினேன் என்கிறார்.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால் சந்திரசேகர் அவர்கள் தீவிரமான இடதுசாரி எதிர்ப்பாளர். ஒரு ஆழமான இடதுசாரி எதிர்ப்புக் கண்னோட்டத்துடன் சீனாவின் மீதான தனது விமர்சனமாகத்தான் அவர் அந்த நூலை எழுதியிருந்தார்.

    கம்யூனிச எதிர்ப்பாளர் ஒருவர் எழுதிய ஒரு நூல் அதன் வாசகன் ஒருவனை எப்படி இடதுசாரியாய் மாற்றும்? என்ற கேள்விக்கு பாலாஜி தரும் பதில்தான் ஒரு நல்ல நூல் ஆசிரியன் எவ்வளவு யோக்யமாயிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு நல்ல அளவு கோளாக விளங்குகிறது.

    அவர் சொல்கிறார்,

    சந்திரசேகர் இடதுசாரி எதிர்ப்பாளர் என்பதற்காக அந்த நூலில் சீனாவைப் பற்றி எந்த பொய்யான தகவல்களையும் தராததோடு சீன வளர்ச்சியையும் மறைக்காது உள்ளது உள்ளபடி தந்திருந்தார். சீன இடதுசாரிகளின் உழைப்பை, அர்ப்பணிப்பை அதன் விளைவுகளை அந்த நூலில் இருந்து கண்டு கொண்டதின் விளைவே நான் இடதுசாரியானேன்

Monday, August 19, 2013

நிலைத் தகவல்...12


இன்று காலை சமயபுரம் தோல்ப்ளாசாவில் இறங்கி வழக்கம்போல பள்ளிக்கு நடந்து கொண்டிருந்தேன்.

சிறிது தூரத்திற்குள் மொபெடில் ஒரு பெண் என்னை முந்தி மறித்து நின்றாள்.

ஆறேழு வருடங்களுக்கு முன் என்னிடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்த குழந்தை.

“ஏய் எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க சார்?”

“ நல்லா இருக்கேண்டா. என்ன பன்ற?”

“M.E பன்றேன் சார். சரி ஏறுங்க சார். பள்ளியில கொண்டு போய் விடுறேன்”

“ வேணாண்டா. நான் போயிக்கறேன். கொஞ்ச தூரம்தானே”

“போற வழிதான். ஏறுங்க சார்”

விடாப் பிடியாக மறுக்கிறேன். ஒரு புள்ளியில் வெடித்தாள்,

“ இப்ப எங்க அண்ணன் வந்திருந்தா அவனோட போயிருப்பீங்கள்ள?”

“அப்படி இல்லடா...”

சமாளித்தேன்.

“இல்ல சார். பொம்பளப் புள்ள ஓட்டி நீங்க உக்கார்ந்து வரது கௌரவக் குறைச்சல். விடுங்க சார் உங்க கிட்டையும் ஆணுங்கற அகம்பாவம் இருக்கு சார்”

ஒன்றும் பேசாமல் ஏறி உட்கார்ந்தேன்.

அப்படித்தானோ?

Sunday, August 18, 2013

நிலைத் தகவல்...11



July 28 at 7:29pm · 
  • ”நீரோடும் வைகையிலே
    நின்றாடும் மீனே”

    அப்பாவிற்கு மிகவும் பிடித்தமான பாடல்.

    இப்பல்லாம் யாருடா இப்படி ஆபாசம் இல்லாம இலக்கியத் தரத்தோடு எழுதறாங்க என்பார்.

    ”இதிலாப்பா ஆபாசம் இல்ல?”

    ”ஆமாண்டா. இருந்தா காட்டு”

    “நான் காதலென்னும்
    கவிதை சொன்னேன்
    கட்டிலின் மேலே...

    அந்தக் கருணைக்கு நான்
    பரிசு தந்தேன்
    தொட்டிலின் மேலே”

    ”இதுல ஆபாசம் இல்லையாப்பா?

    “ ? ”

    ”தாம்பத்தியத்தை ஆண் கவிதையாகவும் பெண் அதை ஆணின் கருணையாகவும் பார்ப்பது பெண்ணடிமைத் தனமில்லையா அப்பா? இது ஆபாசமில்லையா?”

    “ஆமாந்தாண்டா.”

    தட்டிக் கொடுத்தார்.


    அவர் பழைய பாடல்களின் காதலர். கவிஞர்களின் வரிக்காகவே குறிப்பாக கண்ணதாசன் வரிகளுக்காகத்தான் பாடல்களைக் கேட்கிறோமே தவிர பாடகர்களும் இசையும் இரண்டாம் பட்சம்தான் என்றார் ஒருநாள்.

    “மோசமான வரிகளைக்கூட இசைக்காகவும் பாடிய விதத்திற்காகவும் கேட்டிருக்கோம்.”

    ”ஒன்னு சொல்லு”


    “ எங்கே மனிதன் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்”

    “ கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே”

    “ஆமாண்டா”

     சூப்பர் சிங்கர் T20 யில் ஒரு பாடல்

    ஆண்


    “உன் சமையலறியில்
    நான் உப்பா சர்க்கரையா”

    பெண்


    “உன் படிக்கும் அறையில்
    நான் கண்களா புத்தகமா?”

    கீர்த்தி , விட்டு, நான்சி எல்லோரும் குதிக்கிறார்கள் எவ்வளவு அழகான மெலோடியசான பாடல் என்று.

    ”ஏய் வெள்ள அசிங்கமான பாட்டுடீ இது”

    “ இது அசிங்கமா. எப்புடி?”

    ஆம்பளைனா புத்தக அறை, கண்கள், புத்தகம். பெண் என்றால் சமயலறை, உப்பு, சர்க்கரை. இது அசிங்கமில்லையாடி வெள்ளப் பண்ணி?”

    “சரியாந்திர லூசுப்பா நீ”

Friday, August 16, 2013

நிலைத் தகவல்...10


சந்திர பாபுவின் சேட்டை கலந்த நகைச்சுவை எவ்வளவு ஆழமானவை என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ளும் நிலை இல்லை. அவரது நடிப்பின் உசரத்திற்கு ஒரு மில்லி மீட்டரும் குறைவானது அல்ல அவரது பாடல்கள்.

அத்தனை ரசத்திலும் பாடியிருக்கிறார்.எத்தகையப் பாடல்களுக்கும் ஏற்ப வளைந்து நெளிந்து கச்சிதமாகப் பொருந்தும் அவரது குரல்.

“ குங்குமப் பூவே
கொஞ்சும் புறாவே”
என்று கொஞ்சிக் குழையும் அவரது குரல்

“ நானொரு...
முட்டாளுங்க”
எனும் போது அவரது எள்ளலுக்கு ஏற்றபடி இசையும்.

“பிறக்கும் போதும்
அழுகின்றான்
இறக்கும் போதும்
அழுகின்றான்

ஒரு நாளேனும்
கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே”

என்ற பாடலில் பாடலின் வரிகளுக்கு அவரது குரலும் உச்சரிப்பும் என்னை வெகுவாய் ஈர்த்தன.

ஆனாலும் அத்தனையையும் மீறி என்னைப் பிசைந்தது அவரது கனமான குரலில் வந்து விழுந்த வரிகள்தான்.

ஆமாம் மனிதன் எதற்குத்தான் அழவில்லை.

மட்டுமல்ல ஒரே சோகத்திற்காக எத்தனை முறை தவனையில் அழுகிறான்.

ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறக்கும் நம்மை நினைத்து உளைந்து கொண்டிருந்த போது ஹெட்ஸி அனுப்பியிருந்த ஒரு விசயம் இதோடு வெகுவாகப் பொருந்திப் போகிறது.

ஒருவர் ஒரு நகைச்சுவைத் துணுக்கை சொல்கிறார். கூடியிருந்த கூட்டம் ஆரவாரிக்கிறது.

இரண்டாவது முறை அதை சொல்கிறார். இப்போது எழுபது சதம் பேர் ஆரவாரிக்கிறார்கள்.

மூன்றாவது முறை ஐம்பது சதமான ஆரவாரம், நான்காவது முறை சுத்தமாக நின்று போனது.

அப்போது அவர் சொன்னார்,
ஒரே நகைச்சுவைத் துணுக்கை நான்காவதுமுறை ரசிக்க மறுக்கும் நாம் ஏன் ஒரே கவலையை ஆயுசு முழுக்க சுமந்து தவணை முறையில் அழுகிறோம்.

அதானே.

முகநூலில் வாசிக்க

Thursday, August 15, 2013

நிலைத் தகவல்...9



  • நல்ல மழை

    பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

    ஒவ்வொரு ஊரிலும்

    ஒதுங்க கடைகளோ அல்லது வீடுகளோ இருக்கிற இடமாகப் பார்த்து பார்த்து பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் ஒவ்வொரு முறையும் மறக்காமல் சொன்னார்

    " மறக்காம கொடைய எடுத்துக்கங்க
    மழ வீடுற மட்டும் கொஞ்சம் ஒதுங்கிப் போங்க "

    மனிதமும்
    ஈரமும்
    முற்றாய்
    உலர்ந்து விட வில்லைதான்

    முக நூலில் வாசிக்க

Wednesday, August 14, 2013

நிலைத் தகவல்...8


  • இன்று காலை பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்து கொணலை என்ற இடத்தில் நின்றபோது மிகச் சரியாக பத்து இளைஞர்கள் ஏறினர். தமிழும் ஹிந்தியும் கலந்துதான் பேச முடிந்தது அவர்களால். சமயபுரத்திற்கு பயணச்சீட்டு வாங்கினர். சமயபுரத்திற்கு மூன்று கிலோமீட்டர் இருக்கும் போது ஒரு இடத்தில்அம் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். நிறுத்தச் சொல்லி இந்தியிலும் தமிழிலுமாக நடத்துநரிடம் கெஞ்சினர்.

    அந்த இடத்தில் எழும்பும் கட்டிடத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள். நடத்துநர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்.

    சமயபுரம் இறங்கி இங்கு வருவதெனில் நிச்சயம் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

    “எவ்வளவு சம்பளம்?” ஓட்டுநர் கேட்டார்.

    “ரெண்டு நூறு”

    ஓட்டுநர் அவர்கள் கேட்ட இடத்தில் பேருந்தை நிறுத்தினார். மகிழ்வோடு இறங்கினார்கள். நடத்துனரின் முகம் இறுகியது.

    “ நான் முடியாதுங்கறேன். நீ நிறுத்தினா என்னடா அர்த்தம்?”

    பதிலேதும் சொல்லாமல் ஓட்டுநர் சிரித்தார்.

    “என்ன நக்கலா”

    “இல்லடா மாப்ள. பீகார்ல இருந்து வந்திருக்காய்ங்க. இருனூறு ரூபாய்க்கு சக்கையா நம்மாலுங்க சுரண்டுறாங்க. ஏதோ நம்மால முடிஞ்சது ரெண்டு கிலோமீட்டர் நடைய குறச்சிருக்கோம். கோவப் படாதடா. குடிகாரங்க அலும்புக்கெல்லாம் ப்ரேக் போடுறதில்லையா?. பாவம் உழைக்கிறப் பசங்க உடுடா”

    நடத்துநர் எதுவும் பேசவில்லை.

    எனக்கு பேசியே ஆக வேண்டும் என்றாகிவிட்டது. கொட்டிவிட்டேன்.

    முகநூலில் பார்க்க

Tuesday, August 13, 2013

நிலைத் தகவல்...7


பொதுவாகவே இப்போது ”காம்ரேட்” மற்றும் அதன் அதன் தமிழ் பெயர்ப்பான “தோழர்” ஆகிய வார்த்தைகளை யாரும் அவ்வளவு இயல்பாக எடுத்துக் கொள்வதில்லை. பெரும்பாலும் இதை இயக்கத்தோடு பொருத்தியே பார்ப்பதால் இவற்றில் ஒன்றைக் கேட்கும் போதோ அல்லது பயன்படுத்தும் போதோ இயக்கத்தின் மீது இவர்களுக்கு உள்ள ஈடுபாடோ, கோவமோ, எரிச்சலோ, நக்கலோ சேர்ந்தேதான் தெறிக்கும்.

ஆனால் “தோழர்” என்ற சொல்லை தமிழுக்குத் தந்தவர் தந்தை பெரியார் என்பது பொது வெளியில் பலருக்கும் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் பெரியாரிஸ்டுகளில் சிலருக்கும் இடதுசாரி இளைய தோழர்களில் சிலருக்கும்கூடத் தெரியாது என்பதுதான் உண்மை.

மட்டுமல்ல, ”காம்ரேட்” என்ற பெயரில் முதன் முதலில் இந்தியாவிலிருந்து (கல்கத்தா) 1912-ல் இதழைத் தொடங்கி நடத்தியவர் முகமது அலி.

வார்த்தைகளில் சிறப்பாய், புனிதமாய் எதுவும் இல்லைதான். ஆனாலும் தோழா எனும் போது பொதுவை, சராசரியைத் தாண்டி கொஞ்சம் சிலிர்க்கத்தான் செய்கிறது போங்கள்.

முகநூலில் வாசிக்க

Saturday, August 10, 2013

புதியவன்


பொதுவாக நாம் இரண்டு வகையான குழுக்களிடம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தமிழ் போயிருக்க வேண்டிய உசரத்திற்கு கொஞ்சம் தள்ளியே இருப்பதற்கு இவர்கள்தான் காரணம்.

தமிழில் எதுவுமே இல்லை. தமிழை வைத்துக் கொண்டு பத்துப் பாத்திரம் வேண்டுமானால் கழுவலாம்என்று வெறி பிடித்து அலறும் அந்தத் திமிர், இந்தத் திமிர் என்று எல்லா வகைத் திமிர்களையும் கொட்டி நெய் விட்டுப் பிசைந்து தயாரிக்கப் பட்ட மேட்டுக் குடிகள் ஒருபுறம்.

இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல இரண்டாவது வகையினர். இவர்களைப் பொறுத்த வரைக்கும் , “ தமிழில் எல்லாம் இருக்கிறது. புதிதாய்த் தேவையே இல்லைஎன்று வறட்டுத் தனமாக கத்திக் கொண்டிருக்கும் சில புலமைத் தமிழர்கள்.

எதிரிகளைவிட மோசமானவர்கள் இவர்கள்.

ஏராளம் இருக்கிறது. ஆனால் இன்னும் தேவையும் இருக்கிறது என்ற புரிதலோடும் தாகத்தோடும் எழுதக்கூடிய, பேசக்கூடிய ஒரு எழுத்தாளரின் வலை “ புதியவன் பக்கம்.” ஷாஜஹான் அவர்களது வலை. இணையத்தில் இயங்கும் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் இவர்.

21.07.2013 அன்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடந்த ” தமிழ் இலக்கியத்தில் அறிவியல்” என்கிற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தான் பேசியதை அதே தலைப்பில் தனது வலையில் வைத்திருக்கிறார். அந்த ஒரு பதிவிற்காகவே இவரது வலையை அறிமுகம் செய்யலாம்.

” நீரின்றமையாது உலகெனின் யார் யார்க்கும்
வானின் றமையாது ஒழுகு” 

என்ற குறளை சொல்லிவிட்டு, நீரின்றிப்போனால் யாராலும் வாழ இயலாது என்பதையும் மழையற்றுப் போனால் நீரற்றுப் போகும் என்ற அறிவியல் உண்மைகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னமே தமிழிலக்கியத்தில்   
பதியப்பட்டிருப்பதை சரியாகவே இவரது வலை பகிர்கிறது. மட்டுமல்ல “water is the matrix of life" என்ற இதற்கு நிகரான ஆங்கில கருத்து நிச்சயமாய் தமிழுக்குப் பிந்தியதே என்பதையும் இவரது வலையில் பார்க்கிறபோது தமிழனாய் சிலிர்க்க நேர்வதைத் தவிர்க்க இயலாது.

“ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல்
மேல்நின்று தான் சுரத்த லான்”

என்ற இளங்கோ அடிகளின் வரிகளும் கூட வேண்டிய அளவு கவனிக்கப் படாத தமிழ் இலக்கியத்தின் அறிவியல் பதிவுகளே ஆகும்.  

நமக்கு தொல்காப்பியர் மீது சாதி சார்ந்தும் வடமொழி சார்ந்தும் அவர் இயங்கினார் என்று கருத இடமிருக்கும் காரணத்தால் விமர்சனம் உண்டு. 

“ ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே” என்று ஒவ்வொரு படிநிலக்கும் ஒவ்வொரு சொல்லை வைத்ததில் அந்தப் படிநிலைகள் சாதியப் படிநிலைகளோடே ஒத்துப் போவதாலும்,

” இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே” 

திசைச்சொல் என்று சொன்னபிறகு வடசொல் என்பதற்கு என்ன தேவை இருக்கிறது என்பதாலும் நமக்கு அவர்மீது விமர்சனம் உண்டு. அவை யாவும் கடந்து ”மொழி அறிவியல்” தமிழில் மிகச் சிறப்பாக இருப்பதை தொல்காப்பியர் சொல்லியுள்ளதை இந்த வலை சொல்லும் போது தொல்காப்பியரை அதற்காக நினைக்கவே தோன்றுகிறது. “ மொழி அறிவியல்” என்பதைவிட “ ஒலி அறிவியல்” என்பது சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

ஆங்கிலத்தில் 44 ஒலிகளை 26 எழுத்துக்களைக் கொண்டே பயன்படுத்த வேண்டி இருக்கும் போது தமிழில் எல்லா ஒலிகளுக்கும் எழுத்துக்கள் இருக்கும் உயர்வை ஷாஜஹான் அழகாக சொல்கிறார்.

மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து, இலக்கியத்தில் இருக்கிற ஆதாரபூர்வமான தகவல்களிலிருந்து தமிழரின் அறிவியல் சாதனைகளை ஆராய வேண்டும். தமிழில் அறிவியல் சொற்களை உருவாக்க வேண்டும். தரப்படுத்த வேண்டும், அவற்றைப் பரப்ப வேண்டும், பரவலாகப் பயன்படுத்த வைக்க வேண்டும்.” என்று மிகச் சரியாய் சொல்கிறது இந்தப் பதிவு.

" off side " என்ற ஈரானியப் படம் பற்றிய விமர்சனம் அதைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. ஈரானில் கால்பந்தாட்டம் பிரபலமானது. இரானிய இளைஞர்களுக்கு கால்பந்தாட்டத்தில் வெறியே உண்டு. இரானிய யுவதிகளுக்கும் அப்படியேதான் என்பதையும். அவர்கள் அதைப் பார்க்கக் கூடாது என்பதால் ஆண் வேடமணிந்து மைதானத்திற்குள் நுழைவதையும், காவலரிடம் மாட்டிக் கொள்வதையும் இறுதியில் வெற்றிக் கொண்டாட்டத்தில் காவலர்களும் திளைத்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் நழுவித் தப்பிப்பதையும் விமர்சிக்கும் போது காட்சிகள் அப்படியே கண்முன் வந்து போகின்றன.

எந்த வகையிலான ஆணாதிக்கக் கொடுமைகளையும் ஏதோ ஒரு புள்ளியில் ஏதோ ஒரு வடிவத்தில் அந்தந்த மண்ணின் பெண்கள் சாய்த்துப் போடவே செய்வார்கள் என்பதற்கான ஈரானிய செல்லுலாய்ட் சாட்சியம்தான் இந்தத் திரைப்படம்.

“ உளவையும் களவையும் நிந்தனை செய்வோம்” என்று ஒரு பதிவு. அவசியம் படிக்க வேண்டும்.

எல்லோரது இணைய தளங்களையும் அமெரிக்கா உளவு பார்ப்பதை எல்லோரும் கடுமையாக சாடிக் கொண்டிருந்த போது அதை அப்படியே ஏற்றுக் கொண்ட அதே வேளையில் இந்தியக் குடிகளையே இந்திய உளவுத்துறை வறுத்தெடுத்ததை இவர் அழகாகப் பதிகிறார்.

ராஜீவ் கொலை செய்யப் பட்டபோது இவர் கண்காணிக்கப் பட்டதை சிரிக்க சிரிக்கப் பதிந்திருக்கிறார்.

பாபர் மசூதிப் பிரச்சினை உச்சத்தில் இருந்த போதும் இவர் இவரது பெயரினிமித்தம் இவர் கண்காணிக்கப் பட்ட தகவல்களும் சுவையாக இந்த வலையில் இருக்கின்றன.

தமிழை இணையத்தின் வழி அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப் போகும் வலைகளுள் “ புதியவன் பக்கமும்” ஒன்று”

பாருங்கள்,

http://pudhiavan.blogspot.in/

நன்றி : புதிய தரிசனம்


Tuesday, August 6, 2013

நிலைத் தகவல்...6


நிலைத் தகவல்...5

”காக்கை சிறகினிலே” ஆசிரியர் குழு கூட்டம் சென்னையில். ஜன்னல் கண்ணாடி இல்லாத பேருந்தில் ஏறி குளிரில் விறத்துப் போய் ஒரு வழியாய் தாம்பரத்தில் விட்டால் போதுமென்று இறங்கி ஓடிப் போய் ரயிலேறி சைதாப்பேட்டை வந்து சேர்ந்த பொழுது மணி ஐந்தரை.

ரயிலடியை விட்டு வெளியே வந்தேன். இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தைத் தாண்டும் போது பிச்சை எடுக்கும் தோழர் ஒருவர் ஒருவர் என்னைத் தாண்டிப் போய் என்னைத் தொடர்ந்து வந்தவரிடம் பிச்சைக் கேட்டார். பிச்சை எடுக்கும் தோழருக்கு நம் நிலமை தெரிந்திருக்கிறது.

“இப்படிக் காலங்காத்தால ஏன்யா வந்து கழுத்த அறுக்குறீங்க?” அலுத்துக் கொண்டார் கேட்கப் பட்டவர்.

“அட்டவணைப் போட்டா சாமி தர்மங் கேட்க முடியும்?”

அந்தப் பிச்சைக் காரத் தோழரின் எள்ளலில் தர்க்க நியாயம் இருப்பதாகவேப் பட்டது.


நிலைத் த்கவலிட்டது 10.12.2011

முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/eraaedwin/posts/290500764324774

நிலைத் தகவல்...4

நீக்கியவர்களோடு எந்தவிதத் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று அவருக்கே உரிய முறையில் திட்ட வட்டமாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

இதில் இரண்டு இருக்கின்றன.

தொண்டர்களுக்கு சுத்தமாய்ப் பிடிக்காத, எப்போதோ நீக்கப் பட்டிருக்க வேண்டியவர்களோடு இவ்வளவு காலம் இவ்வளவு காலம் தொடர்போடும் உறவோடும் இருந்தவரை, நீக்கிய நொடியிலேயே, குறைந்த பட்சம் ”நீங்க உள்ளவிட்டா நாங்க கும்பிட வேண்டும், தூக்கி எறிஞ்சா தொடர்பைத் துண்டிக்க வேண்டுமா?” என்று கூட கேட்காமல் மன்னித்த தொண்டன் ஒன்று...

மன்னார்குடி போனதும் மயிலாப்பூர் விஷம் வந்து குடியேறியது இரண்டு...

முடிக்கும் போது மூக்கை துறுத்திக் கொண்டு நீட்டும் மூன்றாவதாய் ..., “ஆமாம் , மன்னார்குடி போனால் மயிலாப்பூர்...தொண்டர்களை நம்பவே மட்டீர்களா நீங்கள்?


நிலைத் தகவலிட்டது 30.12.2011

முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/eraaedwin/posts/301815573193293

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...