Tuesday, October 31, 2023

இப்படிக்கூட ஐ லவ் யூ சொல்லலாமா கார்த்திக்


அன்பின் கார்த்திக்,
வணக்கம்
மகளும் பேத்தியும் நலமா?
“நித்தம் ஒரு வானம்” பார்த்துவிட்டு நான் ரசித்த ஒவ்வொரு பகுதியாக கலையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
ஒன்று தெரியுமா கார்த்திக்,
அதற்கு முன்னதாகவே அவள் ஆறேழுமுறை அந்தப் படத்தைப் பார்த்திருந்தாள்
இதுதான் சரியான மொழி என்று சொல்வதற்குரிய சினிமா மொழி குறித்த ஞானமெல்லாம் எனக்கில்லை
ஆனால், நான் விரும்புகிற, கேட்கத் தவமிருக்கிற ஒரு மொழிக்கு மிக நெருக்கமான மொழியோடு ஒரு படத்தைத் தந்திருக்கிறீர்கள்
எந்த நேரம் வேண்டுமானாலும் பொத்துக் கொள்வேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது வானம்
சன்னமாக பயத்தைக் கொடுக்கக்கூடியக் காற்று
கண்ணில் பட்ட ஒரே ஒரு நேரக்காப்பாளரும் தூங்க மூஞ்சி
நேரக் காப்பாளருக்கு ஆங்கிலம் தெரியாது
இவனுக்கு இந்தி தெரியாது
அந்த இடத்தில் தன் மொழியில் ஒருத்தி அழுதுகொண்டு இருப்பதேகூட எவ்வளவு ஒரு நம்பிக்கையை இவனுக்குத் தருகிறது
இந்த நம்பிக்கை இருக்கிறது பாருங்கள்,
மொழி சார்ந்து இன்னொரு இடமும் இருக்கிறது
கொல்கத்தாவில் வாடகைக் காரில் போகிறபோது சுபா ஓட்டுனரின் மொழியான மலையாளத்தில் பேசும்போது அந்த ஓட்டுனருக்கு ஏற்படும் மகிழ்ச்சி
இந்த இரண்டு இடங்களும் கூர்மையான மொழிக் கூறுகள்
அர்ஜுனுக்கும் சுபாவிற்கும் அப்பன் வயது எனக்கு
இந்த ரெண்டு குழந்தைகளும் ஒன்றாகப் பேருந்து ஏறாதா என்று ஏங்க வைத்துவிட்டீர்கள் கார்த்திக்
இவள் கொல்கத்தா போகவில்லை என்று அறிய வருகிறபோது மனது கிழிகிறது
ஒரு வழியாக அவளும் கொல்கத்தா கிளம்ப அப்பாடா என்று இருக்கிறது
அந்த இருவருக்கும் இடையே அந்த அர்த்த ராத்திரியில் அந்தப் பேருந்து நிலையத்தில் நடக்கும் சண்டை இருக்கிறது பாருங்கள்
அது எங்கள் வீட்டு சுவரில் எதிர்த்த வீட்டுக் குழந்தை கிரிஷ் வரைந்த கிறுக்கலையொத்த பேரழகு
கவிதை, கவிதை
அந்த மீனாட்சிப் பொண்ணு
மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பவனிடம்
உங்களோடு ரெண்டு நிமிஷம் பேசனும், கொஞ்சம் பயப்படாம வாங்க என்று அவனது டையலாகையே திருப்பி அவனுக்குக் கொடுப்பதும்
பைக்கில் வேகமாக போகும்போது
இவ்வளவு சீக்கிரமா போகனுமா? எனக் கேட்பது இருக்கிறதே
அந்தக் காற்று
அந்தக் காற்றில் அலைபாயும் கூந்தல், உடை
அந்த உச்ச டெசிமல் குரல்
இப்படிக்கூட ஐ லவ் யூ சொல்லலாமா கார்த்திக்
ரிஜிஸ்டர் ஆபீஸ்
இந்தப் பையன் அவனது தோழியிடம்,
மீனாட்சி என்ன நினைப்பாளோ அப்படி இப்படி என்று உழட்டிக்கொண்டு இருக்கும்போது
அவன் கன்னத்தைத் திருப்பி அங்க பார் என்று எந்தச் சலனமும் இல்லாமல் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கும் மீனாசியைக் காட்டும் இவனது தோழி
அய்ய்ய்யோ
அப்படி ஒரு கவிதை
மதி வரும் காட்சிகள் எல்லாம்
ஒரு கிராமத்துப் பெண்ணின் சுட்டித்தனத்தை, அப்பன் மீது அவளுக்குள்ள அன்பை அக்கறையை
ஒரு நூல் அப்படி இப்படி நகர்ந்திருந்தால் அடங்காப் பிடாரியாக மாற்றியிருக்கும்
பார்ப்பதற்கு எளிதாகத் தோறும்
கம்பிமேல் நடந்திருக்கிறீர்கள்
ஒருகட்டத்தில் இருந்து
இந்த இரண்டு கழுதைகளும் (அர்ஜுனும், சுதாவும்) காதலித்து விடாதுகளா என்று ஏங்க வைத்திருக்கிறீர்கள்
சொல்லிட்டு வரமாட்டியா? எங்கெங்க தேடறது
பதற வேண்டி இருக்கு என்று கத்திக் கொண்டிருப்பவனை தோள்சுற்றி அணைக்கும் இடம் இருக்கிறது பாருங்கள்
அய்யோ அய்யோ
அவளது முன்னாள் காதலனை பார்த்து அறைகிற இடம் வரைக்கும் சரி
அந்தப் பூந்தொட்டியை எடுத்து காரில் போட்டுவிட்டு அர்ஜுன் கையைப் பிணைத்துக் கொண்டு ஓடுகிற இடம் இருக்கிறதே
ஒரு அழகான கவிதையை இப்படி யாரேனும் காட்சிப் படுத்திவிட மாட்டார்களா என்று ஏங்கியதுண்டு
பார்க்க வாய்த்திருக்கிறது
அப்படியாக கலையிடம் சொல்லிக் கொண்டே வரும்போது
“தினமும் சந்தோசமா ’குட் நைட்’ சொல்லி தூங்க வைத்துடுவேன். காலையில் ‘குட் மார்னிங்’ சொல்ல எழுப்பும் முன்னர் ஒரு பயம் கவ்வும்” என்று ஜீவா சொல்லும் இடத்தை சொல்கிறேன்
அழுகையின் கீற்றா
சின்ன விசும்பலா
யூகிக்க முடியவில்லை
பாஸ் பட்டன் தானாகவேத் தன்னை அழுத்தி எங்கள் உரையாடலை கொஞ்சம் நிறுத்துகிறது
அவளே வருகிறாள்
யாழினி போகும்வரைக்கும் நான் அனுபவித்த கொடுமைப்பா. இரவில் ரெஸ்ட்ரூம் போக எழும்போதும் இருக்கிறாளா என்று பார்ப்பேன். எதிரிக்கும் இந்த நிலை கூடாது சாமி”
என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள படாத பாடு படுகிறேன்
இல்ல பாப்பா, அது இது என்று ஏதேதோ உளறி மடைமாற்ற முயற்சி செய்கிறேன்
அதிகபட்சம் நான்கு பௌர்ணமிகள் என்ற அளவிலான உத்திரவாதத்தோடு கைக்குழந்தையை மருத்துவர் அறையில் கொண்டு வந்தவள் அவள்
ஜீவா அப்படி சொல்ல சொல்ல மொட்டை அடித்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் என் மரணம் தாண்டியும் வாழவேண்டும் என்று இயற்கையோடு உரையாடலை என்னையறியாமல் செய்திருக்கிறேன் என்பது
என் பைத்தியக்காரத் தனமா?
இல்லை கார்த்திக், அது உங்களது சினிமா மொழியின் வெற்றி,
”சினிமாத்தனம்” என்று சிலவற்றை ஒதுக்கித் தள்ளிவிடும் பொதுப்புத்தி உண்டுதான்
உறங்கும் அனைவரும் எழுவோமா தெரியாது?
ஆனால், அப்பாடா, இன்று எழுந்துவிட்டாள் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நிலை இருக்கும் எனில்,
வேண்டாம் கார்த்திக்,
எதிரிக்கும் அப்படி ஒரு நிலை வேண்டாம். அது ஒரு கடுமையான வலி.
அந்த வலியை அப்படி ஒரு நேர்த்தியோடு சினிமாவழி கொண்டு வந்திருக்கிறீர்கள்
அதில் நடித்த அனைவருமே வாழ்ந்திருக்கிறார்கள்
வாழ வைத்திருக்கிறீர்கள்
இந்தப் படத்தை சரவணன் (சரவணன் கலையின் இணையர்) பார்த்தால்
ஜீவா அனுபவிக்கிற இந்த வலியத்தான் அப்போது கலை அனுபவித்தாள் என்றோ அல்லது கலையோட வலியை ஜீவாவிடம் பார்க்கிறேன் என்றோ கூறியிருப்பார்
அப்படி ஒரு ஞானம்
மதி எபிசோடில் உங்களையும் அறியாமல் கொஞ்சம் நாடகத்தனம் இருக்கிறது என்பதைக்கூட எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகத்தான் சொல்ல வேண்டியதாகிறது
மகிழ்ந்திருங்க கார்த்திக்
அன்புடன்,
இரா.எட்வின்
28.10.2023

குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டால்

  ”Save the children" அமைப்பின் தலைவர் ஜேசன் லீ தருகிற புள்ளி விவரம் அதிர்ச்சி     அளிக்கிறது

2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து கணக்கில் கொள்ளப்பட்ட 22 நாடுகளில் மொத்தம் 2674 குழந்தைகளும்
2021 ஆம் ஆண்டில் கணக்கில் கொள்ளப்பட்ட 24 நாடுகளில் 2515 குழந்தைகளும்
2022 ஆம் ஆண்டு அதே 24 நாடுகளில் 2985 குழந்தைகளும்
கொல்லப்பட்டிருக்கிறார்கள்
ஆனால் 07.10.2023 முதல் 29.10.2023 வரை மட்டும்
காசாவில் மட்டும் 3300 குழந்தைகளும்
மேற்குக் கரையில் மட்டும் 36 குழந்தைகளும் கொல்லப்படிருப்பதாக அவர் கூறுகிறார்
அய்யங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன
ஏற்கனவே அங்கு இளைஞர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு
இப்போது ஏறத்தாழ 3500 என்று சொல்லப்படும் எண்ணிக்கை கூடக்கூடும்
ஏற்கனவே இளாஇஞர்கள் இல்லை
இப்போது குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டால்
ஒரு கட்டத்தில் காசாவில் மக்களே இல்லை என்றாகும் ஆபத்து இருக்கிறது
போக வருடத்திற்கு உலகில் சராசரியாக 3000 குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் என்ற 31.10.2023 நாளிட்ட தீக்கதிர் தகவல் எழுப்புகிற அச்சம்
இது இப்படி எனில்,
வருடா வருடம் நோயினால், சத்துக் குறைபாட்டினால், விபத்தினால் இறக்கிற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு
இத்தனைக் குழந்தைகள் வருடா வருடம் ஏதோ ஒரு வகையில் இறப்பதை சகிப்பது குற்றம்

Saturday, October 28, 2023

அந்தக் கிழவரையும் எதிர்கொண்டுதான் வந்திருக்கிறோம்

    ஒன்று தெரியுமா ரவி

    சென்னை வருகிறார் காந்தி

நாடு முழுமையும் ஏற்கிற போதும் தமிழர்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பது அவரிடம் வைக்கப்பட்ட கேள்வி
அது சிறுபாண்மையினரின் கொடுங்கோண்மை என்கிறார் கிழவர்
அந்தக் கிழவரையும் எதிர்கொண்டுதான் வந்திருக்கிறோம்
அவர் யாரென்பதை யாரளவிற்கும் குறையாது அறிவோம்
1947 ஆகஸ்ட் மத்தியில் நவகாளி நோக்கி நடந்து கொண்டிருந்த கிழவரை விட்டு விடுங்கள் ரவி
இந்தியா நாளைக்கு சிந்திக்க இருப்பதை வங்கம் முதல்நாளே சிந்திக்கத் தொடங்கும் என்பார்கள்
நாங்கள் ஒரு வாரம் முன்னதாகவே சிந்திக்க ஆரம்பித்திருப்போம்
அம்பலப்பட்டு அசிங்கப்பட வேண்டாம்

28.10.2023
All react

Friday, October 27, 2023

அத இப்படி புரியற மாதிரி தமிழ்ல சொல்லி இருக்கலாம்ல

டக்கர்

சிதார்த் நடித்த படம்

அதில் ஒரு காட்சி

பாரதிக்கும் வ.ரா விற்கும் இடையே 113 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அவர்களுக்கிடையேயான முதல் உரையாடலை நினைவிற்கு கொண்டு வந்தது

பாரதியைச் சந்திக்க வ.ரா வந்திருப்பார்

பாரதியார் மாடியிலிருந்து கீழே வருகிறார்

பாரதியோடு ஆங்கிலத்தில் பேசினால் மகிழ்வார் என்று கருதிய வ.ரா ஆங்கிலத்தில் பேசுகிறார்

பாரதி திரும்புகிறார்

வ.ரா அழைக்கிறார்

பாரதி கேட்கிறார்,

"இன்னும் எத்தனை காலத்திற்குதான் ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசுவீர்கள்?"

இப்போது படத்திற்கு வருவோம்

ஒரு முடிதிருத்தும் கடைக்கு சித்தார்த் வருகிறார்

ஊழியரிடம்

ஒரு படத்தைக் காட்டுவார்

அதில் சன்னமாக முறுக்கிய மீசையும் குறுந்தாடியுமாக ஒருவர்

அதைக் காட்டி

இந்த முஷ்டேச் இருக்கட்டும்

பியர்ட் எடுத்திடு

அந்தத் தம்பி முடித்திட்டு

எப்படிங்கண்ணா இருக்கு என்று கேட்பார்

பார்த்த சித்தார்த் அதிர்ந்திடுவார்

மீசையை எடுத்துவிட்டு தாடியை வைத்திருப்பார்

அடிக்க ஆரம்பிப்பார்

முதலாளி தலையிடுவார்

இந்தண்ணன்தான் பியர்ட வச்சிட்டு முஷ்டேச்ச எடுக்க சொன்னார்

அதத்தான் செஞ்சேன்

அதான பியர்ட வச்சுட்டு முஷ்டேச்சதான எடுத்திருக்கான் நீங்க கேட்டபடி

பியர்ட்னா தாடின்னும் முஷ்டேச்னா மீசைன்னும் புரிய வைப்பார் சித்தார்த்

முதலாளி சொல்வார்

அத இப்படி புரியற மாதிரி தமிழ்ல சொல்லி இருக்கலாம்ல

All 

அன்புடுத்தி அலைவோம்





நவராத்திரிப் பண்டிகை பாஜகவின் வயிற்றில் புளியைக் கறைத்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

நம்புங்கள்

நடந்திருக்கிறது

ஆமாம்,

உத்திரப் பிரதேசம் மாநிலம்

தியோரியா மாவட்டம்

புஜோலி கிராமம்

நவராத்திரியின் ஒரு கொண்டாட்டமான “கன்யா பூஜை” கொண்டாடப் படுகிறது

1500 மக்கள்

சிறப்பான விருந்து

குழந்தைகளுக்கு உடைகள், பரிசுகள்

இதிலென்ன நீ கொண்டாடவும் பாஜக அதிர்ச்சியடையவும் இருக்கிறது

இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட 1500 மக்களும் இந்துக்கள்

விழாவை ஏற்பாடு செய்து நடத்தியவர் இஸ்லாமியர்

மும்பை

நவராத்திரியின் இன்னொரு முக்கிய நிகழ்வான “கர்பா”

மும்பையின் மூன்று பிரபல இஸ்லாமியப் பாடகர்கள் துர்காவை வணங்கிவிட்டு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்

இஸ்லாமியர்களும் இந்துக்களுமாக பங்கேற்கிறார்கள்

சத்தீஸ்கரிலும் இஸ்லாமியர்கள் ”மா தண்டேஸ்வரி” என்ற பிரபலமான இந்துக் கோவிலுக்குள் சென்று நெய்விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள்

இந்தச் செய்திகளோடு வயிற்றில் பால் வார்த்திருக்கிறது 27.10.2023 தீக்கதிரின் மூன்றாம் பக்கம் 

அன்புடுத்தி அலைவோம்

Wednesday, October 11, 2023

ஒருவரும் கை உயர்த்தவில்லை

 சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒன்றாக இருக்கிற மக்களை பிளவுபடுத்தாதா ராகுல்

பல இடங்களில் ஒருத்தர்கூட இல்ல
பல இடங்களில் ஒருத்தராவே இருக்கீங்களேப்பா
அர்த்தமே இல்லிங்க ராகுல்
அப்படியா
இங்க இருக்கிற பத்திரிக்கையாளர்களில் எத்தனை பேர் ஓபிசி
ஒருவரும் கை உயர்த்தவில்லை
சரி, எத்தனைபேர் பட்டியல் இனம்
இப்போதும் யாரும் கை உயர்த்தவல்லை
இதற்காகத்தான் நண்பர்களே
முத்தம் ராகுல்

Tuesday, October 10, 2023

தேர்தலின்போது குஜராத் செல்லுங்கள்

 அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்
எக்ஸ்-ரே விலிருந்து
அறுவைக் கூடம் வரை ஒரே இடத்தில்
நம்பவே நம்ப முடியவில்லை என்றும்
வானளவு உயர்ந்து நிற்கிறது தமிழ்நாடு மருத்துவத் துறை என்றும்
வியப்பின் உச்சியில் மயக்கம் போடாத குறையாக வாயைப் பிளக்கிறது குஜராத்தில் இருந்து வந்துள்ள மருத்துவர் குழு
பிரதமர் மாநிலம் மாநிலமாக சென்று தமிழ்நாடு குறித்து கேவலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் பிரதமர்
பிரியத்திற்குரிய முதல்வர் அவர்களே
தேர்தலின்போது குஜராத் செல்லுங்கள்
குழந்தைகளுக்கான காலை உணவு
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து
குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை
நமது மருத்துவக் கட்டமைப்பு
கல்விக் கட்டமைப்பு
இந்து அறநிலையத்துறை செயல்பாடு
இங்குள்ள அன்பின் ஈரம்
அனைத்தையும் எடுத்து வையுங்கள்
பிரசுரங்களை கொண்டு செல்லுங்கள்
குஜராத் முதலாளிகள் வளர்ந்து கொண்டே இருக்க மக்கள் தேய்வதை எடுத்துச் சொல்லுங்கள்
அதற்கு காரணமான பாஜகவை அம்பலப் படுத்துங்கள்
விடக்கூடாது ஸ்டாலின் சார்
நன்றி
அன்புடன்,
இரா.எட்வின்
09.10.2023

Sunday, October 8, 2023

நான் உள்ளிட்ட தமிழ் மக்களின் நேயர் விருப்பம்

 “எங்கு சென்றாலும் தமிழ்நாட்டை மறக்க முடியாதவராகவே பிரதமர் இருக்கிறார்”

என்று அவருக்கே உரிய தொனியில் நக்கல் செய்திருக்கிறார் முதல்வர்

நக்கல்தான் என்றாலும் அதற்குள் குழைந்து கிடக்கும் கோவத்தின் வெப்பத்தை தமிழ் மக்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்

இன்னும் சரியாக சொல்வதெனில்,

அவரது கோவம் குழைந்த பகடிக்கு நான் உள்ளிட்ட தமிழர்கள் ரசிகர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்

அவர் 

இன்னும் உக்கிரமாக

இன்னும் பேரதிக நக்கலைக் குழைத்து

பிரதமரை எதிர்கொள்ள வேண்டும் என்பது

நான் உள்ளிட்ட தமிழ் மக்களின் நேயர் விருப்பம் 

தமிழ் மண்ணில் உள்ள “இந்து அறநிலையத் துறை” குறித்து ஏதும் அறியாதவராக

கிட்டத்தட்ட அண்ணாமலைக்கும் திரு H.ராஜா அளவிற்கும் இறங்கி பிரதமர் பேசுவது

அவர் நமக்கும் பிரதமர் என்பதால் கொஞ்சம் வலியைக் கொடுக்கிறது

அசிங்கமாக இருக்கிறது

தெற்குப் பகுதியில் மக்கள் அசிங்கமாகத்தான் இதைப் பார்ப்பார்கள் என்பது அவருக்கும் தெரியும்

பிறகு ஏன் அசிங்கப்படுகிறோம் என்று தெரிந்தும் இப்படி பேசுகிறார்?

இது வடக்கிற்கான அவரது பிரச்சார யுக்தி

தெற்கில் இது பொய் என்று புலப்படுவது மாதிரி வடக்கில் புலப்படாது என்பது அவருக்குத் தெரியும்

கோவிலை திமுக ஆட்டையப் போடுகிறது என்று சொன்னால் தெற்கில் சிரிப்பார்கள்

அடப் போயா என்று நக்கலிப்பார்கள்

ஆனால் வடக்கில் அப்படியா என்று வியப்பார்கள்

அப்படியாகவே அவர்களை படாத பாடுபட்டு பாதுகாத்து வருகிறார்கள்

அவர்களிடம்

எங்களை விட்டால் உங்கள் கோவிலுக்கு பாதுகாப்பில்லை என்கிறார்

ஆகவே எங்களைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்

இந்தியாவை வெற்றி கொள்ளாமல் மாநிலத்தை மட்டும் வென்றால் அவர்கள் 

ரவியை அனுப்புவார்கள்

தமிழிசையை அனுப்புவார்கள்

பெரியாரை

அம்பேத்காரை

வைகுந்தரை

நாராயண குருவை 

அவர்களுடைய பாஷையில் அவர்களிடம் கொண்டுபோக வேண்டும்

Saturday, October 7, 2023

ராகுலைப் பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டது பாஜக



 அக்ரானி பத்திரிக்கையில் 1945 ஆண்டு வெளி வந்த கார்டூன் படத்தை தோழர் ஷாஜி (Shahjahan R) தனது முகநூல் பக்கத்தில் வைத்திருக்கிறார்




அவரே அந்தப் பகுதியில் எழுதியிருப்பதுபோல அது ”இந்துராஷ்ட்ரா” வாக மாறுகிறது
”அக்ரானி” தடை செய்யப்பட்டதுதான் காரணம்
01.11.1947 அன்று நடைபெற்ற இந்துராஷ்ட்ரா இதழின் பங்குதாரர்களின் கூட்டத்தில் கோட்சே பேசியதை தோழர் அருணன் தனது “கோட்சேயின் குருமார்கள்” என்ற நூலின் 11 ஆம் பக்கத்தில் தருகிறார்
கோட்சே பேசுகிறான்
“தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியும் என்று காந்தி கூறினார். இந்தியா பிளக்கப் பட்டு விட்டது.
காந்தி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்”
அதன் பிறகு 100 நாட்களுக்குள் கோட்சே காந்தியைக் கொன்றான்
இப்போது ராகுலையும் ராவணனாக பாஜக சித்தரித்திருப்பதாக கேள்விப்படுகிறேன்



ராகுலை காந்தி அளவிற்கு உயரிய அளவில் சமமாக வைத்துப் பார்க்கிறதா என்று தெரியவில்லை
ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்
ராகுல் கவனமாக இருக்க வேண்டும்
ஒன்று சொல்லி முடிக்கலாம்
ராகுலைப் பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டது பாஜக

Friday, October 6, 2023

அனைவருக்கும் இது புரிந்துவிடக் கூடாது என்பதில்

 


அன்பின் முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்

“வள்ளலார் 200” நிகழ்வில் உங்களது உரையைக் கேட்டேன்




அதில் இருந்தே இந்தக் கடிதத்தைத் துவங்கிவிடலாம் என்றே கருதுகிறேன்

முதலில் உங்களது அந்த உரை குறித்து ஒன்று சொல்லிவிட வேண்டும்

அந்த உரையில் உங்களது செழுமையான ஹோம் ஒர்க்கைக் காணா முடிகிறது

வழக்கமாக உங்களது உரையை கிண்டலடிப்பவர்களுக்கு

அடிகளாரின்24 வது பாடலான

“சாதியயிலே                                                                                                                                    மதங்களிலே                                                                                                                                              சாத்திரச் சந்தடிகளிலே                                                                                                                     கோத்திரச் சண்டையிலே”

என்பதை அச்சுப் பிசகாமல் நீங்கள் கூரியது உங்கள் எதிரிகளுக்கு  ஆச்சரியத்தையும் எரிச்சலையும் தந்திருக்கக் கூடும்

எங்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது

நீங்கள் சொன்னதுதான்

தமிழ்நாட்டுக்காரர்கள் பெரியாரையும் எடுக்கிறார்கள் வள்ளலாரையும் எடுக்கிறார்கள் என்பதுதான் நமது எதிரிகளுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது

அந்த உரையின் ஓரிடத்தில்

எந்த மாநிலத்திற்குப் போனாலும் பிரதமர் தமிழ்நாடு குறித்தே பேசுகிறார் என்று கூறினீர்கள்

ஆமாம் சார்,

தமிழ்நாடு பிரதமரை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை

ஒரு மாநிலத்தில் உரையாற்றும்போது இன்னொரு மாநிலத்தைக் குறித்து பிரதமர் விமர்சிப்பது சரியல்ல என்று மிகச் சரியாக சொன்னீர்கள்

இந்த இடத்தைதான் இந்தக் கடிதத்திற்கான சரியான இடமாக நான் பார்க்கிறேன்

அவர் இந்தியா முழுமைக்கும் பிரதமர் என்பதை அவர் உணராத போதும் அவர்தான் நமக்கும் பிரதமர் என்பதை தமிழ்நாடு உணர்ந்தே இருக்கிறது

நமக்கும் பிரதமரான அவரே பிற மாநிலத்தில் நிற்கும்போது நம்மை விமர்சிப்பது தவறு

அதுவும் தப்புத் தப்பாக விமர்சிப்பது என்பது பெருந்தவறு

அப்படி இருக்க,

உத்திரப் பிரதேசத்தில் இருந்து 

அந்த மாநிலத்தின் தற்போதைய முதல்வரின் படத்தினை அட்டைப் படமாகக் கொண்ட இரண்டு புத்தகங்கள் நமது பள்ளிகளுக்கு அனுப்பப் படுகின்றன

ஒரு கடிதமும் இருக்கிறது

அனைத்தும் இந்தியில்

அந்தக் கடிதத்தை கூகிலில் வைத்து மொழி பெயர்த்தால்

யோகி

பெண்களுக்காக,

விவசாயிகளுக்காக

இளைஞர்களுக்காக

புவிசார்ந்த சகிப்புத் தன்மைக்காக

பாடுபட்டு வருகிறார் என்று இருக்கிறது

இவை எல்லாம் பொய் என்பது ஒரு புறம் இருக்கட்டும்

அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன?

அதை ஏன் நமக்கு அனுப்ப வேண்டும்

இரண்டு அய்யங்கள் எம் அன்பிற்குரிய முதல்வர் அவர்களே

ஒன்று யோகி இப்போதோ அடுத்தோ பிரதமர் வேட்பாளராக நிற்கக் கூடும் 

அதற்கான தயாரிப்பாகவும் இருக்கக் கூடும்

அல்லது,

தமிழ்நாட்டில் மதக் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருக்கக் கூடும்

இவை இரண்டும் யூகம்தான்

வெறுமனே யோகியை இந்திரன் சந்திரன் என்றுகூட இருக்கலாம்

இருந்துவிட்டு போகட்டும்

அதை ஏன் நமக்கு அனுப்ப வேண்டும்

இவை இந்தியில் இருப்பதை

வெறும் திணிப்பாகவும் கொள்ளலாம்

இந்தியில் அனுப்பினால் யார் படிப்பார்கள். கிறுக்குத் தனம் என்று அலட்சியமாகவும் தள்ளலாம்

வாலி சிஹாவிற்கு தந்தை அம்பேத்கர் எழுதிய கடிதத்தில்

”பிக்குகள் மக்களின் மொழியை அறிந்திருக்க வில்லை”

என்று குறிப்பிடுவார்

இவர்கள் நம் மொழியில் அனுப்பாமல் இந்தியில் அனுப்புவதைக் கூட மொழி அரசியலாகவே நான் பார்க்கிறேன்

அனைவருக்கும் இது புரிந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்

அனைவரும் படித்துவிட்டால் கொந்தளிப்பு கிளம்பும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்

அவர்கள் அனுதாபிகள் 10 பேருக்குப் போனால் போதும்

அவர்கள் தேடுவார்கள்

தொடர்பு கொள்வார்கள்

அவர்களை அடையாளம் கண்டு அணிதிரட்டலாம் என்ற ஏற்பாடாகவே இதை நான் அய்யுறுகிறேன்

தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கிறேன் சார்

கத்திக் கொண்டும் இருப்பேன் ஸ்டாலின் சார்

நன்றி, 

அன்புடன்,                                                               

இரா.எட்வின்                                                             

06.10.2023


                

Wednesday, October 4, 2023

தைரியமாக சாகலாம்

ன்பின் முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்
சத்தமே இல்லாமல்,
எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் நீங்கள் செய்திருக்கும் ஒரு விஷயம் குறித்து நெகிழ்ந்து போயிருக்கிறேன்
சென்னை சைதை பகுதியில் உள்ள 150 பெண்களுக்கு நாளை நீங்கள் ஆட்டோ வழங்க இருக்கிறீர்கள்
தீவுத் திடலில் நிகழ்ச்சி
ஆட்டோவிற்காக ஒரு லட்சம் ரூபாய் மான்யம்
மீதித் தொகை வங்கிக் கடன்
அதிலும் இரண்டு தவனைகளை பஜாஜிடமே வாங்கி அந்தத் தொகையை நாளை பயனாளிகளிடம் வழங்குகிறீர்கள்
இவை எல்லாம்கூட சாதாரணம்தான்
பயானாளிகளுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் மா.சு அவர்கள் ஏற்பாடு செய்கிறார்
பயிற்சி கொடுத்து லைசென்ஸ் பெற்று பேச் வாங்குவதற்கான தொகையையும் அமைச்சர் ஏற்பாடு செய்கிறார்
பயனாளிகள் சிலர் பயிற்சி பெறுவதை நான் பார்க்க வாய்த்தது
பயிற்சி கொடுப்பபவர்களுள் ஒருவரான புஷ்பராஜ் என் தோழர்
அவரது இணையர் அஞ்சலியும் ஒருவர்
நேற்று சென்னை வந்திருந்த என்னை அழைத்துக் கொண்உ போகும்போதுதான் பயனாளிகளுக்கான பேச் வாங்கினார்



இதிலும் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை என்றெல்லாம் சொல்ல இயலாது
தானே பயன்படுத்தாமல் வாடகைக்கு விடக்கூடும்
கணவன்மார்கள் ஓட்டக்கூடும்
ஆனாலும் இவற்றைக்கூட தவறென்று சொல்ல முடியாது
புஷ்பராஜ் சொன்னார்,
”இனி அஞ்சலி என்னை எதிர்பார்த்து இருக்கத் தேவையில்லை தோழர்
நான் இல்லாவிட்டாலும் சமாளிச்சிடுவாங்க
தைரியமாக சாகலாம்”
இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நம்பிக்கையை எந்த டிக்‌ஷனரியிலும் தேட இயலாது
நமக்குப் பின்னால் குடும்பம் என்ன ஆகுமோ என்ற பயம் இருக்கிறது பாருங்கள்
அது மிக மிகக் கொடுமையானது
அந்தக் கொடுமையான பயத்தைப் போக்கி ஒரு 150 குடும்பங்களில் நாளை நிம்மதியை விதைக்கிறீர்கள்
நெகிழ்ந்து உங்கள் கைகளைப் பற்றிக் கொள்கிறேன்
மகிழ்ந்திருங்க சார்
மிக்க நன்றி
அன்புடன்,
இரா.எட்வின்
04.10.2023

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...