Thursday, January 7, 2016

தேர்தல் அறிக்கைகளை ஏரிகள் நிரப்பும்.

ஆக சமீபத்தில் என்னைக் கவர்ந்த அரசு அதிகாரிகளில் மிக முக்கியமானவர் எனது சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய ஜெயந்தி அவர்கள்தான். அவரது செயல்பாடுகள் குறித்து முழுமையாக எதுவும் தெரியாது என்பதை இந்த அளவிலான தொடக்கப் புள்ளியிலேயே கூறி விடுகிறேன். குளங்களையும் குட்டைகளையும் அமைத்து இந்த மழை தந்த நீரை சேதாரமின்றி சேமித்து வைத்திருக்கிறார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அவரை நான் இந்த அளவிற்கு மதிக்கிறேன்.

காவிரியும் அமராவதியும் எங்கள் மாவட்டத்திலும் பாய்வதென்னவோ உண்மைதான் என்றாலும் மாவட்டத்தின் தொண்ணூறு விழுக்காடு வெடித்துக் கிடக்கும் வறண்ட பகுதிதான்பெரும்பாலும் கிணற்றுப் பாசணம்தான். அதுவும் நிலத்தடிநீர் வறண்டுபோன நிலையில் விவசாயம் என்பது ஏறத்தாழ இல்லாமலே போனது. எங்கள் கிராமமான கடவூரில் நந்தவனம் என்ற ஒரு இடமே இருந்தது. பெயருக்கேற்றபடியே மரங்களால் நிறைந்திருந்த இடம் அது. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது அங்கு கூடி விளையாடுவது வழக்கம்.
இப்போது அது ஒரு பொட்டல் காடு. இப்படி வறண்டு கிடக்கும் எங்கள் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மிகச் சரியாகப் பயன் படுத்தி குளங்களையும் குட்டைகளையும் உருவாக்கி அவற்றை நீரால் நிரப்பி அழகு பார்க்கிறார்.

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் இருக்கிற குளங்களையும் குட்டைகளையும் செப்பனிட்டதோடு புதிதாகவும் உருவாக்கியிருக்கிறார். இப்படியாக உருவாக்கப் பட்டுள்ள நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 16,320 கனஅடி என்கிறார்.

இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் சொல்லிக் கொள்கிறமாதிரி மழை இல்லை. ஆனால் கிடைத்த சிறு மழையை வீணாக்காமல் சேமித்ததில் 4,160 கனஅடி நீர் சேகரிக்கப் பட்டுள்ளதாக கூறுகிறார். இந்த நீரைக் கொண்டு 1,000 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்ற முயற்சி எடுக்க இருப்பதாக அவர் கூறியுள்ளதை மற்ற ஆட்சியர்களுக்கு சுற்றுக்கு விட்டால் தேவலாம்.

சேமிக்கப்பட்ட 4,160 கனஅடி தண்ணீரைக் கொண்டு ஏறத்தாழ 10,000 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றலாம் என்ற அவரது நம்பிக்கையே நமகான பேசுபொருள். 4,160 கனஅடி என்பது அதிகமான அளவல்ல. ஜெயந்தி குறைவாக கூறிவிட்டாரோ என்ற அய்யமும் ஒருபுறம் இருக்கிறது.

ஒரு கனஅடி என்பது நீளம் x அகலம் x உயரம் என்பதாகும். ஒரு அடி நீளம் x ஒரு அடி அகலம் x ஒரு அடி உயரம் என்பது ஒரு கனஅடியாகும். ஒரு வகுப்பறை என்பது 20 அடி நீளம் 20 அடி அகலம் 9 அடி உயரம் அளவு கொண்டதாகும். அதாவது ஒரு வகுப்பறை என்பது 3,600 கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். எனில், 4,160 கனஅடி தண்ணீர் என்பது ஏறத்தாழ ஒன்றேகால் வகுப்பறை கொள்ளளவு ஒத்தது. இந்த அளவு தண்ணீர் 10,000 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றுவதற்கு போதுமானதா என்ற அய்யம் நியாயமானதுதான். ஒருக்கால் அவர்கள் சொல்வது சரி எனும் பட்சத்தில் 4,160 கனஅடி தண்ணீரைக் கொண்டு 10,000 ஏக்கரை விளை நிலமாக மாற்ற முடியும்.

வீராணம் ஏரியிலிருந்து நொடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டதாகவும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நொடிக்கு 40,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டதாகவும் செய்திகளில் பார்த்தோம். நொடிக்கு 40,000 கனஅடி எனில் நிமிடத்திற்கு 24,00,000 கனஅடி தண்ணீராகிறது. ஒரு நாளுக்கு 5,76,00,000 கனஅடியாகிறது. ஆக, இந்த மழைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஏறத்தாழ ஐந்து கோடியே எழுபத்தியாறு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப் பட்டிருக்கிறது.

4,160 கனஅடி தண்ணீரைக் கொண்டு 10,000 ஏக்கர் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்ற முடியும் என்றால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரு நாளில் திறந்துவிடப் பட்ட 5,76,00,000 கனஅடி தண்ணீர் என்பது ஏறத்தாழ  13,84,60,000 ஏக்கர் தரிசு நிலத்தை விளை நிலமாக்கும் வல்லமை கொண்ட்து அல்லவா? ஒரு நாள் திறந்துவிடப் பட்ட தண்ணீரைக் கொண்டே ஏறத்தாழ பதிமூன்று கோடி ஏக்கர் தரிசு நிலத்தைப் பண்படுத்த முடியும் என்றால் திறந்துவிடப் பட்ட மொத்த தண்ணீரைக் கொண்டு எத்தனை ஏக்கர் தரிசு நிலத்தை பண்படுத்தி இருக்கலாம்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப் பட்ட தண்ணீரே இவ்வளவு வல்லமை கொண்டது எனில் தமிழகத்தின் ஏரிகளில் இருந்து வீணாக திறந்துவிடப் பட்ட மொத்த தண்ணீரைக் கொண்டு என்னவெல்லாம் செய்திருக்கலாம்.

விவசாயத்தைப் பெருக்கியிருக்கலாம் என்பதோடு குடிநீருக்கான தன்னிறைவையும் எட்டியிருக்கலாமே.
இதன் மூலம் தண்ணீர் மட்டுமா விரயமானது. எத்தனை உயிர்ச் சேதம்? எவ்வளவு பொருட்சேதம்?

ஒரு ஏரியிலிருந்து நள்ளிரவு நேரத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி 40,000 கனஅடி தண்ணீரைத் திறந்து விட்டால் என்னவெல்லாம் நிகழும் என்பதற்கு செம்பரம்பாக்கம் ஏரித் திறப்பும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் பேரழிவுமே சாட்சியாகும்.

இரண்டு விதங்களில் இதை தவிர்த்திருக்க முடியும்.

1)   இருக்கிற நீர்நிலைகளை ஒழுங்காக தூர்வாரி, நீர்வரத்தில் இருக்கிற ஆக்கிரமைப்படைப்புகளை அப்புறப் படுத்துதல். எல்லாம் கடந்தும் தேறும் உபரி தண்ணீரை துணை நீர்நிலைகளை ஏற்படுத்தி சேமிப்பது.
2)   வேறு வழியே இல்லை, தண்ணீரை திறந்துவிட்டே ஆக வேண்டும் என்கிற நிலையில் உரிய நேரத்தில் சரியான முன்னறிவிப்போடு தண்ணீரைத் திறந்துவிடுவது.

17.12.15 அன்றைய தினமணியில் எஸ்.முத்துக்குமார் வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்.

இந்தக் கோரிக்கையை ஏதோ வண்டல் மண் சம்பந்தப் பட்ட விஷயமாக மட்டும் பார்க்கக் கூடாது. இது விவசாயத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை ஆகும்.

ஏரிக்கு வரும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் கிடையாது. சேறு கலந்த நீராகவே அது இருக்கும்.அதனால்தான் நிரம்பிய பொழுது ஏரி கலங்கலாகவும் பிறகு தெளிந்தும் காணப்படும். நீர்த் தெள்ளியத் தெளிய சேறானது ஏரியின் அடிதங்கும். இது விவசாயத்திற்கு உரிய வண்டல் மண் ஆகும்.

முன்பெல்லாம் கோடை காலத்தில் இந்த வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொண்டு போய் தங்களது வயலில் போடுவார்கள். இந்த மண் விவசாயத்திற்கான இயற்கையின் கொடை. இந்த ஏரிமண் இருந்தால் செயற்கை உரம் தேவைப் படாது. பயிர்கள் வளமாய் செழித்து வளரும். இப்படி வண்டல் மண்ணை விவசாயி எடுத்துப் போவதால் ஏரியும் தூர் வாரப் பட்டு இருக்கும். ஆக, இது இரட்டைப் பயனுள்ளதாய் அமையும்.

முன்பெல்லாம் ஏரி மண் எடுப்பதற்கான அனுமதியை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களே வழங்கலாம் என்றிருந்தது. அவர்களும் கேட்டவுடன் வழங்கினார்கள். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தூர் வாருவதற்கு ஆகும் செலவு குறையும். விவசாயிகளும் மகிழ்ச்சியோடு இதனை செய்தார்கள். காரணம் செயற்கை உரத்திற்கான செலவும் இல்லை, பூமியும் மலடாகமல் பாதுகாப்பாய் இருக்கும்.

ஏதோ ஒரு புள்ளியில் மாவட்ட ஆட்சித் தலவர்களிடம் இருந்த இந்த அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயத்தின் கைகளுக்குப் போனது. மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து எளிதாக அனுமதியைப் பெற்று வந்த விவசாயிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயத்திடமிருந்து பெறுவது கடினமாயிற்று. மட்டுமல்லாது, இதற்காக அவர்கள் லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டி வந்தது. எனவே விவசாயிகள் வேறு வழியே இன்றி இதைத் தவிர்த்துவிட்டு செயற்கை உரம் நோக்கி நகர்ந்தார்கள்.

இதன் விளைவாக விளைபூமி மலடானது, ஏரிகள் தூர் வாராமல் நாசமாகின. ஆகவே இந்தப் புள்ளியிலாவது அரசு விழித்துக் கொண்டு ஏரி மண்ணெடுக்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை மீண்டும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்க வேண்டும். லட்சக் கணக்கான விவசாயிகள் இது குறித்து கோரிக்கைக் கடிதங்களை அரசுக்கு அனுப்பியிருப்பதாக முத்துக்குமார் கூறுகிறார். அதை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

இருக்கிற ஏரிகளைப் பாதுகாத்தால் அது அரசு. இருக்கிற ஏரிகளுக்கான துணை ஏரிகளை அமைத்து அவற்றையும் பராமரித்தால்தான் அது மக்களரசு. இருக்கிற ஏரிகளையே பாதுகாக்கத் தவறுகிற அமைப்பை மக்கள் மக்கள் விரோத அரசுகளாகத்தான் பார்ப்பார்கள்.

ஏரிகளை ஒழுங்காகப் பராமரிக்காத குற்றத்தைவிடப் பெருங்குற்றமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பார்ப்பது முன்னறிவிப்பின்றி அளவுக்கு அதிகமான தண்ணீரை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில் திறந்து விட்டதைத்தான்.

செம்பரம்பாக்கம் ஏரியை நவம்பர் 19 ஆம் தேதி வாக்கிலேயே திறந்து விட்டிருக்க வேண்டும். திறப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதை அதிகாரிகள் அந்தக் காலக் கட்டத்திலேயே உணர்ந்து விட்டதாகவும் மட்டுமல்ல அப்படி செய்வதற்கான யாருடைய உத்திரவுக்காவோ விண்ணப்பித்து காத்திருந்ததாகவும் கிடைக்கிற செய்திகள் வழி நம்மால் அறிய முடிகிறது. ஏறத்தாழ பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகே அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த இடத்திலிருந்து சிக்னல் கிடைத்திருக்கிறது. ஒருக்கால் அப்போதும் கிடைக்காது இருந்திருக்குமானால் ஏரி உடைந்து பெரும்பகுதி சென்னை முற்றாய் அழிந்திருக்கும்.

நவம்பர் 19 ஆம் தேதி முதலே தண்ணீரைத் திறந்து விட்டிருந்தால் 1,500 அல்லது 2,000 கனஅடி திறந்து விட்டிருந்தாலே போதும். அப்படி செய்திருந்தால் இப்போது திறந்துவிடப் பட்ட தண்ணீரின் அளவைப் பார்க்கிலும் சற்றேரக் குறைய இருபது மடங்கு குறைவு. தகுந்த முன்னறிவிப்போடு அதை செய்திருக்கும் பட்சத்தில் இப்போதைய சேதத்தில் 90 விழுக்காடு குறைந்திருக்கும், உயிர்ச்சேதம் முற்றிலுமாக இல்லாது போயிருக்கும்.    

இந்தப் பெரும் சேத்த்திலும் நமக்கான சில நல்லதுகளும் கிடைத்தன. ஒரு தோழர் தனது  கவிதையில் எழுதினார்,

குப்பைகளை போட்டுச் சென்றாலும்
இந்த வெள்ளம்
சாதிகளையும் மதங்களையும்
அடித்துக் கொண்டு போனதில்
மகிழ்ச்சிதான்

இது கவிதையா என்று கேட்பவர்களுக்கு இது கவிதை, இதுதான் எங்கள் கவிதை என்று சொல்வேன்.

இந்த மழை ஓரளவிற்கு ஜாதி மதத்தை கொண்டுபோனது என்பது ஒரு புறம் மகிழ்ச்சியான செய்தி. பார்க்கும் இடமெல்லாம் மானுடம் பூத்துக் குலுங்கியது. நமது இளைய திரள் எவ்வளவு துடிப்பானது என்பது மட்டுமல்ல, எவ்வளவு தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் மிக்கது என்பதையும் உணர்த்தியது.

பார்த்தசாரதி கோயிலில் இருந்து இந்து சகோதரர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் உணவு பரிமாறிய காட்சிதான் நான் சமீபத்தில் பார்த்த உன்னதமான காட்சி.
மேத்தா ஒருமுறை எழுதினார்,

தூண்டிகள் எரிவதில்லை
திரிகள்தான்
எரிந்து
நாசமாகின்றன
என்று.

எந்தத் தூண்டியாலும் இந்த ஒற்ருமைத் திரியை எரித்துவிட முடியாது.

பொதுத்துறையை நக்கலித்து பேசும் பொது ஜனங்களுக்கும் இந்த வெள்ளம் பாடம் நடத்தியது. இந்த வெள்ளத்திலும் தனியார் பேருந்துகள் காசு கறப்பதைத்தான் செய்தன. பொதுத்துறைப் போக்குவரத்துதான் இலவச சேவையை செய்தன. இவ்வளவு மோசமான பேருந்துகளை இவ்வளவு மோசாமான தண்ணீரில் இயக்க ஓட்டுனருக்கு நெஞ்சிலே ஈரம் இருக்க வேண்டும். அது ஏராளம் இருந்ததை நாம் இப்போது பார்க்க முடிந்தது.

ஒன்று சொல்லி முடிக்கிறேன்,

தேர்தல் அறிக்கைகளை ஏரிகள் நிரப்பும்.

         

அழைப்பு 19



வரும் 10.01.2016 அன்று பெரம்பலூர்  பதியம் மாதாந்திர இலக்கிய நிகழ்வில் உரையாற்ருகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திப்போம்

Wednesday, January 6, 2016

65/66, காக்கைச் சிறகினிலே, ஜனவரி 2016

 காக்கையை படித்து முடித்ததும் என்னோடு அலைபேசிவழி உரையாடும் தோழர்களுள் மிக முக்கியமான ஒருவர் எட்டையபுரம் தோழர் சந்திரசேகர். அதிகம் பேசமாட்டார். பேச வேண்டியதை நச்,நச்சென்று பேசிவிட்டு அணைத்து விடுவார். நான்கு நாட்களுக்கு முன்னால் தொடர்பு கொண்டார்.

எட்வின், ஏரி கட்டுரை அருமை

நன்றிங்க தோழர்

பாரீஸ் பையன் குறித்து நிறையபேர் எழுதி படித்தென். ஆனால் கடைசி பக்கத்துல உங்களது பதிவு படித்த்தும் அழுதுட்டேன். கடைசி பக்கம் நல்லா வருது. மாத்திக்காதீங்க

நன்றிங்க தோழர்

ஒன்று கேட்கனும் உங்களை, செர்னோபில் விபத்துக்கு பிறகுதான் இந்தியாவிற்கு ரஷ்யா அணு உலையை வித்தாங்க. எனக்கென்ன சந்தேகம்னா அவங்க அந்த விபத்திற்கு பிறகு ஏதேனும் அணு உலைகளை நிர்மாணித்திருக்கிறார்களா? கொஞ்சம் பாருங்க.”

நன்றிகூட சொல்ல அனுமதிக்காமல் அலைபேசியை அணைத்து விட்டார். அதுதான் தோழர் சந்திரசேகர்.

விசாரித்ததில் செர்னோபில் விபத்திற்குப் பிறகு அவர்கள் அணு உலை எதையும் அவர்கள் நாட்டில் நிர்மாணிக்கவில்லை என்றே தெரிகிறது. நமக்குக் கிடைத்த இந்தத் தகவல் உண்மை எனில் அமெரிக்காவின் அயோக்கியத்தனமான ஆயுத வியாபாரத்தைவிட எந்த வித்த்திலும் குறைந்ததல்ல ரஷ்யாவின் இந்த வியாபார யுக்தி. இது உண்மையாய் இருந்து இது நமக்கே தெரிகிற பட்சத்தில் இது ஆட்சியாளர்களுக்கு தெரியாதிருக்க வாய்ப்பே இல்லை. அப்படித் தெரிந்திருந்தும் அணு உலையைக் கொண்டு வந்த அவர்களை எப்படி சபித்தாலும் தகும். இதுகுறித்து யோசித்துக் கொண்டே முகநூலை மேய்ந்து கொண்டிருந்த போது தோழர் உதயக்குமார் தனது நிலைத் தகவலில் ரஷ்யாவில் லெனின்கிராட் அருகில் உள்ள அணு உலையில் இருந்து கசிவு ஏற்ர்பட்டுள்ளதாக செய்தி வருவதாக எழுதியிருந்தார்.

அந்தப் பகுதியில் உள்ள எல்லா மருந்துக் கடைகளிலும் அயோடின் மாத்திரைகள் விற்றுத் தீர்ந்து விட்டதாம். மக்கள் வங்கிகளில் இருந்து எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயர தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசிவதாக எழுதியுள்ளார்.

நமது பிரதமர் இப்போது ரஷ்யாவிதான் இருக்கிறார். அப்படி ஒரு அணுக்கசிவே இருப்பினும் ஒரு பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து அணு உலை ஒப்பந்தத்தில் நமது பிரதமர் கையெழுத்திடுவார். கூடங்குளத்தில் ஐந்தாவதும் ஆறாவதும்  வந்துதான் தீரும்.

ஆனால், அங்கு நிகழ்ந்தது நீராவிக் கசிவுதானென்றும், அணுக்கசிவு இல்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரஷ்யா சொல்லியுள்ளதாகவும் தோழர் உதயக்குமார் கூறியுள்ளார். அவர்கள் முதலில் அப்படித்தான் சொல்வார்களென்பது தெரியும்தான்.

என்றாலும் அது வதந்தியாகவே இருக்கட்டும் உண்மையாக இருந்துவிடக் கூடாது என்றுதான் மனது கிடந்து தவிக்கிறது. என்னதான் உலைகளை நம் தலையில் கட்டிய நாடு என்றாலும் அங்கிருப்பது நம் மக்கள் அல்லவா?

*************************************************************************************************************************** 

கல்புர்கி, தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகிய மூவரும் MM 7.65 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக CBI அறிவித்துள்ளது.
துப்பாக்கி மட்டுமல்ல அவர்களை கொன்றழித்த சித்தாந்தமும் கூடாரமும் ஒன்றுதான்.

********************************************************************************************************  

சென்னை வந்து போனதும் மத்திய நிதியமைச்சர் மாண்பமை அருண் ஜேட்லி அவர்கள் தில்லி யூனியன் பிரதேச முதல்வர் மாண்பமை கேஜ்ரிவால் அவர்கள்மீது மான நஷ்ட வழக்குப் போட்டிருக்கிறார். சரி, சென்னை வந்து போனதற்கு இதுகூட செய்யவில்லை என்றால் எப்படி? என்று நினைத்தோம்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய கீர்த்தி ஆசாத் தான்தானே இந்த ஊழலை முதன் முதலில் அம்பலப் படுத்தியதாகவும், தன்மீது வழக்குப் போடாமல் கெஜ்ரிவால் மீது போட்டிருப்பது தமக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கூறினார்.

என்ன நடந்ததோ தெரியவில்லை அமித்ஷா கீர்த்தி ஆசாத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி விட்டார்.

அந்த ஊழலில் ஒரு பகுதி மிகவும் சுவாரஷ்யமானது. ஒன்றும் இல்லை, மடிக்கணினியை நாளொன்றுக்கு 16,000 ரூபாய் வாடகைக்கும், பிரிண்டரை நாளொன்றுக்கு 3,000 ருபாய் வாடகைக்கும் எடுத்துள்ளதாக ஜேட்லி அவர்கள் கணக்குக் காட்டியிருப்பதாகத் தெரிகிறது. 25,000 விலையுள்ள மடிக்கணினியை 16,000 ரூபாய் நாள் வாடகைக்கும், 5,000 ரூபாய் மதிப்புள்ள பிரிண்டரை 3,000 ரூபாய் நாள் வாடகைக்கும் எடுத்திருந்தால் எடுத்தவனை லூசு என்போம். செய்தவர் ஜேட்லி. என்ன செய்வது?

இதை ஜேட்லி அவர்கள் எதிர்கொண்ட விதம்தான் இதைவிட பெரிய சுவாரஷ்யமானது. ’நானென்ன காங்கிரசைவிடவா செலவு செய்துவிட்டேன்என்கிறார்.
*********************************************************************************************  

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் குடில்களும் வண்ண வண்ண அலங்கார விளக்குகளும் ஏகத்துக்கும் நிறைந்து கிடக்கும் காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் தோழர் வெற்றி வேந்தன் கண்டனத்தோடு பதிந்திருக்கிறார். அலுவலகத்தை ஆலயமாக்கிவிட வேண்டாம் என்றும் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறோம்

****************************************************************************************************** 

அது படு வக்கிரமான பாடல், பெண்களைக் கேவலப்படுத்தும் பாடல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்பதால் அதன்மீதான நாகரீகத்திற்குட்பட்டு வெளிப்படும் அனைத்து எதிர்வினைகளோடும் என்னுடையதையும் இணைத்துக் கொள்கிறேன்.
ஆனால் அதில் பயன்படுத்தப் பட்டுள்ள ஒரு வார்த்தைதான் இந்த வக்கிரத்திற்கான காரணமென்ற கருத்தோடு கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது.
முதலில் அது கெட்ட வார்த்தைதானா நண்பர்களே. உயிர் விளைச்சலுக்கான ஒரு உறுப்பின் பெயரை கெட்ட வார்த்தையாக்கியது யார் தோழா?
அந்த சொல்லை மிக ஈனத்தனமாக பெண்களை இழிவுபடுத்தும் வக்கிர நோக்கோடு பயன்படுத்தி இருப்பதை கண்டிப்போம், நியாயம் கேட்போம்
அதே சமயம் உன்னதமாய் கொள்ளப்படும் வாசனை வார்த்தைகளாலும் பெண்கள் கொச்சைப் படுத்தப்பட்டு கொண்டாடப்படும் பாடல்களும் உள்ளன என்பதையும் அருள்கூர்ந்து கணக்கில் கொள்வோம்
"உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?"
என ஆண் கேட்க பெண் பதிலளிக்கிறாள்
"நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா ?"
போன்ற பாடல்களையும் நாம் இயல்பாய் ரசித்து செரித்துவிடக் கூடாது என்பதே என் கோரிக்கை

*********************************************************************************************************************************  

இந்த மழையின்போது வெளிப்பட்ட மனிதாபிமானம் மிக அளப்பரியது. அதில் என் மனதைத் தஓட்டவற்றுள் இதுவும் ஒன்று. இந்தப் பேரிடர் காலத்தில் சென்னையிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தங்கள் ஊருக்கு செல்வபவர்களும், நிவாரணாப் பொருட்களோடு சென்னை மற்றும் கடலூர் செல்வபவர்களும் பட்டினியோடு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகமிருந்தது.

பெரம்பலூரிலிருந்து வீரமணி மற்றும் அவரது தோழர்கள் இணைந்து ஒரு காரியத்தை செய்தார்கள். பெரம்பலூர் வழியாக செல்பவர்கள் பெரம்பலூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் தங்களிடம் விவரம் சொன்னால் அவர்கள் பெரம்பலூர் வரும்போது அவர்களுக்கு சாப்பாடு தயாராக இருக்கும் என்று.

அவரது எண்ணோடு முகநூலில் இதைப் பதிவிட்டிருந்தார். நானும்கூட பகிர்ந்திருந்தேன்.

பெரம்பலூரைக் கடந்து யாரும் பட்டினியோடு செல்லக் கூடாது என்று செயல்பட்ட அந்தப் பிளைகளுக்கு என் அன்பும் முத்தமும்.

*******************************************************************************************************  
என்னதான் கவிதைமாதிரியெல்லாம் எதுவும் எழுதிவிடக் கூடாது என்று தீர்மானித்தாலும் சில பிரச்சினைகள் நம்மை தவறிழைக்க வைக்கின்றன. அர்ச்சகர் பிரச்சினையில் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் சும்மா இருக்க முடியாமல் எழுதியது,

முழுவதும் வெந்து விடாமலும் 
இன்னமும் வெந்துகொண்டும்தானிருந்தது 
"
என்ன சொல்றாங்க" 
எனக் கேட்ட நந்தனின் உடல்
****************************************************** 










Tuesday, January 5, 2016

குட்டிச்சுட்டீஸ்

நீ படிச்சு என்னவாவ?
கலக்டராவேன்.
கலக்டராயி?
டிவி பார்ப்பேன், எல்லாருக்கும் சாக்லெட் வாங்கித் தருவேன், ஐஸ் க்ரீம் வாங்கித் தருவேன்

‪#‎குழந்தைகள்‬ இப்படியே வளரட்டும்

Monday, January 4, 2016

அதைத்தான் அவர்களும் ரசித்தார்கள்.




இன்றைய தேதியில் தமிழ் மேடைகளில் அல்லது சமூக வலைதளங்களில் இனோவா என்று உச்சரித்தாலே போதும் சிரிப்பும் கைதட்டல்களும் நிறைந்து கசியும். காரணம் இனோவா என்றாலே திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் நினைவு வந்து விடும்.

இனோவா முதலாளியைவிடவும் அதனோடு சேர்த்துப் பேசப் பட்டவர் திரு நாஞ்சில் சம்பத் அவர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அவர் மாண்பமை தமிழக முதல்வர் அவர்கள் முன்னிலையில் தன்னை அஇதிமுக வில் இணைத்துக் கொண்டார். மாண்பமை முதல்வர் அவர்கள் இனோவா காரை அன்பளித்து அவரை வரவேற்றார்.

அதுமுதல் திரு நாஞ்சில் சம்பத் அவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் இனோவாவோடு சம்பந்தப் படுத்தி வறுத்து எடுத்து விட்டது. ஏதோ நாஞ்சில் சம்பத் அவர்கள் ஒரு இனோவாவிற்காக அஇதிமுக போனதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டது.

நாஞ்சில் சம்பத் அவர்கள் அரசியல் மேடைகளில் உணர்ச்சிவசப் படும்பொழுது எப்போதாவது வரம்பு கடந்து உரையாற்றக் கூடிய மனிதர்தான். ஆனால் அவர் சார்ந்திருக்கிற அமைப்பின் ஊழியர்களை கன்வின்ஸ் செய்து உற்சாகப் படுத்தக் கூடியவர்நிரம்பப் படிப்பவர். படித்த விஷயங்களை கேட்கிற மாதிரி பேசக் கூடியவர்.

ஒருமுறை சென்னை புத்தகத் திருவிழாவில் அவரது உரையைக் கேட்டு மிரண்டு போனேன். அப்படி ஒரு உரை. அவர் இறங்கி வரும்வரை காத்திருந்து கை கொடுத்து வந்தவன் நான். இது என்னிடம் வழமையாக இல்லாதது. இரண்டு மூன்று இலக்கியக் கூட்டங்களில் அவரது பேச்சின் ஆழத்தில் கறைந்து போயிருக்கிறேன்.

இந்த மனிதர் ஏன் இப்படி தரமிழந்து பேச வேண்டும்? என்ற கேள்விதான் எப்போதும் குடைந்து கொண்டே இருக்கிறது.

என்னதான் கோவமென்றாலும் தரம் தாழ வேண்டாமே. இதைவிடக் கோவப்படக் கூடியவர் திரு வைகோ அவர்கள்.இவரைப் போலவே, சமயங்களில் இவரைவிடவுக் கூட உணர்ச்சிவசப்படக் கூடியவராயிற்றே அவர்.  ஆனால் எந்த நிலையிலும் தரத்தைக் குறித்து அவரது எதிரிகளே விமர்சித்ததில்லையே. பிறகு ஏன் இவர் மட்டும் இப்படி என்று வருத்தத்தோடு அணுகிய நாட்களுண்டு.

மரியாதைக்குரிய வைகோ அவர்கள் மாதிரியே பேசக் கூடியவர். அவர் மதிமுக வில் இருந்தபோது வைகோ அவர்களுக்கு வருகிற கூட்டமளவிற்கு நெருக்கமான அளவில் கூட்டம் இவருக்கும் வந்தது. அந்த அளவிற்கு மதிமுக தோழர்கள் இவர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இன்னும் சொல்லப் போனால் மாற்ருக் கட்சிக்காரர்களும் தேடி வந்து கேட்ட பேச்சாளர்தான். இவருக்கு மதிமுக சார்பில் வீடே தரப் பட்டதாகவும் அறிய முடிகிறது.

வைகோ இவர்மீது வைத்திருந்த அன்பின் அளவு பேரதிகம் என்கிறார்கள் இருவரையும் நன்கறிந்த தோழர்கள்.

ஏன் வைகோ அவர்கள் பேச்சில் தரம் தாழ வேண்டாம் என்று இவருக்கு அறிவுறுத்தி நெறிப்படுத்தவில்லை? அல்லது அவர் சொல்லியும் இவர் கேட்கவில்லையா?

இவர் மாண்பமை முதல்வர் அவர்கள் குறித்து பேசியது பல நேரங்களில் ரசிக்கிற மாதிரியான வகையில் இருந்தது இல்லை. என்ன விஷேசம் என்றால் இப்போது மாண்பமை முதல்வர் அவர்கள் குறித்து இவர் பேசுவதும் ரசிக்கிற மாதிரியான தரத்தில் இல்லை.

சரி, ஒரு இனோவா காருக்காத்தான் திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் அஇஅதிமுக போனாரா? அவரால் வாங்க முடியாதா?

ஒரு இனோவா என்ன விலை பெறும்? ஏறத்தாழ 15 லட்சம் ஆகும் என்கிறார்கள். இதற்காகவா அவர் அங்கு போக வேண்டும். தொடர்ந்து பட்டிமன்றங்கள் போயிருந்தாலே ஒரு வருடத்தில் அவருக்கு சாத்தியமானதுதானே. மதிமுக அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்குமே. மதிமுக தோழர்களே அதை வாங்கித் தந்திருப்பார்களே. கடனில் வாங்கியிருந்தாலும் EMI தொகையினை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டம் கட்டியிருப்பார்களே.

பிறகேன் அஇஅதிமுக போனார்?

அந்த நேரத்தில் அவர் மீதான அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை பேரதிகம். கோர்ட்டுகளுக்கு அலைவதற்கே சிரமமாய் போயிற்று. அந்த நேரத்தில் வைகோ அவர்களோடும் விரிசல். வெளியேறினால் எங்கு போவது என்ற ஊசலாட்டத்தில் தோட்டம் வெல்கிறது.

வருகிறவர்களுக்கு பொறுப்பு கொடுப்பது என்பது தமிழக அரசியலில் சகஜம்தான். ஆனால் எதற்கும் அடி பணியாமல் திமிறிக் கொண்டே இருந்த ஒரு எதிரியின் சரணாகதியை பொறுப்போடு கூடுதலாக காரும் கொடுத்துக் கொண்டாடினார் முதல்வர்.

அதன்பிறகு பொருளாதாரத்தில் அவர் வளர்ந்தார இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது ஆளுமை வெகுவாய் சரிந்தது. ஒரு கட்டத்தில் அவரது மரியாதையும் ரணங்களைக் கண்டது. தன்னை மேடைகளில் படாதபாடு படுத்திய திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் ஆளுமை இப்படி நார் நாராய் கிழிந்ததை அவருக்கான தண்டனையாகக் கூட முதல்வர் அவர்கள் ரசித்திருக்கக் கூடும்.

நாம்தான் இனோவாவை முன் நிறுத்தி இத்தனையையும் மறந்துபோனோம்.

அதைத்தான் அவர்களும் ரசித்தார்கள்





Sunday, January 3, 2016

வேண்டுகோள்



இந்த மாத காக்கைக்கு தோழர் பரதன் குறித்து எழுத வேண்டும். அவர் குறித்த மேலதிக தகவல்கள் உள்ளவர்கள் தந்துதவுங்கள்
வேண்

நெஜம்மா பொய்

மூன்றிலிருந்து நான்கு இருக்கலாம் அவனுக்கு. வெண்கலக் குரலில் தெளிவாய் இருந்தது அவனது பேச்சு. பேருந்தில் யார் எதைப் பேசினாலும் அதை திருப்பி சத்தமாய் பேசிக் கொண்டிருந்தான்.
‘பஸ் ஸ்டாண்ட் வந்துட்டு கூப்பிடுறேண்டா மாப்ள’ என்றால் அச்சு பிசகாமல் இவனும் சத்தமாக ‘பஸ் ஸ்டாண்ட் வந்துட்டு கூப்பிடுறேண்டா மாப்ள’ என்கிறான். அவனது தந்தையும் தாயும் அவனை வாயடைத்து உட்கார வைக்க என்னென்னமோ செய்து விட்டார்கள்.
ஒரு கட்டத்தில் பிஸ்கட் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். அது பையின் அடியில் இருந்ததால் எடுப்பதில் சிரமப் பட்ட அவனது தந்தை ‘பெரம்பலூர் வந்துடுச்சுடா. வீட்டுக்கு போயி சாப்பிடலாம்’ என்றார்.
உடனே, ’ஓல்டேன், பஸ்ஸ நிறுத்துங்க’ என்று கத்த ஆரம்பித்தான்.
இப்படி கத்தினால் பஸ்ஸை நிறுத்திவிடுவார்கள் என்று மிறட்டியவரிடம் அதான் பெரம்பலூர் வந்துடுச்சுல்ல என்றான்.
இல்லடா, பெரம்பலூருக்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்றவரிடம் ‘அப்ப பொய் சொன்னியா’ என்கிறான்.
ஏதேதோ சுற்றி வளைக்க ஆரம்பித்தவரிடம் கேட்டான், நெஜம்மா சொல்லுப்பா பொய்தான சொன்ன?’
பேருந்தே சிரித்தது

Saturday, January 2, 2016

CPIM கொல்கத்தா ப்ளீனம் -- என்னை ஈர்த்த விஷயங்கள்

இதையெல்லாம் சொல்கிற அருகதை எனக்கிருக்கிறதா தெரியவில்லை. ஆனால் இவற்றை சொல்கிற தைரியத்தை எனக்கு கொடுத்ததில் பெரும் பங்கு இந்த இயக்கத்திற்குத்தான்
************************************************************************************************************************   
சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற மார்சிஸ்ட் பொது உடைமைக் கட்சி ப்ளீனம் கவனத்தில் கொண்ட விஷயங்களுள் மூன்று விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.
1) கட்சியில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15.5% இல் இருந்து 25% மாக உயர்த்துவது.
2) கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த விஷயங்கள் குறித்து பயிற்சி கொடுப்பது.
3) முழுநேர ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறித்து பரிசீலிப்பது.
கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஆண்களுக்கு சற்றும் குறையாத விதத்தில் பெண்களின் உழைப்பு இருக்கிறது என்பதை அந்தக் கட்சியோடு ஏறத்தாழ முப்பது வருடங்கள் அணுக்கமாக இருப்பவன் என்ற வகையில் நான் அறிவேன். ஆனாலும் பொதுப் பார்வையில் ஆண்களின் உழைப்பு மட்டுமே பளிச்சென பதிந்துள்ளது என்பதும் உண்மையே.
தொண்ணூறு ஆண்களும் பத்து பெண்களும் பூ அள்ளிக் குவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பொதுப் பார்வையில் மேலோட்டமாக இந்த விகிதாச்சார விவகாரம் தெரியாது. ஏதோ ஆண்களே ஆண்கள் மட்டுமே பூக்களைக் கொய்து குவித்ததாகத் தோன்றும். இதுவும் அப்படித்தான்.
பெண் உறுப்பினர்களை அதிகப் படுத்துவது என்கிற தீர்மானமும் ஒன்றும் புதிதல்லதான். கிளை மாநாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முறையும் பரிசீலிக்கப் படுகிற கருத்துதான் இது.
பெண்கள் உவந்து இயக்கத்திற்கு வருகிறமாதிரி வெகுஜன அமைப்புகளை மறுகட்டுருவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தை பரிசீலிக்க வேண்டிய நேரம் இது. மாறாக பெண்களை பெருமளவில் சேர்க்கிறோம் என்கிற வகையில் இறங்கிட முனைதல் ஆபத்தானது.
உறுப்பினர் எண்ணிக்கை என்பது முக்கியம்தான். அதற்காக யாரையும் சேர்ப்பது என்கிற நிலைக்கு பாய்ந்துவிடக் கூடாது. ‘தயார்படுத்தி சேர்த்தல்’ முறைதான் என்னைப் போன்றோர் வியந்து பார்க்கும் விஷயமாக கட்சியில் உள்ளது.
ஸ்தல பிரச்சினைகளை கையிலெடுப்பது, எடுத்த பிரச்சினைகளை இயக்கப் படுத்துவது என்பது மிக முக்கியமான இன்றைய கட்சி அம்சமாக நடைமுறையில் உள்ளது. மக்கள் பிரச்சினைகளை கையில் எடுப்பது, மக்களுக்காக சுயநலமின்றி உழைப்பது, போராடுவது, சிறை செல்வது என்பது மிக உன்னதமான விஷயங்கள்தான். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் உசரம் என்பது மற்றெந்தக் கட்சிகளையும் விடவும் கூடுதல்தான் என்பதும் யாருமறிந்ததுதான்.
இந்தச் சூழலில் இதுமாதிரி, மக்களுக்கு உழைக்கக் கூடிய ஊழியர்கள் கட்சியின் அந்தந்த மட்டங்களிலும் பொறுப்புக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்.
அவர்கள் தத்துவ சமாச்சாரங்களையும் கட்சியின் ஸ்தாபன நெறி முறைகளையும் கற்றுக் கொள்வது அவர்களுக்கும் இயக்கத்திற்கும் நல்லதாக முடியும்.
தான் ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ யை வாசித்திருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் புதிதாக எதையோ அதிலிருந்து கற்றுக் கொண்டதாகவும் மறைந்த இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் ஒருமுறை சொன்னார். உங்க கட்சி (அவர் என்னை அப்படித்தான் பார்த்தார்) மாவட்டச் செயலாளர்களுக்காச்சும் குறைந்த பட்சம் அது குறித்த வகுப்பெடுக்கச் சொல்லுங்கப்பா என்று சொன்னபோது அதில் எள்ளலோ நக்கலோ இல்லை. மாறாக அதில் ஒரு அக்கறை இழையோடியது.
முன்பெல்லாம் அவ்வப்போது கட்சி வகுப்புகளெடுக்கும், தெளிவு படுத்தும். இப்போது விரலிடுக்குகளில் கசியும் மணல் மாதிரி நல்ல விஷயங்களை நாம் இழந்து விட்டோம் என்று ஒரு முறை தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதுவும் சரியான நேரம்தான் என்கிற அளவில் இந்துவும் சரியான நேரமே. இந்த சரியான நேரத்தில் கட்சியின் ப்ளீனம் இதை கவனத்தில் கொண்டுள்ள செய்தி கட்சியின் மீது அன்போடிருக்கும் என் போன்ற அனுதாபிகளுக்கு இனிப்பான செய்தி.
அரசியல் வகுப்புகளில் கட்சி அக்கறை கொள்வதும், வெகுஜன அமைப்புகளில் உள்ள ஊழியர்களை அரசியல் படுத்தி கட்சிக்கு கொண்டு வருவதுமான பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்தப் படுவது இயக்கத்தை செழிக்க வைக்கும்.
மிக முக்கியமானதாக நான் பார்ப்பது முழுநேர ஊழியர்களின் ஓய்வு குறித்த கவனம்தான்.
மூப்பென்பதை ஒருபோதும் கட்சியின் பாரமாக கட்சி நினைத்து விடாது. ஆனால் முதுமையிலும் தொடர்ந்து கட்சியை சுமப்பது ஊழியருக்கு பெரும் சுமையாகத்தான் அமையும். அந்த வகையில் இது குறித்த யோசனை வரவேற்கத் தக்கது. அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களின் ஓய்வு காலம் குறித்து அக்கறை கொள்கிற கட்சி இது. தனது ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகும் பிழைப்பூதியம் ஏதேனும் வழங்க ஏற்பாடுகள் செய்தல் அவசியம்
இந்த நேரத்தில் நகரத்தில், தொழிற்சாலைகள் உள்ள மத்தியதர மக்களும் அரசு ஊழியர்களும் நிறைந்த பகுதியில் வேலைபார்க்கும் முழுநேர ஊழியர்களுக்கும் கிராமப் பகுதியில் வேலை பார்க்கும் முழுநேர ஊழியர்களுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதை உணர வேண்டும்.
மேற்சொன்னப் பகுதிகளில் வாழும் கட்சி உறுப்பினர்கள் முழுநேர ஊழியர்களின் மருத்துவம் மற்றும் அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவு ஆகியவற்றில் ஏதோ கொஞ்சம் ஒத்தாசை செய்ய முடிகிறது. கிராமத்தில் பணியாற்றும் முழுநேர ஊழியர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதையும் நேரடியாகப் பார்க்க முடிகிறது.
அவர்களை இன்னும் பேரதிகமாய் கவனிக்க வேண்டும்தான்

Friday, January 1, 2016

இருளர்க்கு இல்லையா கல்வி?

///பாம்பு பிடிக்கிற காட்டுப்பயலுக எதுக்குடா பள்ளிக்கூடம் வந்து எங்க உசுர எடுக்கறீங்கன்னு கேட்ட வாத்தியாரின் குரலுக்கு பயந்து ஓடி வந்து செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் இருளர் குழந்தையின் குரல் என்னை அறுக்கிறது.///
குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை முற்றாய் முழுமையாய் கறைத்துக் கொண்டுள்ள தோழர் Varthini Parvatha அவர்களின் கண்ணீர் கொண்டு எழுதப் பட்ட இந்த வரி ஒரு ஆசிரியனாய் என்னைக் கிழித்துப் போடுகிறது.
ஒரு ஆசிரியனாய் இதற்காக வெட்கப் படுகிறேன்.
இருளர் குழந்தையின் வாழ்வைச் சீரழித்த அந்த கீழ்மையான ஆசிரியர் பாடம் நடத்தும் பள்ளி முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன? சொல்லுங்கள்.
யாருமே வராத பட்சத்திலும் நான் ஒருவனாகவேனும் அந்தப் பள்ளியில் வாசலில் ஒரு தட்டியோடு நின்று கோசமிட்டு வரலாம் என்று திட்டம்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...