Thursday, May 7, 2015

07.05.2015

மாணவர்களின் பயிற்று மொழியை பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளதாக இன்றைய (07.05.2014) தீக்கதிரில் பார்த்தேன்.
மிகவும் சரி. எனது குழந்தைகளும் மாணவர்கள்தான். அவர்களது உயர்கல்வி வரைக்கும் தாய் மொழியே பயிற்று மொழியாக வேண்டும் என்று இந்தப் பெற்றோன் ஆசைப் படுகிறேன்.

Wednesday, May 6, 2015

எதிர் கொள்வோம்

நாளை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வர இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு முறை தேர்வு முடிவு வரும் பொழுதும், ஐய்யோ இது எத்தனைக் குழந்தைகளை காவு வாங்கப் போகிறதோ என்ற பயம் அடி வயிற்றைப் பிசைந்து போடும். அதுவும் இருபத்தி ஒன்பது வயது பெண்ணிற்கும்,இருபத்தி இரண்டு வயது பையனுக்கும் பதினைந்து வயது பெண் குழந்தைக்கும் அப்பனாக உள்ள இன்றைய தினத்தில் இந்த வலி மிக அதிகமாக உள்ளது.
நாளைய முடிவு எந்த ஒரு குழந்தையையும் காவு வாங்கிவிடக் கூடாது.
வாழ்க்கை பரந்து விரிந்து கிடக்கிறது குழந்தைகளே. நம்பிக்கையோடு இருங்கள். மே மாதம் என்ற பேருந்தில் உங்களில் சிலருக்கு இடம் கிடைக்காது போகலாம். விடுங்கள் ஒரு நாற்பது அல்லது நாற்பத்தைந்து மீட்டர் தூரத்தில் ஜூன் என்ற ஒரு பேருந்து வருகிறது. அருமையான ஜன்னலோர இருக்கையே கிடைக்கும்.
தைரியமாக இருங்கள்.
உங்களது தோல்வி எங்கள் கண்களில் தூசி விழுவது போலத்தான். கொஞ்சம் உறுத்தவும் கொஞ்சம் வலிக்கவும் செய்யும்தான். இமைகளை விரித்து ஊதினால் தூசி பறப்பதுபோல ஜூனில் நீங்கள் சாதிக்கும் போது எங்கள் வலி காணாமல் போய்விடும். தவறான முடிவெடுத்து எங்களை குருடர்களாக்கி விடாதீர்கள்.
70 மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் தோல்வி என்று எவனோ ஒரு கிறுக்கன் அரை போதையில் உளறி வைத்திருக்கிறான். அதுவே சடங்காகிப் போனது.
சக தந்தைமார்களே, ஒருக்கால் கலங்கி வரும் சூழல் குழந்தைகளுக்கு ஏற்படின் கைகளை பேரதிகமாய் விரித்து அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள். உச்சி முகர்ந்து முத்தமிடுங்கள். அடுத்த தேர்வில் தேறி விடலாம் என்று ஆற்றுப் படுத்துங்கள்.
ஏழுமுறை தோற்றுப் போனவன் நான். நல்லா இல்லையா என்று பொய்யாயேனும் கேளுங்கள். என் பிள்ளையையைப் பற்றி திருத்தியவருக்கென்ன தெரியும் என்று சாடுங்கள். அவன் சிரிக்கும் வரை வருடுங்கள். ஒருவாரமேனும் உங்கள் வேலைகளைத் தள்ளிப் போட்டுவிட்டு குழந்தையோடே இருங்கள்.
*************
ஆசிரியத் தோழர்களே,
ஒருக்கால் நம் தாளில் விழுக்காடு குறைந்து போனால் துவண்டு போய் விடாதீர்கள்.
”கஷ்டப் பட்டு நடத்துறோம். பிள்ளைகள் பெயிலானால் நாமென்ன செய்ய முடியும். இந்த அதிகாரிகளிடம் போய் கையக் கட்டி நிற்பதைவிட நாண்டுக்கலாம் போல் இருக்கு” என்று சொன்ன ஏராளம் நண்பர்கள் இருக்கிறார்கள்.
அதிகாரிகளின் கொடூரங்களுக்கு பயந்து சமீப காலமாக அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து வரும் சூழலில் அந்தச் சுழலில் சிக்கிக் கொள்ளவேண்டாம்.
கடுமையாக உழைப்போம்.
அதே நேரம் விழுக்காட்டை காரணித்து பழி வாங்கல் தொடங்கும் எனில் அதை தைரியமாய் எதிர் கொள்வோம்.

19 மிச்சமிருக்கிறது வழக்கு…


கொந்தளிப்பின் விளிம்பில் நின்றவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் பல ஊடத்தினரும் காங்கிரஸ்காரர்களும். மக்கள் கொதித்துப் போய் இருப்பதாகவும், எனவேதான் தாங்கள் மக்கள் மன்றத்தின்முன் இதுபற்றி விவாதிக்க விரும்புவதாகவும் உரக்கப் பேசுகிறார்கள். யாரையும் பேச விடாமல் பேசுகிறார்கள். அப்படியே யாருக்கேனும் பேசுவதற்கு சற்று வாய்ப்புக் கிடைத்து பேசினாலும் உடனே பெருங்குரலெடுத்து, தலைவர் ராஜீவைக் கொன்ற கொலையாளிகளை விட்டு விடச் சொல்கிறீர்களே இது நியாயமா என்று கேட்கிறார்கள். இனி உங்களிடம் பேச என்ன இருக்கிறது? இது நியாயமா என்பதை நாங்கள் மக்கள் மன்றத்திடம் கேட்கிறோம் என்கிறார்கள்.

அவர்கள் அவசரமாகவோ ஆதாயத்திற்காகவோ யாரிடம் நியாயம் கேட்பதாக சொல்கிறார்களோ அந்த மக்கள் மன்றத்தின் ஒரு பிரதிநிதியாகத்தான் இதை எழுதுகிறேன். அந்த மக்கள் மன்றத்தின் ஒரு துளி என்பதைத்தான் நமக்கான பலமாக உணர்கிறோம்.

நாடும் மக்களும் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று தொடர்ந்து அவர்களால் கூறப்படும் ஒரு விஷயத்தை தமிழ் மண்னின் குறுக்கும் நெடுக்குமாய் பயணித்துப் பார்த்தவர்கள் என்ற வகையில் இந்தக் கூற்றில் குட்டி எறும்பொன்று உருட்டிப் போகும் அதனிரையின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்கேனும் உண்மை இல்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட விரும்புகிறேன்.

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல என்பதையும், அவர்களது பெரும்பான்மையான நிலை பாடுகளில் செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்பதைவிட எதிர்நிலையிலேயே நிற்பவன் என்பதையும் பதிவின் இந்த நிலையிலேயே சொல்லிவிடுகிறேன்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்படுவதனால் நாடோ மக்களோ கொந்தளித்துவிடவில்லை. மாறாக இந்த மூவரின் விடுதலை மக்களை மகிழ்வுறவே செய்திருக்கிறது. அதே நேரம் தங்களது மகத்தான தலைவனைக் கொன்றவர்களை விடுதலை செய்துவிட வேண்டும் என்கிற நிலையில் இவர்களது விடுதலையை மக்கள் பார்க்கவில்லை.. மாறாக, தங்களது அன்பிற்குரிய தலைவனின் கொலையில் இந்த மூவருக்கும் சம்பந்தமில்லையோ என்கிற அய்யமும், தேவை இல்லாமல் சில அப்பாவிகளைத் தண்டித்திருக்கிறோமோ என்கிற அய்யமும் அவர்களை இந்த விடுதலையை ஒரு நிம்மதி பெருமூச்சோடு பார்க்க வைத்திருக்கிறது

உண்மையான குற்றவாளிகளையும் அல்லது அந்தக் குற்றத்தோடு தொடர்புடையவர்களையும் படு சுதந்திரமாக உலாவ விட்டிருக்கிறோமோ என்கிற அய்யம் கலந்த ஒரு குற்ற உணர்வோடும், அதில் சிலர் நியாயவான்களைப் போல் ஊடக விவாதங்களில் பங்கேற்கிறார்களோ என்கிற அச்சமுமே அவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களின் இரண்டு விருப்பங்களையும் இரண்டு பேருக்கான நன்றியயும் சொல்லிவிட வேண்டும்.

இந்த மூவரையும் தூக்குக் கயிறிலிருந்து காப்பாற்றிய உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியையும், அவர்களை சிறையிலிருந்து விடுவிப்பதாய் அறிவித்த மாண்பமை தமிழக முதல்வரையும் அவர்கள் மனதார நன்றி சொல்லி வாழ்த்துகிறார்கள்.

தங்களது தங்கத் தலைவனைக் கொன்றவர்களை ஒரு வெளிப்படையான விரைவான மறுவிசாரனையின் மூலம் கணாடறிந்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றே மக்கள் மன்றம் விரும்புகிறது.
குற்றவாளிகளை நெறிப்படுத்துவதாகத்தான் தண்டனை இருக்க வேண்டுமேயன்றி மரணதண்டனை என்பது மற்றுமொரு கொலை என்பதால் மரண தண்டனையை முற்றாய் ஒழிக்க வேண்டும் என்பதிலும் தமிழ்த் திரள் உறுதியாயிருக்கிறது.

உண்மையான குற்றவாளிகளை தப்ப வைத்துவிட வேண்டும் என்பதில் இந்த வழக்கினை நடத்தியவர்கள் குறியாக இருந்து எப்படியோ இந்த வழக்கினை முடித்து யாரையோ தண்டிப்பதன் மூலம் கோப்பினை மூடிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்களோ என்ற அய்யம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
பொதுவாகவே எந்த ஒரு வழக்கின் விசாரனையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளவே யாரும் விரும்புவார்கள். 2G அலைக்கற்றை வழக்காயினும், சொத்துக் குவிப்பு வழக்காயினும் வேறு எந்த ஊழல் வழக்காயினும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதிலிருந்து விலக்கு பெறுவதற்காகப் போராடிப் பார்ப்பதையும் முடியாத பட்சத்தில் நெஞ்சு வலியை கொள்முதல் செய்துகொண்டு மருத்துவ மனைகளில் போய் படுத்துக் கொள்வதையும்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தனக்கு இந்த வழக்கிற்கு தேவையான மிக முக்கியமான சில விஷயங்கள் தெரியும் என்றும் ஆகவே தன்னை வெளிப்படையாகவும் நியாயமாகவும் விசாரிக்க வேண்டும் என்றும் ஏறத்தாழ இந்த வழக்கு தொடங்கிய நாளில் இருந்தே திருச்சி வேலுசாமி சொல்லி வருகிறார். இதே கோரிக்கையை ஊர் ஊராகப் போய் அவர் கத்திச் சொல்லிப் பார்க்கிறார். என்னை முற்றாய் விசாரியுங்கள் என்று சொல்பவரைப் பார்த்து ஏன் நழுவுகிறார்கள் என்ற அய்யம் தமிழ் மக்களிடம் இருக்கிறது.

இந்தத் தீர்ப்பும் மாண்பமை முதல்வரின் அறிக்கையும் கிடைத்தவுடன் இப்படித்தான் முகநூலில் எழுதினேன்,
    
 மூவரின் விடுதலைக்காக மக்கள் தளத்தில்நீதி மன்றங்களில்சமூக             ஊடகங்களில்சட்ட மன்றத்தில்பாராளு மன்றத்தில் உழைத்த அனைவரையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
எனக்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லைஇன்னும் சொல்லப்போனால் இதை வன்மையாக கண்டிக்கிறேன்ஆனாலும் இதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட மகள் செங்கொடி உள்ளிட்ட அனைவரையும் நினைத்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த நியாயமான போராட்டங்களை மதித்து இந்த அரசு எதுவும் செய்ய வில்லை என்பதையும் கருத்துக்களையோபோராட்டத்தின் நியாயத்தையோ உணர்கிறவர்கள் என்றால் கூடங்குளம் போராட்டத்தின் நியாயம் உணரப் பட்டிருக்கும்எவ்வளவு அழுத்தமானநியாயமானசெறிவான போராட்டம். 150 ஆண்டுகளில் இப்படி ஒரு நியாயமான செறிவான , வன்முறை துளியுமற்ற போராட்டத்தை பூமி பார்த்ததில்லை.
ஒரு நியாயமான மனிதனிடத்தில் இந்த வழக்கு போனதால் கிடைத்தது என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

அதே நேரத்தில் இந்த மனிதனிடத்தில் இந்த வழக்கு போகும் நேரம் வரைக்கும் இத்தனைக் காலம் தூக்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றியது இத்தகைய போராட்டங்கள்தான் என்பதையும் நினைத்துக் கொள்கிறேன்.”
இந்த நிமிடம் வரை அவர்களைத் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றியது இத்தகையப் போராட்டங்கள்தான். அதிலுங்குறிப்பாக சுதாங்கன், திருச்சி வேலுசாமி, வை கோ ஆகியோரின் பங்களிப்பை நான் இந்தப் புள்ளியில் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

எதோ இப்போதுதான் கருணை மனு நிராகரிக்கப்பட்டதாய் பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்கிறது திருச்சி வேலுசாமி அவர்களின் நூலான “ராஜீவ் படுகொலை… தூக்குக் கயிற்றில் நிஜம்”. கே ஆர் நாராயணன் அவர்கள் இந்த மூவரது கருணை மனுவையும் நிராகரித்து அவர்களது தூக்கிற்கான தேதியும் அறிவிக்கப் பட்டுவிட்டது ஒருமுறை. தூக்கிலிடுவதற்கான ஆள்கூட தேர்வு செய்யப்பட்டு விட்டார். மருத்துவர் இந்த மூவரையும் சோதித்துப் பார்த்து விட்டார்.

எல்லாம் முடிந்துவிட்டது. அடுத்தநாள் விடியல் அவர்களது சாவுச் செய்தியோடு வரப்போகிறது என்றுதான் பெரும்பான்மையோர் நினைத்திருந்தோம். ஆனால் எந்தக் காரணமும் குறிப்பிடப் படாமல் அந்தத் தூக்கு நிறுத்தி வைக்கப் பட்டது. இதற்கான காரணத்தையும் அந்த நூல் விரிவாக சொல்கிறது.

அடுத்தநாள் தூக்கு என்கிற நிலையில் அது குறித்த ஒரு விவாதத்தை விஜய் தொலைக் காட்சி ஏற்பாடு செய்கிறது. காங்கிரஸ் சார்பில் கௌரிசங்கர், ம.தி.மு.க சார்பில்வைகோ, இந்திய மார்க்சிஸ்ட் பொது உடமைக் கட்சி சார்பில் டி கே ரெங்கராஜன், மற்றும் வேலுசாமி ஆகியோர் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். என்ன காரணத்தினாலோ தோழர் டி கே ரெங்கராஜன் அவர்களாலும் வை கோ அவர்களாலும் வர இயலாமல் போகிறது. சுதாங்கந்தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசினால் நியமிக்கப் பட்ட ஜெயின் கமிஷன் நூற்றுக் கணக்கான நபர்களிடம் விசாரனையை நத்தியதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை அரசுக்கு அளித்தது. விசாரிக்கப் பட்டவர்களில் திருச்சி வேலுசாமியும் ஒருவர்.
ராஜீவ் கொலையில் உண்மைக் குற்றவாளிகளை இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை என்றும் இன்னும் விசாரிக்கப் பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னதோடு விசாரிக்கப் பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்றையும் கமிஷன் வழங்கியது. அதன் அடிப்படியில் பன்முனைநோக்கு புலனாய்வு விசாரனைக் குழுவை அரசு நியமித்திருக்கிறது என்பதையும் வேலுசாமி சொல்கிறார். அந்த விசாரனை நடக்கும் வேளையில் அதில் சாட்சி சொல்வதற்கு முருகனோ, சாந்தனோ, பேரறிவாளனோ தேவை[ப் பட்டால் அப்போது யாரால் அவர்களை உயிரோடு தர முடியும் என்பதாக வேலுசாமி அந்த விவாதத்தில் நொந்து போனவராய் சொல்லியிருக்கிரார்.

வேலுசாமியின் இந்த பதிவால் அடுத்த கேள்வியைக் கேட்க இயலாத அளவிற்கு சுதாங்கன் ஸ்தம்பித்துப் போயிருக்கிறார். விவாதம் பாதியிலேயே முடிந்திருக்கிறது.

கொலை வழக்கு இன்னும் நடக்கிறது என்றால் இன்னும் கொலையாளிகளைக் கண்டடைய வில்லை என்றுதானே பொருள். எனில் இவர்கள் எப்படி குற்றவாளிகளாவார்கள். படபிடிப்புத் தளத்திலிருந்த அனைவரும் வேலுசாமியைக் கட்டியணைத்தார்களாம். உடனே இதை விளக்கியும் அடுத்த நாள் தூக்கு நியாயமற்றது என்பதாகவும் ஒரு மனு அவசர அவசரமாகத் தயாரிக்கப் பட்டு தொலை நகல் வழியாக அன்றைய குடியரசுத் தலைவர் கே ஆர் நாராயணன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

காரணம் சொல்லப் படாமல் அடுத்தநாள் நடக்கவிருந்த தூக்கு ரத்து செய்யப் படுகிறது. இந்த மனுதான் தூக்கு ரத்தானதற்கு காரணம் என்று சொல்லப் படவில்லை. என்றாலும் இதுவாகத்தானிருக்க வேண்டும். இல்லை என்றால் இதைப் போலவே வேறு யாரிடம் இருந்தேனும் இது மாதிரியானதொரு அய்யம் குடியரசுத் தலைவரிம் கொண்டுபோகப் பட்டிருக்க வேண்டும். அப்படி வேறு யாரோ கொண்டு போயிருந்தால் கொலையாளிகள் இவர்களாயிருக்க வாய்ப்பில்லை என்கிற அய்யத்திற்கு இன்னும் வலு சேரவே செய்யும்.

ஒருக்கால் அன்றே மூவரும் தூக்கிலேற்றப் பட்டிருந்தால் அவர்களை விடுதலை செய்வதற்கு மாண்பமை முதல்வருக்கு இன்று வாய்ப்பே இருந்திருக்காது. அதனால்தான் இதுவரை அவர்கள் உயிரோடு இருப்பதற்கு போராட்டங்களும் இவர்களைப் போன்ற தனி ஆளுமைகளும் காரணம் என்று சொன்னேன். காரணமானவர்களின் முழுமையான பட்டியல் இதுவென்று ஒருபோதும் சொல்லமாட்டேன்.
1991 மே 21 ஆம் நாளன்று இரவு10.25 வாக்கில் தனக்கு சுப்ரமணிய சாமிக்குமிடையில் நடந்ததாக ஒரு உரையாடலை வேலுசாமி அந்த நூலில் தருகிறார்.

மே 22 அன்று மதுரையில் வேலுசாமியும் சுப்ரமணிய சாமியும் கலந்துகொள்ளவேண்டிய தேர்தல் பிரச்சாரக் கூட்டம். 22 அதிகாலை தில்லியிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் சுப்ரமணியசாமி அவர்கள் அங்கிருந்து மதுரை விமானத்தில் வருவதாகவும், விமானம் திருச்சியில் நிற்கும் வேளையில் அவரோடு வேலுசாமி சேர்ந்து கொள்வதாகவும் ஏற்பாடு. அதுகுறித்து பேசுவதற்காகத்தான் 21 ஆம் தேதி இரவு 10.25 வாக்கில் சுப்ரமணிய சாமியை அழைக்கிறார். இவரது குரலைக் கேட்டதும், “ என்ன ராஜீவ் காந்தி செத்துட்டார். அதானே சொல்ல வரேள்” என்று சுப்ரமணிய சாமி கேட்டதாக வேலுசாமி எழுதுகிறார்.

குண்டு வெடித்தது 10.10 அல்லது 10.15 மணி வாக்கில் நடந்ததாகவும் பெரிய புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் புகை அடங்கிய பிறகே தானும் திரு மூப்பனார் அவர்களும் சென்று முகம் சிதறிக் கிடந்த தங்களது தலைவரைக் கண்டுபிடித்ததாகவும் திருமதி ஜெயந்தி நடராஜன் அடுத்தநாள் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியை மேற்கோள் காட்டுகிறார் வேலுசாமி. எப்படியும் புகை அடங்க அரை மணி நேரமாவது ஆகியிருக்கும். எனில் மூப்பனார் அவர்களும் திருமதி ஜெயந்தி அவர்களும் தங்களது தலைவரது உடலை அடையாளம் காண்பதற்கும் அதை ஊர்ஜிதம் செய்வதற்கும் அதன் பிறகு அதை மேலித்திற்கு சொல்வதற்குமான நேரங்களைக் கணக்கிட்டால் எவ்வளவு விரைவாக என்று கொண்டாலும் தில்லிக்கு செய்தி சேர்ந்திருக்க 10.45 ஆவது ஆகியிருக்கும். அப்படி இருக்க தன்னிடம் 10.25 கு பேசிய சுப்ரமணிய சாமி ராஜீவ் செத்துவிட்டார்தானே என்று எப்படி சொல்லியிருக்க முடியும். வேலுசாமி இன்னொரு விஷயத்தையும் இந்த நூலில் சொல்கிறார்.
அதே நூலின் 78 ஆம் பக்கத்தில் தேர்தல் செலவிற்காக பணம் கேட்டவர்களிடம் தேர்தல் நடந்தா பார்த்துக்கலாம் என்று சுப்ரமணியசாமி அவர்கள் சொன்னதாகவும் வேலுசாமி சொல்கிறார். ராஜீவ் இறப்பதற்கு முதல்நாள் இதை சுப்ரமணியசாமி சொன்னதாக அவர் சொல்கிறார்.
வேலுசாமி சொல்வதெல்லாம் உண்மை என்று வாதாட நாம் தயாராய் இல்லை. ஆனால் அவை உண்மையா இல்லையா என்பதை ஏன் ஒழுங்காய் விசாரிக்கவில்லை என்பதுதான் நமது கேள்வி. விசாரிக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசை.

மகத்தான ஆளுமையாக விளங்கிய , அந்த நேரத்தின் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக விளங்கிய ராஜீவின் கொலையாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும். ஆனால் அவர்களுக்கும் மரண தண்டனை கூடாது என்பதே நமது நிலை.

ஆயுள் தண்டனை என்றால் சாகும்வரைதானே என்றுகூட மெத்தப் படித்த அறிவாளிகள் கேட்கிறார்கள். அப்படி எனில் பிரேமானந்தாவிற்கு இரட்டை ஆயுள் விதிக்கப் பட்டதே. ஒரு ஆயுள்தானே அவருக்கு முடிந்திருக்கிறது. இன்னொரு ஆயுள் தண்டனைக்காக மீண்டும் உயிர்ப்பித்து அவரை உள்ளே போடுவீர்களா?

வேலுசாமிகூட எந்த இடத்திலும் தான் சொல்வதை ஏற்கக் கோரவில்லை. மாறாக தன்னையும் உட்படுத்தி விசாரனையை முடுக்கிவிட வேண்டும் என்றே கூறுகிறார். அது நியாயமாகவே படுகிறது.

எனது முகநூல் நிலைத்தகவலை கீழ்வருமாறுதான் முடித்திருந்தேன். அப்படியே இங்கும் முடிக்கிறேன்,



”1 இனி யாரையும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள அனுமதிப்பதில்லைஅதற்கான தயாரிப்பை  நாம் கொண்டு சென்றாக வேண்டும்தன்னை 
மாய்த்துக் கொள்ளுதல் என்பது இனி போராட்ட வடிவமாக இருத்தல் கூடாது.இளைய உயிர்களின் முக்கியத்துவத்தை நாமும் உணர வேண்டும்,
பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும்.

மரண தண்டனைக்கு எதிராக என்னென்ன வடிவங்களில் என்னென்ன 
செய்ய முடியுமோ அதை அது நடக்கும் வரைக்கும் தொய்வின்றி கொண்டு 
செல்ல வேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கினை மீண்டும் நியாயமான முறையில் 
வெளிப்படையாக நடத்த வற்புறுத்தி தொடர்ந்து இயங்க வேண்டும்அதை 
அமெரிக்க நாராயணன் பாஷையில் சொல்வதெனில் மக்கள் மன்றத்தில் 
நடத்தக் கேட்டு தொடர் இயக்கத்தை நடத்த வேண்டும்”

ஹலோ எஃப் எம் 06.05.2015

மருத்துவமனையிலிருந்து வீடு வந்து படுக்க நான்கு மணிக்கும் மேலாயிற்று. நல்ல அசதி.

அலைபேசி சிணுங்களில்தான் எழுந்தேன். "ஹலோ எப் எம்" மிலிருந்துதான் அழைப்பு.

" கூடங்குளம் தீர்ப்பு எப்படி வருமென்று எதிர்பார்க்கிறீர்கள்? "

எப்படி வருமென்று தெரியும்தான். ஆனாலும் எப்படி வர வேண்டும் என்ற என் ஆசையை இப்படிக் கொட்டி வைத்தேன்.

" 14000 கோடி செலவு செய்தாகி விட்டது என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீதிமன்றம் இந்த இரண்டையும் கணக்கிலெடுத்து தீர்ப்பளிக்கும் என்றேன்.

1 ) 14000 கோடி செலவில் செய்யப் பட்டது என்பதற்காக எம் மக்களை அந்த சவப்பெட்டியில் படுக்கச் சொல்ல முடியாது.

2 ) ஆறரை ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் உலை கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதையும் ஒருக்கால் ஏழு ரிக்டர் அளவில் வந்தால்? என்ற அய்யம் தள்ளுபடி செய்யச் சொல்கிறது.

இப்படியே ஒரு தீர்ப்பு வந்துவிட்டால ..?

நீதி இன்னும் சாகாமல் இருக்கிறது என்று கொண்டாடலாம்.

நிலைத் தகவல் 06.05.2015

ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு திருப்பி வழங்கினால் அன்றி இந்த ஆண்டு அந்தக் கோட்டாவில் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி,மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்த குமார் கூறியுள்ளார்.

அது குறித்தெல்லாம் நாம் பேசப் போவதில்லை. நாம் பேச சில இருக்கின்றன

1 இவரது கூற்று உண்மை எனில் அரசாங்கம் அந்த மாணவர்களுக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அரசு சொல்லியிருக்க வேண்டும்.

அது உண்மையெனில் ஏன் அரசு இதற்கு ஒத்துக் கொண்டது? 25% எனில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் கொள்ளையடிக்கும்  பெருந்தொகையில் 25% பணத்தை அரசே அல்லவா தர வேண்டியுள்ளது.

இந்தப் பெருந்தொகையை அரசு பள்ளிகளின் கட்டுமானத்தை உயர்த்துதல், கழிவறை நிர்வாகத்தை மேம்படுத்துதல், ஆய்வறைகளை மேம்படுத்துதல், இன்னும் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்தல் போன்ற காரியங்களுக்கு செலவழிக்கலாமே ?

2 சொல்லியபடி அரசு பணம் தரவில்லை ஆகவே ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்கிறார்கள்.  எனவே கொடுப்பதாய் அறிவித்து கொடுக்காமல் விடுகிறோம். நீங்கள் அதையே சாக்காக வைத்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்ற வகையிலான ரகசிய உடன்பாடு ஏதேனும் இருக்குமோ என்ற அச்சம் வருகிறது.

3 தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கும்போது ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், மாணவர்களுக்குமான அந்த உரிமையை ஏன் நிர்வாகங்கள் மறுக்க வேண்டும்

பி.கு
........

ஒருக்கால் ஒத்துக் கொண்ட தொகையை அரசாங்கம் பள்ளிக்களுக்கு ஒதுக்குமானால் அதனால் பயன் பெற்ற மாணவர்களின் பட்டியலை வெளிப்படையாகப் பெற்று அரசு வெளியிட வேண்டும்.

Tuesday, May 5, 2015

அப்பாக்களின் அழுகையை....

அறந்தாங்கியின் சந்து பொந்து வளைவுகளைக் கடந்து பிரதான சாலைக்கு வந்ததும் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட ஓட்டுனர் என்னை நோக்கி புன்னகைத்தவாறே கேட்கிறார்,

“யாருங்க சார் மகளா?”

புரியாமல் விழிக்கிறேன் இன்னமும் அதிகமாய் புன்னகையை விரித்தவாறே கேட்கிறார்,

“ உங்கள ஏத்திவிட வந்தாங்களே...”

புரிகிறது, கிருத்திகாவைக் கேட்கிறார். “ ஆமாங்க சார். இங்கதான் வேலை பார்க்கிறா. பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.” இவ்வளவையும் ஏன் சொல்கிறேன் என்று தெரியாமலேயே சொல்லி முடித்தேன்.

“அந்த அழு அழறாங்களே. நின்னு தேத்திட்டு அடுத்த பஸ்ல வந்துருக்கலாமே சார்”

தலையசைக்கிறேன். அவருக்குத் தெரியாது, இன்னும் முன்னூறு பேருந்துகளை விட்டுவிட்டு முன்னூற்றி ஒன்றாவது பேருந்தென்றாலும் அதுவரையும் அவள் அழுதுகொண்டுதானிருப்பாள் என்பது.

சூப்பர் பொன்னுங்க சார். கொடுத்து வச்சிருக்கனும் என்கிறார்.

அது எப்படி மகள்களின் அழுகையை பார்க்க முடிகிற அப்பன்களுக்கு சக அப்பன்களின் அழுகையை கண்டுபிடிக்க முடிவதில்லை?

05.05.2012

எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

வம்புக்கு இழுத்து விளையாடும் போதெல்லாம் கீர்த்தி சொல்வாள்,

 “ஏம்மா இந்த லூசு அப்பாவ டைவர்ஸ் பண்ணி வீட்ட விட்டு விறட்டேன்மா. ஒரே இம்சையா இருக்கு”

கிஷோர் அந்த நேரங்களில் இருந்தால் இடைமறித்து சொல்வான்,

“வீட்ட விட்டுகூட விறட்ட வேணாம். நாம வேணாலும் வாடக வீட்டுக்கு போய்க்கலாம். வக்கீலுக்கு காசு வேணும்னா முத்தண்ணன்கிட்ட வாங்கிகலாம்”

இப்படி சொல்லும் பிள்ளைகள்  நேரா நேரத்துக்கு தவறாமல் கேட்பார்கள்,

“அப்பா, சாப்ட்டியாப்பா?, மாத்திரைய ஒழுங்கா போட்டியாப்பா?,”

குடும்பத்தில் இருக்கிறது தோழர்.

இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் எதையும் சாதிக்க வில்லை.

எங்கள் குடும்பத்து மதச் சாயல்  இல்லாத பெயர்களாக குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன்.

தமிழ்ப் பெயராக இல்லை என்பதில் வருத்தமே. ஆனாலும் பகத்தோடு சிறை பட்ட அவனது தோழனான கிஷோரிலால் என்பவனின் நினைவாக பையனுக்கு கிஷோர் என்றும், இசை , புகழ் என்று பொருள்படும் கீர்த்தி என மகளுக்கும் பெயர் வைத்தேன்.

ஊர் ஊருக்கு போய் தமிழ் வழிக் கல்வி குறித்து பேசுவது போலவே பிள்ளைகள் இருவரையும் தமிழ் வழியில் படிக்க வைக்கிறேன்.

பிள்ளைகளிடம் தோழனாகவே பழகுகிறேன்.

என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை தோழர்களே சொல்லிக் கொள்வதற்கு.

எனக்கும் சந்தேகமே, இவ்வளவு காலம் என்னை விவாகரத்து செய்யாமல் எப்படி விட்டுவால் என்னோடு குடும்பம் நடத்த முடிகிறது என்று.

19 ஆண்டுகள் முடிந்து இருபதாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்தப் பொழுதில் சன்னமாக வழியும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி விக்டோரியாவை கை குவித்து வணங்கிக் கொள்கிறேன்.

பின் குறிப்பு
************
இன்று 23 ஆண்டிஇற்குள் நுழைகிறோம்

Monday, May 4, 2015

04.05.2015

முகநூலில் பதியப்பட்ட தங்கம் குறித்த பதிவுகளில் என் பார்வைக்கு பட்டவற்றுள் இந்த இரண்டையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
1 எங்கள் இளைஞர்கள்தான் அதிகம் தங்கம் வெல்கிறார்கள் திருமண நேரங்களில் என்பது மாதிரி Ram Duraiஎழுதியிருந்தார். வெல்கிறார்களா பிச்சை எடுக்கிறார்களா என்ற கேள்வி இருந்தாலும் வெகுவாக ரசிக்க முடிந்தது.
2 தங்கத்தை உரசிப் பார்க்கிற மாதிரி யாரும் தகரத்தை உரசிப் பார்ப்பதில்லை என்பது மாதிரி அதிஷா அதிஷாஎழுதியிருந்தார். வெகுவாக ரசித்தேன்.
ஒருக்கால் தகரமளவிற்கு தங்கமும் தங்கம் அளவிற்கு தகரமும் பூமிக்கு கீழே கிடைக்குமானால் தங்கத்தை அல்ல தகரத்தைதான் உரசிப் பார்ப்போம்.
நினைத்துப் பாருங்களேன் அப்போது தங்கத்தோடு எதையாவது சேர்த்து இறுக வைத்து வாளி குவளைகளும் தகரத்தில் மோதிரமும் செய்திருப்போம். அடகு கடைகளிலும் வங்கிகளிலும் தகர நகைகளுக்கு கடன் கொடுத்திருப்பார்கள்.

Sunday, May 3, 2015

20 மீண்டுமொருமுறை நிகழ்ந்துவிடக் கூடாது


மோடி வென்றிருக்கிறார். அதனை மனப்பூர்வமாக ஏற்போம். நாம் தோற்றிருக்கிறோம். அதையும் மனப்பூர்வமாக ஏற்போம். இதில் ”நாம்” என்பதில் யாருக்கேனும் கருத்துக்கள் இருப்பின் அவர்களையும் வென்றவர்களாகக் கருதி வாழ்த்திவிடுவோம். ஆனால் அவர் வந்துவிடக் கூடாது என்று நாம் ஒன்றும் பொழுது போகாததால் உழைக்கவில்லை. அதற்கு சில வலுவான காரணங்கள் இருந்தன. தேர்தல் முடிந்து விட்டதால் அந்தக் காரணங்கள் ஒன்றும் காணாமல் போய்விடவில்லை. கொஞ்சம் அசுர பலத்தோடான அவர்களது வெற்றி என்பது நம்மிடமிருந்த காரணங்களை இன்னும் கொஞ்சம் கூடுதாலாக பலப்படுத்தியுள்ளது என்றே கொள்ள வேண்டும்.

அதுதான் நமது கவலைக்கு காரணமே அல்லாமல் வேறு விகிதாச்சார கணக்குகள் எல்லாம் இல்லை. மூன்று சதவிகிதத்தை ஒட்டி வாக்குகள்  பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி ஒன்பது இடங்கள் பெற்றிருக்கும் போது 32 சதம் பெற்ற அவர்கள் 90 தானே பெற்றிருக்க வேண்டும் என்றோ அல்லது 3 சதவிகித்தத்தை ஒட்டிய வாக்குகள் பெற்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 இடங்களைப் பெற்றிருக்கும் போது அவர்கள் 370 இடங்களை அல்லவா வென்றிருக்க வேண்டும் என்றோ விகிதாச்சார கணக்குகளை எல்லாம் விவாதிக்க விரும்பவில்லை. இந்த ஜனநாயக நடை முறையில் நீங்கள் வென்றிருக்கிறீர்கள். அதைவிட முக்கியம் உங்களை மக்கள் வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதை தலை வணங்கி ஏற்கிறோம்.

மோடி அவர்கள் கூறியுள்ளபடி வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பிறகுப் பிறந்த ஒருவர் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு வந்திருக்கிறார். இதற்காக மட்டும் நாம் இவரை வாழ்த்தவில்லை. ஒருக்கால் காங்கிரஸ் வென்றிருந்தால் இவரைவிடவும்  இளைய மனிதர் இந்த இடத்திற்கு வந்திருப்பார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவரே பல இடங்களில் குறிப்பிட்டபடி தேநீர் விற்றுக் கொண்டிருந்த திரு மோடி பிரதமராகியிருக்கிறார். இதில் இந்த உலகிற்கு உரத்துக் கூற ஒரு விஷயம் நமக்கிருக்கிறது. மக்கள் விரும்பினால் மிகச் சாமானியரான தேநீர் விற்றுக் கொண்டிருந்தவராலும் எங்கள் மண்ணில் பிரதமராகலாம் என்பதே அது. இது எங்கள் மண்ணின் மாண்பு. ஆனால் இவை யாவும் கடந்து நாம் கவலைப் படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
அனால் அவை பற்றி பார்க்கும் முன் தவறாகக் கட்டமைக்கப் பட்டுள்ள ஒரு பிம்பத்தை நாம் உடைத்தாக வேண்டும். இது திடீரென்று மிக வலுவாக உருவான மோடி பேரலை என்று ஒரு பொய்யை சொல்லி சொல்லியே உண்மையாக்கப் பார்க்கிறார்கள். இது திரு மோடி மற்றும் RSS அமைப்பின் பத்தாண்டுக் கால உழைப்பின் பலன் என்பது பெரும்பான்மை பாரதிய ஜனதாக் கட்சி ஊழியர்களே அறிந்திராத உண்மை.

இது முழுக்க முழுக்க மோடி அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்றுகூட கொள்ள முடியாது. தேசம் முழுக்கப் பார்த்தால் காங்கிரசையும் அதனை ஆதரித்த கட்சிகளையும் மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். காங்கிரசைஆதரிக்காத கட்சிகளை மக்கள் ஆர்வத்தோடு தேர்ந்தெடுத்திருப்பதை நாமிங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரசை ஆதரிக்காத கட்சிகள் வேறு இல்லாத இடங்களில்தான் பி.ஜே.பி எளிதாக வென்றிருக்கிறது.

போக இடதுசாரிகள் தேர்தலுக்கு முன்பே மூன்றாவது அணியினை உருவாக்காமல் போனதும்கூட இவர்களது பெரு வெற்றிக்கான வலுவான காரணம்தான்.

எது எப்படியோ ஒரு மாபெரும் வெற்றியை மக்கள் அவர்களுக்கு தந்திருக்கிறார்கள். ஐந்தாண்டுக் காலம் இந்த மண்ணை ஆளுகிற உரிமை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதில் அச்சப் படுவதற்கு நமக்கென்ன இருக்கிறது?. நிறைய இருக்கிறது.

பொருளாதாரத் தளத்தில், அசுர ஊழலில், கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் உறவில் இவர்களுக்கும் காங்கிரசிற்கும் எந்தப் புள்ளியிலும் விலகல் இருக்காது என்பதால் அது குறித்தும் நாம் குறிப்பாக கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் வந்திருந்தால் எதை செய்திருப்பார்களோ அதையேதான் இவர்களும் செய்வார்கள் என்கிற அளவில் பெரிய வேறுபாடு ஏதுமிருக்கப் போவதில்லை. எனவே பொருளாதாரத் தளத்தில் நமது நேற்றையப் போராட்டத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கும் தொடரவேண்டிய கட்டாயம் உள்ளது. அது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள் என்ற ஒரு நினைவே சிறுபான்மையினரது மத்தியில் ஒரும் பெரும் பதட்டத்தை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த பொழுது ஒருநாள் நான் பெரிதும் மதிக்கிற ஆசிரியை ஒருவர் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் தினமும் தினமும் இஸ்லாமியர்களைக் கொன்றுகொண்டா இருக்கப் போகிறார்கள்?. ஏனிப்படி மிகையாக பதறுகிறீர்கள்? என்று கேட்டார். நாம் ஏதோ கூடுதலாகத்தான் அச்சப் படுகிறோமோ என்றுகூட எண்ணத் தோன்றியது. அதற்கு அடுத்த நாள் தேர்தல் முடிந்ததும் மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்று கிரிதரன் சொன்னார்.

இந்துக்களைத் தவிர ஏனையோர் என்பதிலிருந்து மோடியை எதிர்ப்பவர்கள் என்ற நிலைக்கு பந்து வந்து நிற்கிறது. எனில், மோடியை ஆதரிப்பதே இந்துவின் அடையாளம் என்றாகிறது. மோடியையை ஆதரிக்காதவன் இந்துவாக இருப்பினும் அவன் இந்து அல்ல என்பதே இதன் பொருளாகிறது. இதுதான் பாசிசத்தின் கொடூர உச்சம்.

அதற்கும் சில நாள் கழித்து தொகாடியா ஒரு காரியத்தை செய்தார். ஒரு இஸ்லாமியர் ஒரு வீட்டை ஒரு இந்துவிடமிருந்து விலைக்கு வாங்குகிறார். குடியும் வந்துவிட்டார். ஒரு பெரிய கும்பலை அந்த வீட்டின் முன் திரட்டி அசிங்கமானதொரு போராட்டத்தை நடத்தினார் தொகாடியா. அந்த இஸ்லாமியர், வீட்டை விட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறிவிட வேண்டும் என்கிறார். இஸ்லாமியர்கள் இடம் வாங்கும் உரிமை அற்றவர்கள் என்றும், அதுவும் இந்துக்களிடமிருந்து வாங்கும் உரிமை இல்லை என்றும் கூறுகிறார். ஒருக்கால் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் வீட்டைக் காலி செய்யா விட்டால் என்ன செய்தேனும் அவரைக் காலி செய்ய வைக்க வேண்டும் என்று கூட்டத்தினரிடம் கூறுகிறார். மட்டுமல்ல அராஜகத்தின் எந்த உசரத்திற்கும் போகலாமென்றும் வழக்கு என்று வருமானால் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார். வழக்கென வந்தால் குறைந்த பட்சம் 25 ஆண்டுகளாவது ஆகும். நமது ஆட்சி வரப் போகிறது. தைரியமாக நடத்துங்கள் என்று கூடியிருந்த திரளை உசுப்பேற்றிவிடுகிறார்.

தொகாடியாவும் கிரிதரனும் சாதாரண ஆட்கள் இல்லை. ஒருவர் பி.ஜே.பி யின் ஒரு மாநிலத் தலைவர், இன்னொருவர் RSSஅமைப்பின் மாபெரும் தலைவர்.  ஒன்றும் நடந்துவிடாது ஏன் பதறுகிறீர்கள் என்று கேட்பவர்கள் நம்மைப் போல சாமானியர்களாக உள்ளனர். அச்சமூட்டுபவர்களோ சர்வ பலம் பெற்றவர்களாக உள்ளனர்.

தேர்தலுக்காக பறந்து பறந்து தேநீர் குடிப்பதும் பிரச்சாரம் செய்வதுமாக மோடி இருந்த காலத்தில்தான் மேற்சொன்ன இரு சம்பவங்களும் நிகழ்ந்தன. அவர்களது செய்கை தேர்தலில் பாதகத்தை உண்டுபன்னிவிடுமோ என்ற கால கட்டத்திலேயே அவர்கள் இப்படி என்றால் பதவியேற்றபிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதே சிறுபான்மையினரிடையே அதிலுங் குறிப்பாக இஸ்லாமியரிடையே உள்ள பதட்டத்திற்கு காரணம்.

ஒரு குறிப்பிட்ட மக்கள் திரள் பதட்டத்தோடு இருப்பது எந்த ஒரு மண்ணுக்கும் சமூகத்திற்கும் நல்லதல்ல என்பதோடு இந்தப் பிரச்சினையை முடிப்போம்.

முதலில் அனைத்து இந்துக்களையும் இந்துக்களாகவே இவர்கள் பார்க்கவேண்டும் என்பதே நமது கோரிக்கை. அன்புமணியை மட்டும் இந்துவாகப் பார்ப்பதும் இளவரசனை அப்படிப் பார்க்காமல் தவிர்ப்பதும் தொடர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே நாம் கவலைப் படுகிறோம். வரலாறு நெடுக எல்லா இந்துக்களும் இந்துக்களாகப் பார்க்கப் படவில்லை.சாதி இந்துக்களே இந்துக்களாக பார்க்கப் பட்டனர். அவர்கள் எப்படி இந்துக்களாக பார்க்கப் படவில்லை என்பதை நாம் சுட்டிக் காட்டுவதென்பதுகூட அது தொடராமல் ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையை ஒட்டி இந்தியாவிற்கு வந்துவிட விரும்பிய இந்துக்கள் இந்தியாவிற்கும் இங்கிருந்து பாக்கிஸ்தான் செல்ல விரும்பிய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிற்கும் புலம் பெயர்ந்தனர். இந்திய எல்லையில் இரண்டு விதமான முகாம்கள் இருந்தன. ஒன்று இங்கிருந்து பாகிஸ்தான் போக விரும்பிய இஸ்லாமியர்களுக்கானது. மற்றொன்று பாக்கிஸ்தானிலிருந்து இந்தியா வந்த இந்துக்களுக்கானது.

இதில் இஸ்லாமியர்களுக்கான முகாம்களில் இஸ்லாமியர்கள் தங்கினார்கள். இந்துக்களுக்கான முகாம்களில் அங்கிருந்து வந்த சாதி இந்துக்கள் மட்டுமே தங்கவைக்கப் பட்டனர். இரண்டு முகாம்களிலும் தங்க இயலாத தலித்துகள் தவித்தார்கள் என்பது பிரச்சார மேடைகள் தோறும் வரலாற்று நிகழ்வுகளாக சொல்லி நம்மை மெய் சிலிர்க்கவைத்த மோடி அவர்களுக்கு நினைவு படுத்த வேண்டியது நமது கடமையே ஆகும்.
இந்துக்களாகவும் இல்லாமல் இஸ்லாமியராகவும் இல்லாமல் தவித்த தலித்துகள் தங்களுக்காக ஒரு தனிநாடு கேட்டு இயக்கம் தொடங்கினார்கள் என்பதுதான் வரலாறு. சாதி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அப்போதிருந்த சகலவிதமான பலத்தில் ஒரு சிறு துளியும் தலித்துகளிடம் அப்போது இருக்கவில்லை. அதனால்தான் அந்த இயக்கம் வலுப்பெற்று வெற்ரி பெறாமல் போனது மட்டுமல்ல வரலாற்றிலும் வஞ்சகமாக மறைக்கப் பட்டுவிட்டது.  1946 வாக்கில் தலித்துகள் தாங்கள் இந்துக்களும் இல்லை என்றும் இஸ்லாமியர்களும் இல்லை என்றும் மேல் சாதியினர் பார்வையில் தாங்கள் தீண்டத் தகாதவர்கள், அசுத்தமானவர்கள் என்றும் கூறினர். எனவே தங்களுக்கு அசுத்தஸ்தான் என்ற ஒரு நாட்டைத் தந்துவிடுங்கள் என்றும் தலித்துகள் கோரியிருக்கிறார்கள். இயக்கம்கூட கண்டிருக்கிறார்கள் என்பதை மோடி அவர்களின் கவனத்திற்குகொண்டு வருகிறோம்.

1946 இல் திரு பியாலால் “அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை” நிறுவியதாக 1947 என்ற தனது அழுத்தமான குறுநூலில் தமிழ்செல்வன் கூறுகிறார்.

இதெல்லாம் முன்பு எப்போதோ நடந்தது. சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகு நிலைமை வெகுவாக மாறியிருக்கும் என்று யாரேனும் நம்பினால் ஏமாந்து போவோம். எல்லாம் வளர்ந்துபோன நிலையைப் போலவே தலித்துகளது துயரங்களும் வளர்ந்துகொண்டுதான் போகின்றன.

பொதுத் தொகுதி ஒன்றில் தலித் ஒருவர் நிற்க முடியாத சூழல் இந்த நாட்டில் இன்றைக்கும் இருக்கிறது. நிற்கலாமே? யார் தடுத்தது? என்றெல்லாம்கூட கேட்கலாம். நிற்க முடியவில்லை என்பதுதான் இன்றைக்கு நாம் காணும் எதார்த்தம். ஏறத்தாழ பத்தாண்டுக்காலம் மத்திய அமைச்சராக பணியாற்றிய ஆ.ராசா அவர்களே தனது சொந்தத் தொகுதி பொதுத் தொகுதியானதும் வேறு ஒரு தொகுதிக்கு பயணப்பட வேண்டி வந்தது. உலகமே அவரை ஒரு ஊழலோடு சம்பந்தப் படுத்திப் பார்த்தாலும் பெரம்பலூர் மக்கள் அவரை பெரிய ஊழல் வாதியாக பார்க்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாகவே அவர் இன்றும் கொண்டாடப் படுகிறார். அப்படிப் பட்டவருக்கே இன்று இதுதான் நிலைமை.

இந்த வகையில் எல்லாத் தொகுதிகளுமே பொதுத் தொகுதியாகிவிட்டால் தலித்துகளின் பிரதிநிதித்துவம் இல்லவே இல்லாமல் போய்விடாதா? இதைவிட இன்னுமொருபடி மேலே போயும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப் படும் என்றும், ரிசர்வேஷன் முறை எடுக்கப் பட்டுவிடும் என்றும் ஒரு அச்சம் நம்மிடம் இருக்கிறது. ஒருக்கால் இதை இவர்கள் செய்தால் படிப்பில், வேலை வாய்ப்பில் கொஞ்ச நஞ்சம் தலித்துகளுக்கு இருக்கிற வாய்ப்பும் இல்லாமல் போய்விடுமே என்கிற அச்சம் பி.ஜே.பி யைப் பற்றி அறிந்த சமூக அக்கறையுள்ள மக்களிடம் இயல்பாகவே எழுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

பாப்பாபட்டியும் கீறிப்பட்டியும் தலித்துகளுக்காக ஒதுக்கப் பட்ட பிறகு அங்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கட்டம் வரைக்கும் யாரையும் நிற்கவிடாமல் தடுத்தனர். பிறகு தங்கள் சொல்பேச்சைக் கேட்கக் கூடிய, பச்சையாக சொல்லப் போனால் தங்களது பண்ணையாட்களை போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்து உடனேயே ராஜினாமா செய்துவிட செய்தனர்.

அடிமைகளாக இறுக்கப் பொறுக்காமல் பௌத்தம் தழுவிய பிறகும் கயர்லாஞ்சியில் பய்யலால் குடும்பத்தினரை ஆதிக்க சாதியினர் செய்த கொடுமையையும் இந்த நேரத்தில் கவனத்திற்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. பய்யலால் மனைவி சுரேகாவையும் அவரது மகள் பிரியங்காவையும் மகன்களையும் நடுச் சந்திக்கு இழுத்தே வந்தனர். அம்மாவையும் சகோதரியையும் எல்லோர் முன்னாலும் புணரச் சொல்லினர். மறுத்த இரு சகோதரர்கச்ளின் ஆணுறுப்பையும் வெட்டுகின்றனர். ஊரில் உள்ள ஆண்களெல்லாம் சுரேகாவையும் பிரியங்காவையும் வன்புணறுகின்றனர். கொன்று இருவரையும் வாய்க்காலில் வீசுகின்றனர். இவ்வளவு நடந்த இடத்திற்கு காவலர்கள் அடுத்த நாள் வருகிறார்கள். பரிசோதனை செய்த மருத்துவர் அவர்கள் புணரப் படவில்லை என்று சான்றளிக்கிறார். இதையே நீதி மன்றர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிய முடியாது என்கிறது. இதையே முடியாது என்று சொன்னால் வேறு எதை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவது.
நிலைமை இப்படி இருக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுவதால் அதை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப் படுவதோடு பொதுக் கூட்டங்களிலும் பேசி வருகிறார் மருத்துவர் ராமதாசு அவர்கள். அதை செய்துவிடக் கூடிய பலமும் அவருக்கு இப்போது கிட்டியிருப்பது நமது பதட்டத்தையும் பொறுப்பையும் கூட்டியிருக்கிறது.

இப்போது ஒரு ஊரில் தலித்துகள் ஊர்விலக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. எனில் அந்த ஊரில் உள்ள ஆதிக்க சாதியினர் தலித்துகளோடு பேசுவது உள்ளிட்டு எந்த உறவையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தண்ணீர் தர மாட்டார்கள். வேலை தர மாட்டார்கள். ஒருவருக்கு கடுமையான தலைவலி என்றால் ஒரு ரூபாய்க்கு அனாசின் வாங்க போக பத்து ரூபாயும் வர பத்து ரூபாயும் ரெண்டுமணி நேரமும் செலவு செய்தாக வேண்டும்.

இன்னும் நிறைய ஊர்களில் தீண்டாமைச் சுவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

மேற்சொன்ன பாதிப்புகளுக்கு ஆளான அனைவரும் இந்துக்களே. இவற்றை சொல்வதற்குக் காரணம் இவற்றை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் இவை தொடரும் என்பதாலேயே.
அவர்கள் பொறுப்பேற்க இருக்கும் தருணத்தில்  மேற்சொன்ன பாதிப்புகளுக்கு ஆளானோர் அனைவரும் இந்துக்கள்தான் என்பதையும், மீண்டுமொருமுறை இதுபோன்ற பாதிப்புகள் அவர்களுக்கு நிகழ்ந்து விடக் கூடாது என்பதையும் உலகில் எந்த மூலையில் இந்துக்கள் பாதிக்கப் பட்டாலும் தங்களது அரசு தலையிட்டு சரி செய்யும் என்ற அவர்களது தேர்தல் அறிக்கையையும் மீண்டுமொரு முறை நினைவூட்ட கடமை பட்டிருக்கிறோம்.

அத்தோடு சிறுபான்மையினரின் பதட்டத்தையும் இவர்கள் தனிக்க முயல வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். பூமி பதட்டப் பட்டால் முதலாளிகள் மகிழ்வார்கள். கொண்டாடுவார்கள், செலவு செய்வார்கள். ஆனால் வரலாறு தினம் தினமும் சித்திரவதை செய்து சிறுமை படுத்தும் என்பதையும் சொல்லி வைப்போம்.

நன்றி : காக்கைச் சிறகினிலே

03.05.2014

எது கவிதை?
யாருக்குத் தெரியும்
என்பான் சுகதேவ். ஆமாம், எது கவிதை என்று எவராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆளாளுக்கு ஒரு அபிப்பிராயம். நாம் சிலாகித்து எழுதிய கவிதை கண்டு கொள்ளாமல் போவதும் கசக்கி எறிந்துவிடலாமா என்று நாம் வெகுவாய் யோசித்த கவிதை கொண்டாடப் படுவதும் இயல்புதான்.
எப்படி கவிதை எழுதுவது என்று வகுப்பெடுப்பவர்களைப் பார்த்தால் பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கிறபோது அவர்களுக்காக சிரித்துக் கொள்வேன்.
ஆனால் கவிதை தோன்றியவுடன் எழுதிவிட வேண்டும் என்று தம்பி கடங்கநேரி யான் சொல்கிறான்.
“தோன்றிய உடனே
கவிதையைக்
கொட்டித் தீர்த்துவிட வேண்டும்
அல்லது
அதிகபட்ச வார்த்தை
அலங்காரம் சேர்ப்பதில்
தொலைந்து விடுகிறதுகவிதை”

(நிராகரிப்பின் நிழலில், 17 ஆம் பக்கம், தகிதா பதிப்பகம்)
அவசரப்படாமல் கொஞ்சம் பழுக்கப் போடுங்களேன் என்பார் ரகுமான். சரியோ என்றுகூடத் தோன்றியது. இந்தப் பையனின் கவிதையைப் படித்தவுடன் கொஞ்சம் குழம்பினாலும் இவன் சொல்வதுதான் சரி என்று படுகிறது.
கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டால் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான கவிதை கூட நீர்த்துப் போகும் அபாயம் இருக்கவே இருக்கிறது. ஒரு உதாரணத்தோடு இதை அணுகினால் விளங்கும் என்று படுகிறது.
ஒடுக்கப் பட்ட மக்களுக்கான எங்களின் தேசிய கீதம் தோழர் இன்குலாப் எழுதிய ”மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா”
கோவம் கொப்பளிக்க கொப்பளிக்க கொட்டியிருப்பார். அதில் ஒரு வரி வரும்,
“ நாங்க எரியும் போது எவன் மசிர புடுங்கப் போனீங்க”
இதையே செய் நேர்த்தி வார்த்தை ஜாலம் எல்லாம் போடுபவன் கையில் கிடைத்து செப்பனிடுகிறேன் என்று கால அவகாசம் எடுத்துக் கொண்டான் எனில் அவன்,
“நாங்க எரியும் போது எவன் முதுக சொரியப் போனீங்க” என்று கூட எழுதியிருப்பான்.
இன்குலாப் மக்கள் கவி. அதனால்தான் எந்த வித பௌடரும் பூசாமல் நெருப்பாய்க் கொட்டினார்.
வடிவம் முக்கியமல்ல நெருப்புக்கு. எந்த வடிவமேயாயினும் நெருப்பு அழகாய்த்தானிருக்கும். வடிவமல்ல சூடுதான் நெருப்பின் குணம்.
அகம் எழுதும் எங்களுக்கு என்று யாரேனும் கேட்டால் அகமும் நெருப்புதான், அன்பும் நெருப்புதான்.
அதனால்தான் அம்ரிதா “ குருதியின் வெப்பத்திலிருந்து பிறப்பது கவிதை” என்றார்.
கையேந்தித்தான் கேட்கிறோம் , “ சுடச் சுடக் கொடுங்கள்”
உனது ஏழு வரி சின்னக் கவிதை எங்கெல்லாமோ என்னை இழுத்துப் போகிறது.
சபாஷ்டா தம்பி

Saturday, May 2, 2015

அழைப்பு 12



நாளை மாலை ஆலங்குடியில் பேசுகிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வாருங்கள். சந்திப்போம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...