Saturday, July 25, 2015

65/66 காக்கைச் சிறகினிலே, ஜூலை 2015


முப்பாட்டி  பாவாடை சட்டை போட்ட காலத்திலிருந்து  சொல்லப்படும் அதலப் பழசான அதே வாக்கியத்தைத்தான் இப்போதும் சொல்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் எல்லாம் கூச்சமே இல்லாமல் பேசுகிறார்கள், பதிகிறார்கள். “இப்ப எல்லாம் யாருங்க ஜாதி பார்க்குறாங்கஎன்றும்அவங்க எல்லாம் இப்ப நல்ல நிலைக்கு வந்துட்டாங்க சார். சொல்லப்போனா நாங்கதான் இப்ப நடுத் தெருவுல நிற்கிறோம்என்றெல்லாம் அவர்கள் பேசுவதைக் கேட்கும் போதும் எழுதுவதை படிக்கும்போதும் ஆதிக்கத் திரளின் பொய் நெடியில் மயக்கமே வருகிறது.  

அதைவிடக் கொடுமை என்னவெனில் மாவட்டம் மாவட்டமாக மாநாடு போட்டு எல்லா ஜாதிக்காரர்களுக்கும் ஒரே கல்வித் திட்ட்த்தை உள்ளடக்கியசமச்சீர் கல்விவேண்டுமென கோரிக்கை வைத்து இயக்கம் நட்த்திய மருத்துவர் ராமதாசு அவர்களே வன்கொடுமை சட்டத்தை திரும்பப் பெற முடியாவிட்டாலும் மறு ஆய்வு செய்து திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்கிறார்.

இருக்கிற நிலையிலான வன்கொடுமைச் சட்டம் போதாது என்பதுதான் உண்மை. போக, எத்துனை வன்கொடுமைகள் வன்கொடுமைகள் தினமும் தினமும் நடந்துகொண்டே உள்ள போதும் தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கை ஏதுமில்லை என்று சொல்கிற அளவிற்கு மிகவும் குறைவுதான்.

மருத்துவர் சொல்கிற அளவிற்கு சட்டங்கள் கடுமையாக இருப்பின் கடந்த வாரத்தில் நடந்த கீழ்வரும் இரண்டு சம்பவங்களும் எப்படி நடக்கும்?

1)   உத்திரப் பிரதேசம் கணேசபுரா எனும் சிற்றூரில் நிகழ்ந்துள்ள சம்பவம் நாம் எந்த மாதிரியான சாதீய சாக்கடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை கன்னத்தில் அறைந்து சொல்கிறது.

ஒரு சின்னக் குழந்தை குழாயடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு தலித் குழந்தை. வெயில் நேரம் என்பதால் அவளது நிழல் குழாயடியின் அருகே நீளும் சாலையில் படிகிறது. அப்போது பூரண் யாதவ் என்பவர் அந்த சாலையில் நடந்து வருகிறார். சாலையில் கிடந்த அந்தக் குழந்தையின் நிழலை மிதித்து விடுகிறார்.

அவளது நிழலை மிதித்த்தால் அவர் தீட்டுப் பட்டுப் போனாராம். ஒரு சாதிக்கார்ர் நடந்து வரும் பாதையில் ஒரு தாழ்த்தப்பட்டவள் எப்படி நிழலை பரப்பலாம் என்று கொதித்தெழுந்து அந்தச் சின்னக் குழந்தையை நையப் புடைத்துள்ளனர். இனி அந்தக் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தால் கொன்றே போடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இந்தச் செய்தியை 17.06.15 இந்து நாளிதழ் ஒரு குட்டியூண்டு செய்தியாக வெளியிட்டிருந்தது. அந்தக் குழந்தையைக் கொடூரமாக தாக்கிய அனைவரும் ஆதிக்கச் சாதியைச் சார்ந்த பெண்கள் என்பதுதான் நாம் அதிகமாய் கவலைப்பட வேண்டிய விஷயம்.

2)   அதற்கு அடுத்தநாளே (18.06.15) காலைக்கதிர் நாளிதழில் நெஞைப் பிளக்கும் இந்த செய்தியைப் பார்க்க நேர்ந்தது.

இது படித்தவர்கள் அதிகம் வாழ்கிற திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளதுதான் சோகத்தினும் சோகம்.

திருநெல்வேலி மாவட்டம் வேட்டங்குளம் என்ற ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் பணியை ஒரு தம்பதியர் செய்து வருகிறார்கள். அவர்களது இரண்டு குழந்தைகளும் அதே பள்ளியில் படித்து வருகிறார்கள்.

அந்தக் குழந்தைகளின் பெற்றோர் வேலைக்கு வர இயலாத நாட்களில் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை அவர்களது குழந்தைகளை வைத்து செய்ய வைத்திருக்கிறார்கள். இது உண்மை என்பதை தங்களது விசாரனையில் உறுதி செய்துகொண்ட தேசிய மனித உரிமை கமிஷன் அந்தக் குழந்தைகளுக்கு தலா 25000 ரூபாய் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

நமக்கு சில கேள்விகள் உள்ளன.

1)   ஒரு சிறு குழந்தையில் நிழல் ஒருவனைத் தீட்டுப்படுத்திவிடும் என்றால் அவன் என்ன இழவிற்கு வாழ்ந்துகொண்டு?
2)   தந்தை வேலைக்கு வராவிட்டால் அவரது சிறு வயது பிள்ளைகளிடம் தந்தையின் வேலையை வாங்கும் கனவான்கள் தங்களுக்கான அறுவை சிகிச்சை அன்று மருத்துவரால் வர இயலாது போனால் மருத்துவர் செய்ய வேண்டிய அறுவையை அவரது பள்ளிக் குழந்தைகள் செய்யட்டும் என்று தங்கள் உடல் காட்டி அனுமதிப்பரா?
**************************************************************************************************** 

அய்யோ இவ்வளவா? இந்த அளவிற்கு நாங்கள் கனவிலும் எதிர்பார்க்க வில்லையேஎன ஒட்டுமொத்த முதலாளிகளும் கூச்சத்தில் நெளியுமளவிற்கு நமது ஆட்சியாளர்கள் அவர்களிட்த்திலே தாராளமாயிருக்கிறார்கள்.

முதலாளிகளுக்கு தாராளமாய் வாரி வழங்குவது பத்தாது என்று என்று ஒரு பொல்லாத நொடியில் இவர்களுக்கு பட்டுத் தொலைத்திருக்கிறது.
முதலாளிகளுக்காக அவர்களே சிந்தித்துப் பார்க்க இயலாத அளவிற்கு காய்களை நகர்த்தக் கிளம்பிவிட்டார்கள்.

முதலாளி வர்க்கம் தொழிலாளிகளின் விரல்களை வெட்டித் தரச் சொன்னால் இவர்கள் அவர்களது கைகளையே வெட்டுவதற்காக கொடுவாள்களை கூர்தீட்டத் தொடங்கி விட்டார்கள்.

ஏற்கனவே நூறுபேர் பணியாற்றவேண்டிய தொழிற்சாலைகளில் ஐம்பது தொழிலாளிகள்தான் பணியாற்றுகிறார்கள். ஆனால் ஆட்கள் குறைந்தால் நாட்கள் அதிகரிக்கும் என்று சிறுவகுப்புகளில் நாம் படித்த கணக்கு விகிதமெல்லாம் இங்கு பொருந்தாது. ஆட்களும் குறைய வேண்டும் நாட்களும் குறைய வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் எண்ணம். ஆட்சியாளர்களோ இன்னும் ஒருபடி மேலே போகிறார்கள். ஆட்கள் குறைந்தால் மட்டும் போதாது, நாட்கள் குறைந்தால் மட்டும் போதாது, வேலையும் அதிகரித்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

அதாவது 100 தொழிலாளிகள் 100 நாட்களில் செய்த வேலையை 50 தொழிலாளர்கள் 75 நாட்களில் செய்ய வேணும் என்று முதாலாளிகள் விரும்புகிறார்கள். ஆளும் வர்க்கமோ 100 பேர் 100 நாட்களில் செய்த வேலையின் ஒன்றேகால் மடங்கு வேலையை 50 பேர் 75 நாட்களில் செய்ய வேண்டும் என்பதற்காகப் பாடுபடுகிறது.

தொழிலாளிகளின் வயிற்றிலடிக்கிறோம் என்கிற சாக்கில் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்கிற சாக்கில், அவர்களிடம் இருக்கிற பிடிமான்ங்களையும் கட்டுப்பாடுகளையும்கூட வெட்கமே இல்லாமல் விடுவிக்கத் துடிக்கிறார்கள்.

இப்போது ஒரு தொழிற்சாலையில் நூறுக்கும் அதுகமான எண்ணிக்கையில் தொழிலாளிகள் பணியாற்றினால் அந்த ஆலையை ஒரு முதலாளியால் அவ்வளவு எளிதில் மூடிவிட முடியாது. அப்படி மூடுவதற்கு அரசின் அனுமதியைப் பெற வேண்டும். இந்தச் சட்டத்தைதான் இன்றைய மத்திய அரசு அழிப்பதற்காக முன்கை எடுக்கிறது. இனிமேல் 300 தொழிலாளிகள் வரை பணியாற்ரும் ஆலைகளின் முதலாளி தனது ஆலையை மூட வேண்டும் என்றால் அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்கிற ஒரு நிலையை அரசு எடுக்க இருக்கிறது.

இவர்கள்தான் இப்படி என்றால் ஆந்திரமாநில அரசோ இதைவிடவும் அதிக வேகத்தில் பாய்கிறது.

ஏழை எளிய மாணவர்கள் சாதிச் சான்று பெருவதில் அழைக்கழிக்கப் படுவதைக் கண்டு கவலைப் படாத, உரிய மருத்துவ வசதி இல்லாத்தால் ஏழிகளின் உயிர்கள் அநியாயமாய் போவதைப் பற்ரிக் கவலைப்படாத ஆந்திர அரசு தொழில் தொடங்குவோருக்கு உரிமம் வழங்குவதில் தாமதமே இருக்கக் கூடாது என்று ஆலாய்ப் பறக்கிறது.

200 கோடி ரூபாய்க்கும் மேல் மூதலீடு செய்ய முன்வருவோருக்கு அதற்கான அனுமதியை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அப்படி ஒருக்கால் 15 நாட்களுக்குள் அனுமதி கிடைக்காவிட்டால் அதற்காக அந்த முதலாளி அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. அனுமதி இல்லாமலே தனது ஆலையைத் தொடங்கி விடலாம். மட்டுமல்ல ஒவ்வொரு நாள் தாமத்திற்கும் 1000 ரூபாய் அபராதமாக தாமததிற்கு காரணமான அதிகாரி அந்த முதலாளிக்கு தரவேண்டும் என்பதாக நகர்கிறது ஆந்திர அரசு.

ஒன்றும் தெரியாதவர்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும். இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்கிறார்கள் சிலர்.

இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள்.

அவர்கள் என்ன செய்வதை முற்றாய் அறிந்துகொண்டுள்ள நாம் என்ன செய்யப் போகிறோம்?
************************************************************************************************************     




   

6 comments:

  1. சிந்திக்க வேண்டிய கேள்விகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர். வலைப் பக்கம் வர முடியாமலே போய்விட்டது. இனி வலைகளை வாசிக்கவும் எழுதவும் நேரம் ஒதுக்குவேன்

      Delete
  2. எதுநடந்தாலும்
    சகித்துக் கொண்டு வாழப் பழகிவிட்டோம்
    பழக்கப் படுத்தப்பட்டும் விட்டோம் தோழர்
    தம 3

    ReplyDelete
    Replies
    1. அதுதான் பிரச்சினையே தோழர்

      Delete
  3. 1962-ம் ஆண்டு என்று நினைக்கிறேன் பெங்களூருவில் ஒரு நாடகம் மேடையேற்றினேன் . அதில் ஒரு வசனம் ஒரு காலத்தில் அரசர்கள் ஆண்டனர், பிறகு அந்தண்ர்கள் ஆண்டனர் அதன் பின் பணம் படைத்தோர் ஆண்டனர் ஆண்டு கொண்டிருப்பதாகவும் நினைக்கின்றனர். வாழ்க்கைச் சக்கரம் சுழல உழைப்பவர்களும் ஆள வேண்டியதுதானே நியதி. என்றரீதியில் இருக்கும். அது ஏனோ இப்போது நினைவில் , வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா, நீங்கள் ஒரு பொக்கிஷம் தோழர். ஒன்று தெரியுமா 62 இல் நான் பிறக்கவே இல்லை. உங்களைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். விரைவில் செய்து விடுவேன்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...