Wednesday, October 5, 2022

அப்ப யாரு படிக்க சொல்றீங்களோ அவங்களே படிச்சுக்கோங்க

 திருச்சி பால்பண்ணை சங்கீதாஸ்

அம்மா ஸ்ட்ராபெர்ரிம்மா
ப்ளீஸ்மா
யாரு ஸ்ட்ராபெரிஸ் கேக்கறாங்களோ அவங்களே வாங்கிக்க வேண்டியதுதான்
அப்ப யாரு படிக்க சொல்றீங்களோ அவங்களே படிச்சுக்கோங்க
டேய்...

யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலை

 காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது

தேர்தலில் போட்டியும் இருக்கிறது
போட்டியில் திரு மல்லிகார்ஜுனே அவர்களும் போட்டியிடுகிறார்
இதுவெல்லாம் அவர்களது உட்கட்சி விஷயங்கள்
இந்த நிலை காங்கிரஸ் கட்சியில் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடும்
அந்த வகையில் காங்கிரஸ் உத்வேகம் பெறுவது இந்த நாட்டுக்கும் நல்லதே
தேர்தலில் போட்டி இருக்கிறது என்ற வகையில் போட்டியாளர்கள்
ஏன் தான் வெற்றிபெற வேண்டும் என்றும்
ஏன் தன்னை எதிர்த்து போட்டி இடுபவர் தோல்வி அடைய வேண்டும் என்றும் கட்சி வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்வது இயல்பானது
அவர் யார், இவர் யார்
யார் கட்சிக்குத் தேவை என்று அந்தக் கட்சியனர் கூடி விவாதிப்பதும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக யார் வந்தால் நமக்கு வசதி என்று மற்ற கட்சிகள்
குறிப்பாக பாஜக எதிர்பார்ப்பதையும் புரிந்துகொள்ள முடியும்
யார் காங்கிரசின் தலைவராக வரவேண்டும் என்று கார்பரேட் முதலாளிகள் விரும்புவதும் இயல்புதான்
யார் வந்தால் பாஜக மதவெறி பாசிச எதிர்ப்பு வலுப்படும் என்ற கணக்கை பொதுமக்கள் போடுவதும் ஏற்கக்கூடியதுதான்
இந்தி எழுத்தாளர் ஆதேஜ் ராவல் காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் திரு மல்லிகார்ஜுனே போட்டியிடுவது குறித்து எழுத வரும்போது
”கருப்புக் குதிரையைவிட கருப்பானவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்”
என்று எழுதி உள்ளதைக் கண்டித்து ஆசிரியர் வீரமணி 02.10.2022 விடுதலையில் எழுதி உள்ளார்
பிரச்சினை எழுந்ததும்
குதிரை பேரம் நடக்கிறது,
கருப்பு பணம் விளையாடுகிறது
அதைப் பற்றிதான் எழுதினேன் என்று சமாளிக்க முயன்று அம்பலப்பட்டு நிற்கிறார்
நானொன்றும் காங்கிரஸ்காரன் அல்ல
ஆனாலும்
அதேஜ் ராவலின் குரல் சனாதனத்தின் குரல்
காங்கிரசில் யார் வரவேண்டும் என்பதற்கு இவருக்கு காரணம் இருக்கலாம்
அதுகுறித்து எழுதலாம்
ஆனால் மல்லிகார்ஜுனே கருப்பு நிறத்தவர்
ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்
ஆகவே அதை இவர் கிண்டல் செய்வார் என்றால்
காங்கிரசிற்கு உயர்சாதியை சார்ந்தவர், வெள்ளை நிறத்தவர்தான் வரவேண்டும் என்ற இவரது சனாதனப் புத்தி முந்திரிக்கொட்டையைவிட வேகமாக முன்னுக்கு வந்து நிற்கிறது
இவர் கருப்பு நிறத்தவர்
ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல
அவர் சனாதனத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பவர்
அதில் இரண்டு சம்பவங்களையும் ஆசிரியர் தருகிறார்
27.11.2015 அன்று பாராளுமன்றத்தில்
மதச்சார்பின்மை, சமதர்மம்” ஆகியவை அம்பேத்கார் அறியாதவை என்றும்
அரசமைப்பு சட்டத்தின் 42 வது திருத்தமாக அவை சேர்க்கப்பட்டதாகவும்
ஆகவே ”மதச்சார்பின்மை” என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டும் என்று
ராஜ்நாத்சிங் பேசியவுடன் எழுந்த மல்லிகார்ஜுனே
அந்த இரண்டு வார்த்தைகளும் அம்பேத்கார் கொண்டுவர நினைத்த வார்த்தைகள் என்றும்
அவர்கள் தடுத்துவிட்டதாகவும் கூறியதோடு நில்லாமல்
“நீங்கள் ஆரியர்கள், வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள்
நாங்கள் 5000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும் இங்குதான் வசிப்போம்”
என்றும் கூறுகிறார்
நான் ஆரியன் அல்ல, இந்த மண்ணின் மகன்” என்று மல்லிகார்ஜுனே பேசியதுதான் அவர்களின் கோவத்திற்கு காரணம்
மல்லிகார்ஜுனே ஆரியன் அல்ல
அவர் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்
அதுமட்டும் அல்ல
அவர் அதை உணர்ந்தவராகவும்
அதற்கு எதிராடுபவராகவும் இருக்கிறார்
ஆகவே அவர் காங்கிரசின் தலைவராகக் கூடாது என்று காங்கிரசிற்கு வெளியே இருக்கும் ஆரியர்கள் கத்துகிறார்கள்
யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலை
மல்லிகார்ஜுனே வெற்றி பெறலாம்
தோற்கலாம்
தோற்றால்
அது இந்தக் காரணத்தினால் என்று இருக்கக் கூடாது
அவ்வளவுதான்
#சாமங்கவிய 50 நிமிடங்கள்
03.10.2022

இது எமது வேலை

 இது எங்கள் வேலை

**********************
பெரும்பான்மை ஊர்களில் உள்ளது போலவே திருவள்ளூர் மாவட்டம் தோக்காமூர் கிராமத்திலும் பட்டியலின மக்களுக்கான காலனி இருக்கிறது
அங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான சொத்தும் இல்லை
L வடிவிலான அந்தக் காலனியில் இருந்த இடமும் அவர்களுக்குப் போதாததாக இருந்திருக்கிறது
குடும்பங்கள் வளர வளர இது தவிர்க்க இயலாததாக மாறுவதும் இயற்கை
சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதற்கு வசதி இல்லை
வசதியே இருந்தாலும் குடியானத் தெருவில் இவர்களால் மனையும் வாங்க இயலாது
எனவே பக்கத்தில் இருந்த பொறம்போக்கு நிலம் என்று இவர்கள் கருதிய நிலத்தில் சிலர் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்
அது அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியினரை எரிச்சல்பட வைத்திருக்கிறது
2015 இல் அவர்கள் அது திரௌபதை அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என்றும்
அதை பட்டியல் இனத்தவர் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறி கொட்டகைகளை பிரித்து எறிந்திருக்கின்றனர்
கோயில் நிலத்திற்குள் பட்டியல் இனத்தவர் நுழையக்கூடாது என்பதற்காக 10 அடி உயரத்திற்கு 90 மீட்டர் நீளத்தில் தடுப்புச் சுவர் கட்டிவிட்டனர்
இது கேள்விபட்டு
தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் CPM கட்சியும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு
வட்டாட்சியரையும் சந்திக்கின்றனர்
கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்றும் அது இடிக்கப்பட வேண்டும் என்றும் மனு கொடுக்கின்றனர்
தொடர்ந்து போராடவும் செய்கின்றனர்
CPM கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலியும் சின்னத்துரையும் தொடர்ந்து மக்களை சந்திப்பதும் அதிகாரிகளை சந்திப்பதுமாக இருக்கின்றனர்
2022 மே மாதத்தில் திருவள்ளூரில் ஒரு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது
தோழர் G.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்
அதனைத் தொடர்ந்து CPM மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார்
தோக்கமூர் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்றும்
இல்லையெனில்
அக்டோபர் 06 ஆம் தேதியன்று ஒரு பெரும் போராட்டத்திற்கான தேதியை குறிக்க நேரிடும் என்றும் கூறுகிறார்
முதல்வரின் கவனத்திற்கு இந்தக் கடிதம் போனதும்
0310.2022 அன்று அதிகாலை பலத்த போலிஸ் பாதுகாப்போடு தோக்காமூர் தீண்டாமைச் சுவர் இடிக்கப் படுகிறது
ஆனாலும் காலனி மக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள சிமெண்ட் போஸ்ட்களை அகற்ற வேண்டும்
அந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்
அச்சம் நீங்கும்வரை போலிஸ் பாதுகாப்பு தரவேண்டும்
என்ற கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாகவும்
தொடர்ந்து களத்தில் அதற்காக கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நிற்கும் என்றும் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் கூறியுள்ளதாக 04.10.2022 தீக்கதிர் கூறுகிறது
தீக்கதிர் தவிர எத்தனைப் பத்திரிக்கைகள் இந்த செய்தியை உள்ளபடி பிரசுரித்துள்ளன என்று தெரியவில்லை
இது நமது வேலை
தொடர்ந்து செய்வோம்
#சாமங்கவிய ஒரு மணி 43 நிமிடங்கள்
04.10.2022

அரசியலேகூட ஒரு காரணமாக இருக்கலாம்

 அன்பிற்குரிய முதல்வருக்கு,

வணக்கம்
1) சாதி, மதம், இனம், பால் போன்ற எந்தப் பாகுபாடுமற்ற உலக சமூகத்தை உருவாக்குவது
2) மதம், அறிவியல் மற்றும் சித்தாந்தங்களை ஒப்பாய்வது
3) இயற்கையின் பெருவெளி அதன்மீதான மனிதனின் உறவு மற்றும் அதிகாரம் ஆகியவற்றை தெளிவுபடுத்த மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை ஊக்குவிப்பது
போன்ற குறிக்கோள்களோடு 17.11.1875 அன்று தியாசபிகல் சபை தோற்றுவிக்கப்படுகிறது
அதனை அமைத்தவர்களில் ஒருவரான எலனா ப்ளாத்வஸ்கி சென்னை வந்து அதன் கிளை ஒன்றினை சென்னை அடையாறில் நிறுவுகிறார்
அது பிரம்மஞான சபை என்று அறியப்படுகிறது
அந்த அமைப்பின்மீதான நமது கருத்துகளை முரண்பாடுகளை சொல்வதற்கான பதிவு அல்ல இது
அந்த அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான எலனா ப்ளாத்வஸ்கி
தியாசபிகல் சபையை நிறுவுவதற்கு தம்மை உந்தியது வள்ளலாரும் அவரது சமரச சுத்த சன்மார்க்க சங்கமும்தான் என்கிறார்
19 ஆம் நூற்றாண்டில் எழுந்த மாபெரும் இயக்கங்களில்
ராம் மோகன்ராயின் பிரம்ம சமாஜம் முதல் இடம் என்றும்
அதற்கு அடுத்த இடத்தில்
வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம்தான் என்றும் ம.பொ.சி கூறுவதாக
தனது “விடுதலைத் தழும்புகள்” நூலில் வைத்திருக்கிறார் சு.பொ.அகத்தியலிங்கம்
பிரம்மஞான சபை உருவாவதற்கு காரணமாயிருந்த வள்ளலாரும் சமரச சுத்த சன்மார்க்க சங்கமும்
பிரம்மஞான சபை அளவிற்கும் இந்தியாவில் அறியப்படாமல் போனதேன்?
விவேகானந்தர் அறியப்படும் அளவிற்கு வள்ளலாரும் அவரது இயக்கமும் ஏன் அறியப்படவில்லை
நிறைய காரணங்கள் இருக்கலாம்
"கடுமை நிறைந்த ஆட்சி கடிது ஒழிக"
என்று அரசியல் பேசியவர் என்ற வகையில்
அரசியலேகூட ஒரு காரணமாக இருக்கலாம்
அவைகடந்து மொழியை அதற்கான காரணங்களுள் ஒன்றாக நாம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறேன்
பிரம்மஞான சபையும் விவேகானந்தரும் இவ்வளவு அறியப்பட்டதற்கு அவர்களது எழுத்துக்களும் உரையும் ஆங்கிலத்திலும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் கொண்டுபோகப்பட்டதும்
அவர்களைப் பற்றியும் அவர்களது இயக்கங்கள் பற்றியும் இந்த மொழிகளில் ஏராளம் வந்ததும்தான் என்பதை தங்களாது கவனத்திற்கு கொண்டு வருவது அவசியம்
வள்ளாலார் விஷயத்தில் இதை செய்யத் தவறி இருக்கிறோம்
இதை வள்ளலார் விஷயத்திலும் என்று கொள்ள வேண்டும் மரியாதைக்குரிய முதல்வர் அவர்களே
இன்று வள்ளலாரது இருநூறாவது வருடம் தொடங்குகிறது
என் பிரியத்திற்குரிய முதல்வர் அவர்களே
அரசு இதைக் கொண்டாடுவதோடு
வள்ளலாரின் படைப்புகளை, வள்ளலாரை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் கொண்டு போவதற்கான முயற்சியை செய்ய வேண்டும்
உங்களால் இதை செய்ய முடியும்
செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்
அன்புடன்,
இரா.எட்வின்
05.10.2022

முதல்வருக்கு ஒரு போஸ்ட் கார்ட்


அன்பின் சார்,
வணக்கம்
இந்தியப் பொது உடமைக் கட்சியின் கேரள மாநாட்டு உரையினை சிலிர்ப்போடு கேட்டேன்
உங்கள் கைகளைப் பற்றிக் கொள்கிறேன்
ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை குறித்தும் அதற்கு எதிராட வேண்டிய அவசியம் குறித்துமான உங்கள் உரையின் பகுதியை இரண்டு மூன்றுமுறை கேட்டேன்
“புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்”
நமது பள்ளிக் கல்வித் துறையாலும் நடத்தப்பட இருப்பதாக அறிகிறேன்
இந்தப் பெயரே “திணிப்பு” தானே சார்
ஏற்கனவே எழுத்தறிவில்லாத முதியவர்களுக்கான பள்ளி சாரா மற்றும் முதியோர் கல்வியெல்லாம் நம்மிடம் உண்டே சார்
60 விழுக்காடு நாம் கொடுத்து பாரதம் என்பதை ஏற்க வேண்டுமா?
போக
ஒன்றிய அரசு என்றே விளிக்க வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் சொல்லுங்கள்
கல்வி உங்கள் ஆட்சியிலும் மையப்படுகிறது என்பதையும் சனாதனத்தின் பக்கம் சாய்வதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன்
அன்புடன்,
இரா.எட்வின்
03.10.2022

Thursday, September 15, 2022

காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்

 


ஒருமுறைஅண்ணன் எஸ்.அறிவுமணி எழுதினார்
“தாயே
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படித் தூங்குவது?
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிக் கேட்பது?
ஆசானே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிப் படிப்பது?
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
முதலில் என் பசிக்கு பதில் சொல்லுங்கள் ”
நினைவில் வைத்து எழுதியது
கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்
காலையில் பட்டினியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்
அதற்கான காரணங்களும் அதிகம்
கூட்டுவழிபாட்டுக் கூட்டத்தில் நிற்கமுடியாமல் சரியும் குழந்தைகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது
காரணங்களைக் கண்டடைந்து களைவது மக்களரசின் இலக்கு
காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்
ஆமாம்,
பசிக்கிறபோது எப்படிப் படிப்பான்?
கைப்பற்றிக் கொள்கிறேன் ஸ்டாலின் சார்
இதை மேல்நிலைப் பள்ளிவரை விரிவு செய்யுங்கள்
சத்துணவின் ஒரு பகுதி ஆக்குங்கள்
ஊழியர்களது சம்பளத்தை நியாயமான அளவில் உயர்த்துங்கள்

கெடுத்துச் செத்தது

 



உன்னை மொய்க்கும் ஏராளக் கனவுகளில்
ஏதேனுமொன்றில் நுழைவதென்ற என் திட்டத்தை
கெடுத்துச் செத்தது
உனைக் கடித்த கொசு

Wednesday, September 14, 2022

எந்தப் பெயரில் கடை நடத்தலாம்?

 



காரமடை தந்தை பெரியார் உணவகம் மதவெறியர்களால் தாக்கப்பட்டது குறித்து அந்தக் கடையின் உரிமையாளர் திரு பிரபாகரன் அவர்களோடான பிள்ளை மில்டனின் நேர்காணலை “பேரலை”யில் பார்க்க வாய்த்தது
மனுஷன் தெளிவாக இருக்கிறார்
அந்த உரையாடலின் ஓரிடத்தில் அந்தக் கும்பல் தன்னிடம் பேசியதைக் கூறுகிறார்
இனி இப்படி நடக்காது என்றும்
இந்த ஒருமுறை மன்னித்துவிடுமாறும்
வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டால்
கடையை யாரும் தாக்காமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறியதையும் பதிகிறார்
இவர்களைத் தவிர வேறு யார் இதுமாதிரிக் காரியங்களை செய்துவிட முடியும்
ஒருவர்,
எந்தப் பெயரில் கடை நடத்தலாம்?
என்ன விற்கலாம்?
என்பதையெல்லாம் தீர்மானிக்கிற அதிகாரம் அவரவர் உரிமை
இதில் உள்நுழைகிற உரிமை நாம் உள்ளிட்டு யாருக்கும் இல்லை

இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவலைப் படுகிறோம்



கோவாவிலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியுள்ளார்கள் என்பதில் பகடி செய்ய ஏதும் இல்லை
இது ஜனநாயகத்தின் மீது
மக்கள் அளிக்கும் தீர்ப்பின் மீது
நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம்
கவலைப் படுகிறோம்
இதுகுறித்து காங்கிரஸ் கவலைப்படாதது குறித்து இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவலைப் படுகிறோம்

Tuesday, August 16, 2022

அவரை அழைத்து சன்னமாக நெறிபடுத்துங்கள்

 பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது;

டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான்
என்று கூறி இருக்கிறீர்கள்
மகிழ்ச்சி முதல்வர் அவர்களே
ஆனால்
திரு பூபதி அவர்களை “கல்வித் தொலைக் காட்சியின்” CEO வாக நியமிக்கும் பெருமனது எங்கிருந்து கல்வி அமைச்சருக்கு வருகிறது என்பதை
நீங்கள் கண்டறியாவிட்டால் பள்ளிக்கல்வி பாழாய்ப் போகும் என்பதை நீங்கள் உணர வேண்டும்
உங்களது சித்தாந்ததிற்கு நேரெதிரானவர் அவர் என்பதும்
அவருக்கும் திரு ரெங்கராஜ் பாண்டே அவர்களிக்கும் தோழமை மற்றும் சித்தாந்த உறவு குறித்தும் நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியாது
எல்லோருக்கும் கல்வி சேர்ந்துவிடக் கூடாது என்பது அவர்களது சனாதனம்
கடைக்கோடிக் கடையனுக்கும் கல்வி போய்ச்சேர வேண்டும் என்பது
சனாதனத்திற்கு எதிரான சித்தாந்தம்
சனாதனத்தின் நேரடி வாரிசும்
அதை எப்படியும் மீண்டும் தழைக்கவைக்க வேண்டும் என்று துடிப்பவருமான ஒருவரிடம்
கல்வித் தொலைக்காட்சியைக் கொடுக்க நினைப்பது
தற்செயலானது அல்ல என்பது நீங்கள் அறியாதது அல்ல
சமீப காலமாகவே திரு மகேஷ் அவர்களிடம் ஒருவிதமான திடமின்மை வெளிப்படுகிறது
சனாதனத்தின் பக்கம் உங்கள் அரசு சாய்கிறதோ என்ற அச்சத்தை அவரது நடவடிக்கைகள் தருகின்றன
தயவு செய்து
அவரை அழைத்து சன்னமாக நெறிபடுத்துங்கள்
பூபதியின் நியமனம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் இதை நீங்கள் செய்வ வேண்டும்
இல்லாவிட்டால்
உங்கள் அரசிற்கும்
சனாதன எதிர்நிலைக்கும் அல்லதுகளை அவரது செயல்பாடுகள் தரக்கூடும்

Friday, August 12, 2022

அவரைப் பாதுகாக்க வேண்டும்

 எதிரே அமர்ந்திருக்கும் திரு நயினார் நாகேந்திரனிடம்

ஏதோ இந்தியில் கேட்கிறார் சத்யம் தொலைக்காட்சி முக்தார் அஹமது
என்ன கேட்டார் என்பது என்னைப் போலவே
நயினாருக்கும் புரியவில்லை
சிரித்துக் கொண்டே
இதைத் தமிழில் கேட்கலாமே
என்ற நயினாரிடம்
இப்ப வலிக்குதுல்ல. இதுதான் இப்போது பாராளுமன்றத்தில் நடக்கிறது
என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்
அவரைப் பாராட்டுவது அது இதெல்லாம் அப்புறம்
அவரைப் பாதுகாக்க வேண்டும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...