Tuesday, December 27, 2016

இன்னதென்று தெரிந்தேதான்...

“128 கோடி மக்கள் வாழ்கிற ஒரு பெரிய தேசத்தின் நலனைக் கருதி எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையின் பொருட்டு பதினாறு பேர் சாவதை ஒரு விஷயமாகக் கொள்ளக்கூடாது” என்பதாக திரு S.V சேகர் அவர்கள் சில தினங்களுக்கு முன்னால் பேசியிருப்பதாக அறிய முடிகிறது.
”தேசத்தின் நலனைக் கருதி எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை” என்று அவர் கூறுவது ‘கருப்புப் பணத்தை’ ஒழிக்கிற தங்களது நடவடிக்கை என்று பாரதிய ஜனதாக் கட்சியும் அவர்களது தாய் அமைப்பான RSS காரர்களும் கொண்டாடித் திளைக்கும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அரசு அறிவித்ததையும் அதன் பிறகு வங்கிகளில், இந்த தேசத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலையே குறிப்பதாகும்.
இதற்குள் விரிவாக செல்வதற்கு முன்னால் தேசத்தின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் பொருட்டு செத்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ எழுபத்தி ஐந்தாக உயர்ந்திருக்கிறது என்பதையும் அப்படிச் செத்தவர்களில் ஒருவர்கூட மேட்டுக்குடி மக்கள் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது.
இயல்பாகவே இந்த இடத்திலேயே நம்மை மாதிரி தேசத் துரோகிகளுக்கு வருகிற ஒரு அய்யத்தை திரு சேகர் அவர்களோ அல்லது அவரின் இந்தக் கூற்றை ஆதரிப்பவர்களோ தெளிவுபடுத்த கடமை பட்டிருக்கிறார்கள்.
தேசத்தின் நலனைக் கருதி எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையின் பொருட்டு
16 பேர் சாவதை ஒரு விஷயமாகக் கொள்ளக்கூடாது என்றால் எத்தனைபேர் செத்தால் இதை ஒரு பொருட்டாகக் கொள்ளலாம் என்பதையோ அல்லது குறைந்தபட்சம் மேட்டுக்குடியில் இருந்து ஒரு பிரதிநிதியேனும் செத்தால்தான் அதை ஒரு விஷயமாகக் கருத வேண்டுமா என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்திவிட வேண்டும்.
இதுவரை செத்தவர்களில் மேட்டுக் குடியிலிருந்தோ, முதாலாளி வர்க்கத்திலிருந்தோ, அல்லது சிறிய பெரிய முதலாளித்துவ கட்சியிலிருந்தோ ஒருவர்கூட இல்லை என்பது தற்செயலானதா?
அது தற்செயல்தான் என்றால் அவர்கள் தங்களது வழமையான செலவினங்களை வங்கியின் வரிசையில் நிற்காமலேயே ஜமாலிக்க முடிந்ததா? அதுவும் தற்செயலானதுதானா?
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு இரண்டாயிரம்தான் வரிசையில் நின்றால் என்றுள்ள நிலையில், வங்கிக்குள் செக் கொடுத்து அடையாள அட்டை கொடுத்தால்கூட இருபத்தி நான்காயிரம் ரூபாய்தான் ஒரு தனி நபருக்கு கிடைக்கும் என்ற நிலையில் அம்பாணி வீட்டுப் பெண் இருபதுக்கு ஒட்டிய எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுக்கட்டுக்களோடு ஊடகத்திற்கெப்படி போஸ் கொடுக்க முடிந்தது.?
அது ஸ்டண்டாகக்கூட இருக்கலாம், ஆனாலும் இந்த தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு நாள் இந்த தேசத்தின் பிரதமராக வரக்கூடிய திரு ராகுல் அவர்கள் வரிசையில் நின்றபோது அவருக்கு இவ்வளவு தொகை கிடைத்திருக்காதே.
அப்படி இருக்கையில் அம்பாணி வீட்டுப் பெண்ணிற்கு மட்டும் இவ்வளவு
பெரிய அளவிலான 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் எப்படி கிடைத்தன என்பதையாவது இவர்கள் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்.
சந்துக்கு சந்து நின்றுகொண்டு யாரையும் குரலெடுக்க அனுமதிக்காமல் தேசத்தின் வளர்ச்சிக்கான செயல்பாடு இது என்றும், இதனை கேள்விகேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேள்வி கேட்பவர்குளுக்கு பதில் கூற கடமைபட்டவர்களான இவர்கள் அதை செய்ய மறுக்கிறார்கள். நியாயமான அய்யங்களோடு கேட்பவர்களை இவர்கள் போகிற போக்கில் ‘தேசத் துரோகிகள்’ என்று கூறுகிறார்கள்.
இதை கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையாகக்கூட இவர்கள் நிறுவ முயல்கிறார்கள். தேர்தலின்போது கருப்புப் பணத்தை மீட்டெடுத்து ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து லட்சம் ரூபாய் செலுத்தப் போவதாக வாக்களித்திருந்தார்கள். அந்த வகையில் கருப்பு பணத்தை மீட்டெடுக்கவும், அதை மக்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தவும் இவர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் எங்கே எங்களுக்கு தருவதாக வாக்களித்த பதினைந்து லட்சம் என்று கேட்பதற்கான உரிமை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிறது. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இதை சில இளைஞர்கள் கேட்கவே செய்தார்கள்.
கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்ற வகையில் இவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒரே இரவில் செல்லாது என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு கருப்பு பணம் வைத்திருப்பவர்களைத்தான் உண்மையில் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இவர்களது கருப்புபண வேட்டை எந்தக் கருப்புபண முதலைகளையும் சங்கடப்படுத்தவில்லை. மாறாக இந்தத் திட்டத்தை அவர்கள் வரவேற்கிறார்கள். நிம்மதியாக அவர்கள் தங்களது அன்றாடப் பணிகளை செய்துகொண்டும் சொகுசாக உறங்கிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அன்றாடங்காய்ச்சிகளும் கூலித் தொழிலாளிகளும் தங்களது சிறிய அளவிலான சேமிப்புகளை மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்வதற்காக நாள் கணக்கில்ச் வங்கி முன்னால் வரிசையில் நிற்கிறார்கள்.
கூலித் தொழிலாளிக்கு எப்படி ஆயிரம் ரூபாய் வரும்? என்பதான சில மேட்டுக்குடி மேதாவிகளின் ஏளனம்தான் நம்மை பேரதிகமாக கொதிப்படைய வைக்கிறது.
கூலித் தொழிலாளிகளின் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டு எப்படி வந்தது என்பது இந்த மேதாவிகளுக்கு ஏற்பட்டுள்ள அய்யம் மட்டுமல்ல, அவர்களின் கைகளுக்கெல்லாம் 500 ரூபாய் நோட்டும் ஆயிரம் ரூபாய் நோட்டும் போய்விடக்கூடாது என்ற ஆசையும் அதில் அடக்கம்தான்.
கட்டுமானத் தொழிலில் இன்றையத் தேதியில் மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது.
1) வழக்கம் போல தொழிலும் நடந்து கூலியும் நூறு மற்றும் ஐம்பது ரூபாய்த் தாள்காக தொழிலாளிகளுக்கு வழங்கப் படுகிறது.
2) கூலி கொடுப்பதற்கு பணம் இல்லாத காரணத்தால் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
3) வேலை நடக்கிறது. கூலித் தொகையை 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்களில் வழங்கப்படுகிறது.
இவற்றில் முதலாவதாகக் குறிப்பிடப் பட்டிருக்கும் வகையில் கட்டுமானத் தொழில் நடப்பதென்பது மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. இந்தவகை முதலாளிகளுக்கு ஏதோ வேறு பிசினஸ் இருந்து அவற்ரில் கிடைக்கும் சில்லறைகளைக் கொண்டு கட்டுமானப் பணியை அவர்கள் குறித்த காலத்திற்குள் தங்களுக்கு வேலை முடிய வேண்டும் என்பதற்காக நடத்துகிறார்கள்.
இரண்டாவதாக கைகளில் செல்லாத நோட்டுகள் என்று அறிவிக்கப்பட்ட தாள்களை மாற்ற இயலாமல் மாற்றியதும் வேலையைத் தொடரலாம் என்று இருப்பவர்கள். இவர்களைப் பொறுத்தவரை அவர்களது வேலை கொஞ்சம் தள்ளிப் போகிறது என்பதைத் தவிர பெரிதாக நட்டம் எதுவும் இல்லை. அவர்களது புதுமனைப் புகுவிழா ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதங்களோ தள்ளிப் போகலாம். ஆனால் அந்தத் தொழிலாளிகளுக்கு அவ்வளவு காலமும் அடுப்பெரியாது என்ற சோகம்தான் இந்த மேட்டுக்குடி மேதாவிகளுக்கு புரியவில்லை அல்லது நகைச்சுவையாகப் படுகிறது.
மூன்றாவது வகைப் பணி என்பது நிறையவே விசித்திரமானது. இங்கிருக்கும் முதாலாளிகள் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்களை தொழிலாளுக்கு கூலியாகத் தருகிறார்கள். 350 அல்லது 400 ரூபாய்க்கான கூலிக்கு எப்படி 500 அல்லது ஆயிரம் ரூபாய்த் தாள்களைத் தருவார்களாம் என்றுகூட கேட்பார்கள்.
சித்தாள்கள் கொத்தனார்கள் மற்றும் மேஸ்திரிகள் ஆகியோருக்கு பல இடங்களில் ஒரு வார சம்பளம் மொத்தமாக முன்பணமாகவே தரப்படுகிறது. அல்லது ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுத்து அவர்களுக்குள் பிரித்துக் கொள்ளச் சொல்வதும் நடக்கிறது. வேறு வழி இல்லாததால் வீட்டில் படுத்துக் கிடப்பதைவிட கிடைப்பதை செய்வோம் என்று இவர்களும் வேலையைச் செய்துவிட்டு கிடைத்த தொகையை மாற்றுவதற்காக வங்கியின் முன்னால் வரிசையில் தவம் இருக்கிறார்கள்.
பல மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மூன்று நான்கு மாத சம்பளத்தை மொத்தமாக முன்கூட்டியே வழங்கிவிட்டார்கள். இதை மாற்றுவதற்கு அவர்கள் ஊதியமில்லாத விடுப்பை எடுத்துக் கொண்டும் வரிசையில் நிற்கிற அவலத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது.
கருப்புப்பண முதலைகள் தங்களது செல்வத்தை சொத்துக்களாகவோ அல்லது வெளிநாட்டு வங்களிலோ வைத்திருப்பார்கள் என்பது ஒரு குக்கிராமத்தில் பிறந்து பெரிய கிராமம் ஒன்றில் வசித்து வரும் சராசரிப் பாமரனான எனக்கே புரிகிறது என்றால் இந்திய பிரதாமருக்கோ நிதி அமைச்சருக்கோ தெரியாது நம்புமளவிற்கு நமக்கொன்றும் பைத்தியம் பிடித்துவிடவில்லை.
பிறகேன் இப்படி செய்ய வேண்டும்? காரணம் மிகாவும் சுளுவானது.
அடுத்தக் கட்டமாக கருபுப்பணத்தை எப்போது மீட்பீர்கள் என்று கேள்வி எழும் என்பது ஆள்வோர்க்கு தெளிவாகவேத் தெரிந்திருக்கிறது. பார்த்தீர்கள் அல்லவா, நாங்கள் கருப்புப் பணத்தை மீட்கத் துவங்கினால் நீங்கள் இவ்வளவு இன்னல்களையும் அனுபவிக்க நேரிடும் என்று மிரட்டி கருப்புப் பணத்தைப் பற்றி பேசவிடாமல் வாயடைப்பதர்கான முயற்சி இது.
இவற்றின் உச்சமாக நமது பிரதமாரின் சமீபத்திய கருத்து வந்திருக்கிறது. ஏறத்தாழ ஐந்து லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் வங்களுக்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் அது மிக விரைவில் குறைந்த வட்டிக்கு சந்தையில் புழக்கத்தில் விடப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதன்மூலம் இரண்டு விஷயங்கள் நமக்குத் தெளிவாகிறது.
1) மத்தியதர மக்களும், அரசு ஊழியர்களும், உழைக்கும் மக்களும், சிறு வணிகர்களும் வரிசையில் நின்று வங்கிகளில் கட்டிய ஐந்து லட்சம் கோடியைக் அவர் கருப்பு பணமென்கிறார். ஆக கருப்புப் பணத்தை வைத்திருந்தவர்கள் அம்பானியோ அதானியோ அல்ல ஏழை மக்கள்தான் என்று எந்தவிதமான கூச்சமோ அச்சமோ இன்றி அவரால் உரையாற்ற முடிகிறது.
2) மேற்காணும் கருப்புப்பண முதலைகள் தாங்களாகவே வரிசையில் நின்று செலுத்தியுள்ள தொகை சந்தையில் குறைந்த வட்டிக்கு சுற்றுக்கு வரும்.
ஆக அவர்களது செயல் திட்டத்தைன் அவர்கள் பகிரங்கப் படுத்தி விட்டார்கள்.
ஆக, வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகையை சந்தையில் அதாவது பங்குச் சந்தை முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில் விடுவதாக இருக்கிறார்கள். எனில், இப்போது வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள தொகை மருத்துமனை கட்டுமானம், சாலைப் பணிகள் மற்றும் இதுமாதிரியான நலப்பணிகளுக்காக செலவிடப் படப் போவதில்லை. எனில் இன்னொரு அய்யம் இயல்பாகவே வருகிறது. சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அங்குள்ள மல்லையாக்களால் கபளீகரம் செய்யப்படுமால் பணத்தை வங்கிகளில் கட்டியவர்களின் நிலை என்ன?
கரன்சியை ஒழித்துக்கட்டி இபணமாக மாற்றும் திட்டமும் இவர்களுக்கு இருப்பதையே சமீபத்திய ஊடக நிகழ்ச்சிகள் நமக்கு சொல்கின்றன.
இ பணம் என்றால் ஏறத்தாழ இதுதான். பணத்தாள்கள் முற்றுமாக ஒழிக்கப் படும். நமது டெபிட் கார்டில் அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்றில் நமது ஏற்றப்படும்.
நம்மிடம் தொகையாக 1,57,415 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பணத்தை நம் கணக்கில் சேர்த்து விட வேண்டும். அதை மீண்டும் பணமாக மாற்ற முடியாது.
எப்படி செலவு செய்வது. கடைக்குப் போனால் சரக்கு வாங்கிவிட்டு அந்தக் கார்டை கொடுத்தால் கார்டை தேய்த்து நம் அட்டையிருந்து அவர்களுக்கு உரிய பணத்தை அவர்களது கணாக்கில் சேர்த்து விடுவார்கள். பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிவிட்டு அட்டையை கொடுத்தால் இதே வகையில் பரிமாற்றம் நடந்துவிடும்.
சரி பள்ளிக்கு பையனுக்கு ஃபீஸ் கட்ட வேண்டும். நம் கார்டை கொடுத்துவிட்டால் நாம் எப்படி அது திரும்பும்வரை என்று கேட்டால், நம் கணக்கிலிருந்து பையன் கணக்கிற்கு மாற்றி அவனது அட்டையை தேய்த்து பள்ளியில் பரிமாற்றம் நடக்கும். அல்லது நமது கணக்கில் இருந்து நேரடியாக பள்ளி கணக்கிற்கு பணத்தை செலுத்திவிடலாம்.
பார்ப்பதற்கு எளிதானதாகத்தான் தோன்றும். ஆனால் படிக்காத பெற்ரோர்கள் எப்படி இதை கையாள முடியும்.
இதை பேசிக்கொண்டிருந்தபோது என் நண்பன் என்னைடம் நக்கலாக ஒன்றைக் கேட்டான்,
“மாப்ள எப்படிடா ஃப்னாசுல நீ கடன் வாங்குவ?”
அதுவும் இதே வகையில் நடந்துவிடக்கூடிய ஒரு பரிமாற்றம்தான்.
இந்த வகையில் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன.
1) சில்லறைப் பிரச்சினை வராது
2) பாஸ்வேர்டை சரியாகவும் பாதுகாப்பாகவும் புழங்கக் கற்றுக் கொண்டால் திருட்டு பயம் அவ்வளவாக இருக்காது
3) நோட்டுகள் கிழிந்தோ அழுக்காகியோ சிரமப்படும் நிலை இல்லை
4) யாராலும் வருமான வரியில் இருந்து தப்பிக்க முடியாது.
இப்பவும்கூட பாமரர்களால்தான் வருமான வரியிலிருந்து தப்பிக்க இயலாது. பெருமுதலாளிகள் பண்டமாற்ரு முறையின் வாயிலாக தப்பித்து விடுவார்கள். கோடி கோடியா ஊதியம் பெறும் நடிகர்கள் தங்கமாகவோ வேறு ஏதோ ஒரு வகையிலோ தப்பித்து விடுவார்கள்.
இன்னொன்று சிறு வணிகம் படுத்துப் போகும். பழைய பேப்பர் மற்றும் உடைந்த ப்ளாஸ்டிக் சாமான் வாங்கிப் பிழைக்கும் ஏழைகள் இனை அதை செய்ய இயலாத நிலை வரும்.
தெருவோர வணிகம் முற்றாய் ஒழியும். தள்ளு வண்டிகள் இருக்காது. குச்சி ஐஸ் விற்பவர் அதை செய்ய இயலாது. தயிர் விற்கும் தேசத் துரோக அம்மாயி அதை செய்ய இயலாது. 10 ரூபாய்க்கு வயிறு நிறைய கம்மங்கூழ் விற்பவர் அதை செய்ய இயலாது.
சரி, இதை எல்லாம் அப்போது யார் செய்வார்கள்.
வேறு யார் அம்பானி போன்ற பெரு முதலாளிகள் ஏசி மால்களில் கம்மங்கூழை 250 ரூபாய்க்கு விற்பார்கள்.
இன்னும் புரியவில்லை என்று சொன்னால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...