Tuesday, June 21, 2016

27 உண்மையை தேவையான சூட்டில்

ஒரு ஆசிரியை தன் குழந்தைகளிடம் கேட்கிறார்,

‘Name the nation we all hate?’

ஒரு குழந்தை சொல்கிறான்,

‘Exami_Nation’.

கணிதத்தில் தனக்கிருக்கும் சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு தனது தாயிடம் ஒரு பிள்ளை கேட்கிறான். அந்த அளவிற்கெல்லாம் தன்னை தனது தாய் தந்தை படிக்கவைக்கவில்லையே என்று புலம்பும் தாயிடம் அந்தப் பிள்ளை கூறுகிறான்,

உனக்கு மட்டும் எப்படிம்மா இவ்வளவு நல்ல அப்பா அம்மா வாச்சாங்க

இந்த இரண்டு துணுக்குகளையும் தங்களது முகநூல் பக்கங்களில் கீருத்திகாவும் கீர்த்தனாவும் பகிர்ந்திருந்தார்கள். கீர்த்தனா பதினோறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பிற்கு நகர்ந்திருக்கும் மாணவி. கிருத்திகா ஒரு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியை.

இவற்ரை வெறும் நகைச்சுவைத் துணுக்குகளாக மட்டும் பார்ப்பவர்கள் இதற்கு மேல் தொடராமல்கூட நகர்ந்து விடலாம். ஆனால் இவற்றில் இருக்கும் நகைச்சுவையைக் கடந்து விசனப் படுவதற்கும் விவாதிப்பதற்கும் இருப்பதாக உணர்பவர்களோடும் இவற்றைப் படிக்கும் போது புன்னகையோடு தங்கள் கண்கள் ஈரப்படுவதை உணர்பவர்களோடும் உரையாடலை நிகழ்த்த ஆசைப் படுகிறேன்.

இந்த இரண்டு துணுக்குகளையும் தங்கள் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இருவரும் அக்கா தங்கைகள். கீர்த்தனாவிற்கு விடுமுறை நாட்களில் கிருத்திகாதான் இயற்பியல் நடத்துகிறாள். அந்த வகையில் கீர்த்தனா கிருத்திகாவின் மாணவியுமாகிறாள். ஆக, ஒரு ஆசிரியையும்  ஒரு மாணவியும் இந்த இரண்டு துணுக்குகளையும் தங்கள் தங்கள் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். வேறு வகையில் இந்த இரண்டு துணுக்குகளும் ஒரே நேரத்தில் ஒரு மாணவியையும் அவளது ஆசிரியையும் ஈர்த்திருக்கிறது.

முதல் துணுக்கில் ஒரு குழந்தைக்கு தேர்வு முறையின் மேல் இருக்கும் அலுப்பும் வெளிப்படுகிறது. இரண்டாவது துணுக்கில் ‘நல்ல வேளை நீ படிக்காம தப்பிச்ச’ என்கிற பொறாமை கலந்த குழந்தையின் ஆதங்கம் வெளிப்படுகிறது. இந்த இரண்டு மன நிலைகளோடும் குழந்தையின் மனநிலையும் ஆசிரியையின் மனநிலையும் ஒத்துப் போகிறது. இதை ஆரோக்கியமானதாகவே பார்க்கிறேன்.

இப்போதிருக்கிற பாடத்திட்டத்தோடும் தேர்வுமுறையோடும் ஒத்துப் போகாத மனநிலையில் ஆசிரியரும் மாணவரும் இருப்பது இவற்றில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உதவும்.
சரி, இவர்கள் இருவரும் சலித்துக் கொள்கிற மாதிரி, அல்லது அவர்கள் மனதில் ஒட்டாத மாதிரியாக இந்தக் கல்வித் திட்டமும், தேர்வு முறையும் மாறிப்போனதற்கான காரணங்கள் என்ன?

அதற்கான காரணங்கள் நிறைய. அவற்றுள் ஆக முக்கியமான காரணமாக நான் பார்ப்பது அவை இரண்டும் மனித வாழ்க்கையோடு கொஞ்சமும் ஒட்டாமல் இருப்பது. பஞ்ச பூதங்கள் பற்றிய அறிவை வித விதமாக போதிக்கும் கல்வித்திட்டமும் சரியாக போய் சேர்ந்திருக்கிறதா என்று சோதிக்கிற தேர்வு முறையும் பஞ்ச பூதங்களில் எது ஒன்றையும் உருவாக்க முடியாது என்கிற உண்மையை குழந்தைகளுக்கு சொல்லித் தருவதில்லை. அதிலும் குறிப்பாக நீரை மனிதனால் ஆக்கவோ அழிக்கவோ இயலாது என்பதை போதுமான அளவிற்கு என்றுகூட இல்லை சொல்லியே தருவதில்லை என்பதுதான் உண்மை.

பூமிக்குள் ஏதோ நீர் ஊறிக்கொண்டிருப்பது போலத்தான் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேலான பள்ளிக் குழந்தைகளின் புரிதல் இருக்கிறது. ஒரு சொட்டு நீரும் புதிதாய் உருவாவது இல்லை என்கிற உண்மையை ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் அறிந்துகொள்ள நேர்கிறபோது அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் அந்த ஏதோ ஒரு புள்ளி என்பது அவர்களது கல்வித் தளத்தில் இருந்து பெரும்பாலும் கிடைப்பது இல்லை என்பதுதான் உண்மை.

நிலத்தடிநீர் என்பது ஒரு வங்கிச் சேமிப்பு மாதிரி என்பதை நாம் இன்னும் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவதில்லை. எடுக்க எடுக்க ஒருபோதும் நீர் சுரக்காது என்கிற உண்மை குறித்து இன்னும் நம் பாடத்திட்டம் அக்கறை கொள்ளவில்லை. எடுக்க எடுக்க நீர் குறையும் என்பதையும் பூமிக்கு அடியில் உள்ள நீரை நம் தேவைக்கு எடுத்து பயன்படுத்தும் நாம் மீண்டும் சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீராதாரம் ஜீவித்து நிற்கும் என்கிற உண்மையை குழந்தைகள் அறியாமல்தான் இருக்கிறார்கள்.

மட்டுமல்ல, நிலத்தடி நீரை வறட்டுத்தனமாக உறிஞ்சி எடுப்பதால் பூமிக்குள் ஒரு வெற்றிடம் ஏற்படும் என்பதையும் அந்த வெற்றிடம் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுப்பதில்லை. அல்லது அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் அதை சமூக அக்கறையோடு சொல்லிக் கொடுக்காமல் மதிப்பெண்ணிற்காக மட்டுமே சொல்லித் தருகிறோம். ஐந்து மதிப்பெண்களுக்கு குழந்தைகளின் நீர்மேலாண்மையை நாம் கொள்முதல் செய்து கொள்கிறோம். அல்லது தங்களது நீர் மேலாண்மை பற்றிய ஞானத்தை பிள்ளைகள் ஐந்து மதிப்பெண்களுக்கு தேர்வறையில் விற்று விடுகிறார்கள்.

’தொட்டணைத்து ஊறும் மணற்கேணி’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆற்று மணலைத் தோண்டத் தோண்ட நீர் ஊறும் என்றும் அதுபோல கற்க கற்க மனிதனுக்கு அறிவு ஊறும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். மணலூற்று நீரை கல்விக்கு உவமையாக சொல்லிக் கொடுக்கிறோம். வள்ளுவர் இதை எழுதிய காலம் தொட்டு சற்று முந்தைய காலம் வரைக்கும் இது சரியாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழகத்து நதிகளில் தோண்டினால் எல்லாம் நீர் வராது. அதற்கு போர் போட வேண்டும். காரணம் எந்த ஆற்றிலும் இப்போது மணலே இல்லை. இதே நிலை தொடறும் எனில் அப்படி மிச்சம் மீதம் இருக்கிற மணலும் இன்று முதல் வகுப்பு படிக்கிற குழந்தை தனது பள்ளிக் கல்வியை நிறைவு செய்வதற்குள் இல்லாமல் போய்விடும். எனவே உவமையை மாற்றிச் சொல்லித் தரவேண்டிய நிலை வாய்த்திருக்கிறது என்பதை நாமின்னும் உணர்ந்தோம் இல்லை.

மழை பெய்வது, நதிகளில் நீர் வருவது என்பவற்றைப் போலவே நதிகளில் மணல் இருப்பதும் அவசியம் என்பதையும் பிள்ளைகளுக்கு உணர்வுப் பூர்வமாக சொல்லிக் கொடுத்துவிட்டோம் எனில் ஆற்று மணலை அள்ளிப்போகும் தைரியம் எவனுக்கு வரும்? ஆற்று மணலின் அவசியத்தை மதிப்பெண்ணிற்காக விற்காமல் உசிர் கசிய சொல்லி உணர வைத்துவிட்டோமெனில் பிறகு ஆற்று மணலை பாதுகாக்கிற காரியத்தை மாணவ சக்தி பார்த்துக் கொள்ளும்.

இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில்குடிநீர்ப் பஞ்சம் இருக்கிறது என்கிற உண்மையை சொல்லிக் கொடுக்கிறோம். உலகின் பெரும் பகுதியில் இதுதான் நிலைமை என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அடுத்த உலகப்போர் என்பது குடிநீருக்காகத்தான் வரும் என்பது பிள்ளைகளுக்கு தெரிந்தே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா இந்த யுத்தத்தை இந்தியாவின்மீது தொடுத்துவிட்டது. தெற்கின் ஜீவ நதியான தாமிரபரணி நீரை ராட்ஷச துளைகள் போட்டு கொக்கோ கோலா மூலம் உறிஞ்சிக் கொழுக்கிறது. இதன் ஆபத்தை பள்ளி பிள்ளைகள் இன்னும் உணரவில்லை.

அமெரிக்காவில் நிலத்தடி நீர் இல்லையா என்ன. பிறகு ஏன் அவர்கள் தமிழகத்தில் நீரை உறிஞ்சி எடுக்க வேண்டும்? காரணம் மிக எளிதானது. காசை சம்பாரிக்கலாம் எப்போது வேண்டுமானாலும். நீரை உற்பத்தி செய்ய முடியாது என்கிற உண்மையை உணர்ந்த அமெரிக்கா நமது அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருக்கும் பணத்தாசையை பயன்படுத்திக் கொண்டு நமது நீராதாரத்தை சுரண்டுவதன் மூலம் தங்களது நீராதாரத்தை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள் என்கிற உண்மையை தேவையான சூட்டில் கொடுத்தால் கொக்கோகோலாவை ஒருமாத காலத்திற்குள் விரட்டிவிடமாட்டார்களா நம் பிள்ளைகள்.

ஓரிடத்தில் இருக்கும் வறட்சியை பிரிதோர் இடத்திலிருந்து நீரை எடுத்து வந்து சமாளிப்பது என்பது மோசமான நீர் மேலாண்மை. இதை மோசமான நீர் மேலாண்மை என்பதுகூட தவறு. இது அயோக்கியத்தனமான வியாபாரம். மாறாக ஒரு இடத்தின் வறட்சியை அந்தப் பகுதியில் எதோ செய்வதன் மூலமே சரி செய்யும் வழிமுறைகளை செய்வதுதான் நீர் மேலாண்மை.

ராஜஸ்தானில் கடும் வறட்சி. வெளிமாநிலங்களில் இருந்து ரயில்மூலம் நீரைக் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்தது அரசு. இதைத் தவறென்றெல்லாம் சொல்ல இயலாது. மக்களின் தாகத்தை தணிக்கும் இந்த செயலை எப்படி தவறென்பது? ஆனால் பிரிதொரு இடத்தில் நிலத்தடிநீரை பேரதிகமாய் எடுப்பதன் மூலம் அந்தப் பகுதியின் நீராதாரம் பாதிக்கும் என்கிற உண்மையை உணர்ந்திருக்கிறோமா?

இதற்கு மாற்று இருக்கிறதா? இருக்கிறது என்பதை ஒரு பெண் நிரூபித்திருக்கிறார். ராஜஸ்தான் வறட்சியை அரசு பிற மாநிலத்து நீரின் உதவியோடு ஈடுகட்டுவதைப் பார்த்து துயறுற்ற அவர் ராஜஸ்தான் செல்கிறார். அங்குள்ள மக்களை சந்தித்து ராஜஸ்தானில் மழைக்காலத்தில் மட்டுமே உயிர்பெறும் சிறுசிறு ஓடைகள் குறுக்கே தடுப்பணைகளை கட்டி நீரை சேமிப்பதன் மூலம் வறட்சியை எதிர்கொள்ள முடியும் என்று சொல்கிறார். நம்பவில்லை என்பதுகூட சையாகாது, யாருமே காதுகொடுத்து கேட்கவே தயாராக இல்லை. அவரைக் கண்டாலே கிராமத்து மக்கள் பிள்ளிப் பிடிக்கிறவனைப் பார்த்து ஓடுவதுபோல் ஓடத் தொடங்கினார்கள்.

‘நீங்கள்
நின்றால்
சில சொல்கின்றேன்
சென்றால்
பின் தொடர்கின்றேன்’

என்று ஒருமுறை மேத்தா எழுதினார். இவரும் அதைப்போலவே ஓடுகிற மக்களைப் பின் தொடர்ந்தார். ஒரு புள்ளியில் நின்று கேட்கத் தொடங்கினார்கள். தடுப்பணைகளைக் கட்டினார்கள். சொந்த உடல் உழைப்பைத் தந்தார்கள். குடிநீர் மட்டும் அல்ல விவசாயத்திற்கே இப்போது நீர் இருக்கிறது. விவசாயமே செய்திராத ஒரு தலைமுறை இப்போது அங்கே விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறது.

இதை அல்லவா பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும். இதை செய்துவிட்டோம் எனில் மாணவச் சமூகம் மற்றதைப் பார்த்துக் கொள்ளாதா?

நீர் மேலாண்மையை மதிப்பெண்களுக்காக அல்லாமல் ஊனுருக உயிர் கசிய சொல்லிக் கொடுப்போம் எனில் அடுத்த உலகப்போரை பிள்ளைகள் தடுப்பார்கள்.     



2 comments:

  1. உண்மைதான் ஐயா! இதைப்போன்ற நல்ல மனிதர்களையும் அவர்களின் நற்செயல்களையும் பாடத்திட்டத்தில் புகுத்த வேண்டும்தான்!

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் செய்தால்தான் உருப்படும். மிக்க நன்றி தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...