Monday, July 23, 2012

இன்றின் நியாயத்திலிருந்து...

”எது கவிதை?
யாருக்குத் தெரியும்?”

என்பார் சுகதேவ்.

சுகதேவ் சொல்வது மிகச் சரியான கூற்றாகவே படுகிறது. ஆமாம், கவிதை குறித்து முழுதாய் அறிந்தவர்கள் யாருமே இல்லை என்றே கூறலாம். கவிதை குறித்த அபிப்பிராயம் ஆளுக்கு ஆள் மாறவே செய்கிறது. எது கவிதை என்பதற்கான ஒரு பொதுவான அபிப்பிராயம் இதுவரையிலும் எட்டப் படவில்லை என்பதோடு என்றேனும் ஒரு நாள் எட்டப் படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றனவா என்பதும் சந்தேகமே.

ஆனால் அதற்காக யாரும் குழம்பித்திரிகிற சூழையும் கவிதை யாருக்கும் வைக்கவில்லை.

அம்ரீதா சொல்கிறார்,
“குருதியின் வெப்பத்திலிருந்து பிறப்பது கவிதை”

எனக்கென்னவோ இது பெருமளவு சரி என்றே படுகிறது.குருதி கொதிக்கக் கொதிக்கப் பொங்கிக் கொப்பளித்து வரவேண்டும் கவிதை என்றுதான் தோன்றுகிறது. அப்போதுதான் கவிதை உயிர்ப்போடும் வன்மத்தோடும் வரும். கவிதை குறித்த எந்த அபிப்பிராயத்தோடும் பேதம் கொள்ளும் யாரும் இதை எந்த வித பேதமும் இல்லாமல் ஏற்கவே செய்வார்கள். சூடு கவிதையின் உயிர்ப்பு எனில் வன்மம்தான் கவிதையின் குரல்.

மக்கள் கவிஞர் இன்குலாப் சொல்கிறார்,
“இன்றின் நியாயத்திலிருந்து எழுதுகிறேன். குருதி கொப்பளிக்கிறது”

எவ்வளவு சத்தியமான கூற்று. இன்றின் நியாயத்திலிருந்து புறப்படுகிற கவிதை குருதியின் வெப்பத்திலிருந்துதான் புறப்படும். அதன் குரல் தவிர்க்கவே இயலாதபடி வன்மமாகத்தான் இருக்கும். அவை சூடாகவும் வன்மக்குரலோடும் இருப்பதால் அவை கலகக் கவிதைகளாகவும் இருக்கும். மக்கள் கவிஞரின் கவிதைகளே இதற்கு சாட்சி.

இன்றின் நியாயத்திலிருந்து எழுதப் படுகிற கவிதைகள்தான் நாளையை சரி செய்து செழுமைப் படுத்தும்.

எனவேதான் குருதி கொப்பளிக்க , வன்மக் குரலோடு, இன்றின் நியாயத்திலிருந்து கலகக் கவிதைகள் ஏதேனும் வராதா என்ற தவத்தோடு காத்திருக்கிறோம். நமது அகோரப் பசிக்கான சிற்றுண்டிகளும், உணவு வகைகளும் சமயத்தில் பெரு விருந்துமாக கவிதை நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் தனது “வெட்கத்தில் நனைகின்ற” என்ற கவிதை நூல் மூலம் நமக்குப் பந்தி வைத்திருக்கிறார் கிருஷ்ணப்ரியா.

“கவிதைக்காண இலக்கணங்களோ, சிறப்பான வார்த்தைகளோ, அழகியலோ,இல்லாத கவிதைகளாக இவை இருக்கக்கூடும்..”என்று தனது நூலுக்கான அறிமுகத் தளத்தில் ப்ரியா சொல்கிறார். அவரது நூலுக்குள் பயணித்து வந்த பிறகு நாம் சொல்வது இதுதான்,

 “ப்ரியாவிற்கு இவ்வளவு தன்னடக்கம் தேவையில்லை”

காரணம், இல்லாமலும் இருக்கக்கூடும் என்று இவர் பட்டியலிட்டுத் தருகிற அனைத்தும் இவரது கவிதைகளில் செழித்துக் கிடக்கின்றன.

கீழத்தஞ்சை ஆண்டைகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஈவு இரக்கமே இல்லாது தங்களது பன்னையாட்களை சவுக்காலும், சாட்டைகளாலும், புளிய மிளாறுகளாலும் ரத்தம் வர அடித்து வேலை வாங்கிய மனிதக் கழிசடைகள். அவர்களிடம் வேலை பார்த்த அடிமைக் கூலிகள் பேசிக்கொள்வார்களாம்,

“என்னதான் கோவம் வந்து சாட்டையால அடிச்சாலும் எங்க ஆண்ட ரொம்ப நல்லவங்கத் தெரியுமா? காலயில அடிச்சவுங்க சாயங்காலம் வேல முடிஞ்சப்புறம் ,” ஏண்டா இப்படி அடி வாங்குற மாதிரி நடந்துக்கற. பாரு எப்படி வரி வரியா முதுகெல்லாம். போ, வெரசா போயி சுடு தண்ணி வச்சு பொஞ்சாதிய ஒத்தடங்கொடுக்க சொல்லு”ன்னு சொல்றாக. எவ்வளோ பெரிய மனசு. சும்மாவா சொன்னாக ‘அடிக்கிற கைதான் அணைக்குமுன்னு’”

இது அவன் மீதான அக்கறையின் பொருட்டு அல்ல, அவன் வீட்டு நாளைய வேலைக்கான தயாரிப்பு அது என்பது புரியாதபடி கூலிச்சமூகத்தை மிகுந்த கவனத்தோடு கட்டமைத்து வைத்திருந்தது ஆண்டைச் சமூகம்.

இன்னொரு கூலி சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள்,

“சாட்டைய எடுத்து அடிக்கிற அளவுக்கு எங்க ஆண்ட மோசமானவங்க இல்ல. தப்பு செஞ்சா புளிய மெளாராலதான் அடிப்பாங்க”

எப்படி கவனமாகக் கட்டமைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

ஆனால் சீனிவாச ராவ் முன்னெடுத்த,  நிறையப் பலிகொண்ட,  மிக நீண்ட போராட்டங்களும் அதன் விளைவாய் வந்த சட்டங்களும் அந்த ஆண்டைகளிடமிருந்து எங்கள் அடிமைக் கூலிச்சமூகத்தை விடுதலை செய்திருக்கின்றன.

ஆனால் சராசரிக் குடும்பக் கட்டமைப்பில் இன்னமும் பல இடங்களில் கணவன்மார்கள் ஆண்டைகளாகவும் மனைவிகள் அடிமைக்கூலிகள் போலவும் இன்றைக்கும் தொடர்வதைக் காணத்தான் முடிகிறது. ஆண்டைகள் போல இரக்கமற்று நடந்துகொள்ளும் கணவன்மார்கள்மீது மனைவிகள் வைத்திருக்கும் நம்பிக்கை இருக்கிறது பாருங்கள், அதை இந்தக் கவிதையை விட யாரால் எது கொண்டு அழகாய் சொல்லிவிட முடியும்,

“உப்பு குறைந்ததற்காய்
சூடான குழம்பைத் தலையில் கொட்டிய
தாத்தாவைப் பற்றிக்
கதை சொல்லும் பாட்டி
எப்போதும் முடிக்கிறாள்
‘என் மேல் அவருக்கு கொள்ளை ஆசை’ ”

இந்த இடத்தில் கவிதை சரியாக முடிந்துவிடுகிறது. அதற்கு மேல்”என்று” என்பதில் தொடங்கி நீளும் எந்த ஒரு வார்த்தையுமே தேவைப் படவில்லை. அவ்வளவு அழகாக நேர்த்தியாக முடிகிறது கவிதை.

ஏதேனும் ஒன்று சரியான இடத்தில் நறுக்கென்று முடிந்தால் “ நச்” என்றும் சொல்லலாம் அல்லது அதற்கு பதில் இந்தக் கவிதையையும் சொல்லலாம்.

ப்ரியா ஒரு நல்ல தொழிற்சங்கவாதி. தான் சார்ந்திருக்கிற ஊழியர் சங்கத்தின் மகளிர் அமைப்பினை ஆங்காங்கே கட்டுவதில் முனைப்போடு பங்கேற்ற முன்னனி ஊழியழ்ர். அந்த அமைப்பின் பல மாநாடுகளை முன் நின்று நடத்திய அனுபவம் மிக்கவர். இந்த அனுபவம் தந்த வெளிச்சத்தில் வேலைக்குப் போகும் பெண் ஊழியர்களின் அவல நிலையை அவர் மிகச் சரியாக உள்வாங்கியிருக்கிறார் என்பதை கீழ்க் காணும் கவிதை தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே வேலைக்குப் போகாத பெண்களைவிட வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை மிகவும் துயரமானது. வேலை முடிந்து ஒரே வண்டியில் வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டிற்கு வந்து உடை மாற்றிய உடன் கணவனது வேலை பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு அவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுப்பதிலிருந்து தொடங்கி நள்ளிரவுவரை சில நேரம் பெண்ணுக்கான வேலை நீளுகிறது. இதை மூஞ்சியிலத்தாற்போல் சொல்கிறார் ப்ரியா,

“கையொடிய எழுதி
கோப்புகளைப் பார்த்து
பலவிதமான பார்வைகளை
வார்த்தை விரசங்களை
சிரித்தும் சிரிக்காமலும்
மெல்லப் புறந்தள்ளி
கடிகார முள்சுற்றி
ஆறில் நிற்கும் போது
அரக்கப் பரக்க ஓடி
பிதுங்கும் பேருந்தில்
சதை மூட்டையாய் ஏறி இறங்கி
ஆயாசத்துடன் வீட்டிற்குள் நுழைகையில்
கூடவே நுழையும் உன்னால்
இரக்கமே இல்லாமல் கேட்க முடிகிறது...

’சூடா ஒரு டீ கொடுடி’ ”

வீட்டில் வெட்டியாய் உட்கார்ந்திருப்பவனுக்கும் வேலைக்குப் போய் வந்து பணிவிடை செய்ய வேண்டிய அவலம் இருக்கிறது பாருங்கள், அதுகுறித்தும் ப்ரியா கவனம் செலுத்தவேண்டும் என்பதே நேயர் விருப்பம்.

வேலைக்குப் போவது என்றால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், பள்ளிகளில், மருத்துவ மனைகளில், வணிகத்தளங்களில் பணிபுரிவது என்றே பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிறது. எனவே உழைக்கும் பெண்களின் பிரச்சினை என்பது மேற்சொன்ன இடங்களில் பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகளாகவே பொதுத் தளத்தில் கொள்ளப் படுகிறது.

இது கடந்து வயல்களில், கட்டடக் கட்டுமானத்தில், சாலை போடுவதில்,வீடுகளில் வேலை செய்கிற பெண்களின் பிரச்சினைகள் பொதுவாக போதுமான அளவிற்கு பேசப் படாத சூழலில் அவர்களது அவலத்தை இடது சாரிக்கே உரிய புள்ளியில் நின்று பார்க்கிறார்,

“அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாய்
ஓய்வில்லாது உழைத்து
அலுத்துக் களைத்துப் போகும்
எண்ணற்ற தருணங்களில்
எல்லாரிடமும் சிடுசிடுக்கும் அம்மா
சீறுவதேயில்லை
பத்துப் பாத்திரம் தேய்க்கும்
பத்மாவிடம் மட்டும்...

களித்துச் சிரித்திருக்கும்
எங்களுக்கான நேரங்களில்
கேட்டால்
‘வீட்டிலும் வெளியிலும்
அவளும்தான் தேய்கிறாள், என்னைப் போலவே’
பதில் சொல்லும் அம்மாவின் கண்களில்
எப்போதும் தெரிகிறது ஒரு நெருப்பு”

ப்ரியா அம்மாவின் கண்களில்பார்த்த நெருப்புதான் இவர்களது அவலத்தைக் கொளுத்தி சாம்பலாக்கப் போகும் ஆதிக் கங்கு.

இந்தக் கவிதையை சுகனில் வாசித்துவிட்டுத்தான் இருப்பு கொள்ளாமல் சுகனுக்கு அலைபேசி ப்ரியாவின் எண் வாங்கி அவரோடு பேசினேன். பெண்களின் மாதாந்திர அவஸ்தையை, வலியை இவ்வளவு இங்கிதத்தோடு, அழ்கியல் உடைந்து போகாமல் ப்ரியாவால் சொல்ல முடிகிறது. கொஞ்சம் பிசகியிருந்தால் வேறு மாதிரி போயிருக்கும். மிக நேர்த்தியாய் கம்பியில் நடந்திருக்கிறார்,

மிகவும் பிடித்த
நீலநிறப் பூக்கள் போட்ட
வெள்ளைச் சேலையை
அணியவே யோசிக்கிறேன்

கண்ணாடிகள் சூழ்ந்த
கடைகளில் நுழையும்போதோ
ஓரப் பார்வையாய்
என் பின்புறம் பார்க்கிரேன்

இருக்கையிலிருந்து
எழுந்து நடக்கையில்
தயங்கியபடியே
முந்தானை நுனியைக்
கையில் பிடிக்கிறேன்
அலுவலக சகாவுடன்
கூட நடக்கையில்
எனக்குப் பின்னால்
அவன் வந்து விடாதபடி
மெல்ல நடக்கிறேன்

கவனத்தைத் தின்னுகிற
உடம்பின் வலியில்
தினசரி வேலைகளில்
அடிக்கடி தவறுகிறேன்

நாற்பதைக் கடந்து
நாலைந்து வருடமாகியதில்
எப்போது வருமோ, இது
என்று பயந்துதான் நகருகிறது
என் ஒவ்வொரு பொழுதும்”

“தேரைகள்” என்றொரு கவிதை. அந்த கொஞ்சம் நீண்ட கவிதையில் அனைத்தையும் இறுதி ஆறு வரிகளைத் தவிரக் கழித்தால் சத்தியமாய் இதை ஒரு ஜென் என்று கொள்ளலாம். பாருங்களேன்,

“வாழை மரம்தான்
தேரைகளை வளர்க்கும்
குளிர்ந்த சூழலென்று
அம்மா எடுத்துச் சொன்னாலும்
அழிக்க மனமில்லை
தேரைகளின் குடியிருப்பை”

சரிதானே நான் சொன்னது.

எனக்கு இந்த நூலில் முத்தாய்ப்பாய்த் தோன்றும் ஒரு கவிதை இது. ரசனையும், ரசமும் எள்ளலும் துள்ளிப் பாய்ந்து வரும் ஒரு கவிதை. படித்தவுடன் வெளிப்படையாய் சிரிக்கப் பயந்தவர்களைக்கூட யாரும் இல்லாத இடம் சென்று ரகசியமாகவேனும் புன்னகைக்க வைக்கும் இந்தக் கவிதை புன்னகையின் சுவடு மறையும் முன்னே ஆணைப் போல எதையும் வெளிப்படையாய் வெளிப்படுத்த இயலாத நிலையில் ஆண்களால் மிகுந்த கவனத்தோடு கட்டமைக்கப் பட்டுள்ள ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் சொல்ல முடியாமல் பொத்தி பொத்தி வைத்துப் புழுங்கி புழுங்கி வாழும் பெண்களின் அவஸ்தைக் கசிவாகவே இந்தக் கவிதையைப் பார்க்க்கிறேன்.

“ நினைவு தப்பிப் போய்
படுக்கையில் கிடக்கும் பாட்டி
புலம்பிக் கொண்டிருக்கிறாள்
பக்கத்து வீட்டு
சின்னசாமி தாத்தாவோடு
தனக்கு தொடர்பில்லையென்று”

பானை சோறுக்கு பருக்கை என்ற கணக்கில்தான் கவிதைகள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

ப்ரியா சொல்கிறார்,
“சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம் இல்லைஎன்பதை பல சமயங்களில் உணர்கிறேன். மனைவியாய், தாயாய், தமக்கையாய், தங்கையாய்,இன்னும் எத்தனையோ பாத்திரங்களாக வாழ வேண்டியிருக்கிற பெண்ணிற்கு, படைப்பாளி என்ற பாத்திரத்தில் நிலைப்பது மிகப் பெரிய சவால்தான்”

ஆமாம்தான். மிகப் பெரிய சவால்தான். ஆனாலும் அந்தச் சவால்களை எல்லாம் முட்டி மோதித் தூளாக்கியிருக்கிறார் என்பதையே இந்த நூல் உரத்துக் கூறுகிறது

இன்றும் ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை உணர்ந்து கலகம் செய்கிற ப்ரியா ஆணும் பெண்ணும் சமமாகவே இய்லாது. ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்பதை உணர்ந்து அந்த எதிர் சமத்திற்கான குரலை உயர்த்தும்பொழுது இன்னும் உசரமாய் கவிதைகள் வரும்.

இவரது குருதிச் சூட்டிலிருந்துதான் இவரது கவிதகள் பிறக்கின்றன. எனவேதான் உயிர்ப்போடும் வன்மக் குரலோடும் நம்மை ஈர்க்கின்றன.

இன்றைய நியாயங்களின் மிக நெருக்கத்தில் இருந்து இவர் கவிதைகளைப் படைக்கிறார் என்பதை யார் மீதும் சத்தியம் செய்து சொல்லலாம்.

தமிழரசி, பரமேஸ்வரி, விஜயலட்சுமி என்று என்னிடம் இருக்கும் பட்டியலில் ப்ரியாவும் ஒட்டிக் கொள்கிறார்.

”வெட்கத்தில் நனைகின்ற...”
(கவிதை நூல்)

ஆசிரியர்: கிருஷ்ணப்ரியா (8939998444)

கிடைக்குமிடம்
சௌந்தர சுகன்
அம்மா வீடு, சி 46 இரண்டாம் தெரு
முனிசிபல் காலனி, தஞ்சாவூர் 613007




18 comments:

  1. கிருஷ்ணப்ரியாவின் கவிதைகளை அவரது தளத்தில் வாசித்து ரசித்திருந்தாலும் இப்போது உங்களுடைய ரசனையோடு கைகோர்த்து இன்னும் அதிகமாய் ஆழமாய் ரசிக்கமுடிகிறது. அவரது கவிதை நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்களும், அந்நூலின் முனை பற்றி எங்கள் கையில் கொடுத்தமைக்காகத் தங்களுக்கு நன்றியும்.

    ReplyDelete
  2. ///கீதமஞ்சரி said...
    கிருஷ்ணப்ரியாவின் கவிதைகளை அவரது தளத்தில் வாசித்து ரசித்திருந்தாலும் இப்போது உங்களுடைய ரசனையோடு கைகோர்த்து இன்னும் அதிகமாய் ஆழமாய் ரசிக்கமுடிகிறது. அவரது கவிதை நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்களும், அந்நூலின் முனை பற்றி எங்கள் கையில் கொடுத்தமைக்காகத் தங்களுக்கு நன்றியும்.///

    உங்களது முக நூல் மற்றும் வலை குறித்தும் எழுத வேண்டும். நீங்கள் ஆஸ்திரேலியக் கல்வி முறை பற்றி எழுதியவற்றின் லிங்க் தர இயலுமா தோழர்

    ReplyDelete
  3. sit!

    puththakathai muzhuvathumaaka padiththa anupavam!

    nalla varikalai thertheduthu pottu irukkeenga...

    ReplyDelete
  4. /// Seeni said...
    sit!

    puththakathai muzhuvathumaaka padiththa anupavam!

    nalla varikalai thertheduthu pottu irukkeenga...///

    மிக்க நன்றி சீனி தோழர்

    ReplyDelete
  5. எட்வின் அவர்களே! அற்புதமான பதிவு! தொலை பெசி எண்ணைக் கொடுத்தால் நானும் அவரை நேரில் பாராட்டி இருப்பேன்! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

    ReplyDelete
  6. ஒவ்வொரு வார்த்தையும், அட! என்றோ ஆமாமில்ல? என்றோ சொல்ல வைத்தது. ப்ரியாவை தொடர்புகொள்ள வசதியாக வழி செய்திருக்கலாம் ஐயா!

    ReplyDelete
  7. இன்றும் ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை உணர்ந்து கலகம் செய்கிற ப்ரியா ஆணும் பெண்ணும் சமமாகவே இய்லாது. ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்பதை உணர்ந்து அந்த எதிர் சமத்திற்கான குரலை உயர்த்தும்பொழுது- பெண்ணிய சமத்துவத்துக்கான உரிமை குரல் ஓங்கும்

    ReplyDelete
  8. எங்க ஊருதான் போல...:) வாங்கி வாசிக்கிறேன் ஐயா...

    குருதி சூட்டில் பிறக்குமாயின், அது ஊடறக்கும் வன்மம் பெறுமா? சில தருணங்களில் cold-blooded வரிகளும் தேவைப்படத்தான் செய்திடும்...

    ReplyDelete
  9. /// kashyapan said...
    எட்வின் அவர்களே! அற்புதமான பதிவு! தொலை பெசி எண்ணைக் கொடுத்தால் நானும் அவரை நேரில் பாராட்டி இருப்பேன்! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.///

    மிக்க நன்றி தோழர்.

    அவரது எண்ணை பேசும் போது தருகிறேன். அவசியம் அவரை வாழ்த்துங்கள் தோழர்

    ReplyDelete
  10. /// S.Hansa Kashyap said...
    ஒவ்வொரு வார்த்தையும், அட! என்றோ ஆமாமில்ல? என்றோ சொல்ல வைத்தது. ப்ரியாவை தொடர்புகொள்ள வசதியாக வழி செய்திருக்கலாம் ஐயா! ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  11. /// Christopher said...
    இன்றும் ஆணும் பெண்ணும் சமமில்லை என்பதை உணர்ந்து கலகம் செய்கிற ப்ரியா ஆணும் பெண்ணும் சமமாகவே இய்லாது. ஆணும் பெண்ணும் எதிர் சமம் என்பதை உணர்ந்து அந்த எதிர் சமத்திற்கான குரலை உயர்த்தும்பொழுது- பெண்ணிய சமத்துவத்துக்கான உரிமை குரல் ஓங்கும் ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  12. /// மயிலன் said...
    எங்க ஊருதான் போல...:) வாங்கி வாசிக்கிறேன் ஐயா...

    குருதி சூட்டில் பிறக்குமாயின், அது ஊடறக்கும் வன்மம் பெறுமா? சில தருணங்களில் cold-blooded வரிகளும் தேவைப்படத்தான் செய்திடும்... ///

    உங்க ஊர் மட்டுமல்ல தோழர். உங்கள் துறை சார்ந்தவரும் கூட. அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக இருக்கிறார்.

    ReplyDelete
  13. திரு இரா எட்வின்

    கவிதைகள் பற்றி தங்கள் கருத்துகள் ஒரு முனை பார்வையாய் இருப்பதாக உணர்கிறேன் .

    தங்கள் பதிவில் இருந்து

    இந்த கவிதைகளை என் பக்கத்தில் பகிர்வதன் மூலம் அவை என்னை ஆட்கொண்ட தன்மையை அளவிடுதல் எளிது .

    சமீபத்தில் தனது “வெட்கத்தில் நனைகின்ற” என்ற கவிதை நூல் மூலம் பந்தி வைத்த கிருஷ்ணப்ரியா போற்றுதற்குரியவர்

    1


    “உப்பு குறைந்ததற்காய்
    சூடான குழம்பைத் தலையில் கொட்டிய
    தாத்தாவைப் பற்றிக்
    கதை சொல்லும் பாட்டி
    எப்போதும் முடிக்கிறாள்
    ‘என் மேல் அவருக்கு கொள்ளை ஆசை’ ”

    இந்த இடத்தில் கவிதை சரியாக முடிந்துவிடுகிறது. அதற்கு மேல்”என்று” என்பதில் தொடங்கி நீளும் எந்த ஒரு வார்த்தையுமே தேவைப் படவில்லை. அவ்வளவு அழகாக நேர்த்தியாக முடிகிறது கவிதை.

    2


    பொதுவாகவே வேலைக்குப் போகாத பெண்களைவிட வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை மிகவும் துயரமானது. வேலை முடிந்து ஒரே வண்டியில் வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டிற்கு வந்து உடை மாற்றிய உடன் கணவனது வேலை பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு அவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுப்பதிலிருந்து தொடங்கி நள்ளிரவுவரை சில நேரம் பெண்ணுக்கான வேலை நீளுகிறது. இதை மூஞ்சியிலத்தாற்போல் சொல்கிறார் ப்ரியா,

    “கையொடிய எழுதி
    கோப்புகளைப் பார்த்து
    பலவிதமான பார்வைகளை
    வார்த்தை விரசங்களை
    சிரித்தும் சிரிக்காமலும்
    மெல்லப் புறந்தள்ளி
    கடிகார முள்சுற்றி
    ஆறில் நிற்கும் போது
    அரக்கப் பரக்க ஓடி
    பிதுங்கும் பேருந்தில்
    சதை மூட்டையாய் ஏறி இறங்கி
    ஆயாசத்துடன் வீட்டிற்குள் நுழைகையில்
    கூடவே நுழையும் உன்னால்
    இரக்கமே இல்லாமல் கேட்க முடிகிறது...

    ’சூடா ஒரு டீ கொடுடி’ ”

    3


    “ நினைவு தப்பிப் போய்
    படுக்கையில் கிடக்கும் பாட்டி
    புலம்பிக் கொண்டிருக்கிறாள்
    பக்கத்து வீட்டு
    சின்னசாமி தாத்தாவோடு
    தனக்கு தொடர்பில்லையென்று”

    ரசனையும், ரசமும் எள்ளலும் துள்ளிப் பாய்ந்து வரும் ஒரு கவிதை. படித்தவுடன் வெளிப்படையாய் சிரிக்கப் பயந்தவர்களைக்கூட் ய்யாரும் இல்லாத இடம் சென்று ரகசியமாகவேனும் புன்னகைக்க வைக்கும் இந்தக் கவிதை

    ReplyDelete
  14. திரு இரா எட்வின்

    கவிதைகள் பற்றி தங்கள் கருத்துகள் ஒரு முனை பார்வையாய் இருப்பதாக உணர்கிறேன் .

    தங்கள் பதிவில் இருந்து

    இந்த கவிதைகளை என் பக்கத்தில் பகிர்வதன் மூலம் அவை என்னை ஆட்கொண்ட தன்மையை அளவிடுதல் எளிது .

    சமீபத்தில் தனது “வெட்கத்தில் நனைகின்ற” என்ற கவிதை நூல் மூலம் பந்தி வைத்த கிருஷ்ணப்ரியா போற்றுதற்குரியவர்

    1


    “உப்பு குறைந்ததற்காய்
    சூடான குழம்பைத் தலையில் கொட்டிய
    தாத்தாவைப் பற்றிக்
    கதை சொல்லும் பாட்டி
    எப்போதும் முடிக்கிறாள்
    ‘என் மேல் அவருக்கு கொள்ளை ஆசை’ ”

    இந்த இடத்தில் கவிதை சரியாக முடிந்துவிடுகிறது. அதற்கு மேல்”என்று” என்பதில் தொடங்கி நீளும் எந்த ஒரு வார்த்தையுமே தேவைப் படவில்லை. அவ்வளவு அழகாக நேர்த்தியாக முடிகிறது கவிதை.

    2


    பொதுவாகவே வேலைக்குப் போகாத பெண்களைவிட வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை மிகவும் துயரமானது. வேலை முடிந்து ஒரே வண்டியில் வீட்டுக்குத் திரும்பினாலும் வீட்டிற்கு வந்து உடை மாற்றிய உடன் கணவனது வேலை பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு அவனுக்கு தேநீர் தயாரித்துக் கொடுப்பதிலிருந்து தொடங்கி நள்ளிரவுவரை சில நேரம் பெண்ணுக்கான வேலை நீளுகிறது. இதை மூஞ்சியிலத்தாற்போல் சொல்கிறார் ப்ரியா,

    “கையொடிய எழுதி
    கோப்புகளைப் பார்த்து
    பலவிதமான பார்வைகளை
    வார்த்தை விரசங்களை
    சிரித்தும் சிரிக்காமலும்
    மெல்லப் புறந்தள்ளி
    கடிகார முள்சுற்றி
    ஆறில் நிற்கும் போது
    அரக்கப் பரக்க ஓடி
    பிதுங்கும் பேருந்தில்
    சதை மூட்டையாய் ஏறி இறங்கி
    ஆயாசத்துடன் வீட்டிற்குள் நுழைகையில்
    கூடவே நுழையும் உன்னால்
    இரக்கமே இல்லாமல் கேட்க முடிகிறது...

    ’சூடா ஒரு டீ கொடுடி’ ”

    3


    “ நினைவு தப்பிப் போய்
    படுக்கையில் கிடக்கும் பாட்டி
    புலம்பிக் கொண்டிருக்கிறாள்
    பக்கத்து வீட்டு
    சின்னசாமி தாத்தாவோடு
    தனக்கு தொடர்பில்லையென்று”

    ரசனையும், ரசமும் எள்ளலும் துள்ளிப் பாய்ந்து வரும் ஒரு கவிதை. படித்தவுடன் வெளிப்படையாய் சிரிக்கப் பயந்தவர்களைக்கூட் ய்யாரும் இல்லாத இடம் சென்று ரகசியமாகவேனும் புன்னகைக்க வைக்கும் இந்தக் கவிதை

    ReplyDelete
  15. உங்கள் வழியே எனது வாழ்த்துக்கள் பிரியாவுக்கு!

    நினைவு தப்பிப் போய்
    படுக்கையில் கிடக்கும் பாட்டி
    புலம்பிக் கொண்டிருக்கிறாள்
    பக்கத்து வீட்டு
    சின்னசாமி தாத்தாவோடு
    தனக்கு தொடர்பில்லையென்று”
    எனக்கு புன்னகை வரவில்லை. பாட்டியின் வலி தெரிகிறது.நேரில் கண்டிருக்கிறேன். ஒருமுறை பெங்களூருவிலிருந்து இரயில்ப்யணத்தின்போது பார்த்த நிகழ்வு.... 60 வயதிருக்கும் ஒரு முதிய பெண்மணியிடம் அவரது துணைவர் சந்தேகத்தின் பெய்ரால் (எதிரிலிருந்த 35 வயதுக்காரர் அவரை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக) இடம் மாற்றி அமர வைத்தபோது பாட்டி கூனிகுறுகி சன்னல்புறமாக பார்வையை திருப்பிக்கோண்டார், அவரது விழியோரம் ஈரம் கண்டேன்.இதுபோன்று எத்தனைமுறை அவமானப்பட்டிருப்பாரோ ... அவர்கூட அந்திமகாலத்தில் இப்படித்தான் புலம்பியிருப்பார்.அத்த்னையும் உள்ளத்தில் உறைந்துள்ள வலி.

    ReplyDelete
  16. மிக்க நன்றி அய்யா, உமா.

    சொல்ல வந்ததிலிருந்து கொஞ்சம் நழுவி போனதோ என்று உங்கள் மற்ரும் லதாவின் கருத்துக்கள் உணர்த்தின உமா. சரி செய்திருக்கிறேன். மிக்க நன்றி

    ReplyDelete
  17. விம‌ர்ச‌ன‌ம் நியாய‌ம் செய்திருக்கிற‌து க்ருஷ்ண‌ப்ரியாவுக்கு... நேர்மையும் தைரிய‌மும் வீர‌மும் ஜீவ‌காருண்ய‌மும் நிறைந்த‌ க்ருஷ்ண‌ப்ரியாவுக்கு... ம‌கிழ்ச்சி தோழ‌ர்!

    ReplyDelete
  18. //// நிலாமகள் said...
    விம‌ர்ச‌ன‌ம் நியாய‌ம் செய்திருக்கிற‌து க்ருஷ்ண‌ப்ரியாவுக்கு... நேர்மையும் தைரிய‌மும் வீர‌மும் ஜீவ‌காருண்ய‌மும் நிறைந்த‌ க்ருஷ்ண‌ப்ரியாவுக்கு... ம‌கிழ்ச்சி தோழ‌ர்! ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...