Saturday, April 30, 2016

25 பள்ளிக்கொரு இன்சினரேட்டர்

சமீபத்திய பெருமழை எத்தனையோ பேரழிவுகளை கொண்டு வந்திருந்தாலும் சில நல்லதுகளையும் சேர்த்தே நமக்கு கொடுத்தது. அவற்றில் மிக முக்கியமான மூன்று விஷயங்களாக நான் கருதுவது

1)   இஸ்லாமிய சமூகத்தின் மீதான பொய்யான பிம்பங்களை அழித்தொழித்த  இஸ்லாமிய பிள்ளைகளின் தியாகம் செறிந்த மக்கள் சேவையும், அது கொடையளித்த மதம் கடந்த மனித நேயமும்.
2)   கூவத்தை சில காலம் சுத்தமாக வைத்திருந்தது
3)   ‘நாப்கின்’ என்கிற வார்த்தையைக் கேட்டாலே தீட்டுப் பட்டுவிட்டதுபோல் இருந்துவந்த அசூசையை பெருமளவு துடைத்துப் போட்டது.

வெள்ளக் காலத்தில் கடலூருக்கு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் நாப்கின்களாவது என் மூலமாக சென்றிருக்கும். ’தோழர் இங்க எல்லா பெண்களும் பேண்டீஸ் போடறது இல்ல. எனவே பெல்ட் வைத்த நாப்கினாக வாங்கி அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்’ என்று களத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்த தோழர் ஜோதிமணி என்னோடு எந்த விதமான அசூசையும் இல்லாமல் இயல்பாக என்னோடு பேச முடிந்தது. எந்தவிதமான முகச் சுளிப்பும் அசூசையும் என்றி என்னால் கேட்கவும் முடிந்தது. 

‘நாப்கின்’ பற்றிய விளம்பரங்கள் வந்த புதிதில் ‘சேய், இதுக்கெல்லாம் கூடவா விளம்பரம் போடுவாய்ங்க?’ என்று முகம் சுளித்த நண்பர்களை எனக்குத் தெரியும் என்பதுகூட பொய்யானதுதான். காரணம், நானே அந்த விளம்பரங்கள் வந்த புதிதில் ஒருவிதமான அசூசையோடு முகம் சுளித்திருக்கிறேன். இன்னும் சிலர் அந்த விளம்பரங்கள் வந்ததும் சேனலை மாற்றுவதை பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சிப் பெட்டிகளின் மீது தண்ணீர் விட்டுக் கழுவாத குறையாக ‘தீட்டுத் துணிக்கெல்லாம் விளம்பரம் போட வந்துட்டாய்ங்க’ என்று அங்கலாய்த்தவர்களை எனக்குத் தெரியும். ‘குடும்பத்தோடு பார்க்கக்கூடாத திரைப்படங்கள்’ என்பதுபோல் ‘குடும்பத்தோடு பார்க்கக்கூடாத விளம்பரங்கள்’ என்பதாக நாப்கின் விளம்பரங்கள் பச்சைக் குத்தப் பட்டிருந்தன.

’அந்த மூன்று நாட்கள்’ என்று மாதவிடாய் நாட்களுக்கு பொதுப்புத்தியில் பெயர். ‘அம்மா தீட்டாயிட்டா, அவளத் தொடக்கூடாது’ என்று தங்கள் குழந்தைகளிடம் சொன்ன தகப்பன்மார்களை, பாட்டிகளை, அத்தைகளை எனக்குத் தெரியும். வீட்டில் ஒரு இருட்டு மூலையில் அவர்களுக்கான இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். இன்னும் கொஞ்சம் காலம் கடந்து முன் சென்று பார்ப்போமெனில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அத்தகைய இருட்டு மூலையும் இல்லாமல்தான் இருந்தது. ‘இதுமாதிரி காலத்தில் பொண்டுக ஒதுங்கறதுக்குன்னு ஊருக்குள்ள சத்திரம் மாதிரி பொது இடம் இருக்கும். அங்கன போயி ஒண்டிக்குவாக. இப்ப என்னடான்னா ஊருக்குள்ள எவ தீட்டு? எவ சுத்தம்னே? தெரிய மாட்டேங்குது’ என்று ஆசிரியர் அறியில் புலம்பிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறோம்.

‘எவ தீட்டு?, எவ சுத்தம்னே? தெரிய மாட்டேங்குது’ என்ற புலம்பல் தீட்டு என்பது அசுத்தம் என்ற பொருளாகப் பார்க்கப் பட்டிருப்பதை உணர்த்துகிறது.

1)   இவள் அசுத்தம், இவள் சுத்தம் என்பதை தீர்மானிக்கிற அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?
2)   எவள் சுத்தமாயிருந்தாள் இவளுக்கென்ன? எவள் அசுத்தமாயிருந்தால் இவர்களுக்கென்ன?

முன்பெல்லாம் கடைக்கு டிபன் வாங்கப் போனால் ‘என்ன சார் அம்மா வீட்டுக்கு வெளியவா?’ என்று கடைக்காரரே கேட்கிற நிலை இருந்தது.
எனில் மாதத்தில் மூன்று நாட்கள் பெண்கள் வீடற்றவர்களாகவே ஒரு காலம் வரைக்கும் இருந்திருக்கிறார்கள். மட்டும் அல்ல, இந்த மூன்று நாட்களில் அவர்களை மூலைக்குள் முடக்கிப் போட்டு மாதத்தில் மூன்று நாட்களுக்கான அவர்களது செயல்பாட்டை முடக்கி வைத்திருக்கிறார்கள்.

பெண்களுக்கே இந்த நிலை என்றால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நிலை எவ்வளவு கொடுமையானதாக இருந்திருக்கும். ஒன்று அந்த மூன்று நாட்களும் பள்ளிக்கு செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும். அப்படி மாதாமாதம் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் மாதாமாதம் மூன்று நாட்களுக்கான படிப்பை அவர்கள் இழந்திருக்க வேண்டும். ஒரு வருட்த்திற்கு என்று பார்ப்போம் எனில் குறைந்த பட்சம் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்து நாட்கள் இவர்களது கல்வி நாட்கள் சேதப் பட்டிருக்கும். இதுவே ஆண்களைவிட பெண்கள் படிப்பில் தாழ்ந்து கிடப்பதற்கான காரணமாகிப் போயிருக்கவும் கூடும்.

அல்லது அந்த நாட்களிலும் அவர்கள் பள்ளிக்குப் போகும் பட்சத்தில் அவமானப் பட்டு இடைநின்றிருக்க வேண்டும்.

‘நாப்கின்கள்’ வந்திருக்காத காலத்தில் பெண்கள் துணியைத்தான் பயன் படுத்தி வந்தார்கள். அந்தத் துணிக்கு ‘தீட்டுத் துணி’ என்று பெயர். அந்தத் துணியை மிக மிக கேவலமான ஒன்றாகத்தான் பார்த்தனர். இன்னும் சொல்லப்போனால் கேவலமான ஒரு மனிதனைப் பற்றிப் பேசும்போதோ அல்லது அவனை திட்டும் போதோ ‘எந் தீட்டுத் துணிக்குப் பொறாத பய’ என்று திட்டுவது வழக்கமாக இருந்தது. அந்த அளவிற்கு கேவலமானதாக ஒருகாலம் வரைக்கும் தீட்டுத் துணி பார்க்கப் பட்டது.

இவ்வளவு கேவலமாக பார்க்கப் பட்ட ‘தீட்டுத்துணி’ பெரும்பாலும் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற பழந்துணியாகவே இருக்கும். தீட்டுத் துணியை பயன்படுத்துவது மிகவும் சிரமமான காரியம். அதை துவைத்துப் பராமரிப்பது என்பது அதைவிடவும் சிரமமான காரியம். ஈரப்படுத்தி நன்கு பிழிந்த துணியைத்தான் இதற்குப் பயன் படுத்த வேண்டும். அவ்வப்போது துணியை மாற்ற வேண்டும். துணியை நனைப்பதற்கும், பயன்படுத்திய துணியை அலசித் துவைப்பதற்கும் தண்ணீர் வசதி வேண்டும். துணியை மாற்றியபிறகு துவைத்த துணியை காய வைப்பதற்கு இடம் வேண்டும். யார் பார்வையிலும், குறிப்பாக ஆண்கள் பார்வையில் படாமல் அவற்றை காய வைக்க வேண்டும். தப்பித்தவறி ஆண்கள் பார்வையில் பட்டுவிட்டால் அவர்களது வாழ்க்கையே நாசமாகப் போனதுபோல் ஆண்வர்க்கம் சபிக்கும்.

பெண்கள் முடங்கிப் போன வீடுகளே இருளடைந்து கிடக்கும். இரண்டு மூன்று பெண்கள் இருக்கும் வீடுகளில் மாதவிடாய் கண்டுள்ள பெண்ணின் வேலையையும் மற்றவர்கள் சேர்த்து செய்து வந்தனர். அப்படி இல்லாமல் ஒரே ஒரு பெண் இருக்கும் வீடுகளிலோ அல்லது இருக்கும் இருவருக்கும் ஒரே காலத்தில் மாதவிடாய் வந்து விட்டாலோ அந்த வீடு இருண்டே போகும். வீடு பெருக்குவதிலிருந்து, பாத்திரம் கழுவுவதிலிருந்து, சிமிளி மற்ரும் அரிக்கேன் விளக்குகளின்  கண்ணாடிகளைத் துடைத்து விளக்கேற்றுவதிலிருந்து அனைத்து வேலைகளையும் ஆண்களே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஆண்களுக்கு உலகம் மட்டும்தானே வீடு. வீடென்பது அவர்களுக்கு ஓய்வெடுக்கும் ஒரு சத்திரம். வீட்டு வேலைகளை செய்வது அவர்களது ஆண்மைக்கே இழுக்காயிற்றே.

இந்தப் புள்ளியில்தான், தங்களது வேலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு ஆண்கள் பெண்களை அந்தக் காலத்திலும் வீட்டிற்குள் இயங்குவதற்கு அனுமதித்திருக்கக் கூடும்.

இந்தப் புள்ளி பெண்களின் வரலாறில் மிக முக்கியமானது. ஆனால் மிகவும் அசுகரியமான தீட்டுத் துணியோடு வீட்டிற்குள் வளைய வந்து தங்களது அன்றாட பணிகளை செய்வது அவர்களுக்கு மிக மிக சிரம்மாக இருந்தது. அடிக்கடி துணி மாற்ற வேண்டும். வேலைகளை செய்யும்போது இன்னும் பேரதிகமாய் துணியை மாற்ற வேண்டும். பயன் பட்டவற்றை சுத்தம் செய்து யாருக்கும் தெரியாத மறைவிடத்தில் உலர்த்த வேண்டும். வேலை செய்ய செய்ய அதிகமாய் உதிரம் கசியும். சக்தியனைத்தும் வற்றிப் போகும். பெருத்த உதிரப்போக்கு சக்தியை அழித்துவிடும் இந்தக் கால கட்ட்த்தில் பெண்கள் பேரதிகமான சத்துள்ள உணவினை உட்கொள்வதன் மூலம் இழந்த சக்தியை மீட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் வழக்கமாக உட்கொள்ளும் உணவினைக்கூட அவர்கள் அந்தக் காலத்தில் ‘இயலவில்லை’ என்று எடுத்துக் கொள்வதில்லை. உணவு உண்ணும் அளவிற்கே தெம்பில்லாத அவர்களிடம்தான் அனைத்து வேலைகளையும் இந்தச் சமூகம் வாங்கித் தொலைத்தது.

வீட்டிலிருக்கும் பெண்களுக்கே இப்படி என்றால், பணிக்கு செல்லும் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? அதையே நினைத்துப் பார்க்க முடியாதபோது பள்ளிக்கு செல்லும் பெண்களின் நிலையை எப்படி கொள்வது?

துணியை ஈரப் படுத்த, அலச, எத்ட்ஷனைப் பள்ளிகளில் அந்தக் காலத்தில் போதுமான வசதி இருந்தது. அந்தக் காலத்தில் துணியின் அசௌகரியம் அவர்களது நடையை வித்தியாசப் படுத்திக் காட்டும். இருபாலர் படிக்கும் பள்ளியெனில் அந்தப் பெண் குழந்தைகள் எவ்வளவு சிரமத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். இத்தகைய அவமானங்களும் அசௌகரியங்களும் எத்தனை குழந்தைகளின் படிப்பில் மண்ணள்ளிப் போட்டிருக்கும்?

இதற்கு மாற்றாக, வரமாக வந்ததுதான் ‘நாப்கின்’. ஒழுங்கான ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம் என்றால் ‘நாப்கின்’ வரவிற்குப் பிறகு பெண்களின் பள்ளி வருகை அதிகமானது. ஒரு உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.  இப்போதெல்லாம் வருடா வருடம் பள்ளியிருதித் தேர்வுகளில் முதல் பத்து இடங்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண் குழந்தைகளே வருகிறார்கள். இதற்கு ஆசிரியர்களின் உழைப்பு, பெற்ரோரின் பங்களிப்பு, குழந்தைகளின் ஓயாத உழைப்பு என்பவற்றோடு ‘நாப்கின்’ களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  

நாப்கின்கள் வந்த பிறகும் அனைத்துக் குழந்தைகளாலும் அவற்றை வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. இப்போது வரத்தை ஏழைக் குழந்தைகளால் அனுபவிக்க இயலாமல் போனது. இன்னும் சொல்லப் போனால் ’அந்தக் காலத்தில்’ பணக்காரப் பெண்குழந்தைகளை ஒருவிதமான பொறாமையோடு ஏழைக் குழந்தைகள் பார்த்த்தை நானறிவேன். இதை உணர்ந்து கொண்ட தமிழக அரசு பருவம் எய்திய அனைத்து குழந்தைகளுக்கும் நாப்கின்களை வழங்குகிறது. இது பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கல்வியையும் மிகப் பெரிய அளவில் ஊக்குவிக்கும். இதற்காக பள்ளி செல்லும் ஒரு பெண் குழந்தையின் தகப்பன் என்கிற வகையில் தமிழக அரசிற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாகவே இருக்கிறேன்.

இப்போது அடுத்த சிக்கல் ஒன்று வருகிறது. பயன் படுத்திய நாப்கின்களை எப்படி அழிப்பது?

நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி குப்பை வண்டிகளில் நாப்கின்களை சேகரிப்பதற்கென்று ஒரு தனித் தொட்டியை அமைத்து அவற்றில் நாப்கின்களை சேகரித்து தனியாக அவற்றை அழிப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதன் தேவையை கலைநிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட அனைத்து வடிவங்களையும் கையிலெடுத்து இருக்கிற எல்லா ஊடகங்களின் வழியாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

பள்ளிகளில் பெண் குழந்தைகள் பயன்படுத்தும் நாப்கின்களை சேகரித்து அழிப்பதற்கான வசதிகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கே உள்ளன. செய்வதறியாது குழந்தைகள் எங்காவது வீசிவிடுகிறார்கள். சில குழந்தைகள் டாய்லெட்டில் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். இது அடைத்துக் கொண்டு இருக்கிற கழிவறை வசதியையும் முடமாக்குகிறது. பல பள்ளிகளில் பயன்படுத்தப் பட்ட நாப்கின்கள் இங்கும் அங்குமாக கிடப்பதை பார்க்கிறோம். பள்ளிகளுக்கு இருக்கிற கட்டமைப்பு வசதிகளுள் இவற்றை அப்புறப் படுத்த அவர்கள் படாத பாடு படுவதைப் பார்க்க முடிகிறது.

இது உறுத்திக் கொண்டே இருந்த சூழலில் ஒருநாள் அருப்புக் கோட்டையிலிருந்து நண்பர் ஒருவர் தானும் தனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து அருப்புக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு இன்சினரேட்டர் வாங்கித் தர முடிவெடுத்திருப்பதாகவும். அது குறித்த விவரங்களை சேகரித்து தருமாறும் கேட்கவே அது குறித்த விசாரனையில் இறங்கினேன்.

மேனுவலாக எரிக்க்க்குமளவு உள்ள இன்சினரேட்டர்களும் மின்சாரத்தால் இயங்க்க் கூடிய இன்சினரேட்டர்களும் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது. இவற்றில் மிசாரத்தால் இயங்குவது பாதுகாப்பானதாகவும் சுகாதாரத்திற்கு ஏற்றதாகவும் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு நாளைக்கு 250 நாப்கின்களை எரிக்கும் வசதி கொண்ட இன்சினரேட்டர் 29,000 ரூபாய் விலையில் கிடைப்பதாகத் தெரிகிறது. இது போக குழாய்கள் மற்றும் சில உதிரி பாகங்கள், எடுத்து வந்து நிறுவுவதற்கான செலவு என்கிற வகையில் ஒரு 20,000 ரூபாய் ஆகிறது. ஆக ஒரு 50,000 ரூபாய் செலவழித்தால் இது சாத்தியம். இதில் பேரத்திற்கு இடம் இருப்பதாகவும் தெரிகிறது.

ஆக, ஒரு 50,000 ரூபாய் செலவு செய்தால் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு இன்சினரேட்டர் சாத்தியம் என்பதை அரசிற்கும் நல்ல உள்ளங்களுக்கும் கோரிக்கையாக வைக்கிறேன்.






No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...