Tuesday, May 7, 2013

நள்ளிரவு காற்று


 விஷ்ணுபுரம் சரவணன் எப்போதாவது எழுதுவதை எப்போதும் பேசிக் கொண்டிருப்பவர்களுள் நானும் ஒருவன். கொஞ்சம் வியப்போடும் அதிகப் பொறாமையோடும் நான் பார்க்கும் எழுத்தாளர் அவர்.

எழுத்தாளர் பாமரன் அவர்களின் நண்பர் யுவன் பிரபாகரன் இவருக்காக ஒரு வலையை வடிவமைத்து “ ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப் பூச்சி” என்ற இவரது முதல் நூலிலிருந்து பத்துக் கவிதைகளை எடுத்துப் போட்டிருக்கிறார். இதுவே மணிசெந்தில் சொல்லித்தான் இவருக்கே தெரிய வருகிறது.

ஆக, இவரது வலை இவர் அறியாமலேயே பாமரனது முயற்சியில் உருவாகியிருக்கிறது.

 கவிதை,கதை, கட்டுரை என்று அள்ள அள்ள எல்லாம் இருக்கிறது இவரது வலையில். கோவமோ, வலியோ, அழுகையோ அல்லது வேறு எதுவோ எதுவாயினும் அதை அழகியலோடு சொல்லத் தெரிந்த கையடக்க எண்னிக்கையிலான இளைய எழுத்தாளர்களுள் சரவணன் முன்னுக்கு நிற்பவர்.

குழந்தைமை இவரது பெரும்பகுதி படைப்புகளின் அடிநாதம்.

இறுகிய பாறைகளையும் கட்டுடுடைத்து ஊடுறுவி கண்ணுக்குத் தெரியாத பொந்தொன்றில் தேங்கிக் கிடக்கும் பொட்டு ஈரத்தில் கறைந்துபோகும் பக்குவம் இவரிடம் இருக்கிறது.

“ சில்லறையாய் 
 தராததால் 
 கொட்டிய 
 வார்த்தைகளைக் கொண்டு
 பிம்பமொன்றைக் 
 கட்டினாள் 
 அவள் திமிர்க்காரி என்று. 

 பிறிதொரு நாள்.... 

யாசகம் கேட்கும் 
பெரியவரிடம் 
 அன்பொழுகக் கேட்கிறாள் அவள் 

என்னங்கப்பா வேணும் ”

”எளிதில் பார்த்திட முடியா இடத்தில் 
 பூக்கத்தான் பூக்கின்றன பூக்கள்”

 என்று ஒரு கவிதை இருக்கிறது. எதுவாக இருப்பினும் விடாப்பிடியாக அடிவேர் வரைக்கும் விசாரிக்கும் வலை இவரது.

வண்ணத்துப் பூச்சியின் அழகை ,

”அதனழகு 
 அதில் மிதக்கும் 
 வண்ணங்களிலில்லை 
 பட படக்கும் 
 சிறகிலிருப்பதை 
 உணருவதேயில்லை பலரும் ”

என்று வாசிக்கும் பொழுது இந்த வலையிலிருந்து அழகழகாய் சிறகசைத்தபை வண்ண வண்ணமாய் பறக்கின்றன வண்ணத்துப் பூச்சிகள்.

“ உலக(மய)மறியா சோடா ராமு” என்றொரு பதிவு கிடைக்கிறது. தாராளமயம் என்னும் கொடூரப் பிசாசு எப்படி உள்ளூர் கோலி சோடாவை அதன் ஊழியர்களை உறிஞ்சி ஏப்பம் விட்டது என்பதை பேசும் பதிவு. இதில் கசியும் அரசியலும், எள்ளலும், வலியும் இவருக்கு பாமரனிடமிருந்து கைமாறியிருக்கக் கூடும். ஆனால் அழகியலோடு இது பின்னப் பட்டிருக்கும் நுணுக்கம் இவரது சொந்த அடையாளம்.

பரமக்குடி துப்பாக்கி சூட்டைப் பற்றிய ஒரு பதிவும்,  திருவாரூர் அரசு மருத்துவமனை பற்றிய பதிவும் என்னை உலுக்கிப் போட்டவை.

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஒரு இளைஞனின் படம் போட்ட ஒரு போஸ்டரை ஒட்டுவதில் ஏற்பட்ட சிரமங்களை சொல்லும் போது, “ இன்றைக்கும் கொல்லப் பட்ட தலித் படம் போட்டு ஒட்டமுடியாத இந்தச் சமூகத்தில் தலித் தலைவர்கள் எப்படிகட்சியை கட்டமைத்தார்களோ?” இவர் கேட்கும்போது நமக்கான வேலையின் பரப்பளவு எவ்வளவு அதிகம் என்பதை உணர முடிகிறது.

தனது அண்ணனை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தபோது கிடைத்த அனுபவத்தை அவர் சொல்லும் போது பாறைகளும் வலி நிவாரணிகளைத் தேடவே செய்யும். 150 மீட்டர் தூரத்தை ஸ்ட்ரெச்சரில் கொண்டுபோக விமானக் கட்டணத்தைவிடவும் அதிகம் கேட்கும் ஊழியர்களை அம்பலப் படுத்தும் போது படிக்கும் எவனும் சபிப்பான். 

சொல்கிறார்,

“வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நோய் குணமாகும் எனும் நம்பிக்கை தனியார் மருத்துவமனைக்கு செல்வோருக்கு 90 சதம் இருக்குமென்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வோருக்கு 50 சதத்திற்கும் வெகு குறைச்சலாய்த்தான் இருக்கும்அந்த எளிய மனிதர்களிடம் பணம் கேட்ச்டு நச்சரிக்கும் சிலரைப் பார்த்துதான் நம்பிக்கையின் சதவிகிதம் குறைகிறது..”.  

அரசு மருத்துவமனைகளின் அவலங்களை மட்டுமே சொல்லி அவநம்பிக்கையை மட்டுமே விதைக்கவில்லை.  எவ்வளவு வற்புறுத்தியும் எதையும் வாங்க மறுக்கும் மருத்துவர்களையும் ஊழியர்களையும், வசதி உள்ளவர்களிடம் கை ஏந்தி அவர்கள் விளக்குமாறுகளையும் ஒட்டடைக் குச்சிகளையும் வாங்குவதையும் மிக நேர்மையோடு இந்த வலை தருகிறது.

மூன்றுமாதங்களாக புதிய பதிவுகள் எதுவுமில்லை என்பதுதான் குறை.


இனி இவன் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் ஒருநூறு தோப்புக்கரணம் போடுகிறேன். இந்தப் பையனை தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள். 

வலை பார்க்க

2 comments:

  1. வண்ணத்துப் பூச்சி அழகு மிகவும் கவர்ந்தது...

    நண்பரிடம் தெரிவித்து விட்டேன்...

    நல்லதொரு தள அறிமுகம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபால்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...