Friday, May 3, 2013

என் கல்வி என் உரிமை

“ கல்விக்கூடங்கள், முதலாளித்துவ வகுப்பு மனநிலையால் முழுமையாக ஆழ்த்தப் பட்டுவிட்டன. முதலாளிக்கு கீழ்ப்படிந்த கை ஆட்களையும், திறமையான தொழிலாளிகளையும் வழங்குவதுதான் அவற்றின் நோக்கம்.

வாழ்க்கையிலிருந்தும், அரசியலிலிருந்தும் பிரிக்கப் பட்ட கல்வி என்பது பொய்யும் பாசாங்கும் ஆகும்”

என்று லெனின் 1918 இல் சொன்னது இன்றையத் தேதியில் இந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அச்சு அசலாக அப்படியே பொருந்துவதாக உள்ளது.

எவ்வளவுதான் பூசி மெழுகினாலும் இன்றைக்கு கல்வி முதலாளித்துவத்தின் கோரப் பிடிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதை மறுக்க இயலாது.

முன்பெல்லாம் தள்ளுவண்டிகளில் குச்சி வல்லிக் கிழங்குகளை சீவி வானலியில் இட்டு வறுத்து மிளகாய் உப்புப் பொடி கலந்து சிப்ஸாக்கி பழைய செய்தித்தாளை கூம்பு வடிவத்தில் மடித்து அதற்குள் போட்டுத் தருவார்கள். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும்.

கூலி வேலை பார்ப்பவர் முதல், கோமான் வரை யார் வேண்டுமானாலும் வாங்கலாம், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இப்போது முதலாளித்துவத்தின் அகோரப் பசிக்கு இந்த சிப்சும் பலியாகிவிட்டது.

கண்ணாடிச்சுவர் பெருங்கடைகளுக்குள் வண்ண வண்ணமான ஷாஷே பைகளுக்குள் விதவிதமான சிப்ஸ் வர ஆரம்பித்துவிட்டன. பிரபலமான நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் எல்லா சேனல்களிலும் போட்டி போட்டுக்கொண்டு கோடிக் கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு இந்த சிப்ஸ் நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்துக் கொடுக்கின்றனர்.

தள்ளு வண்டிகளின் வியாபாரம் அறவே படுத்துக் கொண்டது.

இரண்டு வகையான விளைவுகளை இவை தந்துள்ளன.

1) சிறிய முதலீட்டோடு தள்ளுவண்டியில் சிப்ஸ் போட்டு வியாபாரம் செய்தவரின் பிழைப்பில் மண் விழுந்தது. அதேபோல ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் சிப்ஸ் வாங்கிச் சாப்பிட்ட ஏழைகளுக்கு சிப்ஸ் அந்நியப் பட்டுப் போனது.

2) ஏராளமான வேதிப் பொருட்களோடு இவை தயாராவதால் உடலுக்கு ஏராளமான நோய்களைக் கொண்டு வருவதுடன் மக்கும் தன்மையற்ற வண்ண உறைகளால் மண்ணையும் மாசுபடுத்துகின்றன.

இதே நுட்பத்தைதான் கல்வி நிலையங்களுக்கும் முதலாளித்துவம் விரிவு படுத்தியது.

போட்டக் காசை அதனினும் பண்மடங்கில் எடுப்பது என்பது வணிக யுக்தி. இப்போது எல்லா முதலாளிகளும் எதனினும் லாபம் கொழிக்கும் தொழிலாக கல்வியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். கல்வி நோக்கி தனியார் காலடி எடுத்து வைத்ததுமே கல்வி அரசிடமிருந்தும் கல்வியாளர்களிடமிருந்தும் கழன்று போய் முதலாளிகளின் கையில் உட்கார்ந்து கொண்டது. பல கல்வி நிறுவனங்களில் தாளாளரை முதலாளி என்று அழைக்க ஆரம்பித்து ஓரிரு வருடங்களாகிவிட்டன.

வியாபாரத்தின் பிரதானக் கருவி விளம்பரம். கல்விக்கும் இப்போது விளம்பரம் தேவைப் படுகிறது. கல்வி நிறுவனங்களும் எல்லா சேனல்களிலும் தங்கள் கல்வி நிறுவனங்கள் குறித்து விளம்பரம் செய்கின்றன. இங்கும் நடிகர்களே விளம்பரத்திற்குப் பயன்படுத்தப் படுகின்றனர். விளம்பரத்திற்காக கோடி கோடியாய் செலவு செய்யப் படுகிறது.

வானுயர்ந்த கட்டிடங்கள், பேருந்து வசதி, வசீகரிக்கும் வண்ணங்களில் சீருடைகள், நுனி நாக்கு ஆங்கிலம் போன்ற நுணுக்கங்களில் மக்களை வசீகரித்து இழுத்து வீழ்த்திவிடுகின்றனர்.

ஏதோ ஆங்கிலமே சகலத்தையும் தீர்மானித்து சொர்கத்தைக் கட்டமைக்கும் என்ற இவர்களது பிம்ப வலையில் எப்படியோ பெரும்பகுதி பெற்றோர்கள் சாய்த்து போனார்கள்.  காய்கறி விற்பவரிலிருந்து உயரதிகாரிகள் வரைக்கும் இந்த வலையில் விழுந்ததோடு ஏதோ ஒரு புள்ளியில் அதற்கான பிரச்சாரகர்களாகவும் மாறிப் போகிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்நம்மைப் பார்த்து சொல்கிறார்கள்,

“ புரியாமப் பேசாதீங்க சார். ஆங்கிலம் தெரியாமல் வெளிநாட்டுக்கெல்லாம் வேலைக்குப் போகமுடியுமா?”

அவர்கள் கேட்பதும் நியாயம்தானே என்று ஆங்காங்கே திரள் திரளாக ஆதரவு சக்திகளும் பெருகிக் கொண்டுதானுள்ளன.

எல்லோரும் வெளி நாட்டிற்கு வேலைக்குப் போகப் போவதில்லை. மூன்றிலிருந்து நான்குசதம் மட்டுமே அந்த வாய்ப்பினைப் பெறுகிறார்கள். அதுவும் பலநாடுகள் வெளிநாட்டிலிருந்து வேலைக்கான ஊழியர் இறக்குமதியை குறைத்துக் கொள்ளவும் , பையப் பைய நிறுத்திக் கொள்ளவும் இருக்கின்றன என்கிறபோது எல்லாக் குழந்தைகளையும் ஆங்கில வழியில் படிக்கவைப்பது தேவையா?

சரி அப்படியே அனைவருமே போவதாக வைத்துக் கொள்வோம். இப்போது தமிழ்நாட்டிற்கு எழுதப் படிக்கவே தெரியாத கூலித் தொழிலாளிகள் பீகாரிலிருந்தும் இன்னும் பல வட மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர்.
அவர்கள் எந்த சிறப்பு பயிற்சியும் இல்லாமலேயே மூன்று மாதங்களுக்குள் ஓரளவும் ஆறு மாதங்களுக்குள் முழுமையாகவும் தமிழைப் பேசக் கற்றுக் கொள்கின்றனர்.

படிப்பறிவே இல்லாத மக்களுக்கே இது சாத்தியப் படுகிறது. எனில்,நன்கு படித்து வெளி நாட்டிற்குப் போகிறவர்களுக்கு இது நிச்சயமாய் சாத்தியமே. தேவைப் படும் எனில் ஆங்கிலத்தை நன்கு கற்றுக் கொடுங்கள் அதற்காக கணிதத்தையும் அறிவியலையும் ஆங்கிலத்தில்தான் கற்றுக் கொடுப்போம் என்பது என்ன நியாயம்.

யாரும் அவ்வளவாய் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது.

பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்கள் அதிகமாக குடியேறியுள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதன் விளைவாக இங்கிலாந்தில் உள்ள 1300 பள்ளிகளில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.

“ ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கல்வி அளிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு மூன்றாயிரம் பவுண்டுகள் அதிகம் செலவு பிடிக்கிறது. இத்தனையும் செய்தாலும் விளைவுகள் மிகக் கீழேயே உள்ளது. ஆங்கிலம் தெரியாத குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் கல்வி கொடுப்பது எளிதாயில்லை.

எனவே இங்கிலாந்தில் குடியேறுபவர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் “

என்று இங்கிலாந்து பிரதமர் பிரவுண் கூறுவதாக தீக்கதிரில் சென்ற ஆண்டு ஒரு செய்தி வந்தது.

பிரவுன் சொல்வதன் சாரம் இதுதான்,

ஒருவனுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழி வழியாகத்தான் கல்வியைத் தரவேண்டும். அல்லது எந்த மொழி வழி கல்வியைப் பெற ஒருவன் விரும்புகிறானோ அந்த மொழியினை அவன் முதலில் கற்க வேண்டும்.

இது சரியென்றே படுகிறது. ஆனால் நம் நாட்டில் காணப்படும் நிலை என்ன?
நமது மெட்ரிக் பள்ளிகளில் பெரும்பகுதி பள்ளிகளில் கற்பவருக்கும் கற்பிப்பவருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதுதானே உண்மை.

எனில், இத்தகைய மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதால் மட்டும் ஒருவனுக்கு ஆங்கிலத்தில் உரையாட வந்துவிடப் போவதும் இல்லைதானே. ஆனாலும் எல்லாம் கடந்து ஒரு கேள்வி இருக்கிறது.

படிப்பவனுக்கும் ஆங்கிலம் தெரியாது, சொல்லித் தருபவருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆனால் தேர்ச்சியும், மதிப்பெண்களும் மட்டும் எகிறிக் கொண்டு பாய்கிறதே. அது எப்படி?

இதற்காக பெரிய அளவில் மூளையை கசக்கத் தேவையில்லை. பிரதமருக்குத் தெரியாமல் 2G யில் இவ்வளவு ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கு எடுத்துக் கொள்ளவேண்டிய சிரமத்தைக் கூட இதற்கு எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. காரணம் அவ்வளவு எளிது.

கண்மூடித்தனமான மனப்பாடமும் , மீண்டும் மீண்டும் அதை எழுதிப் பார்க்க வைப்பதுமே இந்தத் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களுக்கான பிரதான காரணம். அங்கொன்றும் இங்கொன்றுமாக விலக்குகள் இருக்கலாம்.

இந்த முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனம் எது வரை போயுள்ளது என்றால், பல பிரபல பள்ளிகளில் சேர்க்கைக்காக மூன்று கிலோமீட்டர் தொலைவு வரிசை நிற்பதைப் பார்க்கிறோம். பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயுள்ளது.பல இடங்களில் பெற்ரோர்களை உள்ளே விட மறுத்து காவலர்கள் கம்பைச் சுழற்றியஅனுபவமும் உண்டு.

இவ்வளவு கேவலப்பட்டும் இது மாதிரிப் பள்ளிகளில் தம் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் துடிக்க காரணம் என்ன/?

மேலே சொன்னதுதான். என்ன பாடு பட்டேனும் இங்கு சேர்த்துவிட்டால் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களோடு வெளியே வந்து விடுவார்கள். நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும். கிடைத்தால் கேபஸ் இண்டர்வியூக்களில் நல்ல வேலைக்குப் போய் நிறையச் சம்பாதித்து சொகுசாக வாழ்வார்கள்.

எல்லோரையும் 1100 கு குறையாமல் எடுக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்.

11 ஆம் வகுப்பில் அந்த வகுப்பு பாடங்களை நடத்துவதே இல்லை அப்போதிருந்தே 12 ஆம் வகுப்பு பாடங்களை நடத்துகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு ஆண்டு படிக்கும் ஒரு மாணவன் படிக்கும் பாடத்தை இங்கு இரண்டு ஆண்டு காலத்தில் படிக்க வாய்ப்புள்ளது.

அதையும் கூட அனைத்து பாடங்களிலும் கவனம் குவிப்பதில்லை. BLUE PRINT எடுத்து வைத்துக் கொண்டு மதிப்பெண்கள் இல்லாத பாடங்களைத் தவிர்த்து விடுகின்றனர்.

பதினோராம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாமலே ஒருவன் பன்னிரெண்டாம் வகுப்பில் 1100 கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறமுடிகிறது.

பதினோராம் வகுப்பில் உள்ள மிக முக்கியமான பாடங்களைக் கற்காமல் போவதன் மூலம் எவ்வளவுதான் அதிகம் மதிப்பெண்களைப் பெற்ராலும் ஒரு மாணவனேராளம் இழக்கிறான்

கல்லாவை நிரப்பாது என்ற காரணத்தினாலேயே மெட்ரிக் பள்ளிகள் ஒப்புக்கு ஒரு வகுப்பை மட்டும் கலை பிரிவிற்கு ஒதுக்கும் அவலமும் நடக்கிறது. இப்படியே போனால் வரலாறு புவியியல் படிக்காத ஒரு சமூகம் வருவதற்கு வாய்ப்புண்டு.

இதற்கெல்லாம் காரணம் 11 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை அந்தந்தப் பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதே.

இப்படி புற்றீசலாய் பெருகும் தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி?

11 ஆம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வையோ அல்லது மேல் நிலை வகுப்புகளுக்கு பருவத்தேர்வு முறைகளையோ கொண்டு வருவது மிக அவசியம். இதைச் செய்தாலே இந்த செயற்கையான தேர்ச்சியும், அகோர மதிப்பெண்களும் குறையும்.

இரண்டாண்டு பாடங்களை இரண்டாண்டுகள் எல்லோருமே படிக்க வேண்டிய கட்டாயம் வந்தால் இந்தப் பள்ளிகளுக்கு வெகு அருகில் அரசு மற்ரும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சியும் மதிப்பெண்களும் வந்துவிடும். பொதுமக்களிடம் இருக்கும் மோகம் குறைந்து போகும்.

தவறாய் ஊறிக் கிடக்கும் ஆங்கில மோகத்தை எப்பாடு பட்டேனும் போக்க வேண்டும் . அதற்கு அது குறித்து அக்கறையோடு பேசுவோர் முதலில் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைக்க முன் வர வேண்டும்.

இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நாம் ஆங்கில மோகம் என்று கொள்ளவில்லை. பாடங்களை ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்பதையே நாம் வறட்டுத் தனமான ஆங்கில மோகமாகப் பார்க்கிறோம்.

470 கும் மேல் எடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே 11 ஆம் வகுப்பில் இடம் கொடுக்கும் பள்ளிகளை அரசு இழுத்து மூட வேண்டும். வியாபாரம்தான் என்றானபின் வியாபார பாஷையிலேயே ஒன்றைக் கேட்கலாம் என்று படுகிறது.

தனியார் ஒருவர் ஓட்டல் நடத்துகிறார். யார் வேண்டுமானாலும் போகலாம். சாப்பிடலாம். ஒரே நிபந்தனைதான். சாப்பிட்ட உணவிற்கு அவனிடம் காசு இருக்க வேண்டும்.

தனியார் ஒருவர் பேருந்து சேவை நடத்துகிறார். யார் வேண்டுமானாலும் அதில் ஏறலாம். என்ன பயணச்சீட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான்.

தனியார் மருத்துவ மனையில் ஒரு அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் ரூபாய் எனில்., அதைக் கட்டக் கூடிய யாருக்கும் அந்த அறுவையை அங்கு செய்துவிட முடியும்.

10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கக்கூடிய,  கேட்கும் கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிற, 350 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிற மாணவனுக்கு இதில் எந்தப் பள்ளியும் இடம் தராது.

அரசு சான்றிதழில் உயர்கல்வியில் சேரத் தகுதி பெற்றுள்ளான் என்று அரசு முத்திரையோடு சொல்லப் பட்டிருக்கும். ஆனாலும் சேர்க்க மாட்டார்கள். எனில் உயர் படிப்புக்கு தகுதி பெற்றவன் என்று அரசு சான்றளித்தது செல்லாதா?

நாம் நமது கோரிக்கையை கட்டணத்தோடு சுறுக்கிக் கொள்வது தவறென்றே படுகிறது. தேர்ச்சி பெற்று முதலில் வரக்கூடிய மாணவர்களை அவன் எடுத்துள்ள மதிப்பெண்களை கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

இதை செய்யட்டும். 10 ஆம் வகுப்பில் 300 மதிப்பெண்கள் மட்டும் பெற்ற மாணவனை நாங்கள் 1120 எடுக்க வைத்திருக்கிறோம் என்று சொல்லட்டும். பாராட்டுவோம். இப்படி ஒரு சட்டம் வந்தால் பாதிப் பள்ளிக்ள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

ஆனால் தான் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவனையே தேர்வு வைத்து வேலைக்கு எடுக்கும் அரசு இதை செய்யும் என்று நம்பவில்லை.  எனவே இதற்கு அழுத்தமான ஒரு போராட்டம் தேவை.

புரட்சி வெற்றி பெற்ற கொஞ்ச நாட்களில் லெனின் பேசுகிறார்,

“தங்கள் சொந்த மொழியில் மக்கள் கல்வியைக் கற்கும் உரிமை நிறுவப் பட வேண்டும்.  எந்தக் கூட்டத்திலும் யாரும் அவர் மொழியில் பேசுவதற்கான உரிமையை உத்திரவாதப் படுத்த வேண்டும்”

 ஒவ்வொரு பள்ளியிலும் ஆங்கிலத்தை பேச , எழுதக் கற்றுக் கொடுப்பதை கை ஏந்தி வரவேற்கவே செய்யலாம்.

எதையும் சரி செய்து விடலாம் முதலாளிகளிடமிருந்து கல்வியை அப்புறப் படுத்திவிட்டால்.


22 comments:

  1. பள்ளிகூட நாட்களில் என்னுள் எழுந்த பல கேள்விக்கு அப்போது பதில் கிடைக்கவில்லை ஆனால் பின்னாளில் பாவ்லோ பிரைரோ வை வாசித்த போதே அவற்றுக்கான காரணங்கள் விளங்க துவங்கியது.சேவை வியாபாரமானால் அவை தரமற்று போகுமென்பதற்க்கு கல்விதுறை ஒரு மிகசிறந்த உதாரணம்.IIT போன்ற இந்திய அரசின் கல்வி நிறுவனங்களே உலகளவில் கல்வித்தரத்தில் பின்தங்கித்தான் இருக்கிறது எனும் போது தனியார் கல்வி நிறுவனங்களை பற்றி சொல்ல தேவையில்லை.முதலாளித்துவ அடிமைகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கும் கேவலமான இந்த கல்வி முறை ஒழிய லெனினின் பார்வை நமக்கு தேவை என்றாலும் இன்னும் கல்வி பற்றி விரிவான விவாதம் நம் சமூகத்தில் நடைபெறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் மது

      Delete
  2. நல்ல நோக்கம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. \\10 ஆம் வகுப்பில் 300 மதிப்பெண்கள் மட்டும் பெற்ற மாணவனை நாங்கள் 1120 எடுக்க வைத்திருக்கிறோம் என்று சொல்லட்டும். பாராட்டுவோம். இப்படி ஒரு சட்டம் வந்தால் பாதிப் பள்ளிக்ள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.\\

    மிகவும் உண்மை. படிக்கும் பிள்ளைகளை தேர்ச்சிபெறச் செய்வது என்ன அத்தனை கடினமான விஷயமா? நூறுசதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் எல்லாம் இப்படியாகப்பட்ட நடைமுறைதான் உள்ளது என்பது வருத்தும் செய்தி.

    ஆங்கில வழிக்கல்வியால் ஆங்கிலத்தை எழுதவும் தமிழைப் பேசவும் மட்டுமே அறிகிறார்கள் பிள்ளைகள். ஆங்கிலம் என்னும் மொழியை அறிந்துகொள்வதற்கும் அதைப் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை என்று புரிந்துகொள்கிறோமோ அன்றுதான் அரைகுறை ஆங்கிலத்துக்கும் அரைகுறை தமிழுக்கும் இடையில் திண்டாடும் நிலை மாறும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மொழி பாடத்திற்கும் வழி பாடத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாததால் உள்ள பிரச்சனையை முதலில் மக்களுக்கு புரிய வைப்பதற்கு வழியை காண வேண்டும். கல்வி என்பது பணம் காய்க்கும மரம் இல்லை. தற்போது கற்றுக்கொடுக்கப்படும் ஆங்கிலம் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கும் ஏற்றதாக இல்லை என்பதையும் உணரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையாக சொன்னீர்கள் தோழர். மிக்க நன்றி

      Delete
  6. “தங்கள் சொந்த மொழியில் மக்கள் கல்வியைக் கற்கும் உரிமை நிறுவப் பட வேண்டும். எந்தக் கூட்டத்திலும் யாரும் அவர் மொழியில் பேசுவதற்கான உரிமையை உத்திரவாதப் படுத்த வேண்டும்”


    மொழி பாடத்திற்கும் வழிபாடத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் ஆங்கிலமும் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கும் ஏற்றதாக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. மொழி என்பது வேறு மொழி வழி என்பது வேறு தோழர்

      Delete
  7. அந்த சிப்ஸ் விஷயம் உண்மைதான் இன்னும் சொல்லப்போனா பாது பாக்கெட்ல காத்துதான் இருக்கு காசு என்னமோ காத்தை பத்திரமா கலர் பாக்கெட்ல தரதானாலயோன்னு நினைக்க தோணுது நல்ல கட்டுரை சார்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மணி. மிக்க நன்றி

      Delete
  8. அருமையான கட்டுரை, கல்வி அறிவைப் வளர்ப்பதற்கு அல்ல, பணம் ஈட்டுவதற்கே அதிகமாக பயன்படும் என்ற நிலை வந்து விட்டபின் கல்வி வியாபாரம் ஆங்கிலவழிக்கல்வி,விளம்பர கவர்ச்சி என்பதெல்லாம் மாறவே மாறாது.எத்தனை அரசுப் பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தாங்கள் வேலைபார்க்கும் பள்ளிகளிலே படிக்கவைக்கிறார்கள்? தமிழ் வழிகல்வி பெறும் குழந்தைகளுக்கு வேலை, நல்லஊதிய உத்தரவாதம், உரிய மரியாதை,(முக்கியமாக தமிழ்வழிக்கல்வி பெறும் தாங்கள் எதிலும் குறைந்தவர்கள் என்ற தன்னம்பிக்கை விதைக்கப்படவேண்டும்) கொடுக்கப்பட்டால் மெட்ரிக் பள்ளிகளின் மீதான மோகம் குறையும்

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்து தோழர். மிக்க நன்றி

      Delete
  9. உணர்வுபூர்வமான வருங்கால தமிழக மாணவ சமுதாயதிர்க்கான கேள்விகள் ..! நல்ல தீர்வுகள் முன் வைக்கப்பட்டுள்ளன .நம் கோரிக்கைகள் செவிமடுக்கப்பட அரசியல் மாற்றம் வரவேண்டும் ..!
    என்ன செய்ய பாட்டாளிகளின் இடது சாரிகளும் ஆதிக்க திராவிடத்தின் சேலைக்குள் ..!

    ReplyDelete
  10. கோ.கோதண்டராமன்October 23, 2013 at 2:00 PM

    எதையும் சரி செய்து விடலாம் முதலாளிகளிடமிருந்து கல்வியை அப்புறப் படுத்திவிட்டால்.மிகச்சரியான வரிகள்

    ReplyDelete
  11. சிறப்பான கட்டுரை. உங்கள் எழுத்துக்களைச் சில நாட்களாகப் படித்து வருகிறேன். அத்தனையும் அருமை சார்.

    ஒரு கோணத்தில் பார்த்தால், மத்திய தர வர்க்கம்(ஒரு பகுதியினர்) தங்கள் குழந்தைகளை பெரிய பெரிய பள்ளிகளில் சேர்க்க விரும்புவதன் பின் உள்ள காரணம்: 'தங்கள் குழந்தைகள் எல்லாத் துறையிலும் சிறப்பானவனாக வர வேண்டும்' என்ற ஆசை தான். தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேச வேண்டும், ஹிந்தி தெரிய வேண்டும், ஆட வேண்டும், பாட வேண்டும்,...இப்படி ஏகப்பட்ட 'டும்'கள்.

    நீங்கள் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் செயல்படுத்தத் தயக்கம். அரசுப் பள்ளியைக் கேவலமாகப் பேசும் மக்கள் ஒரு புறமிருந்தாலும், அதை மதிக்கும் மக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ள தயக்கம் - பெரிய பள்ளிகளைப் போல, பலதரப்பட்ட விஷயங்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்பது தான்(இங்கு நான் சொல்லும் தனியார் பள்ளிப் பாடத் திட்டங்கள் 1-9 வரை மட்டுமே!). அரசுப் பள்ளிகளில் வெறும் பாடத்தை மட்டும் தான் படிக்க முடியும். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இதர ப்லா ப்லாக்களுக்குத் தனி கவனம் வேண்டியிருக்கிறது. அதைச் செய்ய அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதும், தனிக் குடும்பமாக ஆகி விட்டதும் ஒரு காரணம்.

    நம் குடும்ப அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களும் கல்வி வியாபாரத்தனமாகிப் போனதற்கு முக்கியக் காரணம். அந்த வெற்றிடத்தை மிக அழகாக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வது காலம் விளைத்த காயம்!

    ReplyDelete
  12. வணக்கம்.பணம் பிடுங்குவது மட்டுமல்லமனித நேயம் கூட இல்லாமல் நடப்பதை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஆங்கில மோகம் வளர்ந்து கொண்டே தான் போகின்றது மக்களிடம்.ஊழல் இருக்கும் வரை அவர்களை வீழ்த்த முடியாது.தமிழ் நாட்டில் தமிழ் வழியில் கற்போருக்கே முன்னுரிமை என்பதும் உயர் கல்வியில் தமிழின் பங்கை அதிகப்படுத்துவதும் கட்டாயமாக செயல்படுத்தப்பட வேண்டும்.முயற்சிப்போம்.

    ReplyDelete
  13. அருமையான கருத்து தோழர். மிக்க நன்றி

    ReplyDelete
  14. கல்வி மட்டுமல்ல மனிதமனங்களும் வணிக மயமாகிவிட்டதின் ஆபத்தை அழகாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள். நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...