Friday, February 24, 2012

வீட்டிற்கு அனுப்பிய இருட்டு

காலையில் தலைமை ஆசிரியர் ஏதோ வேலையாக இருந்தார். அநேகமாக சுற்றுச்சுவர் குறித்தான வேலையாக இருக்க வேண்டும். வகுப்புகளை ஒரு சுற்று முடித்துவிட்டு எனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். என்ன பிரிவென்று ஞாபகம் இல்லை. அது தேவையும் இல்லை. பத்தாம் வகுப்பு மாணவி ஒரு பையனை ஏறத் தாழ இழுத்துக் கொண்டு என்னிடம் வந்தாள். அநேகமாக வகுப்புத் தலைவியாக இருக்க வேண்டும்.

“சார் டீச்சர் இவன உங்ககிட்ட கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க”

“ எந்த டீச்சர்?”

“ மலர் விழி டீச்சர்”

“ அப்ப டென்த் ஏ. “

“ஆமாம் சார்”

“சொல்லு என்ன தப்பு செஞ்சான்?”

“கரண்டு மாதிரி எப்பவாதுதான் வரான் சார். வரதும் தெரியல. போறதும் தெரியல”

வெடித்துச் சிரித்ததில் சத்தம் கேட்டு சேவியர் ஆசிரியர் அறையிலிருந்து வெளியே வந்து விட்டார். “ ஒன்னும் இல்ல சேவி” என்று நடந்ததை
சொன்னேன். அவரும் சிரித்தார்.

”சரி, சரி பள்ளி விட்டதும் என்னை வந்து பார்”

அவனை அனுப்பிவிட்டு அறைக்குள் நுழைந்தேன்.

போகிற போக்கில் எப்படி சொல்லிவிட்டாள். ஒழுங்காக வருவதில்லை, எப்போதாவது வருகிறான் என்பதை எப்போதாவது வரும் மின்சாரத்தோடு ஒப்பிட்டு விட்டாளே. இந்தச் சின்னக் குழந்தைக்குள் இவ்வளவு அரசியலா?

அவளுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக் கொணர்ந்தால் பெரிய படைப்பாளியாக அவள் மாறவும் கூடும். அது குறித்து அவளிடம் பேசவில்லை,. தேர்வுநேரம் என்பது மட்டுமல்ல, ஒரு பள்ளிக்கு ஒரு லூசு போதாதா என்ன?

எப்பேர்பட்ட ராட்ஷச இயந்திரங்களையெல்லாம் இயக்கி உயிர் கொடுக்கும் மின்சாரம் ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவனோடு ஒப்பிடுமளவிற்கு சன்னமாய் சிறுத்து கீர்த்தியிழந்து கீழ்மைப் படக் காரணம்தான் என்ன?

முன்னர் ஒரு முறை அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொன்னார்,

“ ஒருக்கால் அடுத்த தேர்தலில் கழகம் தோற்குமானால் அதற்கு நான்தான் காரணமாக இருப்பேன்,” என்று . அன்றைய தினத்தில் மின்வெட்டு அவ்வளவு கடுமையாக இருந்தது. அப்போதெல்லாம் ஆற்காடு வீராசாமி அவர்களை தமிழக மின்வெட்டுத் துறை அமைச்சர் என்றே பெரும்பான்மைத் தமிழர்கள் அழைத்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி. மு. க படு தோல்வி அடைந்ததற்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட இயலாது என்றாலும் அவரது துறையின் மோசமான செயல்பாடுகள் அதற்கு பெருமளவு பங்காற்றியதையும்   மறைக்க இயலாது.

இவ்வளவு கடுமையான மின்வெட்டிற்கு என்னதான் காரணம்?

தயாராகும் இடங்களில் இருந்து பயனாளியை அடைவதற்குள் விணாகக் காரணமாகும் கசிவு,

அரசியல் கூட்டங்களுக்கு அதற்கு இதற்கு என்று கொக்கிப் போடும் வகையில் ஏற்படும் மின்திருட்டு,

பெரும் வணிக நிருவனங்கள் வைக்கும் விளம்பர பலகைகளுக்கு அநியாத்திற்கும் போடப்படும் அதிக மின்சாரத்தை உறிஞ்சக் கூடிய மின் விளக்குகள்,

பெரியப் பெரிய வணிக நிருவனங்கள் அலங்காரம் , அழகு, குளிர் சாதன வசதி என்று ஆடம்பரமாய் நீட்டும் ஊதாரித்தனம்,

போக பன்னாட்டு நிருவனக்களின் ஆலைகள் அள்ளிக் குவிக்கும் மின்சாரம்,

போதுமான அளவு மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமை,

இவை எல்லாம் கடந்து இப்படி ஒரு கடுமையான மின்வெட்டைக் கொடுத்தால் மக்கள் பையப் பைய கூடங்குளத்தின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை என்பதைக் கூட நிராகரிக்க இயலாதுதான்.

இவை எல்லாம் இருக்க வேறு சில காரணங்களும் உள்ளன.

எங்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது டால்மியா சிமிண்ட் ஆலையில் இரண்டு உலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வந்ததாகவும் , அவர்களிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதை தமிழ் நாடு மின்சார வாரியம் நிறுத்திக் கொண்டதால் ஒரு உலை மட்டுமே தற்போது இயங்குவதாகவும் சொன்னார்,

அந்தப் பகுதிக்காரர் அவர். மின் உலை மூடப் பட்டதால் அவர் பகுதி மக்கள் சிலர் வேலை வாய்ப்பை இழப்பார்களே என்ற கவலை அவருக்கு.

ஏறத்தாழ இருபது மெகாவாட் மின்சாரத்தை டால்மியா சிமிண்ட்டிடமிருந்து வாங்குவதை தமிழ் நாடு மிசார வாரியம் நிறுத்திக் கொண்டிருக்கிறது.

இதேபோல இன்னும் பல ஆலைகளிடம் இருந்தும் மின்சாரம் பெறுவதை தமிழ் நாடு மின்சார வாரியம் நிறுத்திக் கொண்டிருக்கிறது என்றும் தெரிய வருகிறது.

இது குறித்து முக நூலில் எழுதியபோது நூற்றுக் கணக்கான சின்ன சின்ன குட்டி ஆலைகள் கூட அவர்களுக்குத் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை த. நா. மி. வாரியத்துக்கு வழங்கி வந்ததாகவும், அவையும் தற்போது முற்றாக நின்று போனதாகவும் ஒரு நண்பர் எழுதியிருந்தார்.

மட்டுமல்ல,

தமிழ் நாட்டில் பயன் படுத்தப் படும் குண்டு விளக்குகளை குழல் விளக்குகளாக மாற்றினால் ஏறத்தாழ 640 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்றும் , இது கூடங்குளம் உலையிலிருந்து தமிழ் நாட்டிற்கு கிடைக்கப் போகும் மின்சார அளவை விட அதிகம் என்றும் ஓ ஞாநி எழுதியிருந்ததாக ஞாபகம்.

பல மாநிலங்களில் குண்டு விளக்குகளை குழல் விளக்குகளாக மாற்ற மானியம் வழங்கப் படுவதாக அறிகிறோம்.

காற்றாலைகள் தொடங்கவும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு ஊக்கம் தர அரசு தயங்குவதுதான். ஏனென்று புரியவில்லை.

இந்தப் பாராவை எழுதும்போது தமிழக முதல்வர் அறிவிக்கிறார்,

“தமிழகத்தில் முதல் தவனையாக 20000 தெரு விளக்குகள் சூரிய ஒளி மின் விளக்குகளாக மாற்றப் படும், 19000 இடங்களில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் நிறுவப் படும்.

மெய்யாகவே இதற்காக முதல்வரை பாராட்டத்தான் வேண்டும். வஞ்சனையே இல்லாமல் பாராட்டி விடலாம்.

20000 மின் விளக்குகள் வெய்யிலைப் பயன்படுத்தத் தொடங்கினால் ஏறத்தாழ ஒரு மெகாவாட் மிச்சமாகும். தமிழ் நாடு முழுவதும் இருக்கும் கடைசி தெரு விளக்கு வரைக்கும் இதை விரிவு படுத்தினால்...?

சரிதானா தெரியாது, ஒரு குத்து மதிப்பாக தமிழ் நாட்டில் ஒரு கோடி தெரு விளக்குகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவை அனைத்தையும் வெயிலோடு இணைத்தாலேறக்குறைய 1000 மெகாவாட் மிச்சமாகும்.

போக, உடன்குடி அனல் மின் நிலையத்தைத் துவக்கினால் 1600மெகாவாட் கிடைக்கும். அதற்கான அறிவிப்பு கூட வந்து விட்டது.

முக நூலில் எழுதிய நண்பர் போன அரசாங்கம் ஆலைகளில் இருந்து பெற்ற மின்சாரத்திற்கு நிறைய நிலுவை வைத்திருப்பதுதான் இப்போது அவர்களிடம் வாங்க இயலாமைக்கு காரணம் என்றும் சொல்லியிருந்தார். அந்த நிலுவைத் தொகையை கட்ட போதுமான அளவு பணம் அரசிடம் இல்லை என்பதுதான் காரணம் எனில் அரசு தைரியமாக மக்களிடம் வரலாம். inverter வாங்க ஏராளம் செலவு செய்யும் மக்கள் தட்டுப் பாடற்ற மின்சாரம் கிடைக்குமெனில் நிச்சயம் உதவுவார்கள். இதற்கென்று கடன் பத்திரமே வெளியிடலாம்.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தமிழ் மண்ணை இருட்டுக்குத் தின்னக் கொடுக்கக் காரணம் என்ன?

ஒரு காரணம் சொல்லப் படுகிறது. நாட்டை இருளில் தள்ளிவிட்டு, கூடங்குளம் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வரும் என்ற எதிபார்ப்பை மக்களிடம் விதைக்க அரசு முயல்கிறது என்றால் அது மிகவும் ஆபத்தானது.

 அணு ஆலையில் மோசமான விபத்து ஒன்று நிகழுமானால் அதன் விளைவு இந்த இருளை விடவும் அதி பயங்கரமானதாக இருக்கும்.

ஒன்றை மட்டும் சொல்லலாம்,

ஏராளம் காரணங்கள் வரிசையாய் நின்றாலும் மூக்கைத் துருத்திக் கொண்டு முந்திச் சென்று போன ஆட்சியை வீட்டிற்கு அனுப்பியது இந்த இருட்டுதான்.

  நன்றி :  ”குறி”

18 comments:

  1. மின் தட்டுப்பாடு மக்கள் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல் அவர்கள் சிந்திக்கும் தன்மையை கூட மாற்றி விட்டது என்பதே உண்மை !!!

    ReplyDelete
  2. இப்படி ஒரு கடுமையான மின்வெட்டைக் கொடுத்தால் மக்கள் பையப் பைய கூடங்குளத்தின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை என்பதைக் கூட நிராகரிக்க இயலாதுதான்.//

    ஆட்சியாள‌ர்க‌ள் ம‌ன‌ம்போன‌ப‌டி ஆள்வ‌தால், ஜென‌ரேட்ட‌ர், இன்வெர்ட்ட‌ர் என‌ இருப்ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டியும் தேடிக் கொண்டு விட‌,அல்ல‌ல் ப‌டுவ‌தென்ன‌வோ சாமானிய‌ ம‌க்க‌ள் தானே! கொடுத்த‌ வாக்கை(வோட்டை) ப‌றிக்க‌ முடியாதென்ற‌ ஆண‌வ‌ம்.

    ReplyDelete
  3. இந்த மின் வெட்டுப் பிரச்சினை அகில இந்தியாவுக்கும் இருக்கும் என்றே தோன்றுகிறது.ஒரு சக பதிவரின் வலையில் ஆண்டு முழுவதும் காலை 6- மணிமுதல்9-மணிவரையும் பிறகு மாலை 6-மணிமுதல் இரவு 9- மணிவரை மின்சாரம் இல்லையாம்.இங்கு கர்நாடகத்திலும் எப்போது என்று சொல்ல முடியாத மின்வெட்டு. இங்கு மின் கட்டணம் மற்ற மாநிலங்களைவிட அதிகம். கேரளாவிலும் மின் தட்டுப் பாடு அதிகம். எல்லோருக்கும் உள்ள பிரச்சினை தீர்க்கப் பட lateral thinking அரசிடம் அவசியம்.

    ReplyDelete
  4. \\\ rajkumar.rr said...
    மின் தட்டுப்பாடு மக்கள் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல் அவர்கள் சிந்திக்கும் தன்மையை கூட மாற்றி விட்டது என்பதே உண்மை !!! ///

    உண்மைதான் தோழர்.

    ReplyDelete
  5. \\\ நிலாமகள் said...
    இப்படி ஒரு கடுமையான மின்வெட்டைக் கொடுத்தால் மக்கள் பையப் பைய கூடங்குளத்தின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை என்பதைக் கூட நிராகரிக்க இயலாதுதான்.//

    ஆட்சியாள‌ர்க‌ள் ம‌ன‌ம்போன‌ப‌டி ஆள்வ‌தால், ஜென‌ரேட்ட‌ர், இன்வெர்ட்ட‌ர் என‌ இருப்ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டியும் தேடிக் கொண்டு விட‌,அல்ல‌ல் ப‌டுவ‌தென்ன‌வோ சாமானிய‌ ம‌க்க‌ள் தானே! கொடுத்த‌ வாக்கை(வோட்டை) ப‌றிக்க‌ முடியாதென்ற‌ ஆண‌வ‌ம்.///

    எல்லோருமே இன்வெர்டர் வாங்கி விட்டால் அதில் சேமிக்கவும் இருக்கிற மின்சாரத்தில் இருந்துதானே தோழர் எடுக்க இயலும். நீங்கள் சரியாய் சொன்னது போல் பறிக்க இயலாது என்ற நம்பிக்கைதான்.

    ReplyDelete
  6. \\\ G.M Balasubramaniam said...
    இந்த மின் வெட்டுப் பிரச்சினை அகில இந்தியாவுக்கும் இருக்கும் என்றே தோன்றுகிறது.ஒரு சக பதிவரின் வலையில் ஆண்டு முழுவதும் காலை 6- மணிமுதல்9-மணிவரையும் பிறகு மாலை 6-மணிமுதல் இரவு 9- மணிவரை மின்சாரம் இல்லையாம்.இங்கு கர்நாடகத்திலும் எப்போது என்று சொல்ல முடியாத மின்வெட்டு. இங்கு மின் கட்டணம் மற்ற மாநிலங்களைவிட அதிகம். கேரளாவிலும் மின் தட்டுப் பாடு அதிகம். எல்லோருக்கும் உள்ள பிரச்சினை தீர்க்கப் பட lateral thinking அரசிடம் அவசியம///

    மிக்க நன்றிங்க அய்யா. இதை ஒரு சர்வ தேசப் பிரச்சினை என்றே கொள்ள வேண்டும்

    ReplyDelete
  7. hello, who would win in the Champions League? Barcelona or Real Madrid?
    [url=http://medsonlinenoprescription.net/category/antibiotics]buy antibiotics online[/url]

    ReplyDelete
  8. மின் தட்டுப்பாடுக்கு அரசு எடுக்கு நடவடிக்கை நல்ல விதமாக அமைந்தாலும் நிரந்தரத் தீர்வு வரும் வரை இதற்கு விடிவு இல்லை. நம் மாணவர்களை அதற்கான பதையில் பயணிக்க வைக்க வேண்டும்.

    ReplyDelete
  9. நாட்டை இருளில் தள்ளிவிட்டு, கூடங்குளம் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வரும் என்ற எதிபார்ப்பை மக்களிடம் விதைக்க அரசு முயல்கிறது என்றால் அது மிகவும் ஆபத்தானது.

    அணு ஆலையில் மோசமான விபத்து ஒன்று நிகழுமானால் அதன் விளைவு இந்த இருளை விடவும் அதி பயங்கரமானதாக இருக்கும்.

    ReplyDelete
  10. நான் அறிந்த வரையில் ஒரு அனல் மின் நிலைய உதிர் பாகங்களில் வருவதில் ஏற்பட்ட தாமதம் என்று சொல்லி ஒரு 700 MW மின்சாரம் தயாரிப்பை நிறுத்தினார்கள் . நீர் வழி மின்சாரம் தயாரிக்கும் இடத்தில கருங்குரங்கு செத்தது என்று சொல்லி ஒரு 200 MW மின்சார உற்பத்தியை நிறுத்தினார்கள் .
    யாராவது இதையெல்லாம் முறையாக விசாரித்து ஆவணப்படுத்தி திட்டமிட்ட சதியாக இருந்தால் , வழக்காக போட்டால் நன்றாக இருக்கும் . அந்த யாராவது நானாக இருக்கமுடியவில்லை :-(

    திமுக ஆட்சி களத்தில் நிறைய தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார்கள் , அவற்றில் பெரும்பான்மையனவைக்கு குறைந்த விலைக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதாக சொல்லி கொண்டு வந்தார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார் . அதும் ஒரு முக்கிய காரணம். நிறைய தொழிற்சாலைகள் கொண்டு வந்தவர்கள் அதற்கான மின் ஆதாரத்தையும் பெருக்கி இருக்க வேண்டும். விட்டு விட்டார்கள் . நாம் துன்ப படுகிறோம்.

    ReplyDelete
  11. hello, who would win in the Champions League? Barcelona or Real Madrid?
    [url=http://medsonlinenoprescription.net/category/antibiotics]buy antibiotics[/url]

    ReplyDelete
  12. \\\ Srinivasan said...
    நான் அறிந்த வரையில் ஒரு அனல் மின் நிலைய உதிர் பாகங்களில் வருவதில் ஏற்பட்ட தாமதம் என்று சொல்லி ஒரு 700 MW மின்சாரம் தயாரிப்பை நிறுத்தினார்கள் . நீர் வழி மின்சாரம் தயாரிக்கும் இடத்தில கருங்குரங்கு செத்தது என்று சொல்லி ஒரு 200 MW மின்சார உற்பத்தியை நிறுத்தினார்கள் .
    யாராவது இதையெல்லாம் முறையாக விசாரித்து ஆவணப்படுத்தி திட்டமிட்ட சதியாக இருந்தால் , வழக்காக போட்டால் நன்றாக இருக்கும் . அந்த யாராவது நானாக இருக்கமுடியவில்லை :-( ///

    வணக்கம் தோழர் ஸ்ரீனி. உதிரி பாகங்கள் வரத் தாமதமானதால் நின்று போன திட்டம் எது?

    கருங்குரங்கு செத்ததால் நின்று போன திட்டமெது?

    அருள் கூர்ந்து சொல்லுங்கள் தோண்டிவிட முடிகிறதா பார்ப்போம்

    ReplyDelete
  13. மாணவர்களிடம் இது போன்ற சிந்தனைகள் இருப்பது வரவேற்கத்தக்கது....
    மேலும் ஒரு நல்ல சிந்தனையாளர் ஆசிரியராய் வாய்த்ததற்கு மாணவர்கள் கண்டிப்பாய் மகிழ்ச்சி அடைவர்..

    மின்வெட்டு தமிழகத்தில் மட்டும் இல்லையெனவே தெரிகிறது. இங்கு நான் பணிபுரியும் ஒரிசாவிலும் கூட நாளொன்றுக்கு குறைந்தது நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது...
    முறையான திட்டமிடல் இல்லாததே முக்கியக் காரணம் என நினைக்கிறேன்..

    ReplyDelete
  14. மாணவர்களிடம் இது போன்ற சிந்தனைகள் இருப்பது வரவேற்கத்தக்கது....
    மேலும் ஒரு நல்ல சிந்தனையாளர் ஆசிரியராய் வாய்த்ததற்கு மாணவர்கள் கண்டிப்பாய் மகிழ்ச்சி அடைவர்..

    மின்வெட்டு தமிழகத்தில் மட்டும் இல்லையெனவே தெரிகிறது. இங்கு நான் பணிபுரியும் ஒரிசாவிலும் கூட நாளொன்றுக்கு குறைந்தது நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது...
    முறையான திட்டமிடல் இல்லாததே முக்கியக் காரணம் என நினைக்கிறேன்..

    ReplyDelete
  15. மிக்க நன்றி தோழர் வெங்கடேசன்

    ReplyDelete
  16. நாட்டை இருளில் தள்ளிவிட்டு, கூடங்குளம் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வரும் என்ற எதிபார்ப்பை மக்களிடம் விதைக்க அரசு முயல்கிறது மெய்தான்

    ReplyDelete
  17. \\\ Uma said...
    நாட்டை இருளில் தள்ளிவிட்டு, கூடங்குளம் மட்டுமே வெளிச்சத்தைக் கொண்டு வரும் என்ற எதிபார்ப்பை மக்களிடம் விதைக்க அரசு முயல்கிறது மெய்தான்
    March 2, 2012 4:09 PM ///

    ஆமாம் உமா
    எதிர் கருத்துக்களை வைப்பவர்களை தேசத் துரோகிகள் என்பதாக சித்தரித்துவிட எத்தனிக்கும் போக்கை இவர்கள் எப்போது துறப்பார்கள் என்றே தெரியவில்லை

    ReplyDelete
  18. ilangovan balakirshnanApril 30, 2012 at 5:37 PM

    நல்ல பதிவு. சொற்கள் ஒவ்வொன்றும் அது அதற்கான வீரியத்தை தன்னகத்தே கொண்டவை.

    முன்முடிவுகள் இல்லாமல் பார்ப்பது என்பது எல்லோராலும் எல்லா நேரமும் சாத்தியப்படுவதில்லை.

    பாரதியார், பாரதி தாசனார் பற்றிய குறிப்புகள் அருமை. பெயரில் என்ன இருக்கிறது என்று அப்படி லேசாய் எதையும் எடுத்துவிட முடியாது... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...