Saturday, July 28, 2018

21.07.2018

விடுமுறை நாளொன்றில் பக்கத்து ஊரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றான் அந்தச் சிறுவன். நாள் முழுவதும் பாட்டி வீட்டில் உண்டு விளையாடி மகிழ்ந்துத் திளைத்திருந்த அந்தப் பிள்ளை மாலை அவனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்..
கடலரண் சுவர்மேலே (DYKE) நடந்து வந்து கொண்டிருந்தான். அடிக்கடி கடல்நீர் ஊருக்குள் புகுந்து சேதாரத்தை ஏற்படுத்தும் பகுதிகளில்தான் அது உண்டாக்கும் பேரழிவுகளில் இருந்து அந்த ஊர்களைக் காக்கவே கடலரண் கட்டப்படும் என்ற அடிப்படை உண்மையை அவனது ஆசிரியைகளும் தாயும் பாட்டியும் அவனுக்கு பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.
“அந்த சொவரு உடஞ்சா நம்ம ஊரு அழிஞ்சு போயிடும். நம்ம ஊரின் உசிரே அந்தச் சுவருதாண்டா” என்று அவனது பாட்டி அந்தச் சுவரின் முக்கியத்துவத்தை அவனுக்கு சோறோடு சேர்த்து ஊட்டியிருந்தாள்
அன்று அவன் நடந்து கொண்டிருக்கும்போது அந்த சுவரில் ஒரு சிறிய துவாரம் ஏற்பட்டு அதன் வழியாக நீர் கசிந்து கொண்டிருப்பதைப் பார்ப்பான். நேரம் போகப் போக ஓட்டைப் பெரிதாகும். ஒரு புள்ளியில் அது சுவரை உடைக்கும். அப்படி உடைத்தால் கடல்நீர் ஊருக்குள் நுழைந்து ஊரை அழித்துவிடும் என்று பயந்தான். எப்படியேனும் நிகழப்போகும் ஆபத்தில் இருந்து அந்த ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்.
உடனே கீழே இறங்கி அந்த்த் துவாரத்தில் தனது சுண்டு விரலை நுழைத்தான். நீர் நின்றது. ஆனால் கொஞ்ச நேரத்தில் அவனது விரல் அடைப்பையும் தாண்டி நீர் கசிந்த்து. சுண்டு விரலை எடுத்துவிட்டு மோதிர விரலை வைத்து அடைப்பான். அது தாண்டியும் நீர் வரவே கட்டை விரலை வைப்பான், பிறகு இரண்டு விரல்கள், ஒரு கட்டத்தில் கையை நுழைத்து அடைப்பான்.
நிரின் குளிர்ச்சி கையை விறைக்கச் செய்ய்துவிடும் . அப்படியே மயங்கி போவான்.
இதற்கிடையே பாட்டி வீட்டிற்கு போன குழந்தை வரவில்லையே என்று ஊரே திரண்டு அவனைத் தேடி ஒரு வழியாக விடியற்காலை அவனைக் கண்டு பிடிப்பார்கள்.
உண்மை புலப்படும். அரணைப் பழுது பார்ப்பார்கள். அவைச் சுமந்து கொண்டுபோய் மருத்துவம் பார்த்து விழா எடுத்துக் கொண்டாடுவார்கள்.
இது ஒன்றாம் வகுப்பில் நாம் படித்த கதை.
எது கசிந்தாலும் அது ஆபத்தை கொண்டு வரும். கசிவது நீர் என்றாலும் எண்ணை என்றாலும் வேறு எதுவென்றாலும் அது நல்லது அல்ல. எண்ணெயும் நீரும் கசிந்தாலே ஊர் அழிந்து போகும் என்றால் ரகசியம் கசிந்தால் எவ்வளவு பேராபத்து விளையும் என்பதை சொல்லவும் தேவையில்லை
சமீபத்தில் ஆதார் அட்டைகளின் ரகசியங்கள் விலைக்கு தரப்பட்டன என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரவர் ரகசியம் அவரவர் உரிமை. அதில் தலையிடுவதே தவறானது எனில் அதைத் திருடி அடுத்தவருக்கு விற்பது எவ்வளவு பெரிய குற்றம்.
2018 ஆம் ஆண்டு ஏறத்தாழ 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதியுள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் மாணவர்களுடைய தேர்வு விவரங்களும் முகவரிகளும் தொலைபேசி எண்களும் அவர்களுடைய பொருளாதார பின்னணியும் குறித்த தகவல்கள் விற்பனைக்கு கிடைப்பதாக கிடைத்திருக்கக் கூடிய தகவல் ஒவ்வொரு குடிமகனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவே செய்யும்.
மேற்சொன்ன தரவுகளை ஏதோவொரு இணையதளம் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் 2 லட்சம் தரக்கூடியவர்களுக்கு அந்த 2 லட்சம் குழந்தைகளின் தரவுகளை அவர்கள் விற்றுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதை இன்னொரு ஊடக நிறுவனம் விலை கொடுத்து வாங்க பேரம் பேசிய போது தரப்பட்ட சேம்பிளை சோதித்துப் பார்த்தபோது அத்தனையும் உண்மை என்பது புலப்பட்ட்தாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளதாக இன்றைய தீக்கதிர் கூறுகிறது.
இரண்ட் லட்சம் குழந்தைகளின் தரவுகள் இரண்டு லட்சம் ரூபாய். எனில் ஒரு குழந்தை பற்றிய தகவலின் விலை ஒரு ரூபாய் என்று ஆகிறது.
இதை விற்பதால் என்ன பெரிய லாபம் வந்துவிடப்போகிறது என்ற கேள்வி எழக்கூடும்.
இதை வாங்குவதால் யாருக்கு என்ன லாபம்? இதை யார் பெறப் போகிறார்கள்
இந்தக் குழந்தைகளில் பெரும்பான்மையோர் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்லது நீட் தேர்வில் வெற்றி பெற்று போதுமான அளவு மதிப்பெண் இல்லாத காரணத்தினால் மருத்துவ கல்லூரிகளில் இடமில்லாது போனவர்கள்
இப்பொழுது ஆள்சேராத தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒரு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்தால் நீட்டில் வெற்றி பெற்று அதேவேளை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது தவிக்கும் குழந்தைகளின் முகவரிகளும் அலைபேசி எண்களும் அவர்களது பொருளாதார பின்புலமும் அந்த கல்லூரிகளுக்கு கிடைத்துவிடும். அவர்கள் அந்த குழந்தைகளுள் வசதி படைத்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அணுகி தங்கள் கல்லூரியில் அந்த குழந்தைகளுக்கு இடமளிப்பதாக பேரம் பேசி பணத்தை கறந்து கல்லூரிகளை மாணவர்களால் நிரப்புவதன் மூலம் தங்களது கல்லாக்களை பிதுங்க பிதுங்க நிரப்பிக் கொள்வார்4கள்.
இன்னும் சில கல்லூரிகள் பணம் இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை வங்கி கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று ஆசை காட்டத் தொடங்கி விடுவார்கள். வங்கிகளும் இதுபோன்ற கல்லூரிகள் அனுப்பும் கடன் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து அதைவிட சிக்கிரமாய் கடனை வழங்கிவிடுகின்றன. இதற்குரிய தரகுத் தொகை அந்த கல்லூரி களிடமிருந்து மிகச் சரியாகப் போய்விடும்.
இது ஒருபுறமிருக்க நீட்டில் தோற்றுப்போன அதே நேரம் பணவசதியும் மருத்துவ படிப்பின் மீதான பேராசையும் கொண்டுள்ள மாணவர்களின் முகவரிகளையும் தொலைபேசி எண்களையும் நீட்டிற்கான பயிற்சியினை வழங்கும் நிறுவனங்கள் பெற்றுவிடுகின்றன. பிறகு அவர்கள் அந்தக் குழந்தைகளை அணுகி அவர்களை மூளைச் சலவை செய்து தங்களது பயிற்சி நிறுவனத்திற்கு இழுத்து வந்து விடுகிறார்கள்.
இப்படியாக நீட் தேர்வு எழுதியவர்களின் விபரங்களை ஏதோ ஒரு வகையில் பச்சையாக சொல்லப்போனால் தேவையான அளவு லஞ்சம் கொடுத்து பெற்று ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இரண்டு லட்சத்திற்கு விற்பதன் மூலம் பல நூறு கோடிகளை ஒவ்வொரு வருடமும் சுருட்டி விடுவதற்கு இவர்களுக்கு ஏலும்.
ஒரு குடிமகனின் ரகசியத்தை அவன் பாதுகாப்பதற்கு உரிய சூழலை உருவாக்கித் தருவது ஒரு நல்ல மக்கள் அரசின் கடமையாகும்.
அப்படி ஏதோ ஒரு குடிமகனின் ரகசியம் யாரோ ஒருவரால் களவாடப்படும் என்றால் களவாடிய அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி அவனை சிறை ப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உண்டு.
ஆனால் இங்கு அரசிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளின் ரகசியங்கள் களவாடப்பட்டு விற்கப்பட்டு கல்லாக்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.
அது என்ன அவ்வளவு பெரிய ராணுவ ரகசியமா என்று பொதுவாக சொல்வது உண்டு. எந்த ஒரு தனிமனிதனின் ரகசியம் ரகசியமும் ராணுவ ரகசியத்திற்கு ஈடானதுதான். ராணுவத்திற்கு ராணுவ ரகசியம் எவ்வளவு முக்கியமோ ஒரு தேசத்திற்கு அந்த தேசத்தின் ரகசியம் எவ்வளவு முக்கியமோ அதற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல ஒரு தனிமனிதனுக்கு அவருடைய ரகசியம்.
தேசத்தின் ரகசியத்தை அல்லது ராணுவத்தின் ரகசியத்தை கைப்பற்றி அயல் நாட்டுக்கு கடத்தும் ஒரு கயவனுக்கு என்ன தண்டனையோ அதற்கு கொஞ்சமும் குறையாத ஒரு தண்டனையை நீட் தேர்வு எழுதிய இந்தக் குழந்தைகளின் ரகசியத்தை கைப்படுத்தி கசிய செய்தவர்களுக்கும் வழங்க வேண்டும்.
நீர் கசிந்தது. அந்தப் பிள்ளை கைவைத்து அடைத்தான். நீர் கசிந்தால் ஊர் அழியும் என்று அந்தப் பிள்ளைக்குத் தெரிந்திருந்த்து.
ரகசியங்கள் கசிகின்றன. ரகசியங்கள் கசிந்தால் தேசம் தன் இறையாண்மையை இழக்கும் என்றும் நமக்குத் தெரியும்.
நாமென்ன செய்யப் போகிறோம்?
#சாமங்கவிய இரண்டு நிமிடம் இருக்கிற பொழுது
21.07.2018

4 comments:

  1. உண்தைன் தோழர்
    தேசத் துரோகத்திற்கு ஈடான செயல்

    ReplyDelete
    Replies
    1. கவலைப்படுவதையும் இப்படி எழுத்தில் எதிர்கொள்வதையும்தவிர என்ன செய்ய முடிகிறது தோழர் நம்மால்?

      Delete
  2. சுயத்தை இழக்கவைக்கின்றார்கள். இழந்துகொண்டிருக்கின்றோம். விளைவினை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த கவலையாக இருக்கிறது

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...