Sunday, February 24, 2013

அந்தக் கேள்விக்கு வயது 98

உலகில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன என்று சரியாய்த் தெரியவில்லை. ஆனால்தமிழைத் தவிரவேறு எந்த மொழிக்காகவும் தேகம் எரித்து செத்ததற்கான சான்று இல்லை.

தன்னை அழித்தேனும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவன் தமிழன்.

“தமிழ் மணி, தமிழ் நம்பி” என்று  பெயரைக்கூட மொழியோடு சேர்த்தே அடையாளப்படுத்தியவன் தமிழன். இதையும் வேறு எந்த மொழியிலும் பார்க்க முடியாது.

ஆனாலும் போயிருக்க வேண்டிய உயரத்திற்கு இன்னும் தமிழ் போகமுடியவில்லையே அது ஏன்? இன்னமும் நீதிமன்றத்தில், மருந்துச்சீட்டில்,ஆலயங்களில், அலுவலகங்களில் முழுமையாய் தமிழ் இல்லையே அது ஏன்?

இத்தனை இடங்களில் தமிழ் இல்லாத போதும் தமிழ் இன்னும் மாறாத இளமையோடு ஜீவித்திருக்கிறதே அது எப்படி? 

காரணம் மிக எளிதானது. மெத்தப் படித்த அறிஞர்களோ, அர்ச்சகர்களோ, அலுவர்களோ அல்ல, காட்டில், மேட்டில், கழனியில் உழைத்த பாமரத் தமிழனும், தமிழ்ச்சியும் பேசிப் பேசியே பாதுகாத்து வைத்துள்ள மொழி தமிழ் மொழி.

மொழி வளர்ச்சி குறித்தும் மொழிச் சீர்திருத்தம் குறித்தும் கவலைப் படுகிற சான்றோர்களிடம்கூட மொழிப்பாதுகாப்பு குறித்த அக்கறையும் புரிதலும் இருப்பதாய்ப் படவில்லை.மொழி வளர்ச்சியும், மொழிச் சீர்திருத்தமும் மிக மிக அவசியம்தான். ஆனால் மொழியின் வளர்ச்சிக்கும், சீர்திருத்ததிற்கும் மொழி உயிரோடு இருப்பதென்பது அதைவிட மிகவும் அவசியம்.

ஆங்கிலத்தில் பேசினால் அவன் உயர்ந்தவன், அறிவாளி என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.இன்றோ அதைவிட மோசமாய்ப் போய் ஆங்கிலம் பேசத் தெரியாதவனும் தமிழில் பேசுபவனும் தாழ்ந்தவன், முட்டாள் என்றே கொள்ளப் படுகிறது. நுனி நாக்கு ஆங்கிலம் என்பது அறிவின் அடையாளமாகவும், வேலைவாய்ப்பின் வாயிலாகவும் தவறாகக் கொள்ளப் படுகிற்து. 

லண்டனில் கிறுக்கன் ஆங்கிலத்தில்தான் உளறுகிறான் என்பதையும் பிச்சைக்காரன் ஆங்கிலத்தில்தான் பிச்சை கேட்கிறான் என்பதையும் எப்போதுதான் உணரப் போகிறோமோ தெரியவில்லை.

“தமிழ்த் தெரியாது என்பதே தனித் தகுதியாய்ப் போனது” என்பார் மேத்தா. எல்லாப் பாடங்களிலும் 95க்கு மேல்தான். தமிழ்தான் சுட்டுப் போட்டாலும் வரமாட்டேன் என்கிறது” என்று தங்கள் பிள்ளைகள் குறித்து வெளிப்படும் தமிழர்களின் பெருமிதம், உணர்வுள்ளவனை நிச்சயம் கொன்றே போடும்.

ஆங்கிலம் உலக மொழி. அதைக் கற்றுக் கொண்டால் சாளரம் திறக்கும். ஆகவே ஆங்கிலத்தை கூடுதலாக கற்று வைப்பது என்பது சரிதான். ஆனால் அதற்காக தமிழைப் புழங்குவதைத் தவிர்ப்பது என்கிற நிலைக்கு தமிழன் போனதுதான் சோகம்.

ஒரு பக்கம்  “தமிழில் எதுவுமே இல்லை” என்ற கூச்சல் கேட்கிறது.  இந்தக் கோஷ்டிக்கு மனப் பிறழ்வுக்கான மருத்துவம் பார்க்க வேண்டும். இன்னொரு பக்கம் “தமிழில் எல்லாம் இருக்கிறது” என்ற கூச்சல் காதுகளைக் கிழிக்கிறது. இந்தக் கூச்சல்தான் மிகவும் ஆபத்தானது. இதுதான் மொழியின் வளர்ச்சியய்த் தடுக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு இதைத் தள்ளிவிட வேண்டும்.

தமிழில் ஏராளம் இருக்கிறது, தேவையும் இருக்கிறது என்கிற புரிதல்தான் இந்த நிமிடத்தின் அவசியமாயிருக்கிறது.

புழங்காத எதுவும் அழிந்து போகும் என்பதை தமிழன் முதலில் உணர வேண்டும். வீட்டில், பணியிடத்தி, வெளியில் என்று எந்த இடத்திலும் தமிழ் தெரிந்தவர்களோடு தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும். தாய் மொழியய்ப் புழங்கு மொழியாக்க வேண்டும்.

சீதயைக் காண அசோகவனம் போகும் போது அனுமனுக்கு ஒரு தடுமாற்றம் வருகிறது. உலகின் ஆக அழகானவளும் இனிமையானவளுமாகிய சீதையிடம் அவளைப் போலவே அழகான, இனிமையான மொழியில் பேசவேண்டும் என்று முடிவெடுக்கிறான். அப்படியான மொழி எது என்பதில் குழம்பி , தெளிந்து இறுதியாய் அவளிடம் தமிழில் பேசினான் என்கிற தகவல் கவிஞர் மீனவன் எழுதிய “ பண்டைத் தமிழரும் பரதவர் வாழ்க்கையும்” என்கிற நூலில் கிடைக்கிறது. அனுமனுக்குப் புரிந்த தமிழின் அழகும் இனிமையும் தமிழனுக்கு எப்போது புரியப் போகிறது என்பதுதான் கேள்வி.

பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். அதுதான் அவர்களது முதல் சந்திப்பு. கதவைத் தட்டுகிறார். பாரதி வருகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்ந்து போவார், தமக்கும் மரியாதையாக இருக்கும் என்று நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார். 

“உன் அளவுக்கு அந்த ஆள் இங்கிலீஷ் பேசறாண்டா பாலு.  நீயே பேசி அனுப்பு” என்று வ.ரா விற்கு கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக் கொண்டெடெ பாரதி உள்ளே போகிறார்.

“சாமி உங்ககிட்டதான் பேசனும்”

திரும்பி வந்த பாரதி வ.ரா விடம் கேட்டார்,

“இன்னும் எத்தனை நாளைக்குத் தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள் ?”

இது நடந்தது 1910 ஆம் ஆண்டு.

“ இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்?” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்.

பின் குறிப்பு

இந்தக் கட்டுரை எழுதி “தமிழ் ஓசை” யில் வந்து பிறகு “அந்தக் கேள்விக்கு வயது 98” என்று நூலாகத் தொகுக்கப் பட்டபோத் பாரதியின் அந்தக் கேள்விக்கு வயது 98.  அந்தக் கேள்வியின் இன்றைய வயது 103.


29 comments:

  1. ஆங்கிலத்தில் படித்தால்தான் வாய்ப்புகள் கிடைக்கும், ஆங்கிலம் தெரிந்தால்தான் மரியாதை என்ற எண்ணம் நம்பிக்கையாய் ஊறி அதிலே தமிழ் மக்களின் மூளை புதையுண்டு போயிருக்கிறது. அம்மா, அப்பா, மாமா, அத்தை காணாமல் போய் மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி வந்து ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டதில் நம் மக்களின் இந்தப் புதையுண்ட மூளைக்குப் பங்கிருக்கிறது.

    ஆனால் புதைத்த கரங்களை நாம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாக வேண்டும். தமிழில் படித்தால் முன்னேற முடியாது என்ற நடப்புச் சூழலை வஞ்சகமாக உருவாக்கிய அரசியல் - பொருளாதார கொள்கைகளையும், ஆதாய நோக்கில் அந்தக் கொள்கைகளோடு செய்துகொள்ளப்பட்ட சமரசங்களையும், இந்தியை எதிர்த்து அதை ஒதுக்கிவிட்டு அதனிடத்தில் ஆங்கிலம் அமர இடமளித்த துரோகங்களையும் காணத்தவறினால், அதற்கெல்லாம் பலியானவர்களான மக்கள்தான் குற்றவாளிகளாகத் தெரிவார்கள்.

    ReplyDelete
  2. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.அருமையான பதிவு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் சரவணக் குமார்

      Delete
  3. தன்னை அழித்தேனும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவன் தமிழன்.///

    உணர்வு மேலோங்கி இருந்த ஒரு காலத்தில்...

    ReplyDelete
  4. அந்நியரிடம் பேச மட்டுமே ஆங்கிலத்தை உபயோகித்துவிட்டு, உணர்வுபூர்வமாக பேச என்றைக்கும் நம் தாய் மொழியை பேசுவதை கடை பிடித்தால், இந்த கேள்வியை வரும் தலைமுறையினரிடம் மறுபடி கேட்க வேண்டிய நிலை வராது.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் உண்மை தோழர். மிக்க நன்றி தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  5. இந்தக் கேள்வியை உயிரற்றதாக்குவது கடினம், ஏனென்றால், ஆங்கிலேயரின் ஆட்சியின் வலிமை அப்படி... ஆனாலும், இன்று வரை, தொழில் அல்லது வியாபார நிமித்தமாக அயல்மொழிகளை, குறிப்பாக ஆங்கிலத்தின் தேவை இருக்கிறது.
    ஒரு தமிழனாக இருந்து மட்டுமல்ல, ஒரு இந்தியனாகவே இருந்து எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு கேள்வி இருக்கிறது.
    மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் மொழியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர நம் மொழியை அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்று ஏன் நம் மக்களுக்குத் தோன்றவில்லை?...
    எது எப்படியோ, தனிமனித ஆர்வத்தாலும், முயற்சியாலும் மட்டுமே இது சாத்தியம் என்பதை வருத்தத்தோடு சொல்ல வேண்டியிருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது பெருமளவு உண்மைதான் ராஜேஷ். ஆனால் முடியாதது அல்ல. முடியும். ஒருக்கால் முடியாமலே கூட போகட்டும்.

      முடியாமல் போவதைவிட முயறிக்காமல் போவது தவறில்லையா ராஜேஷ்.

      தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  6. இந்தக் கேள்வியை உயிரற்றதாக்குவது கடினம், ஏனென்றால், ஆங்கிலேயரின் ஆட்சியின் வலிமை அப்படி... ஆனாலும், இன்று வரை, தொழில் அல்லது வியாபார நிமித்தமாக அயல்மொழிகளை, குறிப்பாக ஆங்கிலத்தின் தேவை இருக்கிறது.
    ஒரு தமிழனாக இருந்து மட்டுமல்ல, ஒரு இந்தியனாகவே இருந்து எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு கேள்வி இருக்கிறது.
    மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் மொழியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர நம் மொழியை அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்று ஏன் நம் மக்களுக்குத் தோன்றவில்லை?...
    எது எப்படியோ, தனிமனித ஆர்வத்தாலும், முயற்சியாலும் மட்டுமே இது சாத்தியம் என்பதை வருத்தத்தோடு சொல்ல வேண்டியிருக்கிறது...

    ReplyDelete
  7. நூறாண்டுகளில் நிகழாத மாற்றம் இனி நிகழ்ந்து விடப் போகிறதா?சந்தேகம் தான்.மாற்றம் நிகழ்கிறதோ,இல்லையோ ''எங்கள் வாழ்வும்,எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு''
    எங்கள் ''தமிழுக்கு அமுதென்று பேர்''-இவையெல்லாம் மாறாத உண்மை.

    ReplyDelete
    Replies
    1. முதலில் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

      ஆயிரம் அடிகளில் உடையாத பாறை ஆயிரத்தி ஒன்றாவது அடியில்கூட உடையும்.

      நான் ஒரு ஆங்கில ஆசிரியன். என் பிள்ளைகளை தமிழ் வழிதான் படிக்க வைத்தேன்.

      வீட்டில் வெளியில் தமிழ்தான். இதை செய்வோம் முருகு. எல்லாம் தன்னால் மாறும்

      Delete
  8. நூறாண்டுகள் கடந்தும் நிலைமை மாறாதது மட்டுமல்ல இன்னும் மோசமாய் அல்லவா இருக்கிறது. தாய்மொழியை தொலைத்தால் தானும் தொலைந்து போவோம் என்று எப்போதுதான் உணர போகிறானோ தமிழன்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்.

      உங்கள் வேதனை சொல்லும் ஒரு செய்தி இதுதான்,

      “ நமக்கின்னும் நிறைய வேலை இருக்கிறது”

      மிக்க நன்றி மணிச்சுடர்

      Delete
  9. தம்மொழியில் பேசுவதைத் தாழ்வென்பார் நாட்டில்
    தறுதலைகள் கையொங்கும் தன்மானம் குன்றும்

    ReplyDelete
  10. இன்றய வயது 103. ஆனால் அன்றையை விட இன்னும் ஆங்கில மோகம் அதிகரித்துதானே இருக்கிறது. இப்போது பெற்றோர் கூட பிள்ளைகளோடு ஆங்கிலத்தில் பேசினால் தான் பெருமை என நினைக்கும் காலமாகிவிட்டது. இன்னும் இன்னும் தமிழ் மொழி அழிந்து கொண்டுபோகிறதே தவிர வளர்ந்தது போல் தெரியவில்லை. தொடர்ந்து இப்படியே போனால் ஒரு காலத்தில் தமிழ் பேசத்தெரியாத தமிழரைத்தான் நாம் காண்போம்.
    நிச்சயமா ஒரு மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் நாம் இருக்கிறோம். தமிழ்மொழி 12 வகுப்பு வரை கட்டாயபாடமாக்கப் படவேண்டும். ஊடகங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேற்றுமொழிக் கலப்பு அற்று தமிழில் மாத்திரம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதாவது முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இப்படி தமிழ் ஆர்வலர்கள் ஒன்று கூடி தமிழை வளர்க்க்லாம் என சிந்தித்து அதற்க்கான வழிமுறைகளை கொண்டுவர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழர். தமிழ் பேசத் தெரியாத தமிழரை பார்த்துதான் விடுவோம் போல இருக்கு.

      தமிழில் புழங்குவோம் தோழர்.

      மிக்க நன்றி

      Delete
  11. காலத்தின் தேவையை தங்களின் கட்டுரை பேசுகிறது.இல்லை என்பதற்கும் குவிந்துகிடக்கிறது என்பதற்குமான இடைவெளிக்குள் தமிழை நாம் எப்படி வளர்தெடுக்க போகிறோம் என்ற கேள்வியிநூடே அன்றாட வாழ்வில் இயன்றவரை பேசுதமிழையாவது பேசும் என்பதை உணராதவரை தமிழ் இனிமெல்லச்சாகும்!

    ReplyDelete
    Replies
    1. அது அப்படியல்ல மது,
      உழிக்கிறத் திரளும் ஒடுக்கப் பட்டத் திரளும் இருக்கிறவரை அது உயிரோடு இருக்கும்

      Delete
  12. நல்ல தமிழ் ஆசிரியர் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா தோழர். மிக்க நன்றி

      Delete
  13. பிற மொழிச் சாத்திரங்கள் தமிழில் கொண்டுத் தரவேண்டும் என்றான் முண்டாசுக்காரன் ஆனால் அதற்கான முயற்சிகளில் நாம் மிகமிகப் பின்தங்கியே இருக்கிறோம். நல்லவேளை ஐயா இந்தப் பதிவைப்பார்த்து நூறாவது ஆண்டுவிழாக் கொண்டாடவில்லை எவரும். ரௌத்திரம் பழகியது போதும் இனிப்பயண்படுத்துவோம் . அருமையான கட்டுரை என்பக்கத்தில் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன்

    ReplyDelete
  14. பிறமொழிச் சாத்திரங்கள் தமிழில் கொண்டுதரவேண்டும் என்ற பாரதியின் கூற்றினை செயல்படுத்த சாண்றோர் முன்வரவேண்டும் . ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்விவரை தமிழில் பயில வகை செய்யவேண்டும்

    ReplyDelete
  15. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  16. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...