Saturday, August 18, 2012

இரண்டாம் சந்திப்பு

யாரையோ யாரோ துவைத்துக் கொண்டிருந்தார்கள் WWசேனலில். மனித ரத்தம் பார்த்து மனிதக் கூட்டம் ஒன்று குதூகலித்துக் கொண்டிருந்தது. எந்த வரையரையும் இன்றி தாறுமாறாய் மனிதனை மனிதன் உதைப்பதை ரசிப்பதிலோ, மௌன சாட்சியாய் அமர்ந்து பார்ப்பதிலோ உடன்பாடு இல்லைதான், ஆனாலும் பார்க்காமல் இருக்க இயலவில்லை ஏவாளுக்கு.

அழைப்பு மணி ஒலித்தது.

தொலைக்காட்சியை மௌனப் படுத்திவிட்டு, அருகில் கிடந்த துண்டை எடுத்து சால் போல் போட்டுக்கொண்டு வாசலை நோக்கி விரைந்தாள்.

திறந்தால்.....,

சாத்தான்!, பார்த்து எவ்வளவு காலமாச்சு.பாம்பாய் பார்த்தது. வசீகரமாய் வந்து நிற்கிறான். ஆனதத்தாலும் ஆச்சரியத்தாலும் அப்படியே உறைந்து போனாள் ஏவாள்.

சந்தன நிறத்தில் காட்டன் பேண்ட், கருஞ்சிவப்பில் டீஷர்ட், ஷாம்பிட்டு உலர்ந்து மணக்கும் தலை, நேர்த்தியாய் நறுக்கப் பட்ட மீசை,மனசை சன்னமாய்க் கிச்சு கிச்சுமூட்டும் மென்மையான இண்டிமேட், மொத்தத்தில் வசீகரமும் கவர்ச்சியும் மிக்க அவனது தோற்றத்தில் கொஞ்சம் சாய்ந்துதான் போனாள் ஏவாள்.

“வா...ங் ...க....! வாங் ...க...!”

அதில் இருந்த ஒரு ரிதத்தை சாத்தானோடு சேர்ந்து ஏவாளும் ரசிக்கத்தான் செய்தாள். சணல் மிதிப்பானை காலால் நகர்த்தியவாறே கேட்டாள்,

“என்னது திடீர்னு இந்தப்பக்கம்?”

”சும்மா பார்க்கனும்போல இருந்துச்சு. வந்தேன். வரக்கூடாதுன்னா சொல்லு, போயிடறேன்”

“ஏய்.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன். கோவிசுக்காத. வா! வா! இப்படி உட்கார்”

ஒரு பழையத் துணியை எடுத்து சோபாவையும் டீபாயையும் துடைத்துவிட்டாள்.

சோபாவில் சரிந்து இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி நெட்டி முறித்தவன் கண்களில் WW பட்டது.

காசுக்காக மனிதனை மனிதன் உதைக்க வைப்பதும், அதன்மூலம் சிலர் கோடி கோடியாய் சுருட்டுவதற்கு உதவுவதும்தான் இந்தக் குட்டிச்சாத்தானின் வேலை. இது உலகமயமாக்களின் எச்சம். இந்த WW குட்டிச்சாத்தான் இன்று ஏதேனுக்குள்ளும் வந்துவிட்டது.சாத்தானுக்கு சங்கடமாய்த்தான் இருந்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“என்ன... தலைவன் ஒரே சிந்தனையில இருக்காப்ல இருக்கு..”

ஞானக் கனியின் தோள்சீவி, துண்டுகளாக்கி ஒரு பூத்தட்டில் வைத்து டீப்பாயின் மேல் வைத்தாள்.

“ சாப்பிடு. நம்ம மரத்துப் பழம். நல்லா தித்திப்பா சுவையா இருக்கும்.”

சாத்தானுக்கு குபுக்கென்று பொங்கிவிட்டது சிரிப்பு. நிமிர்ந்து ஏவாளை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“எனக்கே ஞானக்கனியா?. விட்டால் பொடி நடையாய் நடந்து போய்உலக வங்கிக்கே கொஞ்சம் கடன் கொடுத்துவிட்டு அப்படியே ஒரு எட்டு போய் உலகத்தை சுருட்டுவது எப்படி என்று அமெரிக்க அதிபருக்கே பாடம் நடத்திவிட்டு வந்துடுவ போலிருக்கு”

சிரித்தார்கள்.

“போப்பா உலகவங்கிக்குக்கூட கடன் கொடுப்பது சாத்தியம்தான். உலகை சுருட்டுவது பற்றி அமெரிக்க அதிபருக்கு பாடம் நடத்த இன்னொருவன் பிறந்து வந்தால்தான் உண்டு.

“அப்படியே ஒருத்தன் பிறந்தாலும் அவன் நிச்சயமாய் அமெரிக்காவிற்கு ஜனாதிபதியாகி விடுவான்.”

மீண்டும் சிரித்தார்கள்.

சிரித்த சிரிப்பில் பொறையேறி கண்களில் நீர்முட்டிவிட்டது சாத்தானுக்கு. கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.

“இரு! இரு! தண்னீர் கொண்டு வரேன்.”

ஓட்டமும் நடையுமாய் போய் பிரிட்ஜைத் திறந்து மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து வந்தாள்.

சாத்தான் இன்னமும் தடுமாறிக் கொண்டுதானிருந்தான். வந்தவள் சாத்தானின் தலையைத் தட்டிவிட்டுக் கொண்டே சொன்னாள்,

“யாரோ உன்னை நினைக்கிறாங்க சாத்தான்.”

“ வேற யாரு,?, எல்லாம் அந்த பேங்க் மேனேஜராத்தான் இருக்கும். பெர்சனல் லோன் மூனு தவன கட்டல,” என்றவன் கண்களில் ஏவாள் கைகளில் இருந்த மினரல் வாட்டர் பாட்டில் பட்டது. அதிர்ச்சியில் சாத்தானுக்கு பொறையே நின்றுவிட்டது.

ஏதேன் என்பது அழகின் உச்சம். இனிய வனாந்தரம் அது. அந்த இனிய வனாந்தரத்திலுற்பத்தியான ஜீவ நதி, மீசோன்,யெகோன், திகிரிஸ் மற்றும் யூஃப்ரதீஸ் என்று நான்கு கிளைகளாகப் பிரிந்து அமிர்தம் அள்ளிப் போகிற சொர்க்கம் அது. உலகம் முழுமைக்கும் நீரளிக்கவல்ல நதிகள் பிறந்த இடத்தில் மினரல் வாட்டரா? கடலுக்கு உப்பு சேர்க்கும் கயமை அல்லவா இது. என்ன ஆயிற்று. காலம் தலைகீழாய் சுழல்கிறதா?

“ என்ன ஏவாள் இது? தித்திப்பாய் உள்ளிறங்கி இதயம் குளிர்விக்குமே மீசோன் நதித் தண்ணீர். அதற்கென்ன ஆயிற்று? தாவரங்களின் தாகமறிந்து தானாய்ப் போய் அவற்றின் தாகம் தீர்த்த புன்னிய பூமிப்பா இது. இங்கு போய் மினரல் வாட்டரா?”

“ம்ம்ம்... “ பெருமூச்செறிந்தவாறே சலிப்பின் உச்சத்திற்குப் போனாள் ஏவாள்.

“ அடப் போப்பா.. ஜீவ நதியாவது, தண்ணீராவது, மீசோன் குறுக்கே பக்கத்து வயல்காரன் தடுப்பணை கட்டிவிட்டான். அவனுக்கு மிஞ்சினாத்தான் நமக்குத் தருவானாம்.”

“ அடாவடித்தனம் பண்றான்னா அப்படியே உட்டுடுறதா?”

ஏவாள் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் அழைப்பு மணி ஒலித்தது.

கேபிள் பையன்.

“ இந்த மாசம் பணமே தரக்கூடாதுன்னு பார்த்தேன். ஒலிம்பிக்க ஒழுங்காவே பார்க்க முடியல.”

“இல்லங்க மேடம். டோட்டல் நெட் வொர்க்குமே ப்ராப்ளம் மேடம். இனி எல்லாம் சரியா வருங்க மேடம்.”

“ இனி எல்லாம் ஒழுங்கா வந்தா என்ன? வராட்டிதான் என்ன? ஒலிம்பிக் இன்னும் நாலு வருஷம் கழிச்சுதான வரும். கடைசி நாள் கொண்டாட்டத்தக் கூட பார்க்க விடாம பண்ணீட்டிங்களே”

“ஒரு கால் பண்னியிருக்கலாங்களே மேடம். ஓடி வந்திருப்போம்ல”

“ கொன்னுடுவேன் கொன்னு.அழுத்தி அழுத்தி விரல் தேஞ்சதுதான் மிச்சம்.ஸ்விச் ஆஃப் பன்னி வச்சிட்டு நீங்க மட்டும் ஜாலியா பார்த்துட்டு இருந்திருக்கீங்க”

பணத்தைக் கொடுத்து பையனை அனுப்பிவிட்டு வந்து ஸ்டூலை இழுத்துபோட்டு சாத்தானுக்கு எதிரில் அமர்ந்தாள்.

“ஆமாம் என்ன கேட்ட. அடாவடித்தனம் பன்னா உட்றதான்னுதானே? வேற என்ன செய்றது?

“ நியாயம் கேட்கறதுக்கு இங்க ஆளே இல்லையா என்ன?”

“ ஆளா, நிறைய இருக்காங்க. ஆனா யார நம்பச் சொல்ற? இந்தப் பக்கம் வந்தா ஆத்து நீர தடுப்பது குற்றம்ங்கறாங்க. அவங்களே வரப்பத் தாண்டி அந்தப் பக்கம் போயிட்டா, தேவைக்குப் போக மிஞ்சுன தண்னீரத்தானே தரமுடியும்ங்கறாங்க. என்ன செய்ய சொல்ற?”

“ஏன், கோர்ட்டுக்குப் போறது.” ஞானக் கனியின் விதையைத் துப்பியவாறே சாத்தான் கேட்டான்.

“ அதையேன் கேட்கற. கோர்ட்டுக்கும் போனேனே. எங்க போயி என்ன?”

ஜன்னலைத் திறந்து விட்டாள்.

“ ஏன் கோர்ட்டிலும் ஒன்னும் ஆகலையா?”

“ அப்படியும் சொல்லிவிட முடியாது. ஏதேனுக்கு வருஷம் 3 டி.எம்.சி தண்ணி தரனும்னு தீர்ப்புகூட வந்துச்சு.”

“அப்புறமென்ன?”

“அப்புறமென்ன. தீர்ப்புதான் வந்ததேதவிர தண்ணீர் வரலப்பா.”

“ ஞாயமத்துப் போனதா ஏவாள் இந்தப் பூமி?”

சாத்தானின் குரலில் இருந்த ஆதங்கம் ஏவாளை நெகிழச் செய்தது.

“போராடிப் பார்த்தேன் சாத்தான். முடியல. பார்த்தேன், போகட்டும் கழுதைனு மணலை காண்ராக்ட்டுக்கு விட்டுட்டேன்.இப்ப நல்ல வரவு சாத்தான்.”

“ மணல ஏலத்துக்கா? பாவமில்லையா ஏவாள்? சரி ஏதேனின் பால் நரம்பாய் ஓடும் யூஃப்ரத்தீஸ் என்னாச்சு?”

“ பக்கத்து ஊர் சாயத் தொழிற்சால கழிவெல்லாம் கலந்து அது நஞ்சாய்ப் போனது. அது சரி, இது என்ன வந்ததிலிருந்து வாதியார் கணக்கா ஒரே கேள்வியா கேட்டுகிட்டு”

சிரித்துக் கொண்டே சமையலறை நோக்கி நகர்ந்தவள் எதையோ நினைத்தவளாய் அப்படியே நின்றவள் கேட்டாள்,

சரி, சரி, என்ன இது கம்யூனிஸ்டாட்டம் சிவப்பு கலர்ல சட்டை?”

சிரித்தான்.

” ஆமாம், அது என்ன, சிவப்புன்னா அலறறீங்களே எல்லோரும். ஆதிக்கத்த, ஏதேச்சிகாரத்த எதிர்க்கிறவந்தான் கம்யூனிஸ்ட். அப்படிப் பார்த்தா கடவுள் என்கிற ஆதிக்கத்த, ஏதேச்சிகாரத்த மொத மொதல்ல எதிர்த்த நானும் கம்யூனிஸ்ட்தான்.”

“ சரி, சரி, ஒங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? பேசிப் பேசியே என்னப் பழத்தை தின்ன வச்சவனாச்சே.”

“ நீயே சொல்லு ஏவாள், அப்படிப் பேசலைனா நீ பழத்தத் தின்னுருப்பியா? நீ பழத்த சாப்பிடலைனா இப்படி மிடி , சுடி, நைட்டின்னு வித விதமா உடைகளிப் போட இயலுமா? இன்னும் சொல்லப் போனால் உலகத்துல இருக்கிற எல்லா ஜவுளிக் கடைகளிலும் நியாயமாப் பார்த்தா என் படத்ததான் மாட்டி வைக்கனும் தெரியுமா?”

சிரித்தார்கள், சிரித்தார்கள், அப்படிச் சிரித்தார்கள்.

“ சரி சரி , இரு , தேனீர் போட்டுட்டு வரேன்”

சமையலறைக்கு விரைந்தாள்.

ஆவி பறக்க தேனீர் வந்தது கொஞ்ச நேரத்திற்கெல்லாம் .

“ஆமாமாதாம் எங்கே ஏவாள். அவர் எப்படி இருக்கிறார்?”

“அவருக்கென்ன மாடியில் கிடக்கிறார். கிழவனுக்கு பல் போச்சு, சொல் போச்சு, கண் போச்சு, சுவை போச்சு... ஏன், என் மீதுள்ள ஆதிக்கம் தவிர அந்தாளுக்கு எல்லாம் போச்சு.”

“ ஏம்மா ஆதாம் மேல உனக்கு இவ்வளவு சலிப்பு?”

நெட்டி முறித்துக் கொண்டே எழுந்தான்.

“ இது ஆதாம் மேல எனக்குள்ள சலிப்பல்ல சாத்தான்.புருஷங்கமேல பொண்டாட்டிங்களுக்கு உள்ள சலிப்பும் எரிச்சலும்.”

சிரித்தான்.

“ வர வர ரொம்ப நல்லா பேசுற ஏவாள்... ஆதாமக் கேட்டதா சொல்லு”

ஸ்டூலில் அமர்ந்து சுருண்டு கிடந்த ஸாக்ஸை நீவிக் கொண்டிருந்த சாத்தானிடம் ஏவாள் கேட்டாள்,

“அப்பப்ப வரலாம்ல. அல்லது செல்லிலாவது பேசலாம்ல.”

சாத்தான் இடைமறித்தான்,

“அப்படியும் இல்லாட்டி எஸ் எம் எஸ் ஆவது அனுப்பலாம்ல”

சிரித்தார்கள்.

திடீரென எதையோ நினைத்துக் கொண்டவளாய் ஏவாள் கேட்டாள்,

“ ஆமாம் , கடவுளோட செல் எண் இருக்கா?”

“ஏது, கடவுளோட நம்பரெல்லாம் கேட்கிற. ஏதேனும் வேண்டுதலா?”

“வாயப் புடுங்காத ஆமா.அந்தாள்ட்ட ஒரு கேள்வி கேட்கணும். கேட்கணும் கேட்கணும்னே பல யுகங்கள் ஓடியாச்சு.”

“என்ன கேட்கணும்?”

சாத்தான் முகத்தில் ஆர்வம் அப்பிக் கொண்டது.

“ ஏஞ்சாமி, ஆதாம களி மண்ணுல செஞ்சியே. பிறகு ஏன் ஏதேன்ல களி மண்ணே இல்லைனா அவனோட விலா எலும்ப ஒடச்சு என்னைப் படச்சேன்னு கேட்கனும்”

ஆச்சரியத்தில் அப்படியே உறைந்து போனான். ஞானக் கனியை சாப்பிடச் செய்ததன் மூலம் அழகான, மிகவும் இனியவளான ஏவாளை நாசப் படுத்தி விட்டோமோ என்று அவன் அடிக்கடி தன்னையே நொந்துகொள்வது உண்டு. அது தவறு என்று ஏவாளின் கேள்வி உணர்த்தியது.மகிழ்ச்சி எதுக்களிக்க நினைத்தான்,

“இனி சாவதானாலும் நிம்மதியாய் சாகலாம்.”
      

40 comments:

  1. வித்தியாசமான உரையாடலாக இருந்தது சார்...
    முடிவில் நல்ல கேள்வி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் தனபாலன்

      Delete
  2. அருமையான பதிவு.
    ஆதாம் மட்டும் நொந்து கொள்ளவில்லை. இப்போது உள்ள நிலமைகளை நினைத்து நாமும் நொந்து கொள்ளவும் வேண்டும், சலித்துக் கொள்ளவும் வேண்டும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  3. பைபிளின் இன்னுமொரு புதிய ஏற்பாட்டு கதையோ? நச்சென்று ஒரு கேள்வி. இன்னமும் கேட்க மட்டுமே முடிகிறது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் மணிச்சுடர்

      Delete
  4. இன்றைய சூழ்நிலையில் ஆதமும் , ஏவாளும் இப்படித்தான் இருக்க வேண்டுமோ ? மிக அருமையாக, சொல் வளமையுடன் எழுதியிருக்கிறீர்கள்.. பாராட்டுகள்..

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் இருக்கலாம் என்பதுதான் தோழர்.மிக்க நன்றி.

      Delete
  5. பிரமிப்பான இடுகை! வேறொன்றும் சொல்ல தோணவில்லை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்,
      உங்களின் அன்பிற்கும் பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி தோழர்

      Delete
  6. தொன்மக் கதா பாத்திரங்களை வைத்துக்கொண்டு உலகமயமாதலின் பின்னடைவுகளை எக்காளம் தொனிக்கவும் நகை தகும்பவும் சொல்லி இருக்கும் கதையாடல் சிறப்பு.

    ReplyDelete
  7. நல்லாத்தான் எழுதுற
    எப்பிடியெல்லாம் கற்பனை போகுது ....
    பிரமாதம் . சமை வாத்தியரே
    அப்படியே எனக்கும் கொஞ்சம்....

    ReplyDelete
    Replies
    1. நீ எப்படா அனுப்பின?

      Delete
  8. "அந்தாள்ட்ட ஒரு கேள்வி கேட்கணும். கேட்கணும் கேட்கணும்னே இந்த ஜென்மம் ஓடிரும்போலருக்கே...."

    இன்றைய அரசியல், பொருளாதார சூழ்நிலையில் சாதாரண, எளிய மனிதர்கள் அனைவரின் மனதிலும் சலிப்புடனோ, ஆவேசத்துடனோ, இயலாமையுடனோ நிலவும் சலிப்பும் எரிச்சலுமான எண்ணம்தான்....
    --------------- -----------
    இது அரசியல் அங்கதக் கட்டுரை என்றும் கொள்ளத்தக்க நாசூக்கான சில அல்லைக்குத்துகளும்.....

    எ.கா. **** (...என் மீதுள்ள ஆதிக்கம் தவிர அந்தாளுக்கு எல்லாம் போச்சு.....)

    தமிழர்கள், தமிழ்நாடு மீதான ஆதிக்கம் தவிர அந்தாளுக்கு (இந்தியப் பிரதமருக்கு....! ) எல்லாம் போச்சு.....வேறு எவனும்
    அந்தாளு பேச்சை மதிப்பதில்லை...
    -------------- -----------
    பாராட்டுகிறேன் நண்பரே.....!

    ReplyDelete
  9. ஏஞ்சாமி, ஆதாம களி மண்ணுல செஞ்சியே. பிறகு ஏன் ஏதேன்ல களி மண்ணே இல்லைனா அவனோட விலா எலும்ப ஒடச்சு என்னைப் படச்சேன்னு கேட்கனும்”//

    பொட்டில‌டித்தாற் போன்ற‌ கேள்வி! ஒரு ஆதாமின் சிந்த‌னையிலிருந்து!! ஏவாள்க‌ளுக்காக‌ இர‌க்க‌ப்ப‌டும் ஆதாம்க‌ளும் சாத்தான்க‌ளும் ...!!!

    ReplyDelete
    Replies
    1. இரக்கம் அல்ல தோழர். நியாயம்

      Delete
  10. “ ஏஞ்சாமி, ஆதாம களி மண்ணுல செஞ்சியே. பிறகு ஏன் ஏதேன்ல களி மண்ணே இல்லைனா அவனோட விலா எலும்ப ஒடச்சு என்னைப் படச்சேன்னு கேட்கனும்-
    நண்பரே !இப்படியொரு சிந்தனை இதுவரை வரலியே ? அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  11. ஏஞ்சாமி, ஆதாம களி மண்ணுல செஞ்சியே. பிறகு ஏன் ஏதேன்ல களி மண்ணே இல்லைனா அவனோட விலா எலும்ப ஒடச்சு என்னைப் படச்சேன்னு கேட்கனும்”/ sariyana kelvi

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் தோழர் எட்வின். இதுவரை பைபிள் படிக்காதவங்க கட்டாயம் ஆதாம் ஏவாள் கதைபகுதியையாவது நிச்சயம் படிப்பார்கள். புதிய பார்வை பொருத்தமான கேள்வி கைகுலுக்கினதா நினைச்சிகுங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். உங்களது வருகையும் கருத்தும் என்னை மிகவும் சந்தோசப் படுத்தியுள்ளது.

      Delete
  13. வணக்கம் தோழர். கதை ரொம்ப அற்புதம். எப்படி தோழர் இப்படி எல்லாம் உங்களுக்கு கறபனை பறக்கிறது. வாழ்த்துகள்

    ReplyDelete
  14. அண்ணே நல்லா தான் இருக்கு. சாட்டைய இன்னும் கொஞ்சம் நீவி விட்டுருந்தா சிவப்பு சட்டைகள் இந்த கதைய விவிலிய விளக்க நூலா பிரகடன பாடுதீருப்பாங்க.. இன்னும் நெறய எழுதுங்கன்னே... மிகை நன்றி .. வாழ்த்த வயதில்லை ..

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பிற்கும் பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி தோழர்

      Delete
  15. ம்ம்ம்....
    நல்ல சிறுகதை
    உரையாடல் அருமை
    கேள்வி .......?

    ReplyDelete
  16. கண்டிப்பாய் முதல் சிறுகதை என்று சொல்லமுடியாத அளவிற்க்கு தேர்ந்த படைப்பு!
    சமகலத்தோடு கதை பயணிப்பது,கதாபாத்திர தேர்வு,கதைமாந்தர் வழியே ஆன முற்போக்கான விமர்சனம்,கதையின் தலைப்பு அனைத்தும் அழகு!

    சாத்தானின் சிவப்புசட்டைக்கான அடையாளம் அருமை!

    மனிதகுல பரிணாம வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்கும் கடவுளை , கேள்விக்குள்ளாக்கும் ஏவாலின் கேள்வியோடு கதைமுடிவது மத பற்றாளர்களை(குறிப்பாய் குழந்தைகளின் சிந்தனையை தூண்டும்)கேள்விக்கும்!

    நல்ல கதை! ஆனால் நம்பமுடியவில்லை...
    முதல்கதை என்பதை மட்டும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்.
      ஆனாலும் இதுதான் தோழர் எனது முதல் கதை

      Delete
    2. அன்புத் தோழருக்கு வணக்கம். மீண்டும் இன்று இரண்டாம் சந்திப்பு படித்தேன் நிகழாத நிலையில். அருமை தோழர். எப்படி, கடந்த காலம், நிகழ் காலம், இந்தக் கால அரசியல் சூழல்கள், அதன் பிரச்சினைகள், கிறித்துவம், விவிலிய தடம், அனைத்துக்குள்ளும் மாந்தர்களை தடம் போட கொண்டு வந்து அற்புதமாய் கருத்துக்களை தங்களின் கற்பனைக் கண்ணியில் கோர்த்திருக்கிறீர்கள்,வாழ்த்துக்கள் தோழர். இது எப்படிப்பா? அதுவும் முதல் படைப்பா? நம்ப முடியலேப்பா?அடி விழலியா ? தேவாலயத்திலிருந்து ?

      Delete
    3. அன்புத் தோழருக்கு வணக்கம். மீண்டும் இன்று இரண்டாம் சந்திப்பு படித்தேன் நிகழாத நிலையில். அருமை தோழர். எப்படி, கடந்த காலம், நிகழ் காலம், இந்தக் கால அரசியல் சூழல்கள், அதன் பிரச்சினைகள், கிறித்துவம், விவிலிய தடம், அனைத்துக்குள்ளும் மாந்தர்களை தடம் போட கொண்டு வந்து அற்புதமாய் கருத்துக்களை தங்களின் கற்பனைக் கண்ணியில் கோர்த்திருக்கிறீர்கள்,வாழ்த்துக்கள் தோழர். இது எப்படிப்பா? அதுவும் முதல் படைப்பா? நம்ப முடியலேப்பா?அடி விழலியா ? தேவாலயத்திலிருந்து ?

      Delete
    4. சத்தியமாய் முதல் கதைதான் தோழர்.
      மிக்க நன்றி

      Delete
    5. மிக்க நன்றி தோழர் அருணன் பாரதி

      Delete
  17. வணக்கம் எட்வின் சார் ,இதில் ஏவாள் யார் ? சாத்தான் யார் ? நல்ல கற்பனை ......

    ReplyDelete
    Replies
    1. இதில் யார் சாத்தான் யார் ஏவாள் என்று தெரியவில்லை. ஆனால் எழுதியது யார் என்றுமட்டும் தெரிகிறது. மிக்க நன்றி தோழர்

      Delete
  18. வணக்கம ஐயா, கதை மிகவும் அருமை. கதையின் ஓட்டமும் நடையும் வெகு எளிதாகவும், அதே சமயம் ஆழமாகவும், எளிமையாவும் இருக்கிறது.நிகழ்கால அரசியல் அவலங்களை அழகாக அலசுகிறது.வாழ்த்துக்கள். தொடரட்டும்...க. சிவராசு.பழனி, மேட்டுப்பட்டி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். மிகத் தாமதமாகத்தான் தங்களது கருத்தினைப் பார்த்தேன். மன்னிக்கவும்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...