Saturday, June 12, 2021

27.01.2021

 சௌத் ஏசியன் பாலாஜி,

தான் பேராசிரியர் சந்திரசேகர் எழுதிய “சீனா அன்றும் இன்றும்” என்ற நூலை வாசித்ததனால்தான் இடதுசாரியாய் மாறினேன் என்கிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சந்திரசேகர் அவர்கள் தீவிரமான இடதுசாரி எதிர்ப்பாளர். ஒரு ஆழமான இடதுசாரி எதிர்ப்புக் கண்னோட்டத்துடன் சீனாவின் மீதான தனது விமர்சனமாகத்தான் அவர் அந்த நூலை எழுதியிருந்தார்.
கம்யூனிச எதிர்ப்பாளர் ஒருவர் எழுதிய ஒரு நூல் அதன் வாசகன் ஒருவனை எப்படி இடதுசாரியாய் மாற்றும்? என்ற கேள்விக்கு பாலாஜி தரும் பதில்தான் ஒரு நல்ல நூல் ஆசிரியன் எவ்வளவு யோக்யமாயிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு நல்ல அளவு கோளாக விளங்குகிறது.
அவர் சொல்கிறார்,
சந்திரசேகர் இடதுசாரி எதிர்ப்பாளர் என்பதற்காக அந்த நூலில் சீனாவைப் பற்றி எந்த பொய்யான தகவல்களையும் தராததோடு சீன வளர்ச்சியையும் மறைக்காது உள்ளது உள்ளபடி தந்திருந்தார். சீன இடதுசாரிகளின் உழைப்பை, அர்ப்பணிப்பை அதன் விளைவுகளை அந்த நூலில் இருந்து கண்டு கொண்டதின் விளைவே நான் இடதுசாரியானேன்

கவிதை 019

 

28.01.2021

01

விபத்தில்

எனக்கு
கால் ஒடிந்ததால்தான்
நிகழ்ச்சியை
ஒத்தி வைக்க நேர்ந்ததென்று
அவனிடம் சொன்னதை
என்னிடமும் சொல்லியிருக்கலாம் நீ
விந்தி விந்தியாவது
நடந்து தொலைத்திருப்பேன்
நேற்றவனை பார்க்க நேர்ந்தபோது




Thursday, June 10, 2021

30.01.2021

                                                                30.01.2021


                                                                          01


சொன்னானாம்
மீண்டும் மீண்டும் ஒளிபரப்பான
நீண்ட இரங்கல் மிகையென்றும்
தனதென்று காட்டப்பட்ட உடலின் ஒப்பனையில்
கவனம் போதாதென்றும்



02


எனக்குத் தெரிய காந்தி இரண்டுமுறை பிறந்திருக்கிறார்
போர்பந்தரில் ஒருமுறை
எரவாடா சிறையில் தந்தை அம்பேத்கர் காந்தியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தால் மறுமுறை
(தேவைப்படுமானால் இதை விரிவாக இன்றிரவு எழுத வேண்டும்)
ஆக,
தந்தை அம்பேத்கர் காப்பாற்றிய காந்தியை கோட்சே கொன்ற தினம் இன்று


03


ஆமாம்பா
ஆமாம்
மறுக்கவில்லை
எங்களில் எவரும்
டவுசர்கள் புடைத்து நிற்க
சத்தியம் செய்கிறோம்
கோட்சே தலையில்
எங்கள் வலது கைகளால் தொட்டு
கொன்றது அவன்தான் அவரை
அதற்கென்ன?
சொல்லுங்கள் நெஞ்சைத் தொட்டு
உரமாகவில்லையா
கதர் வளர
அவரது கொலை
கொல்லப்பட்டவர் பெயர்
அவர்களை வளர்க்கலாமெனில்
வளரக் கூடாதா நாங்கள்
கொன்றவன் பெயரால்?
உணர்ந்திருக்கிறீர்களா
யாரேனும் உங்களில்
வில்லனும் கொலைகாரனுமான
ஒருவனை முன்னிருத்தி
நாங்கள் படும் சிரமம்
நகர்வதற்கு
தோண்டும் கரியில் திருடினாலும்
வாங்கும் பீரங்கியில் சுரண்டினாலும்
பிறை நம்பிகளை பேக்கரி அடுப்பில்
எரித்தாலும்
பத்து லட்சத்துக்கு கோட்டெடுத்தாலும்
அதற்கும் மேல நூறு போட்டு
கோவணமெடுத்தாலும்
சட்டென மறந்துவிடும் மக்களென்பதால்
மூச்சு விடுகிறோம் ஏதோ
கதரும் காவியும்
போக
அவரது பெயரால்
அனைத்தையும் விற்க முயன்றார்கள்
அவர்களைத்தான் தொடர்கிறோம்
காப்பீடு ரயிலென்று
போக,
நாங்கள் இடிப்போம்
அவர்கள் பார்ப்பார்கள்
அவர்களென்ன நாங்களென்ன
ஒன்றுதான் இருவரும்
நகர்வீர்களா...
நாடென்பதென்ன
நீங்கள் இருவர் மட்டுமா?
இல்லைதான்...
நாடென்பது
நீங்களும் சேர்த்துதான்
தெரியுதுல்ல...
தெரிந்தென்ன...
தெருவில்
ரயிலடியில்
காவல் நிலையத்தில் போராடி
சிறையில்
சாவீர்கள்
அடிபடுவீர்கள் மக்களுக்காக
தேர்தல் வரைக்கும்...
???
மக்களடிப்பார்கள் உங்களை
தேர்தலன்று
நகருங்க பாஸ்
பேசாம
(எப்போது எழுதியதெனத் தெரியவில்லை)






31.01.2021

 31.01.2021

****************************************  

                                 01

திருடனின் கை ரேகையில்
தெரியவேயில்லை
திருடனென்று




02


தலித்தைவிட சூத்திரன் உசத்தியானவன் என்று சூத்திரர்கள் பலர் கருதுவதும்
ஏதோ தாம் பெரிய அவதாரம் என்பதுபோல் கருதி கிடைக்கிற தலித்துகளைத் தாக்குவதுமாக நகர்வது தொடர் கதையாக இருக்கிறது
ஆவுடையார்கோவிலுக்கு அடுத்துள்ள குணத்திரான்பட்டியைச் சேர்ந்த இளைஞன் மதன்
பொறியியலில் பட்டையம் பெற்றவன்
கோவையில் கார் ஓட்டுனராகப் பணி புரிகிறார்
பொங்கலுக்காக விடுப்பில் வந்திருக்கிறார்
24.01.2021 அன்று மாலை தனது நண்பர்களோடு பட்டமங்கலத்தில் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்
அவரை தண்ணிகொண்டான் மங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ப்ரதீப், மெய்கண்டன் உள்ளிட்ட இளைஞர்கள் மதனை ஜாதியை சொல்லித் திட்டியும் தாக்கியும் உள்ளனர்
ஒருவழியாகத் தப்பித்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பும்போது
மீண்டும் வழி மறித்து தாக்கியுள்ளனர்
ஒருகட்டத்தில் நா வறண்ட நிலையில் தண்ணீர் கேட்ட மதனது வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்
போதையில் இருந்த அவர்கள் மயங்கியபோதுதான் மதனால் அங்கிருந்து தப்பிக்க முடிகிறது
என்கிற செய்தியை தம்பி ஸ்டாலின் தி தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்
தலித் என்றால் பரிகசிக்கவும் தாக்கவுமான லைசென்சை இவர்களுக்கு எவன் தந்தது?
அவ்வளவு உயர்வானவர்களா இடை சாதியினர்?
இவர்களே இன்னும் தங்களுக்கான விடுதலைக்காக குரல் கொடுப்பவர்கள்தானே?
எனில்,
இவர்களுக்கும் மேல் யாரோ இருக்கிறார்கள்தானே?
இன்னும் சொல்லப்போனால் இப்படியான ஒரு அடுக்கு ஏற்பாடே அவர்களுக்கு எதிராக எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்ப்பனர்கள் செய்ததுதானே
அடுத்தவனை அடிமையாகக் கருதும் இடைசாதிக் காரன் எப்படி தனது விடுதலைக்காக குரல் கொடுக்க முடியும்
இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காத அளவிற்கு கடுமையான தண்டனை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டும்
எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்
சூத்திர விடுதலைக்கான முன் நிபந்தனை தலித் விடுதலை


03







இது பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் மதுரையிலே கலந்துகொண்ட மாநாடு
மக்களோடு உள்ள நாற்காலிகளை மட்டுமே வைத்திருக்கிறேன்
வெறும் நாற்காலிகளை வைக்கவில்லை
ஆயிரத்து ஐநூறு நாற்காலிகளுக்கு ஒருத்தரைத்தான் அவர்களால் சம்பளத்திற்கு அழைத்து வர முடிந்திருக்கிறது
இவ்வளவுதான் அவர்களது செல்வாக்கு
அதிமுக இதைப் புரிந்து கொள்ள வேண்டும்
நஞ்சுப் பயிர்களுக்கு உரம் தெளிக்கிற வேலையை அதிமுக செய்யக் கூடாது




04








அன்புத் தோழர் மதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Wednesday, June 9, 2021

திண்டுக்கல் விடுதலை வீரர் கூட்டமைப்பு

 08.06.1800

இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்
நான்காம் மைசூர் போரில் திப்பு வீர மரணம் அடைகிறான்
எனவே திப்புவோடு தமது இளம் படைவீரர்களோடு களத்தில் இருந்த சின்னமலை பின்வாங்கி ஓடாநிலை வருகிறார்
தமது படையை பலப்படுத்தி அங்கிலேயர்களை எதிர்கொள்ள திட்டமிடுகிறார்
வேலைகள் நடக்கின்றன
இந்த நேரத்தில் ஆங்கிலேயர்களிடம் இருந்து அவருக்கு ஒரு செய்தி வருகிறது
கோவை பகுதியில் சின்னமலை வரி வசூலித்துக் கொள்ளலாம் என்றும்
அதில் 30 விழுக்காட்டை கும்பினியாருக்கு செலுத்தினால் போதும் என்றும் அந்த செய்தி கூறுகிறது
சின்னமலை மறுக்கிறார்
ஜெனரல் மெடோஸ் பொறுப்பில் இருக்கும் கோவையை மீட்பதே தன்னுடைய கடமை என்று உறுதி எடுக்கும் சின்னமலை
சிவகங்கை சின்னமருது, கேரள வர்மா, திண்டுக்கல் லக்குமநாயக்கர் ஆகியோரோடு கோவையைத் தாக்கத் திட்டம் தீட்டினார் என்றும்
இதன்பொருட்டு “திண்டுக்கல் விடுதலை வீரர் கூட்டமைப்பு” உருவானது என்றும்
தோழர் சு.போ.அகத்தியலிங்கம் ( Su Po Agathiyalingam) தனது” விடுதலைத் தளும்புகள்” என்ற நூலில் (பக்கம் 45 ) குறிப்பிடுகிறார்
விருப்பாச்சி கோபால் நாயக்கர் குறித்து விக்கி பீடியா குறிப்பிலும் இந்தத் திட்டம் குறித்து வருகிறது
ஆனால் அந்த விக்கிபீடியா குறிப்பில் சின்னமலை பெயர் இல்லை
”கி.பி.1800 ஏப்ரலில் கோபால்நாயக்கர் தலைமையில் இறுதிக்கட்டப் போருக்கு திட்டமிட்டனர். இக்கூட்டத்தில் கேரளவர்மா, மைசூர் கிருட்டிணப்பா, சிவகங்கை சின்னமருது, கோவை ஹாஜிஹான், இராமநாதபுரம் கல்யாணித்தேவர், மற்றும் பெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கி.பி.1800 சூனில் கோவையிலுள்ள ஆங்கிலேயரின் ராணுவ முகாமை நாலாபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குவது என முடிவெடுத்தனர்.
அதன்படி ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான், ஓசூர் முஹமது ஹாசன், பரமத்தி அப்பாவு, சேசையா ஆகியோர் தளபதிகளாக இருப்பது எனவும் முடிவெடுத்தனர்.
இச்செய்தி ஆங்கிலேயருக்கு எட்டியது. ஆங்கிலேயர் நாலாபுறமும் பீரங்கிப்படையை நிறுத்தி புரட்சிப்படைகளைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
என்றும்
அவர்கள் கொல்லப்பட்டதாகவும் விக்கிபீடியா சொல்கிறது
பிடிபட்டவர்களில் 42 பேர் 08.06.1800 அன்று தூக்கிலிடப் பட்டதாகவும் ஏராளமான வீரர்கள் “ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ்” தீவுகளுக்கு நாடு கடத்தப் பட்டதாகவும் தோழர் சு.போ.அகத்தியலிங்கம் கூறுகிறார்
இன்று 08.06.2021,
இருநூற்றி இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்னால் 42 பேர் தூக்கிலிடப் பட்டிருக்க்ன்றனர்
ஆயிரம் பேரை உள்ளிட்ட எண்ணிக்கையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
இதுபோன்ற தியாகங்களால்தான் நாம் இன்று இந்த அளவிற்கேனும் கொஞ்சம் சுதந்திரமாக உள்ளோம்
திண்டுக்கல், இடையகோட்டை, விருப்பாச்சி, மணப்பாறை போன்ற ஊர்கள் எல்லாம் இந்த வரலாறோடு தொடர்பில் உள்ளன
வரலாற்றின் இந்தத் துண்டில் மாற்றம் இருக்கலாம்
கொஞ்சம் கூடலாம் குறையலாம்
ஆனால் இது ஒரு வரலாறு
லிங்கனை, லெனினை, காந்தியை, மாவோவை ஓரளவிற்கேனும் தெரிந்து வைத்திருக்கும் மணப்பாறை பிள்ளைகளுக்கு அவர்கள் மண்ணின் வீரப் புதல்வன் லக்குமி நாயக்கரையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம் அல்லவா?
பின் குறிப்பு
***************
திண்டுக்கல் லக்குமி நாயக்கர் என்பவர் மணப்பாறையைச் சேர்ந்தவர் என்றும் இணையவழி கொள்ள முடிகிறது. இவருக்கும் விடுதலைப் போரில் பங்களிப்பு இருக்கிறது என்பதும்கூட
மணப்பாறையில் இருந்து 25 கிலோமீட்டரைச் சேர்ந்த ஊர்க்காரனான எனக்கு திமிர் கொள்ள பாத்தியதை உண்டு

Monday, June 7, 2021

பொதுவெளியில் வைக்க வேண்டாம்

 இறையன்பு சார் அவர்களது உதவியை பொதுவெளியில் வைக்க வேண்டாமென்று விஐபி களை கேட்டுக் கொள்கிறேன்

ஏழைகளுக்கானது இந்த அரசு என்பதை மறுதலிப்பதாகிறது இது
தனது உதவியை பொதுவெளியில் வைக்க வேண்டாமென்று விஐபிகளிடம் சொல்லவேண்டிய கடமையும் இறையன்பு சாருக்கிருக்கிறது

தனக்கு கிடைக்காத விருதை

 சாகித்ய அக்காதமி விருதுகளை விமர்சிப்பதனால் அதைப் பெறுவதில்லை என முடிவுசெய்தேன். அவ்வமைப்பின் மையப்பொறுப்புகளில் என்மேல் பெருமதிப்பு கொண்டவர்கள், என் நண்பர்கள் என்றே நான் சொல்லத்தக்கவர்கள் இருந்திருக்கிறார்கள். டெல்லி சென்றால் நான் சென்று சந்தித்தாகவேண்டிய அளவுக்கு அணுக்கம் கொண்டவர்கள். பலமுறை அவ்விருதை ஏற்கும்படி என்னிடம் சொல்லப்பட்டுள்ளது- நான் மறுத்துவிட்டேன். -

என்று ஜெயமோகன் தனது வலைப் பக்கத்தில் எழுதியுள்ளதாக தோழர் மதி கண்ணன் தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்
சாகித்திய அகாதமி விருதை ஏற்கும்படி இவரை வற்புறுத்தியவர்கள் யார்?
அதை அவர் சொல்ல வேண்டும்
அவர் கூறுவது உண்மை எனில் அவர்கள் அகதமியின் பொறுப்புகளுக்கு தகுதியற்ரவர்கள்
அவர்களை முறையாக விசாரிக்க வேண்டும்
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்
தனக்கு கிடைக்காத விருதை இவர் மலினப்படுத்த முயல்கிறார் என்பதே

Sunday, June 6, 2021

அவரது மௌனமும் இவரது எதிர்வினையும்

 ஒரு பள்ளியில் சில ஆசிரியர்கள் அந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்

100 பக்க வாக்குமூலம் என்கிறார்கள்
சினிமாவிற்கு அழைத்துப் போனேன் என்கிறார்
கருக்கலைப்பு நடத்தினேன் என்கிறார்
சக ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்தேன் என்கிறார்
வயிறு பத்திக் கொண்டு எரிகிறது
இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள்தான் நெருப்பாய் சுழலும்
எதிர்க்கட்சித் தலைவரை இதுகுறித்து கேட்கிறார்கள்
எதிர்க்கட்சித் தலைவர் ஏதும் பேசாமல் கடக்கிறார்
முன்னாள் அமைச்சர் வளார்மதியோ இதெல்லாம் ஒரு கேள்வியா என்கிறார்
அவரது மௌனமும் இவரது எதிர்வினையும் அந்தக் குற்றத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல

Saturday, June 5, 2021

இது மாதிரி முக்கியமான தீர்ப்புகள் குறித்து

 03.06.2021 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு U.U.லலித் மற்றும் திரு வினித் சரண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒரு முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது

கொரோனா தடுப்பில் மோடியின் நிலை குறித்தும்
புல்வாமா வெற்றியை தனது தேர்தலுக்காக மோடி பயன்படுத்திக் கொண்டதை விமர்சித்தும்
இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த வினோத் துவா என்ற பத்திரிக்கையாளர் 30.03.2020 அன்று எழுதிய கட்டுரைக்காக
அவர்மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில்தான் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
“அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனக்கள் ஒருபோதும் தேசத் துரோகம் ஆகாது “
என்பது அவர்கள் அளித்த தீர்ப்பு
இதற்கான மேற்கோளாக 1962 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வந்த கேதார்நாத்சிங் வழக்கு எடுத்துக் காட்டப் பட்டது
“அரசு எடுக்கும் எந்த நடவடிக்கை குறித்தும் விமர்சிக்க எவருக்கும் அதிகாரம் உண்டு”
என்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டிருந்தது
நமக்கு ஒரு கோரிக்கை உண்டு
1962 இல் இவ்வளவு தெளிவாக தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்பும்
2020 இல் வழக்கு போடப்பட்டு
அது உச்சநீதிமன்றம் வந்து சரிப்பட வேண்டியுள்ளது
எனவே,
இது மாதிரி முக்கியமான தீர்ப்புகள் குறித்து
மாவட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை துணை ஆய்வாளார்கள் ஆகியோருக்கு அவ்வப்போது கவனப்படுத்தினால் நீதிமன்றங்களின் நேர விரயம் மிச்சமாகும்
#சாமங்கவிய 57 நிமிடங்கள்
05.06.2021

இன்னும் இம்சை இருக்கென்கிறார்

 பொருளாதார வளர்ச் சிமைனஸ்கு சென்றுவிட்ட நிலையில்

ஒன்றிய அரசு இன்னும் சீர்திருத்தங்களை செய்ய இருப்பதாகவும்
அதன்மூலம் நமது பொருளாதாரம் வலுப்படும் என்றும் நமது இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகிறார்
இன்னும் இம்சை இருக்கென்கிறார்

Friday, June 4, 2021

நெல்லைப்போலவே எள்ளையும்

 கனவு இல்லமும், மாமணியும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

மகிழ்ச்சிதான்
இதைவிட அதிகமாக என்னை ஈர்த்தது
அந்த அறிவிப்புகளினூடே திருவாரூரில் நெல் கொள்முதல் கிட்டங்கி அமைப்பதற்கு இருபது கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுதான்
கொள்முதல் செய்த நெல்மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கப்பட்டு மழையில் நனைந்து முளைத்து வீணான சோகம் பார்த்தோம்
அந்த வகையில் இது மிக ஆறுதலான செய்தி
திருவையாறு பகுதியில் கோடை பயிராக இந்த ஆண்டு 500 ஏக்கரில் எள் பயிரிடப்பட்டு நன்கு விளைந்திருப்பதாக அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்
இந்த ஆண்டு ஏக்கருக்கு 5 குவிண்டால் எள் விளையும் என்று மகிழ்ந்து கூறியிருக்கிறார்கள்
எனில் இந்த ஆண்டு திருவையாறு பகுதியில் ஏறத்தாழ 2500 குவிண்டால் எள் கிடைக்கும்
அதாவது 2,50,000 கிலோ எள் கிடைக்கும்
ஏக்கருக்கு 8000 ரூபாய் செலவு செய்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்
இடைத்தரகர்கள் சொல்ப விலைக்கு வாங்கி தங்களை ஏமாற்றிவிடாமல் இந்த அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்
நெல்லைப்போலவே எள்ளையும் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் க்கோரிக்கையை திரு ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்
இதை செய்தால் டெல்டா பகுதியில் கோடைகால மானாவாரி விவசாயம் செழிக்கும்
#சாமங்கவிய 33 நிமிடங்கள்
04.06.2021

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...