Tuesday, July 28, 2026

எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான்

 


ஜூலை 2026 ’’பொங்கும் பூம்புனல்’’ வந்திருக்கிறது. இது பதினொன்றாவது இதழ்.

முதலில் தொடர்ச்சியாக பதினோறு இதழ்களைக் கொண்டு வருவதற்கு ஒரு பிடிவாதம் வேண்டும். அது நிறையை இருக்கிறது நண்பர்களிடம்.

அதற்காகவே ஒரு விழா எடுத்து இவர்களைக் கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு இதழும் நச்சென்று வந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

வழக்கம்போலவே உள்ளட்டையின் கலைமணி அவர்களின் கவிதையோடு தொடங்குகிறது இதழ். கவிதையும் வைத்திருக்கிற விதமும் அழகு.

பூமணியின் ரீதி, தோப்பு, எதிர்கொண்டு ஆகிய சிறுகதைகள் குறித்த கலைமணியின் பதிவுகள்,

‘’அர்ச்சனா 31 நாட் அவுட்’’ என்ற மலையாளப் படம் குறித்த கலைமணியின் பதிவு

கணேஷ்ராமும் கலைமணியும் தொகுத்தளிக்கும் செய்தித் துளிகள் என்று இதழ் விரிகிறது.

ஆனால் இந்த இதழில் முத்தாய்ப்பாய் படுவது கணேஷ்ராம் எழுதியுள்ள, ’’உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல்’’ என்ற கட்டுரையும், ‘’அதனால் என்ன இப்போ?’’ என்ற புனைவு கலந்த அபுனைவும். இரண்டும் வேறு வேறு காரணங்களுக்காக முன் வந்து நிற்கின்றன.

E20 பெட்ரோல் குறித்த கட்டுரை அப்படிவொரு நச். நடையில் இருந்து இதையும் கணேஷ்ராம்தான் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல்தான் மோடிக்கான அடுத்த தலைவலியாக எழுந்துள்ள சூழலில் இந்தக் கட்டுரை வைக்கும் தரவுகளும் தர்க்கங்களும் அப்படியொரு அழகு.

எத்தனால் குறித்த அரசின் விளக்கங்களை வைத்து அதைத் தகர்த்திருக்கிறது இந்தக் கட்டுரை.

எதையும் சொந்தமாக்காமல் அனைத்தையும் வாடகைக்கு நுகர்வதன் மூலம் நிறைய நுகரலாம் என்கிற தேன் தடவிய தாராளமயத்தின் நச்சுபிஸ்கட் ஏறத்தாழ எல்லோரையும் விழுங்கிக்கொண்டிருக்கிற ஆபத்தை உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல் புரிகிற மாதிரி பேசுகிறது. இங்கு புரிகிற மாதிரி என்பதை அழுத்தி அடிக்கோடு இட்டு வாசிக்கக் கேட்கிறேன்.

ஒரு கட்டத்தில் சந்தா முடிந்ததும் நம்மிடம் நாம் நுகர்ந்த ஏதும் இருக்காது. ரெஃபெரன்ஸ் இல்லாத சூழலில் கருத்துச் சண்டைக்கு வாய்ப்பே இருக்காது. அவன் சொல்வதுதான் எல்லாம். மறுக்கத் தரவற்றுப் போகும் அபாயத்தைக் குறித்து கவலைப்படும் கணேஷை சக ஊழியன், தோழன் என்பது தாண்டி பிடித்துக்கொள்ள வேண்டும்.

நான்
காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே

அந்தக்
கருணைக்கு நான்
பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே

என்ற பாடல் யாருக்குப் பிடிக்காது. என்னவொரு இசை. என்னவொரு ஃபீல். இப்படி விரசமில்லாம எவனால எழுத முடியும் என்பார் என் அப்பா.

கூர்ந்து பாருங்களேன், இதுதான் பெண்ணடிமைத்தனத்தின் உச்சம்.

நான் ஜெசி ராணியை அப்படிக் கொண்டாடுவதற்கு அவரிடம் இருக்கும் ஃப்ளோதான் காரணம்.

இதே ஃப்ளோல இதற்கு எதிராக ஜெசி எழுதும்போது, குறித்து வையுங்கள் அவர் பாபுலர் எழுத்தாளராகி விடுவார்.

எலான் மஸ்க் குறித்த, அதானி குறித்த எல்லாமும் அழகு.

போவோமா ஊர்வலம் எனக்குப் பிடித்தப் பகுதி. இன்னும் கொஞ்சம் மெனகெடுங்களேன் என்பது உரிமையோடான என் நேயர் விருப்பம். விஷயத்தில் பிரச்சினை இல்லை. டெலிவெரியில் சன்னமோ சன்னமாக மெனக்கெட்டால் பூம்புனலின் சிக்நேச்சர் இதுதான்.

ஒன்றைச் சொல்ல வேண்டும்.

கணேஷ்ராமிற்குள் ஆயிரம் கட்டுரைகள் ஊறிக்கிடக்கின்றன.

எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான், ப்ரொஃபஷனல் டச் முழுவீச்சில் மிளிரும்.

பூம்புனல் இல்லை எனில் நானே அவரிடம் கட்டுரை கேட்பேன். இருக்கு அவரிடம்.

படைப்புகள் வர ஆரம்பித்தால் வேற லெவல்தான்.

மெனக்கெடும் அனைவரையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன். 


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...