Monday, April 16, 2012

உயிர்த்தெழுகை

இப்போதெல்லாம் அலைபேசியின் அழைப்பொலியினை ரசிக்க முடிவதில்லை. எந்தக் கடன்காரனோ, எப்படித் திட்டப் போகிறானோ, அதற்கு என்ன சொல்லி சமாளிக்கப் போகிறோமோ என்று மனது கிடந்து பதை பதைக்கிறது.

அழைப்பொலி கேட்டவுடன் எண்ணைப் பார்க்காமல் அலைபேசியை எடுத்து யாராவது பேசினால், ஒன்று அவன் கடனற்றவனாக இருக்க வேண்டும் அல்லது எதற்கும் பயப்படாதவனாக இருக்க வேண்டும்.

“அப்பா குளிக்கிறாங்க”, “அப்பா செல்லை வச்சுட்டுப் போய்ட்டாங்க” இப்படி ஏதாவது சொல்லிக் கடன்காரர்களை சமாளிக்கப் பழக்கியிருக்கேன் பிள்ளைகளை.

“அம்மா, கடங்காரங்களுக்கு பயந்துகிட்டு அப்பா இருபத்தி நாலு மணி நேரமும் குளிச்சுக்கிட்டே இருக்கப் போறார், வேணாப் பாரேன்” பையனின் எள்ளல் இப்போதெல்லாம் கொஞ்சம் எல்லையைத் தாண்டினாலும் இனிக்கவே செய்கிறது. ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கடன், ரசனையை மெருகு செய்திருக்கிறது.

பேப்பர் காரனுக்கு நான்கு மாத பாக்கி. காலையில் அவன் வரும் நேரன் பார்த்து டாய்லெட்டில் நுழைந்து கொள்வேன். இன்னும் மூன்று தெருக்களாவது போக வேண்டும் அவன். எனக்காக அவன் காத்திருக்க இயலாது.

“ சார கொஞ்சம் கவனிக்கச் சொல்லுங்கக்கா” என்றபடி ஓடிவிடுவான். இன்று காலை வரை அதுதான் வாடிக்கை.

சனிக்கிழமை நான் வீட்டில்தான் இருப்பேன் என்பதைத் தெரிந்துகொண்டு அன்று மதியம் வீட்டிற்கு வந்து விட்டான். ஏறத்தாழ விடாக் கண்டனாய் மாறியிருந்தான். என்ன சொல்லியும் நகர மறுத்தான். “அக்காட்ட இருக்கும் கொஞ்சம் வாங்கிக் கொடுங்க சார், இல்லாட்டி மேல் வீட்டிலாச்சும் கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொடுங்க சார்” என்று நச்சிக் கொண்டே நகர மறுத்தான்.

இந்த நேரம் பார்த்து , உதவுகிறோம் என்பது தெரியாமலேயே உதவிக்கு வந்தான் பையன். ‘அப்பா, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுன்னு ஃப்ளாஷ் ஓடுது, வந்து பாரேன்,”

“அடுத்த புதன் வந்து வாங்கிக்கப்பா”  படபடவென்று சொல்லிவிட்டு ஃப்ளாஷ் பார்க்கிற சாக்கில் உள்ளே ஓடினேன். போனானோ, இல்லை அங்கேயே நின்று முனகிக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.

“டி. ஏ போட்டாச்சு , வந்து பாரேன் விட்டு,” உற்சாகத்தில் கத்தினேன்.

“என்ன வந்து என்னத்துக்கு ஆகப் போகுது? வானத்தையே வளச்சுக் கொடுத்தாலும் அடகு வச்ச தாலிக் கொடிய மட்டும் திருப்பித் தரப் போறதில்ல. கட்டையில போறவரைக்கும் இந்தக் கவரிங் செயினதான் கட்டிக்கிட்டு மாரடிக்கனும்னு எழுதி வச்சிருக்கு. பாசிப் படர்ந்த மாதிரி செயின் பட்ட இடமெல்லாம் பச்சப் பச்சையா, வெயில் நாள்னாஒரே எரிச்சலும்  அரிப்பும்தான். எல்லாம் வாங்கி வந்த வரம் அப்படி,”

கூப்பிடக் கூடாத நேரத்தில் விட்டுவைக் கூப்பிட்டால் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். இது ஒன்றும் புதிதும் அல்லதான். இதுமாதிரி வாங்கிக் கட்டிக் கொள்ளாத மத்திய தர வர்க்கத்து புருஷன்மார்கள் யாரேனும் இருப்பார்கள் எனில், ஒன்று அவர்களுக்கு வேறு வருமானம் இருக்கும் அல்லது ‘தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு’ என்று சுருங்கிப் போனவராக இருக்க வேண்டும். என்ன சொல்லி என்ன, வாங்க வேண்டியதை வாங்கியாகிவிட்டது.

அப்போது பார்த்துதான் அலைபேசியில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த மகள்,

“செல்வ பாண்டியன் மாமா லைன்ல. எங்க போயிருக்கீங்கன்னு சொல்லட்டும்?”

“வர வர குட்டிப் பிசாசுக்கு குசும்பு ஜாஸ்தியாயிடுச்சு!” மகளின் நக்கலை ரசித்தபடியே அவளிடமிருந்து அலை பேசியைப் பிடுங்கினேன்.

அவரது அழைப்புக்காத்தான் காத்திருந்தேன்.அப்பாவை ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஒரு மாதமாகவே கொஞ்சம் கூடுதலான மன அழுத்தத்தோடு இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப் போன எனது அம்மா உயிரோடு வந்திருப்பதாகவும் அப்பாவைத் தேடிக் கொண்டிருப்பதாகவும்சொல்லி அவரைஒரு ஜோசியக் கும்பல் உசுப்பிவிட்டு அப்பாவின் ஓய்வூதியத்தில் பெரும்பகுதியைக் காலி செய்து கொண்டிருந்தனர்.

அந்தக் கும்பலை விரட்டிவிட்டு அப்பாவை மீட்டெடுத்து வருவதற்குள் அவரின் மனநிலை மருத்துவர் தேவைப் படுமளவிற்குப் பழுது பட்டிருந்தது.

அம்மா படத்திலிருந்த மாலையைக் கழற்றினார். ஏனென்று கேட்டால் “ அவதான் உயிரோட வந்துட்டாளேடா” என்றார். சரியாகிவிடும் என்றெண்ணி கவனிக்காமல் விட்டதன் விளைவை அனுபவிக்கத் தொடங்கியிருந்தோம்.

சாலையில் ஏதேனும் ஆட்டோ சத்தம் கேட்டு விட்டால் கூடப் போதும், அம்மாவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்போடு எட்டிப் பார்க்க ஆரம்பித்தவர், நாளாக நாளாக பேரனை அழைத்து “ தம்பி, அப்பாயிதானான்னு பாரு, அவளாயிருந்தா பையக் கொஞ்சம் தூக்கிட்டு வாடா, பாவம்” என்றெல்லாம் பிதற்றவே ஆரம்பித்து விட்டார்.

“அப்பாயி எங்க தாத்தா வெளிய போச்சு, ஆட்டோல திரும்பறதுக்கு. அதுபாட்டுக்கு தோசைய சுட்டுட்டு இருக்கு சிவனேன்னு. பொலம்பாம தூங்குங்க தாத்தா” சலித்துக் கொள்கிறான்.”இவள சொல்லலடா, உங்க பெரிய அப்பாயிய சொன்னேன்”

“ அப்பாயி, தாத்தாவ வந்து என்னன்னு கேளு. செத்துப் போன அப்பாயி கல்லறையிலிருந்து எழுந்து வருதாம். நீ கட்டிக்கிட்டதும் லூசு, பெத்துக்கிட்டதும் லூசு அப்பாயி”

“என் மவன இன்னொருதரம் லூசுன்னு சொன்ன அப்படியே கொமட்டுலயே குத்திப் புடுவேன் ஆமா. தங்கம்டா அவன்”

“மகன சொன்னதும் அப்படியே பொத்துக்கிட்டு வருது பாருடா உங்க அப்பாயிக்கு. தங்கமாம்ல. அப்படி கிப்படி தங்கமா இருந்துட்டாதான் பரவாயில்லையே ! அப்படியே தூக்கிட்டுப் போய் அந்த அறுபது கிலோவையும் அடகு வச்சிட்டு அந்த அருமத் தங்கம் வாங்கி வச்சிருக்க கடனையெல்லாம் அடச்சிருக்கலாமே.”

“ஏம்மா அடகெல்லாம் வச்சிட்டு, பேசாம வித்துட்டே செட்டிலாயிடலாமே...” பையன் முடிக்கவும் அம்மா உட்பட எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இப்படித்தான் அப்பாவை வார ஆரம்பித்து என்னில் வந்து முடியும் ஒவ்வொரு முறையும்.

செல்வபாண்டியன் மருத்துவத் துறையில் இருப்பதால், அவரிடம் ஆலோசனைக் கேட்டிருந்தேன்.அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நேரம் வாங்கிக் கொண்டு தெரிவிப்பதாக சொல்லியிருந்தார். அநேகமாக அதற்காகத் தானிருக்கும்.

ஒரு சன்னமான புன்னகையோடு அப்பாவை வரவேற்றார் மருத்துவர்.

“உங்க பிறந்த நாள் என்னங்க சார்?” என்ற எளிய கேள்வியோடுதான் மருத்துவர் தொடங்கினார்.

அப்பாவின் தெளிவும் தமிழ் தேசிய அரசியலும் மருத்துவரோடு ஒத்திசைந்து போகவே, இருவரும் நண்பர்கள்ளாய் மாறி நிறையப் பேசினார்கள். நானும் செல்வபாண்டியனும் பார்வையாளர்களாய் மாறிப் போயிருந்தோம்.

இறுதியாய் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

“மரித்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமுடியுமா சார்?”

“ நிச்சயமாய் இல்லை. ஆனாலும் என்னோட வொய்ஃப்பை மீண்டும் உயிரோடு பார்த்ததாக சொல்கிறார்கள்”

மருத்துவர் எதுவுமே பேசவில்லை. “ பாண்டியன், சாரை பக்கத்து ரூமுக்கு கூட்டிட்டுபோய் பி.பி செக் பன்னுங்க” என்றவர் ஒரு புன்னகையோடு அப்பாவை வழி அனுப்பி வைத்தார்.

எழுந்த என்னை அமரச் செய்தார்.

“ஒன்னும் பயப்பட வேண்டாம்.ஆறு மாசத்துல எல்லாம் சரியாப் போயிடும். தொடர்ந்து மருந்துகளைக் கொடுங்கள்.பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கூட்டிட்டு வாங்க. அதிகமா தூங்கினாலோ அல்லது சரியா தூங்கலைனாலோ உடனே கூட்டிட்டு வந்துடுங்க.”

ஏராளமான நம்பிக்கையோடு அப்பாவை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன்.

அம்மாவிடமும் விட்டுவிடமும் விவரங்களைச் சொல்லிவிட்டு, வாங்கி வந்த வண்ண வண்ண மாத்திரைகளை தனித் தனி டப்பாக்களில் கொட்டிக் கொண்டிருந்தபோதேன். ஓடி வந்த மகள் கேட்டாள்,

“இந்த மாத்திரை எதுக்குப்பா?”

“ இது தாத்தாவுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்”

“ இது?” அடுத்த மாத்திரையைக் காட்டினாள்.

“இது தாத்தாவுக்கு மன அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும்.”


“அப்படின்னா, நீயும் சித்தப்பாவும் தாத்தாவுக்கு என்னத்தத்தான் கொடுப்பீங்க?”

நன்றி : கல்கி 16.05.2010



7 comments:

  1. A touching post. Keep it up.


    A.Hari

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஹரி

    ReplyDelete
  3. “வர வர குட்டிப் பிசாசுக்கு குசும்பு ஜாஸ்தியாயிடுச்சு!”
    ennai yaaruppa kooppittadhu

    ReplyDelete
  4. அய்யன்பேட்டை தனசேகரன்April 24, 2012 at 10:28 PM

    அற்புதம். 2010ல் எழுதி இருந்தாலும்.. காலத்தை கக்கத்தில் வைத்துள்ள எழுத்துக்கள். குழந்தை கேட்ட அப்பாவின் நிலையிலும் சித்தப்பாவின் நிலையிலும் நானும் உள்ளேன்.

    ReplyDelete
  5. உயிர்த்தெழுகை
    படித்துவிட்டேன்.
    நடுத்தர குடும்பத்தின் நிலையைஅழகாக வெளிப்படுத்திருக்கிறீர்கள்.
    வயதான காலத்தில் பெற்றோர்களுக்கு
    ஏற்படும் மன அழுத்த நோய்க்கு
    மருத்துவம்தான் சிற்ந்தது.
    யதார்த்தமாக சொல்லியிருக்கீற்கள்.
    தங்களது கதை என்றும் நிலைத்து நிற்கும்.
    சிறந்த கதைத் தொகுப்பில் இடம் பெறும்.

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு தோழர்..

    நிறையபேர் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது அடுத்த மனிதர்களால் தான், அவர்கள் சொந்தங்களாக இருப்பது அதிகபட்சம்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி தோழர் ஹரிஹரன்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...