Saturday, November 26, 2011

கோடொன்று பெரிதாய் ...

வழக்கமாக மொட்டை மாடியை நான்கைந்து சுற்றுகள் முடிக்கும் முன்னரே மறந்து போன விஷயம் ஞாபகத்துக்கு வந்து விடும். ஆனால் இன்று கால் வலிக்குமளவுக்கு மொட்டை மாடியில் நடந்து பார்த்தும் நினைவுக்கு வரவில்லை.

இதுவும் ஒன்றும் புதிதல்லதான். மொட்டை மாடியில் கிடைக்காமல் போனால் காலார கடைவீதி நடந்து போய் கலியன் கடையில் ஒரு கோப்பை தேனீர் குடித்து விட்டு திரும்புவது வழக்கம். வீட்டிலிருந்து கலியன் கடைக்கும், கலியன் கடையிலிருந்து வீட்டிற்குமான நடை வெளியில் மறந்து போன விஷயம் ஞாபகத்தில் தட்டுப் பட்டு விடும்.

நான்குமுறை கலியன் கடைக்கு நடந்தும் பலன் கிடைக்க வில்லை. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை என்பதில் கூட ஆபத்து எதுவும் இல்லை. நமக்குக் கொடுத்தவனே மறந்து போயிருந்த கடன் பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வரவே கலியன் கடைக்கான ஐந்தாவது பயணத்தை மிகுந்த புத்திசாலித் தனத்தோடு தவிர்த்தேன்.

அந்த மன்னனின் பெயரும், அந்த சம்பவம் நடந்த இடமும், அதை நான் எங்கு வாசித்தேன் என்பதும்தான் நான் மறந்துபோன சமாச்சாரங்கள்.

வெகுநேர யோசனைக்குப் பின் அவை எல்லாம் நினைவுக்கு வர மறுத்தாலும் அதை எழுதியே விடுவது என்று முடிவெடுத்தேன். இல்லாது போனால் இவ்வளவு பெரிய அபத்தத்திற்கான அடிக்கல் நாட்டப் படுவதைப் பார்த்தும் அசையாது வேடிக்கை பார்த்த குற்றத்திற்கு என்னை ஆளாக்கி, வருங்காலத் தலைமுறையினர் என் கல்லறையின் முகவரியை கஷ்டப்பட்டேனும் கண்டுபித்து வந்து காறி உமிழ்ந்துவிடுவார்கள்.

மேற்சொன்ன விவரங்கள் இல்லாது எழுதுவதால் சிலர் இதை புனைவாகக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒன்றும் பெரிய பாதிப்பில்லை.

அந்த மன்னனின் பெயர் அநேகமாக தைமூர்.அந்த சம்பவம் நிகழ்ந்த இடம் அநேகமாக பாக்தாத். இவை பிழை எனும் பட்சத்தில் யாரும் என் மீது கோபப் படாமல் இதை ஒரு புனைவாகவே கொள்ளுமாறும் வேண்டுகிறேன். இது புனைவாகவே இருந்தாலும் சரியாகவே இங்கு பொருந்தும் என்பதை மட்டும் உறுதியாய் சொல்கிறேன்.

மிகுந்த கனவுகளோடும் , அதைவிட அதிக சிரமத்தோடும் பாக்தாத்தை வெற்றி கொள்கிறான் தைமூர்.

பொதுவாகாவே இத்தகைய வெற்றிகள் நிகழும் நேரங்களில் எல்லாம் அந்த மண்ணின் அழகான யுவதிகளை,  நன்கு உழைப்பதற்கான கட்டுலடோடு உள்ள இளைஞர்களை, பொன்னை, பொருளை, யானைகளை ,குதிரைகளை, மற்றும் பயன்படக் கூடிய கால்நடைகளை அள்ளிச் செல்வதோடு அந்த மண்ணில் இருக்கும் கலைப் பொக்கிஷங்களை, மற்ற மதத்து வழிபாட்டு புனிதத் தளங்களை, இன்ன பிற மேன்மைகளை மிச்சம் வைக்காது அழித்தும் போவார்கள்.

வெற்றிக்குப் பிறகு மன்னனைச் சந்திக்கிறான் தளபதி.

“இந்த நிமிடம் முதல் இந்த மண்ணும் மக்களும் உமது அடிமைகள் மன்னா”

“அப்படியா. மகிழ்ச்சி”

” இந்த அடிமை மண்ணில் எதை முதலில் அழிக்க வேண்டும் என உத்தரவு மன்னா?”

மன்னன் மௌனமாய் இருக்கவே

“இங்குள்ள கோட்டையை தகர்த்துவிடவா மன்னா?”

“ வேண்டாம் அது இருப்பதால் நமக்கென்ன பாதிப்பு?”

” அரண்மனை?”

“வேண்டாம் வேண்டாம் இருந்துவிட்டுப் போகட்டும்”

“புராதனக் கட்டிடங்களை?”

“ வேண்டாம் முட்டாளே”

“அணைகளை...?”

“ நாசமாப் போறவனே. உருவாக்கத்தான் தெரியவில்லை. எதை அழிப்பது என்று கூடவா உனக்குத் தெரியாது?”

மிரண்டு போன தளபதி “ வேறு எதைத் தான் மன்னா அழிப்பது?”

“ இந்த மண்ணில் இருக்கும் அத்துனை நூலகங்களையும் அழித்துப் போடு. ஒரு துண்டுத் தாள், எழுது பொருள் , புத்தகம், சிலேட்டு, செப்பேடு, கல்வெட்டு, ஓலைச் சுவடி என்று எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது. எது இருந்தாலும் அழித்துப் போடு.”

இதைக் கேட்டதும் தளபதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் தன் கழுத்தில் தலை இருக்க வேண்டுமே என்ற பயத்தில் மிகவும் சிரமப் பட்டு சிரிப்பை அடக்கினான். ஆனாலும் அடக்கவே முடியாத ஆர்வத்தில் கேட்டே விட்டான்.

“இவற்றை அழிப்பதால் என்ன மன்னா லாபம்?”

பலம் கொண்டமட்டும் மன்னன் சிரித்து வைத்தான். “மண்டு மண்டு. இவை எல்லாம் இருந்தால் நமது அடிமைகள் வாசிக்க மாட்டார்களா?”

“ வாசிப்பார்கள்தான் மன்னா. ஆனால் அதனால் நமக்கென்ன பாதிப்பு?”

” வாசித்தால் அவனுக்கு அறிவு வராதா?”

“ வரும்தான் மன்னா. அவனுக்கு அறிவு வருவதால் நமக்கென்ன மன்னா?”

“ மடையா!, அறிவு தெளிவைத் தரும். அது,  தான் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்தும். விடுதலை வேட்கையை அவனுக்குத் தரும். அது நமக்கு ஆபத்தாக முடியும். ஒருவன் அடிமையாகவே இருக்க வேண்டுமெனில் அவனை வாசிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாசிக்க ஆரம்பித்துவிட்டால் அவன் விடுதலையைத் தேடத் தொடங்கிவிடுவான்.”

( தாள்கள் அறிவைத் தரும். அறிவு விடுதலைக்கான வேட்கையைத் தரும் என்பது உண்மை எனும் பட்சத்தில் “ தாள்களே இல்லாத உலகமே எனது கனவு” என்று உரக்கக் கூவி உலகம் பூராவும் கிளைகள் பரப்பி செயல் படும் பில் கேட்ஸிடமும் மிகுந்த எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும் போல.)

“ஆஹா! ஆஹா!, மன்னர்னா மன்னர்தான்”

( எந்த மன்னனிடம் ஒரு தளபதி இவ்வளவு பொறுமையாகப் பேசியிருக்க முடியும் என்று யாரும் கிண்டலிக்க வேண்டாம். புனைவு கலந்தது என்று அருள் கூர்ந்து கொள்ளுங்கள்.)

இதை ஞாபகத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை மாற்றப் போவதாக முதல்வர் அறிவித்த அறிவிப்புதான் நம் நினைவிற்கு இந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

இரண்டிற்கும் பெரியதாய் ஏதும் வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு செய்த ஒரே நல்ல காரியமாக இதைமட்டும்தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. இதை இவ்வளவு செய் நேர்த்தியுடன் இவ்வளவு அக்கறையோடு எப்படி செய்தார்கள் என்பதுதான் நம்மால் இன்னும் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது.

இதை மாற்றுவதற்கு நீங்கள் சொல்லும் எந்த ஒரு காரணமும் ஏற்கத் தக்கதாய் இல்லையே முதல்வர் அவர்களே.

அது முழுக்க முழுக்க நூலக ஆணைக் குழுவின் நிதியிலிருந்து கட்டப் பட்டது எனவே அதை வேறு காரியங்களுக்கு பயன் படுத்த இயலாது என்று த.மு.எ.க.ச போட்டிருக்கும் வழக்கில் நூறு விழுக்காடும் நியாயம் இருப்பதாகவே படுகிறது.

மேலும் நூலக ஆணைக் குழு அதை தங்களால் நிர்வாகிக்க இயலாது என்றும் சொல்லாத நிலையில் அதை நீங்கள் மாற்றப் போவதாய் அறிவித்திருப்பது நியாயமாயில்லையே என்ற அவர்களது குரலிலும் நியாயம் தானே நிரம்பி வழிகிறது முதல்வர் அவர்களே.

குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று நீங்கள் சொல்வதையும் , “ எவ்வளவோ இடம் இருக்கே. அம்மா நினைத்தால் ஒரே வருடத்தில் இதை விட பெரிய , அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் ஏற்படுத்த முடியும்,” என்று மூன்றாம் வகுப்பு குழந்தையே நியாயமாய் நிராகரிக்கிறானே.

அந்த சின்னக் குழந்தைக்கே புரிவது உங்களுக்கு புரியாமலா இருக்கும். பிறகு ஏன் தாயே?

அதுவும் அந்தச் சின்னக் குழந்தைக்கே புரியக் கூடிய விஷயம்தான்.

அது கலைஞரால் அமைக்கப் பெற்றது. அது இருக்கும் வரைக்கும் கலைஞரின் பெயர் இருக்கும். அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்பதுதானே.

இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் முதல்வர் அவர்களே. பிறகு தைமூர் பாக்தாத் மக்கள் அடிமைகளாகவே இருக்க நினைத்ததைப் போல் நீங்கள் எங்களை அடிமைகளாகவே வைத்திருக்க முடிவெடுத்துவிட்டீர்கள் என்று ஆகிவிடும்.

தமிழர்கள் அறிவற்று அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப் படுவதாகத் தெரியவில்லை. எனில், கலைஞருக்கு பெயர் போகிறதே என்ற ஆதங்கமாகத்தான் இருக்கும்.

இது எட்டு ஏக்கர் நிலப் பரப்பில், எட்டுத் தளங்களில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப் பெரிய நூலகம், அவ்வளவுதான்.

நீங்கள் நினைத்தால் பத்து ஏக்கர் நிலப் பரப்பில், பன்னிரண்டு தளங்களைக் கொண்டு, இதைவிட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உலகின் ஆகப் பெரிய நூலகத்தை உங்களால் உருவாக்க இயலும்.

கலைஞர் ஒரு கோடு போட்டிருக்கிறார். அது பெரியதாய் உங்கள் கண்களை உறுத்தினால் அந்தக் கோட்டினைக் கை வைக்காமலே அதை சின்னதாக்கி விட முடியாதா?

மிகவும் எளிமையாய் அதை செய்து விட முடியும் உங்களால்.

அதை விட பெரியதாய் கோடொன்றினைப் போடுங்கள். கலைஞரின் கோடு சின்னதாய்ப் போகும்.

இல்லை என்றால்,

போன வாரம் எந்த அமைப்பையும் சாராத விஷ்ணுபிரம் சரவணன், கவின் மலர், நறுமுகை தேவி போன்ற இளைய பிள்ளைகள் ஒரு எண்பது பேர் சென்னையில் ஒன்று திரண்டு தோழர் இன்குலாப் அவர்களே வியந்து போற்றுமளவுக்கு உரத்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இதை அருள் கூர்ந்து உதாசினம் செய்து விட வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறேன்.

அஸ்மா மக்பூல் என்ற இளைய பெண்ணொருத்தி முக நூலில் இரண்டு வரி எழுதிப் போட்டதுதான் எகிப்தையே புரட்டிப் போட்டது என்பதை இந்தத் தருணத்தில் தங்களுக்கு நினைவு படுத்துவதை எனது கடமையாகவே கருதுகிறேன்.



18 comments:

  1. கலைஞருக்கு பெயர் போகிறதே என்ற ஆதங்கமாகத்தான் இருக்கும்.....கலைஞர் ஒரு கோடு போட்டிருக்கிறார். அது பெரியதாய் உங்கள் கண்களை உறுத்தினால் அந்தக் கோட்டினைக் கை வைக்காமலே அதை சின்னதாக்கி விட முடியாதா?

    அதை விட பெரியதாய் கோடொன்றினைப் போடுங்கள். கலைஞரின் கோடு சின்னதாய்ப் போகும் .-மிக அருமையான பகிர்வு! அம்மா கவனிப்பார்களா??

    ReplyDelete
  2. அம்மா கிட்ட யாரவது எடுத்து சொல்லுங்கள் புரிந்து கொள்ளகூடிய நல்லநிர்வாகி அவர்

    ReplyDelete
  3. கலக்கிடீங்க.. தோழா

    நிதானமா,
    அழகா,
    நல்ல எடுத்துகாட்டுகளுடன்,
    எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு .. எழுதி இருக்கீங்க..

    உம்மை கண்டு நெஞ்சம் பெருமை கொள்கிறது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சுயபுத்தியை மறந்து சொல்புத்தியை மறுத்து செய்யும் செயல் இது. திருத்திக்கொள்ள வேண்டும் முதல்வர்... //அஸ்மா மக்பூல் என்ற இளைய பெண்ணொருத்தி முக நூலில் இரண்டு வரி எழுதிப் போட்டதுதான் எகிப்த்தையே புரட்டிப் போட்டது என்பதை இந்தத் தருணத்தில் தங்களுக்கு நினைவு படுத்துவதை எனது கடமையாகவே கருதுகிறேன்// அருமை...

    ReplyDelete
  5. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு .. எழுதி இருக்கீங்க..

    vazhththukkal.

    ReplyDelete
  6. @Uma

    மிக்க நன்றி உமா

    ReplyDelete
  7. @maniajith
    Ji
    Edgar Solomonraja R.
    சுவனப்பிரியன்

    மிக் நன்றி தோழர்களே

    ReplyDelete
  8. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு ஐயா.

    ReplyDelete
  10. @Rathnavel

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  11. !@Gowripriya

    மிக்க நன்ற் கௌரி

    உங்கள் வலை பார்த்தேன் . அற்புதம். என் எழுதுவதே இல்லை.

    ReplyDelete
  12. பகிர்விற்கு நன்றி ஐயா...
    இந்த பகிர்வைப் பற்றி என்னுடைய "மயில் அகவும் நேரம்" தொகுப்பில் மெய் சிலிர்த்திருக்கிறேன்...
    (உங்கள் அனுமதியில்லாமல்)

    http://cmayilan.blogspot.com/2011/11/0100.html

    ReplyDelete
  13. அன்புள்ள எட்வின்...

    எவ்வளவு அழகான நிதானமாக நேர்த்தியான பொறுப்பான பதிவிது. அழகாக சொல்லியிருக்கிறீர்கள். முதலவரைப் பொறுத்தளவில் கருணாநிதி செய்தது எனும் கோபம் மட்டுமே பின்னணியில் இருக்கும். வேறு இருக்காது. தாங்கள் சொல்வதுபோல அவர்களிடம் நல்ல உள்ளங்கள் எடுத்துச் சொல்லி இதைவிட சிறப்பான உலக தரத்திலான நுர்லகத்தை அவர்கள் உருவாக்கிட வேண்டும். அதேபோன்று குழந்தைகள் மருத்துவமனை உருவாக்குதல் நல்ல அம்சம் என்றாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனையின் படுக்கை வசதிகள் குறித்து ஒருமுறை முதல்வர் அவர்கள் பரிசீலனை செய்தால் காலத்திற்கும் உடல் நலம் கெடுபவர்கள் நினைத்துப் பார்த்து நன்றி பாராட்டுவார்கள். நன்றி. அருமையான பதிவு.

    ReplyDelete
  14. சொல்லவந்ததைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    எட்டவேண்டியவர்களுக்கு எட்டினால் நல்லது.

    ReplyDelete
  15. முதன்முதலாக உங்கள் பக்கம் வந்தேன். ஒரு பொறுப்புள்ளபதிவு. விஷய ஞானத்துடன் அலசல்.விருப்பு வெறுப்பற்ற கண்ணோட்டம். பிற பதிவுகளையும் படிக்கத் தூண்டுகிறது. மீண்டும் வருவேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. |@மயிலன்

    மிக்க நன்றி மயிலன். உங்கள் வலை பார்த்து நானும்தான் சிலிர்த்தேன். மிக்க நன்றி

    ReplyDelete
  17. @ஹ ர ணி

    மிக்க நன்றி ஹரணி, ஊதி வைப்போம்

    ReplyDelete
  18. என் முதல் வருகை..படிதேன்..அருமையான பதிவு..பொழுதுபோக்கான பகிர்வல்ல..பயனுள்ள பகிர்வு..நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்..

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...