Thursday, October 20, 2011

அருகம் புல்லே ஆயினும்

”எல்லாம் கெட்டு கிடக்கு. எதுவும் சரியில்ல. ஒருத்தனுக்கும் செய்கிற வேலையில் அக்கறை இல்ல” என்கிற மாதிரி ஏதாவது ஒரு விமர்சனத்தை காலை தொடங்கி மாலை வரைக்கும், வீடு தொடங்கி வீதி வரைக்கும் எல்லா இடங்களிலும் கேட்கிறோம். மேலே சொன்ன அம்புகளை எய்தாதவனும் இல்லை , அதே அம்புகளால் காயப் படாதவனும் இல்லை. சேதாராமாய் கொஞ்சம் விழுக்காடு ஒதுக்கலாமே தவிர பெரும்பகுதி ஏற்றே ஆக வேண்டிய விமர்சனங்களே இவை.

நல்லதுமில்லை, நல்லவனுமில்லை என்பது பொதுப் புத்தியாய் போன ஒரு சமூகத்தில் இருநூறு விழுக்காடு செய்கிற தொழில் அக்கறையும், அதனால் வழிகிற திமிறோடும், கம்பீரத்தோடும், மிடுக்கோடும் சரியான ஒரு மனிதனை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.

பெரும்பான்மை பணிக்கலாச்சாரம் மயங்கித் துவண்டு கிடக்கும் இந்த சமூக வெளியில் வரமாய்க் கைடைத்த அந்த ஒரு சொட்டு வனத் தேனை பந்தி வைத்து விடுவதே சரி என்று படுகிறது.

ஒரு மழைக் காலை. நடத்துநர் இருக்கையைத் தவிர எல்லா இருக்கைகளும் நிரம்பிய நிலையில் விரைகிறது பேருந்து.அந்த நடத்துநரைப் பற்றி நன்கு தெரியுமென்பதால் அதில் அமராமல் நிறு கொண்டிருந்தேன். நல்ல மனிதர்தான். நான்கு ரூபாய் பயணச் சீட்டிற்கு நூறு ரூபாய் நோட்டை நீட்டினாலும் சில்லரை இருந்தால் முகம் சுழிக்காமல் தந்து விடுவார்.இல்லையெனில் அதை எடுத்துரைப்பதிலும் ஒரு தன்மை இருக்கும். எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கும் பசங்களைக் கடிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தன்மையாக பேசி அழைப்பார். கோபமே வராது.

இது போன்ற மழைக் காலங்களில் ஒவ்வொறு நிறுத்ததிலும் இடத்தின் பெயரச் சொல்வதோடு அவரவர் குடையை அவரவர் எடுத்துப் போக ஞாபகப் படுத்துவார். நானறித வகையில் இவ்வளாவு தன்மைகளும் நிறைந்த அவரிடம் இருந்த ஒரே ஒரு கெட்ட குணம் தனது இருக்கையில் யாரையும் அமர அனுமதிக்காததுதான். எனக்கேக்கூட சமயங்களில் எரிச்சலாய்த்தான் இருக்கும். அவர் பயணச் சீட்டுகளை வழங்கிவிட்டு வரும் வரைக்கும் அவரது இருக்கையில் யாராவது அமர்ந்தால் குடியா முழுகிப் போய்விடும்  என்றுகூட நினைப்பேன். எல்லோருக்கும் முன்னால் எழுந்திரிக்கச் சொன்னால் அசிங்கம் என்பதால் நான் ஒருபோதும் அவரது பேருந்தில் நடத்துநர்  இருக்கையில் அமரத் துணிந்த்ததில்லை.

என்னை இடித்துத் தள்ளிக் கொண்டு போய் நடத்துநர் இருக்கையில் அமர்ந்தார் ஒருவர். சபாரி உடை, கம்பீரமானத் தோற்றம், கையில் லேப் டாப், சட்டைப் பையில் ஒரு பச்சை மை ஜெல் பேனா. நிச்சயம் ஒரு அதிகாரியாய்த்தான் இருக்க வேண்டும்.அமர்ந்ததும் சுற்றும் முற்றும் அதிலும் குறிப்பாய் ஒரு மாதிரியாகத்தான் என்னை ஒரு முறை பார்த்தார். ஏதோ அந்த இடத்திற்கானப் போட்டியில் என்னை வென்றுவிட்ட பெருமிதப் பார்வை அது. ”கிழியப் போவுது டவுசர்” என்று மனதிற்குள் சிரித்துக் காத்திருந்தேன்.

 நினைத்த மாதிரியே நடந்தது. பேருந்து நடுவில் பயணச்சீட்டு விநியோகித்துக் கொண்டிருந்த நடத்துநர் கண்களில் இது பட்டுவிட்டது. நடந்து வந்தாரா பறந்து வந்தாரா தெரியவில்லை. அவ்வளவு வேகம்.

“சார், இது என் சீட்டு . தயவு செய்து எழுந்திருங்க”

“:ஒங்க சீட்டு இல்லைனு யாரு சொன்னா? நீங்க வந்த உடனே எந்திருச்சிடுறேன். இப்ப காலியாத்தானே இருக்கு.”

இந்தப் பதில் நடத்துநரை சீண்டியிருக்க வேண்டும். “காலியா இருந்தா...” மிதமான வெப்பத்தில் அவரது கேள்வி கதகதத்தது.

ஏறத்தாழ எல்லா பயணிகளுக்கும் நடத்துநரின் பேச்சு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும். சிலர் பக்கத்தில் இருப்பவர்களிடம் முனுமுனுத்தனர். சிலர் முகம் சுழிப்பதோடு முடித்துக் கொண்டனர். எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாது “ஹிந்து” வில் கண்களைத் தொலைத்த அறிவு ஜீவிகளும் இருக்கவே செய்தனர்.

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் மொத்தப் பயணிகளின்பிரதிநிதியாய் மாறினார். “ஏன் சார் நீங்க டிக்கெட்தான போடுறீங்க. இப்ப என்ன ஒங்கள நிக்க வச்சுட்டா அவர் ஒக்காந்து இருக்கார். போங்க சார், போயி டிக்கெட்டப் போடுங்க. வந்ததும் எழுந்திரிப்பார். இல்லன்னா சொல்லுங்க,” என்றார்.

இது எதுவும் நடத்துநரை சமாதானப் படுத்தியதாகத் தெரியவில்லை. “சார், இப்ப எந்திரிக்கப் போறீங்களா, இல்லையா,?” அவரது குரலில் உஷ்ணமும் உறுதியும் கொஞ்சம் கூடியிருந்தது.

”கவர்மெண்ட் பஸ்னாலே இப்படித்தாம்பா, ஒழுங்கா சில்லறை தர மாட்டானுங்க, ஸ்டோபிங்கில் நிறுத்த மாட்டானுங்க,பைசாப் பெறாத பிரச்சினைக்கெல்லாம் லா பேசுவானுங்க. டிக்கட் போடுற வேலையப் பாக்காம வெட்டி வீம்பப் பாரேன். இதுவே தனியார் பஸ்சா இருந்தா எப்படி கவனிப்பாங்க தெரியுமா? பேசாம எல்லாத்தையும் தனியார்ட்ட கொடுத்தரணும் சார். அப்பத்தான் இவனுங்க சரிப் படுவானுங்க,” ஒருவர் சந்தடி சாக்கில் தனியார் மயத்தின் பிரதி நிதியானார்.

“எந்திரிங்க சார் முதல்ல,” அழுத்தம் இன்னும் கொஞ்சம் கூடியது.

அமர்ந்திருந்தவர் அவரளவில் அவரது செயலில் நியாயம் கண்டிருக்க வேண்டும். எழுந்திருக்க முயலவில்லை.

“காலியா இருக்கிற சீட்லதான் ஒக்காந்து இருக்கேன் நீங்க வரவரைக்கும் ஒக்காந்துதான் இருப்பேன். எந்திருக்க மாட்டேன். என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கங்க.”

“ ஏன் சார் காலியா இருக்குங்கறதுக்காக என் சீட்ல ஒக்கார்றீங்களே. காலியா இருக்குங்கறதுக்காக கலெக்டர் சீட்ல ஒக்காந்துடுவீங்களா?”

“எதுக்கு எத முடிச்சுப் போடுறீங்க. கலெக்டர் சீட்டும் இதுவும் ஒண்ணா? கலெக்டரும் நீங்களும் ஒண்ணா? பெரிய சட்டமெல்லாம் பேசுறீங்க.”

இருவரும் விடுவதாக இல்லை.இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் ஓட்டுநர் கருமமே கண்ணாய் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

“கலெக்டரும் நானும் ஒன்னில்லைதான் சார். அவரு ஆலமரமா இருக்கலாம். நான் வெறும் அருகம்புல்லா இருந்துட்டுப் போறேன். ஆனா அவருக்கு அவரு சீட்டு. எனக்கு என்னோட சீட்டு,” பொருமிவிட்டு எழுந்திருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் பயணச்சீட்டு விநியோகத்தை விட்ட இடத்திலிருந்து தொடரச் சென்றுவிட்டார். என்ன பட்டதோ இவரும் எழுந்துவிட்டார். அத்தோடு ஒரு வழியாய் அந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.

பளீரென்று அறைந்தது போலிருந்தது எனக்கு.

ஆமாம்,

மருத்துவ மனைக்குப் போகிறோம். மருத்துவர் இல்லை. அவரது இருக்கை காலியாக்ல இருக்கிறது. காலியாகத்தானே இருக்கிறது என்பதற்காக அமர்ந்து விடுவோமா?

சராசரி மனிதனை விடுங்கள். நமது ஜனாதிபதி, பிரதமர், அல்லது ஏதோ ஒரு பெரிய மந்திரி உடல் நலமின்றி மருத்துவரிடம் போவதாகவும், இவர்கள் போகிற நேரத்தில் மருத்துவர் வார்டுக்கு போயிருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். மருத்துவர் இல்லையென்பதால் காலியாக உள்ள அவரது இருக்கையில் ஜனாதிபதி அமர்ந்து விடுவாரா?. நிச்சயம் இல்லை

ஆனால் நடத்துநர் இருக்கை என்றால் மட்டும் சட்டென அமர்ந்து விடுகிறோமே. ஏன்?

நடத்துநர் அவர்கள் அளவுக்கு அவர்கள் அளவுக்கு கவுரவமில்லாத சராசரியான அடிமட்ட ஊழியர் என்ற ஈனத்தனமான பொதுப் புத்திதான்.

அன்றிலிருந்து எந்தப் பேருந்தாயினும், நடத்துநரே சொன்னாலும் நடத்துநர் இருக்கையில் அமர்வதைத் தவிர்க்கிறேன்.

புத்தனுக்கு போதி மரம். எனக்கு வைப்பர் வேலை செய்யாத இந்த அரசுப் பேருந்து.

பொதுவாக பல நடத்துநர்கள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத போது இவர் மட்டும் ஏன் மாறுபடுகிறார், என்பதுதான் பரிசீலிக்க வேண்டிய விஷயம்.ஒரே ஒரு காரணம்தான். அவர் தன்மானத்தை விட்டுக் கொடுக்க மறுக்கிறார், அவ்வளவுதான். யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான். மாற்றிச் சொன்னால் , தனது பணியய் சரியாய் செய்பவனால் மட்டுமே தனது தன்மானம் குறித்து சமரசமில்லாது அக்கறை கொள்ள முடியும். ஆக தன்மானமென்பது பணிக்கலாச்சாரத்தோடு ரத்த சம்பந்தமுடையது.

“எல்லாம் கெட்டு கிடக்கு. எவனும் சரியில்ல” என்று புலம்புவதைத் தவிர்த்து இப்படிப் பட்ட நல்லதுகளைக் கொண்டாடத் தொடங்குவோம்.னிறைந்து கிடக்கிற கெட்டதுகளை பேசுவதால் கடுகளவு பயனும் விளையப் போவதில்லை. மாறாக அரிதினும் அரிதாய் கிடைக்கிற நல்லதுகளைக் கொண்டாடப் பழகுவோம். பையப் பையப் புரளும் சமூகம்.

( எனது "அந்தக் கேள்விக்கு வயது 98" என்ற நூலிலிருந்து)

38 comments:

  1. நல்ல கட்டுரை. புத்தனுக்கு போதி மரம். எனக்கு வைப்பர் வேலை செய்யாத ஒரு அரசுப்பேருந்து என்ற வரிகளில் நகைச்சுவையும் கவிதைக்குரிய அழகும் இருந்தன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ரூமி.

    ReplyDelete
  3. பனை மரத்துக்கு கீழே இருப்பவன் எல்லாம் கள் குடிப்பவன் என்று நினைக்கின்ற சமூகம் தானே இது. பின்னால் வரும் தனியார் பேருந்து அதிக கலெக்ஷன் பெற தனது பேருந்தை மித வேகத்தில் ஓட்டி அன்றைய தின மாலை வேளையில் தனியார் நடத்துனரிடம் கையேந்தி நிற்கும் பல நடத்துனர்கள் மத்தியில் கறை படியாத இவரை இனம் பிரித்துப் பார்க்க இயலாத மானுடர்கள்களை மக்கள் என அழைப்பதா இல்லை வள்ளுவன் சொன்னதைப் போல் மா.......ள் என அழைப்பதா...! தக தக வென காய வைத்த இரும்பில் சுத்தியல் கொண்டு ஓங்கி அடிக்கும் அடி ஏற்படுத்தும் பாதிப்பைப் போல் இருந்தது....! பகிர்வுக்கு நன்றி...!

    ReplyDelete
  4. மிக்க நன்றி கார்த்திகேயன் தோழர்

    ReplyDelete
  5. சார்...மறுபடியும் கலக்கிடீங்க...எனக்கு பொதுவா ஆசிரியர்கள் மேல கொஞ்சம் தனி மரியாதை...(என் அப்பாவும் ஆசிரியர் என்பதாலும் இருக்கலாம்..) உங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...என்னோட வலைப்பூவை நேரமிருந்தா கொஞ்சம் எட்டி பாருங்க..ஒரு மாணவனின் முயற்சியாய் மட்டும் பார்க்கவும்..எதிர்பார்ப்புகள் வேண்டாம் சார்...:)

    ReplyDelete
  6. பிடித்தது..அப்படியே அடுத்த கட்டுரைகளையும் புத்தகம் வாங்காமலே படிக்கலாம் போல..:)

    ReplyDelete
  7. @மயிலன்

    மிக்க நன்றி மயிலன். ப்ளாக் திறக்கவில்லையே ஏன் தோழா?
    ப்ளாக் ஐ டி யினை அப்படியே காப்பி செய்து இணைக்கவும்

    ReplyDelete
  8. @துளசி கோபால்

    மிக்க அன்பும் நன்றியும் தோழர்

    ReplyDelete
  9. @ரெவெரி

    அச்சச்சோ ...

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  10. அனுபவங்கள்மூலம் எங்கெங்கெல்லாமோ எவ்வளவு நல்ல பாடங்களை கற்றுக்கொள்கிறோம்.
    சிறந்த ஒரு கதைக்குரிய அம்சங்களுடன் நல்ல கருத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  11. @அம்பலத்தார்

    வணக்கம் தோழர். மிக்க நன்றி. தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  12. நல்ல சிந்தனை, நல்லதையே சிந்திப்போம், நல்லதையே செய்வோம்.நன்றி..

    ReplyDelete
  13. யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான்// மிக சரி.. ஒரு புது பார்வையோடு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  14. யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான்// மிக சரி.. ஒரு புது பார்வையோடு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  15. நல்ல கட்டுரை..
    அரிதினும் அரிதாய் கிடைக்கிற நல்லதுகளைக் கொண்டாடப் பழகுவோம். பையப் பையப் புரளும் சமூகம். அருமை

    ReplyDelete
  16. நடத்துனரின் இருக்கையை அவர் அமர்ந்தது, அதிகாரம் செய்தது மரியாதைக்குரிய செயல் அல்ல.

    ReplyDelete
  17. ilangovan balakirshnanOctober 21, 2011 at 3:26 PM

    உடன்பாடு இல்லை தோழர்.

    செய்யும் தொழிலில் ஈடுபாட்டுக் குறைவும், மற்றவர்களைக்குறை சொல்லும் பாங்கும் பெரும்பான்மையாகி விட்ட காலம்தான் இது. இதற்கிடையில் கோபப்படாமல் பேசுவதும், முடிந்த அளவு உதவுவதுமான நடத்துனர் நிச்சயம் என் மனதைக் கவர்கிறார்.

    அதே சமயம் இருக்கை தொடர்பான பிம்பங்கள் போலித்தனமானவை.

    ஒருவேளை நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணாய், நிற்க வலுவில்லா மாற்றுத்திறனாளியாய் இருந்தால் நடத்துனர் என்ன செய்வார்?

    வெறுமனே இருக்கும் இருக்கையில் மற்றவர்கள் அவர் வரும் வரையில் உட்காருவது மனித மனங்களின் நெகிழ்வுத்தன்மையைக்காட்டுவதாய் அமைகிறதே ஒழிய, கவுரவக் குறைவாய் கருதுவதற்கில்லை.

    அடிமட்ட ஊழியர் என்ற பொதுப்புத்தியில் நான் இதைச்சொல்லவில்லை. மருத்துவர், பிரதமர், ஜனாதிபதி, நீதிபதி ஏன் கடவுளின் இருக்கையில் கூட அமரலாம்.

    கவுரவம் என்பது செயற்கையானது. மனித நேயம் மட்டுமே இயற்கை.

    மன்னிக்க. :)

    ReplyDelete
  18. http://cmayilan.blogspot.com/
    இப்போது முயற்சித்து பாருங்களேன் சார்...

    ReplyDelete
  19. நண்பரே! மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  20. http://www.whispersintamilnadu.com/2011/10/success-is-not-so-sweet.html

    ReplyDelete
  21. ஒருவர் சந்தடி சாக்கில் தனியார் மயத்தின் பிரதி நிதியானார்- இப்படித்தான் மக்கள் மனதில் சமத்துவாதிகளுக்ககு எதிரான கருத்து பதிய படுகிறது. தன்மனாம் குறித்த கட்டுரை அருமையாக நேர்மேயோடு இணைக்கபட்டுள்ளது

    ReplyDelete
  22. Interesting view. But I feel the comparison between conductor's seat & collector's seat is not correct. No one goes to collector's office to occupy his chair as adequate seating arrangement will be available. In bus the passenger is forced to unnecessarily stand for such adamant attitude of conductor.

    A.Hari

    http://inspireminds.in/

    ReplyDelete
  23. நிச்சயம் மிக அருமையான பகிர்வு தோழர். அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மிகவும் பாவம் செய்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். பிறர் எளிதில் சொல்லி விடலாம். அரசு ஊழியர் என்று. ஆனால் அதை அவர்கள் தன் வியர்வையை சிந்தி தான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில் நடத்துனர் படும் பாடு சொல்லி மாளாது. எவ்வளவு தான் விழிப்போடு இருந்தாலும் பரிசோதகர் வந்தால் அவர் நிலை பரிதாபமாகத்தான் போய்விடுகிறது. அத்தனை பேரிடமும் சண்டை போட்டு, சமாளிக்கும் நடத்துநர்கள் இருக்கை விசயத்திலாவது தன் மானம் உள்ளவர்களாக இருப்பதில் பெருமை தான்.

    ReplyDelete
  24. நான் பயணிக்கும் எந்த பேருந்திலும் சரியான சில்லறையை கொடுப்பேன் அன்பு தோழரே
    அப்போது
    அந்த நடத்துனரின்
    முகத்தை பார்க்கணுமே ..
    ஒரு நீண்ட தூர வழிபயணத்தின்போது ..
    வெயில் கொடுமை தாங்காமல்
    ஆலமர நிழலில் நின்றதுபோல்
    ஒரு சந்தோசம் தெரியும் அவரிடத்தில்.

    ReplyDelete
  25. @
    anbu
    எண்ணங்கள் 13189034291840215795
    Pon Vinnarasi
    மயிலன்
    Jeevan
    The Hunter
    மிக்க நன்றி தோழர்களே

    ReplyDelete
  26. என‌க்கு அந்த‌ ந‌ட‌த்துன‌ரின் நியாய‌த்தில் ஒப்புத‌ல் இல்லை. நிலையான‌ இட‌த்தில்(க‌லெக்ட‌ர் ஆபிஸ் மாதிரியான‌) நாம் இருப்ப‌த‌ற்கும் ந‌கர்ந்துகொண்டிருக்கும் ப‌ஸ் மாதிரியான இட‌த்தில் இருப்ப‌த‌ற்கும் வித்தியாச‌ம் இருக்கிற‌து. முடிந்த‌வ‌ரை பய‌ணிப்ப‌வ‌ர்க‌ளை பாதுகாப்பாக‌ சிர‌ம‌ம் ஏதுமின்றி கொண்டு செல்ல‌ வேண்டிய‌து அவ‌ர்க‌ளின் க‌ட‌மை.அவ‌ர்க‌ள் இருக்கையை விட்டு த‌ர‌வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை ஆனால் காலியாக‌ இருக்கும்ப‌ட்ச‌த்தில் ப‌ய‌ணி அமர‌லாம் அல்ல‌வா.த‌மிழ் நாட்டு பேருந்து ஒரு பெரும் அப‌த்த‌ம். இந்த‌ ப‌க்க‌ம் பெண்க‌ள் அந்த‌ ப‌க்க‌ம் மாற்று திற‌னாளிக‌ள்.
    மிச்ச‌மிருக்கும் இருக்கைக‌ளுக்கு ஆண்க‌ள்.ப‌டியில‌தான் தொங்குவான் என்ன‌ ப‌ண்ணுவான் பாவ‌ம். த‌ங்க‌ள் கூற்றுப‌டி அவ்வ‌ள‌வு நேர்மையான‌வ‌ர்களாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளாயின் ஊதிய‌ உய‌ர்வுக்கு போராடும் இவ‌ர்க‌ள் ப‌ய‌ணிக‌ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப‌ பேருந்துக‌ள் இய‌க்க‌வேண்டும் என்றும் போராடியிருக்க‌ வேண்டும‌ல்ல‌வா செய்தாரா என்று விசாரித்து பாருங்க‌ள்‍:)

    ReplyDelete
  27. @ilangovan balakirshnan

    வணக்கம் தோழர்.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    அது என்ன தோழர் ‘மன்னிக்க’ என்று எழுதுகிறீர்கள். உங்கள் கருத்தை எதிர் கருத்தை சொல்லும் போது மிகுந்த அக்கறையோடு எப்போதும் எடுத்து சொல்லும் நீங்கள் ஏன் அந்த வார்த்தையைப் போட்டீர்கள் என்று விளங்க வில்லை.

    நான் எப்போதும் உங்கள் கருத்தை மிகுந்த கவனத்தோடும் மரியாதையோடும் பார்ப்பவன். இப்போதும்தான்.

    ஒரு பதிவில் எல்லாவற்றையும் கொண்டுவந்துவிட முடியாது. நோயாளிகள் வயதானவர்கள் வந்தால் என்கிற விசயமே இங்கு இல்லை தோழர்.அது வேறு. அது அவர் தருவது. இது அபகரிப்பது.

    மேலும் வயதானவர்களோ நோயாளிகளோ வந்தால் அப்போதுகூட நாம் எழுந்து இடம் தரமாட்டோம் அப்படித்தானே தோழர்.

    கலெக்டர் இருக்கையில் அல்ல அவருக்கு முன்னால் போட்டிருக்கும் நமக்கான இருக்கைகளில் கூட நம் எல்லோராலும் உட்கார இயலவில்லையே தோழர்.

    தொடர்ந்த உங்களது வாசிப்பும் அக்கறையோடு கூடிய கருத்துக்களும் என்னை மிகவும் உற்சாகப் படுத்துகின்றன தோழர்.

    ReplyDelete
  28. இது போல் எத்தனை போதிகள் உங்கள் பக்கத்தில் ?

    ReplyDelete
  29. நல்ல பதிவு....

    //யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான்//

    உண்மைதான் ஐயா..

    ReplyDelete
  30. ///Venkadesan said...
    நல்ல பதிவு....

    //யாரால் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லையோ அவன் தனது பணியிலே சரியாய் இருப்பான்//

    உண்மைதான் ஐயா.. ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  31. Replies
    1. மிக்க நன்றி தோழர் காமராஜ்

      Delete
  32. அருமை சார்...

    கற்பதற்கு எவ்வளவோ இருக்கு

    நன்றி

    ReplyDelete

  33. கலக்சன் காட்டவும் கலக்சன் படி வாங்கவும் எவ்வளவு பேரைவேண்டுமானாலும் பேருந்துக்குள் அடைச்சா ,விதிமீறல் இல்லைன்னா ?
    நடத்துனர் இருக்கையில் அமர்வது விதிமீறலா ?58+2அதுதான் அனுமதிக்கப்பட்ட கொள்ளவு.அப்படி இருந்தா ஏன்சார் நடத்துனர் இருக்கையில் அமரப்போறோம் .நெடுந்தொலைவுப்பேருந்தில்இதைக்கடைப்பிடிக்கிறார்கள் .நடத்துனர் இருக்கை எப்போதும் காலியாயகவே இருக்கும் .
    மாற்றுதிரனாளிக்கு ஒரு இருக்கைஇருக்குமே (இப்போது சில பேருந்துகளில்தான் அது இருக்கு )அதுல அவுங்க தான் இருக்காங்களா ?
    கலக்டர் சீட்டும் நடத்துனர் சீட்டும் ஒன்னா ?

    ReplyDelete
    Replies
    1. ஒன்ற்தான் தோழர் சுந்தரம். கலக்டர் இருக்கையில் நடத்துனர் அமர்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...