Sunday, January 8, 2012

நமக்கில்லை கடவுள் கவலை

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் மறு ஒலிபரப்பினை பார்த்துக் கொண்டிருந்தான் கிஷோர். ஒருவர் பின் ஒருவராக இந்திய மட்டை வீரர்கள் வீரர்களின் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவனருகில் இருந்த ரிமோட்டை எப்படியோ லாவகமாகக் கைப்பற்றிய கீர்த்தி அவள் அம்மாவை அழைத்தாள். இருவரும் பாயில் அமர்ந்து கொண்டனர். படீரென வேறு ஒரு சேனலுக்குத் தாவினாள் கீர்த்தி. அவ்வளவுதான், கிஷோருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“நான்தான் பார்த்துக் கிட்டிருக்கேன்ல, அப்புறம் எதுக்குடி வெள்ளச்சி மாத்துற?”

”அதுதான் நேத்தே தோத்துட்டான்களே. அப்புறம் அதையே ஏன் திரும்பிப் பார்க்குற? நீ திரும்பிப் பார்க்குறதால மட்டும் ஜெயிச்சுறப் போறான்களாக்கும்?”

" நீ மட்டும் என்னாடீ, தெனைக்கும் ஏசு அழைக்கிறார் ஏசு அழைக்கிறார்னு சொல்றியே தவிர எங்கேயும் போகாம இங்கேயே தானடி உக்காந்திருக்க வெள்ளப் பன்னி”

“ஏய், வேண்டாம், அப்புறம் ..” என்பதற்குள் பையன் வெளியே போய்விட்டான்.

தொலைக் காட்சியில் ஒருவர் கையில் வேதப் புத்தகத்தோடு ஜெபித்துக் கொண்டிருந்தார். எதை எப்படி விமர்சித்தாலும் அவரது மன்றாடலில் கசிந்த உருக்கமும் அழுகையும் உண்மைக்கு மிகவும் கிட்டத்தில் இருந்ததை ஏற்கத்தான் வேண்டும். அதில் எந்த விதமான பூச்சையோ போலித் தனத்தையோ பார்க்க இயலவில்லை.

எதிரே கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் கண்களை மூடியவாறும் கைகளைத் தூக்கியவாறும் அவரது மன்றாடலோடு ஒன்றிணைந்து உருகினர்.

“ஆலயம்
கண்களை
மூடச் சொல்லும்
பள்ளிக் கூடம்
கண்களைத் திறந்து வைக்கும்”

என்ற வைரச் சந்திரனது கவிதை எவ்வளவு சரியானது என்பதை உளப் பூர்வமாக உணர முடிந்தது.

“புத்தகம் கூட
கைத் தடிதான்
தூங்குபவனைத்
தட்டி எழுப்பும்
விழுந்தவனை
தூக்கி நிறுத்தும்”

என்பான் தம்பி ஆங்கரை.பைரவி.

திரண்டிருந்த ஆயிரக் கணக்கானோரில் பெரும்பான்மையோர் கைகளில் வேதப் புத்தகம்.  “புத்தகம் தூங்குபவனைத் தட்டி எழுப்பும்” என்கிறானே பைரவி, இங்கு வேதப் புத்தகத்தோடு கண்களை மூடிய படி இருக்கிறார்களே, எனில் வேதப் புத்தகம் புத்தகம் இல்லையா?

யார் என்று சரியாய்த் தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள், சொன்னான்

“வெள்ளையர்கள்
வந்தபோது
அவர்கள் கையில்
பைபிள் இருந்தது
நம்மிடம்
நாடு இருந்தது

உருக்கத்தோடு
ஜெபித்தார்கள்
நாமும்
கண்களை மூடி
ஜெபத்தில் கலந்தோம்

ஆமேன் என்றார்கள்
விழித்துப் பார்த்தோம்

பைபிள்
நம் கைகளில் இருந்தது
நாடு
அவர்கள் கைகளில் இருந்தது”

கவிதையை சரியாய் எழுதியிருக்கிறேனா என்பதும் தெரியவில்லை. ஆனால் இது மாதிரித்தான் போகும்.

நமது பூமி அடிமைப் பட்டுப் போனதற்கு இது மட்டுமே காரணம் அல்ல என்பதும் , அதற்கு நீண்ட நெடிய சமூக ,பொருளாதார, அரசியல்,  நம்மிடம் புரையோடிப் போய்க் கிடந்த சாதீய ஒடுக்குமுறை போன்ற ஏராளமான அழுத்தமான விஷயங்களே காரணங்கள் என்பதும் நாமறிந்ததே.

நமது கவலையும் கவனமுமெல்லாம் தட்டி எழுப்பக் கூடிய நூல்களும், கண்களைத் திறக்கச் சொல்லும் பள்ளிகளும் ஏராளம் வேண்டுமென்பதே.

இதற்கிடையே கிஷோர் மீண்டும் வந்து விட்டான். விக்டோரியாவும் கீர்த்தியும் முக்காடிட்டு அந்த பிரசங்கியாரின் இறை மன்றாடலில் இரண்டற இணைந்திருந்தார்கள்.

கிஷோர் சும்மாவும் இருக்க மாட்டான். முக்காடு அவனை என்ன செய்ததோ தெரியவில்லை.

“ஏம்மா, ஏம்மா இப்படி?”

”அப்பாவோட சேர்ந்து நீயும் அழிஞ்சு போகாத. நல்ல பிள்ளையா இப்படி வந்து கண்ண மூடி ஜெபத்துல உட்காரு”

“வொய் மம்மி வொய்?”

வழக்கமாக அவனது இது போன்ற நக்கல்களில் லயித்து சிரித்துவிடும் விக்டோரியா வழக்கத்திற்கு மாறாக எரிச்சலடைந்து ,

“கட்டையில போறவனே, இப்படி கடவுளக் கிண்டல் செய்து அவரோட ஆக்கினைக்கு ஆளாகாதே. ஏற்கனவே ஒன்னு இப்படி செய்றதாலதான் எவ்வளவு வந்தாலும் ஒன்னும் விளங்காம இருக்கு. நீயும் இப்படி செஞ்சேன்னு வச்சுக்க அப்புறம் அவரோட ஆக்கினைல அப்படியே கருகிப் போயிடுவீங்க”

கல கலவென சிரித்தான். அது விக்டோரியாவை இன்னும் எரிச்சல் பத்தியது. கண்களில் லேசாக ஈரத்தைப் பார்க்க முடிந்தது.

”உனக்குப் பிடிக்கலைனா உட்டுடுடா. வம்புக்கிழுக்காத”

”ஏம்மா கடவுள நீ பார்த்திருக்கியாம்மா நீ”

ரொம்பப் பழசுதான் கேள்வி. ஆனா அதைவிட அதலப் பழசா பதில் வந்தது.

“ நம்புடா, நம்பாட்டி உருப்படமாட்ட. நாசமாப் போயிடுவ.”

“எத நம்பனும்?”

”கடவுள”

”அப்புறம்?”

“அவரோட அதிசயங்கள”

”அதிசயங்களா? புரியலம்மா. கொஞ்சம் விளங்குறமாதிரி சொல்லும்மா”

“எத்தனைக் குருடங்க பார்க்கிறாங்க. எத்தனை ஊமைகள் பேசறாங்க. எத்தனை முடவர்கள் பார்க்கிறார்கள்.”

பேச விடாமல் இடை மறித்து சிரித்தான்.

“ஏண்டா சிரிக்கிற எடுபட்ட பயலே”

“பார்த்தியாக்கும்”

“கண்டு விசுவாசிக்கிறவனைவிட காணாமல் விசுவாசிக்கிறவனே பாக்கியவான்”

 “கொறச்சலே இல்ல. சோமலியால சின்ன சின்ன புள்ளைங்க சோறில்லாம சாகுது. அவங்களுக்கு சோறு போடமாட்டாராக்கும்”

“டேய் வேணாம்...”

 “ கடவுள் இருக்கார்னு நம்பச் சொல்றத வேண்டும்னா அறியாமன்னு ஒதுக்கிடலாம். ஆனா அத செஞ்சார் இத செஞ்சார். சோதிக்காம ஒத்துக்கன்னா, சாரிம்மா நோ சான்ஸ்”

சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

“ நான் கட்டிக்கிட்டதும் சரியில்ல, பெத்துக்கிட்டதும் சரியில்ல, என்றவாறே மூக்கைத் துடைத்தபடியும், முக்காட்டை சரிசெய்தவாறும் மீண்டும் விக்ட்டோரியா ஜெபத்தில் மூழ்க, நடந்த எதிலும் அக்கறை காட்டாமல் ஜெபத்திலேயே இருந்தாள் கீர்த்தி.

சபாஷ்டா கிஷோர்.




24 comments:

  1. //ரொம்பப் பழசுதான் கேள்வி. ஆனா அதைவிட அதலப் பழசா பதில் வந்தது.//

    நாத்திகமோ ஆத்திகமோ இந்த வரியை இரசித்தேன்...

    விக்டோரியாவிற்கு என் அம்மா நிலைமை பரவா இல்லை போலும்..கட்டிகொண்டதினால் இந்த தொந்தரவு இல்லை..பெத்துக்கொண்டதனால் மட்டுமே...

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. வந்ததும் சரில்ல கடவுள் தந்ததும் சரில்லன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.பொருந்துமா இங்கே !

    ReplyDelete
  4. //“ நான் கட்டிக்கிட்டதும் சரியில்ல, பெத்துக்கிட்டதும் சரியில்ல, என்றவாறே மூக்கைத் துடைத்தபடியும், முக்காட்டை சரிசெய்தவாறும் மீண்டும் விக்ட்டோரியா ஜெபத்தில் மூழ்க, நடந்த எதிலும் அக்கறை காட்டாமல் ஜெபத்திலேயே இருந்தாள் கீர்த்தி.//

    ரசித்தேன்.

    ReplyDelete
  5. இறைவன் இருப்பதாய் நம்புவது இவர்களுக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது! நம்பாமல் வாழ்வது அதை விடவும் எளிதானது, குழபபமற்றது என்ற சுகம் புரியாதவர்கள் இவர்கள்.

    ReplyDelete
  6. கடவுள் இருக்கிறார்,,, இல்லை என்பதைவிட கடவுள் பெயரைச் சொல்லி கூட்டம் சேர்க்கும், காசு சேர்க்கும், புகழ் சேர்க்கும் மனிதர்களே ஆபத்தானவர்கள் என்பதை புரிய வைத்தலே அவசியமானது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. முதலில் எந்த ஒரு விஷயத்தையும் கேள்வி கேட்டுப் புரிதல் மிக நன்று. ஆனால் கேள்வி கேட்பதையே பெரும்பாலோர் விரும்புவதில்லையே. நான் என் நண்பர்களிடம் சில சமயம் கூறுவது “முதலில் எந்த ஒரு விஷயமும் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டால் பிறகு நமக்கு சாதகமானபடி அதனை வளைக்க முயலலாம் “வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. என்னைப் போல் ஒருவர் ....
    இது எங்கள் வீட்டில் நடப்பதைப்போலவே உள்ளது ! :) :) :)

    ReplyDelete
  9. “வெள்ளையர்கள்
    வந்தபோது
    அவர்கள் கையில்
    பைபிள் இருந்தது
    நம்மிடம்
    நாடு இருந்தது

    உருக்கத்தோடு
    ஜெபித்தார்கள்
    நாமும்
    கண்களை மூடி
    ஜெபத்தில் கலந்தோம்

    ஆமேன் என்றார்கள்
    விழித்துப் பார்த்தோம்

    பைபிள்
    நம் கைகளில் இருந்தது
    நாடு
    அவர்கள் கைகளில் இருந்தது”

    -அழிக்க முடியாத உண்மை, யதார்த்தத்தை நன்ப மறுக்கவைக்கபடுகின்றனர்

    ReplyDelete
  10. \\\ மயிலன் said...
    //ரொம்பப் பழசுதான் கேள்வி. ஆனா அதைவிட அதலப் பழசா பதில் வந்தது.//

    நாத்திகமோ ஆத்திகமோ இந்த வரியை இரசித்தேன்...

    விக்டோரியாவிற்கு என் அம்மா நிலைமை பரவா இல்லை போலும்..கட்டிகொண்டதினால் இந்த தொந்தரவு இல்லை..பெத்துக்கொண்டதனால் மட்டுமே... ///

    மிக்க நன்றி தோழர். அப்படியா?

    ReplyDelete
  11. \\\ Rathnavel said...
    நல்ல பதிவு.
    உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
    நன்றி ஐயா. ///

    மிக்க நன்றிங்க அய்யா. என்னங்க அய்யா இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம்.

    ReplyDelete
  12. அன்புள்ள தோழருக்கு வணக்கம்,தங்களின் இந்த கதையை மிகவும் தாமதமாக வாசிக்க நேர்ந்ததுக்கு மன்னிக்கவும்....கதையின் போக்கும் அது கிளப்பி விடும் விவாதமும் அற்புதம்.....வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  13. “ஆலயம்
    கண்களை
    மூடச் சொல்லும்
    பள்ளிக் கூடம்
    கண்களைத் திறந்து வைக்கும்”

    பிடித்த வரிகள்.

    கதை (கதைதானே இது?) மிகவும் பிடித்தது. காதிருப்பவர்கள் கேட்கக் கடவது!

    ReplyDelete
  14. \\\ ஹேமா said...
    வந்ததும் சரில்ல கடவுள் தந்ததும் சரில்லன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.பொருந்துமா இங்கே !///

    மிக்க நன்றி ஹேமா. என்ன ரொம்ப நாட்களாக ஆளாஇயே காணோம்.

    ரொம்பச் சரியாக பொருந்தும்.

    ReplyDelete
  15. \\\ ஹேமா said...
    வந்ததும் சரில்ல கடவுள் தந்ததும் சரில்லன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.பொருந்துமா இங்கே !///

    மிக்க நன்றி ஹேமா. என்ன ரொம்ப நாட்களாக ஆளையே காணோம்.

    மிகச் சரியாகப் பொருந்தும்.

    ReplyDelete
  16. \\\ சுவனப்பிரியன் said...
    //“ நான் கட்டிக்கிட்டதும் சரியில்ல, பெத்துக்கிட்டதும் சரியில்ல, என்றவாறே மூக்கைத் துடைத்தபடியும், முக்காட்டை சரிசெய்தவாறும் மீண்டும் விக்ட்டோரியா ஜெபத்தில் மூழ்க, நடந்த எதிலும் அக்கறை காட்டாமல் ஜெபத்திலேயே இருந்தாள் கீர்த்தி.//

    ரசித்தேன். ///

    மிக்க நன்றி சுவனப் பிரியன்.

    ReplyDelete
  17. \\\ kumaresan said...
    இறைவன் இருப்பதாய் நம்புவது இவர்களுக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது! நம்பாமல் வாழ்வது அதை விடவும் எளிதானது, குழபபமற்றது என்ற சுகம் புரியாதவர்கள் இவர்கள். ///

    மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
  18. \\\ Uma said...
    கடவுள் இருக்கிறார்,,, இல்லை என்பதைவிட கடவுள் பெயரைச் சொல்லி கூட்டம் சேர்க்கும், காசு சேர்க்கும், புகழ் சேர்க்கும் மனிதர்களே ஆபத்தானவர்கள் என்பதை புரிய வைத்தலே அவசியமானது என நினைக்கிறேன். ///

    மிக்க நன்றி உமா. மிக மிக ஆபத்தானவர்கள்

    ReplyDelete
  19. \\\ G.M Balasubramaniam said...
    முதலில் எந்த ஒரு விஷயத்தையும் கேள்வி கேட்டுப் புரிதல் மிக நன்று. ஆனால் கேள்வி கேட்பதையே பெரும்பாலோர் விரும்புவதில்லையே. நான் என் நண்பர்களிடம் சில சமயம் கூறுவது “முதலில் எந்த ஒரு விஷயமும் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டால் பிறகு நமக்கு சாதகமானபடி அதனை வளைக்க முயலலாம் “வாழ்த்துக்கள். ///

    மிக்க நன்றிங்க அய்யா.

    ReplyDelete
  20. \\\ Pisaasu Kutty said...
    என்னைப் போல் ஒருவர் ....
    இது எங்கள் வீட்டில் நடப்பதைப்போலவே உள்ளது ! :) :) :)///

    ஆமாம், ஆமாம். பிசாசுக் குட்டின்னா எல்லா வீட்டிலும் இருக்கும்தான்.

    ReplyDelete
  21. மிக்க நன்றி தோழர் கிரிஸ்டோபர்

    ReplyDelete
  22. \\\ Madusudan C said...
    அன்புள்ள தோழருக்கு வணக்கம்,தங்களின் இந்த கதையை மிகவும் தாமதமாக வாசிக்க நேர்ந்ததுக்கு மன்னிக்கவும்....கதையின் போக்கும் அது கிளப்பி விடும் விவாதமும் அற்புதம்.....வாழ்த்துக்கள்.... ///

    மிக்க நன்றி மது சூதன்.

    ReplyDelete
  23. \\\ தருமி said...
    “ஆலயம்
    கண்களை
    மூடச் சொல்லும்
    பள்ளிக் கூடம்
    கண்களைத் திறந்து வைக்கும்”

    பிடித்த வரிகள்.

    கதை (கதைதானே இது?) மிகவும் பிடித்தது. காதிருப்பவர்கள் கேட்கக் கடவது! ///

    மிஒக்க நன்றி தோழர். இது ஒரு பதிவு மட்டுமே தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...