Saturday, January 8, 2011

மரணத்தைக் கொண்டாடுவோம்


'மரணம் குறித்த
பயம் போய்விடும்
ஒரே ஒரு முறை
செத்துப் பார் "
என்று எப்போதோ ஜென்னில் வாசித்ததாய் ஞாபகம். இதைத் தாண்டி மரணம் குறித்து என்னத்தை யோசித்து தொலைப்பது? உச்சத்தில் உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். சரி,  எவ்வளவுதான் உச்சத்தில் உட்கார்ந்து யோசித்தாலும் இப்படியெல்லாம் கூட வருமா? ஒருக்கால் ஓரிரு முறை செத்து மீண்டும் எழுந்து வந்து மரண பயமற்ற தனது அனுபவத்தை எழுதியிருப்பானா?

எனது பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் தொடர்ந்து வெற்றிலைப் பாக்கு போடுபவர். கூடவே பன்னீர் புகையிலையும் .அவர் உள்ளே  நுழைந்தால் வாசம் கமகமக்கும்.

ஒரு முறை கேட்டேன் ,

"புகையிலை ஒரு மாதிரி மயக்கத்தைத் தரும் என்கிறார்களே ,தொடர்ந்து புகையிலை போட்டாலும் தெளிவா இருக்கீங்களே . உண்மைய சொல்லுங்க  புகையிலை எப்படி இருக்கும்?"

கொஞ்சம் புகையிலையை உருட்டி என்னிடம் நீட்டினார். மிரண்டு போய் ஒதுங்கினேன்.

"எதையும் அனுபவிச்சுப் பார்த்து உணரனும்டா"

மூன்று நான்கு வரிகள் கொண்ட எனது கேள்விக்கு நான்கே வார்த்தைகளில் பதில் சொன்னார்.

புகையிலைப் போட்டால் அது குறித்த பயம் தெளிந்து சுவைக்கும் என்கிறார் இவர். அவனோ  ஒருமுறை செத்துப் பார். மரணம் குறித்த பயம் நீங்கி சுவைக்கும் என்கிறான்.

எனில் புகையிலை போடுவது மாதிரி ஒரு சராசரி அனுபவம்தானா மரணம்?

வலியற்றதா?

" உறங்குவது போலும் சாக்காடு " என்கிறான் நம்மாளு.ஆஹா! மரணத்தை உறக்கம் மாதிரி ஒரு அனுபவம் என்கிறானே.

மரணம் அனுபவமா?

என்ன செய்வது ஜென் குறித்த பரிசீலனையின் நீட்சியில்தான் நமக்கு நமது மேன்மையே தட்டுப் படுகிறது. இதை என்ன என்பது? சுகன்தான்    சொல்வார் ," அது அப்படித் தாங்க அய்யா."

அது அப்படித்தான் போலும்.

ஆனால்  மனிதர்களுக்கு மரணம் வேப்பங்காயாய் கசக்கிறது என்று கூட சொல்ல முடியாது. மரண பயம் என்பது எந்தக் கசப்பினும் கொடூர கசப்பானது.

மனிதர்கள் மட்டுமல்ல, தேவகுமாரன் என்றும் ,  உலக மக்களின் ஒட்டு  மொத்தப் பாவத்தையும் தனது ரத்தத்தால் கழுவிப் போக்க இந்த பூமிக்கு வந்தவர் என்றும் உலகின் பெரும்பான்மை மக்களால் நம்பப் படுகிற ஏசுநாதருக்கே தனது மரணத் தருவாயில் மரணம் கலக்கத்தைத் தந்திருக்கிறது. அதனால்தான்  தனது மரணத்திற்கு சற்று முன்னால் " என் தேவனே , என் தேவனே , ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று   கலங்கியிருக்கிறார்.

விவேகானந்தரும்கூட தனது மரணத்தின் நெருக்கத்தில் கொஞ்சம்  கலங்கி  இருந்ததாகத்தான்   படுகிறது.

முரட்டு வீரத்தோடுதான் எதிர்கொண்டார் எனினும் அவரது மரண நொடிகளில் கலக்கத்தின் ரேகைகளை சதாம் உசேனின் முகத்தில் பார்க்க முடிந்தது.

நம்ம  கட்டபொம்முவிடமும்  சின்னியம் பாளையத்து    தோழர்களிடமும் தூக்கிலே தொங்கி உயிர் துறக்கும் வரைக்கும் வீரத்தையும், முறுக்கையும் அள்ள  அள்ளக் குறையாதத் திமிரையும் பார்க்க முடிந்தது.

பகத்தோ  இவை அனைத்தையும் கடந்து சாகும் வரைக்கும் ஒரு வசீகரமான புன்னகையை தன் உதடுகளில் உலரப் போட்டிருந்தான். அந்தப் புன்னகைக்கு நிகரான ஒரு ஆயுதம் இதுவரைக்கும் உலகின் எந்த உலையிலும் தயாராகவில்லை.

சரி, மரணம் என்றால்தான் என்ன?

"பாவத்தின் சம்பளம் மரணம் " என்கிறது விவிலியம். எனில் மரணம் என்பது பாவத்தின் விளைவு.  சரி ஒரு வாதத்திற்காக பாவமும் புண்ணியமும் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இந்த உலகில் பாவ புண்ணியக் கணக்கையே இன்னும் துவங்கியிராத ஒரு சொட்டுத் தாய்ப் பாலைக் கூடப் பருகியிராத பச்சிளங்குழந்தை செத்துத் தொலைக்கிறதே. அது யார் செய்த பாவத்தின் விளைவு?

"ஏற்றப் பழந்துணியை நீக்கி
எறிந்தொருவன்
மாற்றும்  புதிய உடை
வாய்ப்பது போல்
தோற்றுமுயிர்
பண்டை உடம்பை விட்டு
பாரில் புதிய உடல்
கொண்டு பிறக்குமென்று
கொள்"
என்று கீதை சொல்வதாகத் தெரிகிறது. வி.ஸ.காண்டேகரின்  "கிரௌஞ்சவதம்" நாவலில் தனது மனைவி இறந்து போன துயரிலிருந்து தன்னைத் தானே தேற்றிக் கொள்வதற்காக பேராசிரியர் அப்பன்னா என்ற கதாபாத்திரம் கீதையிலிருந்து மேற்சொன்ன பாடலைப் பாடுவதாகப் படித்தது. மற்றபடி அது கீதையில் இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது.

இருக்கும்  என்றே  நம்புகிறேன். எனில் உயிரானது தான்  போட்டிருந்த உடல்  என்ற சட்டையை , அது  பழையது  ஆனதாலோ  அல்லது  வேறு  ஏதோ ஒரு  காரணத்தாலோ  மாற்றிக் கொள்வது மரணம் என்றாகிறது.

இதன் பொருள் மரணம் என்பது உயிர் உடலை மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.  உயிர் அழியாதது.  ராமசாமி  மரித்துப் போனான் எனில்  அவனது  உடலிலிருந்து  உயிர் புதிய உயிராகப்  பிறந்து   கந்தசாமி  அல்லது  வேறு  ஏதா  ஒரு  பெயர்  கொண்ட  ஒரு  மனிதனாவான்.

பாவத்தின்  சம்பளம்  மரணம்  என்பதோ,  உயிர்  அழியாதது  என்பதோ மனிதர்களுக்கு  இருக்கும்  மரணம்  குறித்த  பயத்தைப்  போக்குவதற்கு  என்றே  கொள்ள வேண்டும். 

மரணம்  குறித்து  ம்க்களுக்கு  பயம்  இருக்கிறது..  அதே  நேரத்தில்  தற்கொலை  செய்து  கொள்கிறானே.  எனில்  அவனுக்கு  மரணம்  குறித்த  பயம்  இல்லை  என்றுதானே  பொருள்? 

அல்ல,  சாதாரண மனிதனுக்கு  மரணம் கண்டு  பயம்.  தற்கொலை செய்து  கொள்பவனுக்கு  வாழ்க்கை குறித்து பயம்.

மரணம்  என்பது  பிறப்பது  மாதிரி ,  பெயர் பெற்றுக் கொள்வது  மாதிரி ,  பூப்பெய்துவது   மாதிரி ,  திருமணம்  செய்து  கொள்வது  மாதிரி  வாழ்வில்  ஒரு நிகழ்ச்சி.  அவ்வளவுதான்.  மற்றவற்றிற்காக  ஏங்கி,  எதிர்பார்த்து,  தவமாய்  தவம்  கிடக்கும்  நாம்  மரணத்தைப்  பொருத்தவரை  இவற்றிலிருந்து  மாறுபட்டு  ஒன்று அதைத  தவிர்க்கவோ  அல்லது  குறைந்த  பட்சம்  தள்ளிப்  போடவோ  முயற்சிக்கிறோம் .

இதற்கு   ஒரே  ஒரு  காரணம்தான்  இருக்க  முடியும்.  மற்றெல்லா  நிகழ்வுகளிலும்  அது  குறித்து  அசை  போட  அதற்கடுத்த  நாள்  நாம்  இருப்போம் .  ஆனால்  நேற்று  நடந்த  தனது  மரணத்தைப் பற்றி  அடுத்த  நாள் அசை போட மரணித்தித்தவனுக்கு  வாய்ப்பிருக்காது.

மரணத்தைக் கொண்டாட  நாம்  கற்றுக்  கொண்டால்  வாழ்க்கையின்  எந்த  ஒரு  இடர்  கண்டும்  நம்மால்  புன்னகைக்க  இயலும்.  மரணத்தைக்  கொண்டாட  வேண்டும்  என்று  நாம்  பரிந்துரைப்பதன்  பொருள்  இந்தப் புள்ளியிலேயே  ஒரு  புன்னகையோடு  மரணித்து  விட  வேண்டும்  என்பதுமல்ல.  மரணம்  வரைக்கும்  வாழ்க்கை  நிஜம்.  மரணம்  வரைக்கும்  வாழ்வதற்கான  போராட்டத்தை  நடத்திவிட வேண்டும்.

இத்தனை  மருத்துவமனைகள் ,  இத்தனை மருத்துவ  வசதிகள்,  அனைத்துமே  மரணத்தை முற்றாய் முழுசாய்  தவிர்ப்பதற்கு உதவாது.  மரணத்தை  முடிந்த  அளவு  தள்ளிப்  போடுவதற்காக  நமக்கு  வாய்த்த  வாய்ப்புகள் அவை.

மரணமே  இல்லாத  உலகத்தை  கற்பனை  செய்து  பாருங்கள்.  இளைஞர்களை  விடவும் ,  குழந்தைகளை  விடவும்  கிழவர்கள்  அதிகம்  வாழும்  ஒரு  உலகத்தை  ஒப்புக்கேனும்  சகித்துக்  கொள்ள  முடியுமா?

மரணம்  தவிர்க்க  இயலாதது.  சக  மனிதன்  குறித்த  புரிதலோடும் ,  அக்கறையோடும் ,  கவலையோடும்  அவனுக்கானதுமாக  நம்  வாழ்க்கை  செலவிடப்  பட்டிருக்குமானால்  நமது  மரணத்தையும்  தாண்டி  நீளும்  நமது  வாழ்க்கை.                      

33 comments:

  1. தத்துவம் கேக்க நல்லாத் தான் இருக்கு......

    ReplyDelete
  2. தத்துவம் கேக்க நல்லாத் தான் இருக்கு......

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மரணமும் வாழ்வின் ஒரு அனுபவமே என்று ஏற்று அனுபவிக்கவும், கொண்டாடவும் முயல்வது ஞானிகளின் எண்ணம், முயற்சி. இதை. இரா.எட்வின் ஞான நிலையில் இருக்கும் போது எழுதியுள்ளார் போல.

    ReplyDelete
  5. Very interesting perspective abt death. But reading about death is ok. But experiencing is totally different & difficult. Is it not?

    A.Hari

    ReplyDelete
  6. மறுமொழியாக நீண்ட நாட்களாக பதிவு செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருந்த மரணம் பற்றிய பதிவை எழுதி வருகிறேன்...முடித்தவுடன் அதன் தொடர்பை தருகிறேன்.

    ReplyDelete
  7. //ராமசாமி மரித்துப் போனான் எனில் அவனது உடலிலிருந்து உயிர் புதிய உயிராகப் பிறந்து கந்தசாமி அல்லது வேறு ஏதா ஒரு பெயர் கொண்ட ஒரு மனிதனாவான்//

    அப்படி இருக்குமானால்.. உலகின் நிலம் முழுக்க மனிதன் இருப்பான்.. நிற்கவே இடம் இருக்காது
    எ:கா:- நமது ஊரின் பேருந்து நெரிசலைபோலவே...

    நான் ஒரு கருத்தினை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... படைப்பவன் இருப்பது உண்மையானால் , அவன் எதையோ ஒரு மகத்தான செயலை மனிதனிடம் இருந்து எதிர்பார்க்கிறான்.. பெரும்பாலும் அது அவனாலே செய்யமுடியாத ஒன்றாக இருக்கலாம்

    ஒவ்வொரு குழந்தை பூமிக்கு வரும்போதும்.. இதையே சாரமாக கொண்டு வருகிறது..

    ReplyDelete
  8. நல்ல பதிவு... வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  9. ஜீவசுந்தரி பாலன்August 30, 2012 at 12:24 AM

    மரணம் வரும்போது வந்துதான் தீரும். அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நல்ல தத்துவ விசாரம். உங்கள் கட்டுரையின் இறுதி வரிகளைப் போல, மரணத்துக்குப் பின்னும் வாழ்ந்திருக்கும் வகையில் நாம் உயிர்த்திருக்க ஏதாவது செய்து விட்டுப் போக வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள் தோழர்
      மிக்க நன்றி

      Delete
  10. maranam adainthargalukku thunbam illai.avarathu kudumbaththinar,,nanbarkaL aagiyOrakku thaan thuyaram.

    ReplyDelete
    Replies
    1. மரணம் அற்புதமானது

      பூமியின் விளைபொருள் உண்டு
      பெற்றோர் கூட
      பிறந்த நம்மை
      பூமியின் விளைபொருள் உண்டு
      வளர்ந்த நம்மை
      பூமி உட்கொள்ளுதல் இயல்புதாமே

      பிறந்த நாள் முதல்
      உழைத்த அங்கங்கள் ஓய்வுபெற
      வாய்ப்புதரும்
      மரணம் அற்புதமானது

      தவிர்க்க இயலாதது
      தள்ளிபோட நினைப்பது
      மனித இயற்கை
      துணை நிற்பது
      அறிவியல் மேன்மை
      .
      வேண்டுகோள் எல்லாம்

      வருவது என்றால்
      நொடியில் வருக
      உணருமுன் ஆட்கொள்க
      ACTIVEஆக இருக்கும்போதே வருக
      பிறருக்கு தொல்லைகள் இலாது
      செல்ல வாய்ப்புதருக

      அதுவரை ஆற்றுவோம்
      அறப்பணிகளை
      கடமைகள் யாவும்
      கருத்தாய் செய்வோம்
      அதுவரை வாழ்வோம்
      அர்த்தமுள்ள வாழ்க்கை .

      Delete
    2. மிகச் சரியாய் சொன்னீர்கள் அய்யா

      Delete
  11. கடவுள் நம்பிக்கை உண்டு என்றால் விடை எளிது

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையும் இல்லை, எந்தக் குழப்பமும் இல்லை.
      வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழர்

      Delete
  12. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். திரு வெ.இறையன்பு அவர்களின் சாகாவரம் முடிந்தால் படித்துப் பாருங்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க ஆய்யா

      Delete
  13. மரணம் ஒருவகையில் விடுதலை..

    ReplyDelete
    Replies
    1. மரணத்தை விடுதலையாகக்ம் கூடப் பார்க்கத் தேவை இல்லை தோழர். அது ஒரு நிகழ்வு. ஒழுங்காய் வாழ்ந்திருப்பின் மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை தொடரும்

      Delete
  14. எட்வின் அவர்களே! மரணத்தைக் கொண்டாட முடியுமா? " மார்க்ஸ் இறந்த பொது :இந்த மனிதன் சிந்திப்பதை நிறுத்திவிட்டான்" என்று எஞ்கல்ஸ் குறிப்பிட்டதக சொல்வார்கள். அறிவியல் ரீதியாக பார்க்கும் போதும் இது சரி என்றே படுகிறது. தத்துவ ரீதியாக ஆன்மீக வாதிகளும் இதனை ஒட்டியே வருகிறார்கள். அனுபவம்,அனுபவிப்பவன், அனுபவிக்கப்படுவது எல்லாமே நானாகிவிட்டல் மிஞ்சுவது எது? அறிவா?ஞானமா? அனுபவமா? "கீதை" இதைத்தான் வெளிபடுத்துகிறது! "கடோபனிஷத்" மரணத்தையும் அதன் பிறகு என்ன என்பதையும் விவாதிக்கிறது! நசிகேதன் யமனுடன் செய்யும்விவாதத்தில் இந்தக் கேள்விக்கான பதில் "லேசு பாசா"க விரவிக் கிடக்கிறது! நீங்கள் எழுப்பியது அறிவார்ந்த தளத்திலும்விவாதிக்கமுடியும்.உணர்வு பூர்வமாகவும்விவாதிக்க முடியும்! உண்மையோ,பொய்யோ! "தேவனே! என்னை ஏன் கைவிட்டீர்" என்று ஏசு சொன்னதாக எழுதியவன் எவ்வளவு பெரிய சிந்தனையாளன் என்பது சிலிர்க்கவைக்கும் உண்மை! கொண்டாட முடியுமா? என்ற கேள்வி பல பதிவர்களை தூங்கவிடாமல் செய்யும் கேள்வி! கேட்டு நீர் தூங்கப்போய் விட்டீர்! என் போன்ற கிழடு கட்டைகள் விடைக்காக காத்திருக்கிறோம்!!!---காஸ்யபன்!

    ReplyDelete
    Replies
    1. இது இது இதுதான் தோழர் நீங்கள். உங்களது ஒவ்வொரு பின்னூட்டமும் கூடுதலான தகவல்களை கொட்டும். இப்போதும் அப்படியே.

      மிக்க நன்றி தோழர்

      Delete
  15. ஆசையைவென்றால் அகிலம் உனக்கு என்பதுபோல , மரணபயத்தை வென்றால் வாழ்க்கை உனக்கு என்று புரிய வைத்துள்ளீர்கள். அதேபோல சாவும் நாள் தெரிந்தால் , வாழும் நாள் நரகமாக தெரியும் , இதையெல்லாம் மனபக்குவம் அடைந்தவர்கள் கன்டிப்பாக ஏற்றுகொள்வார்கள்.

    உங்கள் இந்த கருத்தும் , பதிந்த விதமும் அருமை சார்.

    ReplyDelete
  16. மரணம் தவிர்க்க இயலாதது. சக மனிதன் குறித்த புரிதலோடும் , அக்கறையோடும் , கவலையோடும் அவனுக்கானதுமாக நம் வாழ்க்கை செலவிடப் பட்டிருக்குமானால் நமது மரணத்தையும் தாண்டி நீளும் நமது வாழ்க்கை."........Yes I aggree

    ReplyDelete
  17. //'மரணம் குறித்த
    பயம் போய்விடும்
    ஒரே ஒரு முறை
    செத்துப் பார் "// என்பது எதார்த்தமான உண்மை. வணக்கம் தோழர்.அனைத்தும் உண்மைதான். அற்புதமாய பதிவிட்டிருக்கிறீர்கள். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..மரணத்தைக் கொண்டாடும் இனிய உள்ளத்துக்கு. உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்று நிலையாமையில்தான் வள்ளுவர் கூறியுள்ளார். ஆனாலும் அது நிதர்சனமான உண்மைதான், அறிவியலிலும் கூட அதுதான் நிகழ்கிறது. . உறங்கிய பின், விழிக்கும் வரை என்ன தெரியும் நமக்கு. இறந்த பின்னும் எதுவும் தெரியாது.நானும் மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பி இருக்கிறேன். பெரிதாக பயம் ஏதும் இல்லை. மரணம் குறித்து என்னுள் இருக்கும் உணர்வு, ஆஹா, நாம் செத்துட்டா, இந்த உலகம் நம்மை மறந்துடுமே. என்றுதான்.
    //பகத்தோ இவை அனைத்தையும் கடந்து சாகும் வரைக்கும் ஒரு வசீகரமான புன்னகையை தன் உதடுகளில் உலரப் போட்டிருந்தான். அந்தப் புன்னகைக்கு நிகரான ஒரு ஆயுதம் இதுவரைக்கும் உலகின் எந்த உலையிலும் தயாராகவில்லை.// இதோ இந்த வீரப் புதல்வனின் உணர்வுதான் அனைவருக்கும் தேவை. என் ஆத்மார்த்தமான் நணபரும், எனக்கு அரசியல் வழிகாட்டியும், ஆசானுமாகிய தோழர் ஒருவர் மூளைப் புற்று நோய் வந்து மரித்துப் போனார். அந்த ஒன்றரை ஆண்டுகளும், இந்த உலகத்துக்க்கு, உடன் இருப்பவர்களுக்கு, மாணவர்களுக்கு தன் மூளையில் உள்ளதை அள்ளி வழங்கினார் அமுதமாய்.நகைச்சுவையாய் பேசும் வல்லமையும்,ஆளுமைத் திறனும் அதிகம் உள்ளவர். மருத்துவமனையிலும்கூட மருத்துவ மாணவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுத்தார். ஆனால் உடலிலிருந்து உயிர் பிரியும் தருணம் வரை..ஐயோ சாகப்போகிறேனே, என் மனைவிக்கு அதைழ்ச் செய்யணும், என் மகனைப்பார்க்கணும், அவருக்கு இப்படி செய்யணும், சொத்தை இப்படி பங்கு போடணும் என்று மறந்தும் சொன்னதில்லை. மரணம் வருகிறது என்று தெரிந்தும், அதைப்பற்றி யாருடனும் எப்போதும்,எதுவும் பேசியதும் இல்லை.மரணத்தைப் பற்றியோ, இறந்து விடுவேனோ என்றும்கூறியதில்லை.மருத்துவமனையின் செவிலியர்களையும் கூட தன் நகைச்சுவையால், ஏசுவை நக்கலடித்துப் பேசி சிரிக்கச் செய்த மாமனிதர். அற்புதமான தோழர்.. அருணந்தி..

    ReplyDelete
  18. ஆசையைவென்றால் அகிலம் உனக்கு என்பதுபோல , மரணபயத்தை வென்றால் வாழ்க்கை உனக்கு என்று புரிய வைத்துள்ளீர்கள். அதேபோல சாவும்நாள் தெரிந்தால் , வாழும் நாள் நரகமாக தெரியும் , இதையெல்லாம் மனபக்குவம் அடைந்தவர்கள் கன்டிப்பாக ஏற்றுகொள்வார்கள். உங்கள் இந்த கருத்தும் , பதிந்த விதமும் அருமை சார்.

    ReplyDelete
  19. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  20. பிறர் நலனுக்காக உழைத்து, இறந்தும் உலகம் உள்ளவரை உயிர் வாழும் மாந்தர்களின் வாழ்வனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள இருப்பது பலப்பல!

    ReplyDelete
  21. மரணம் என்றாகிலும் கண்டிப்பாக வரத்தான் போகிறது...அதற்கும் நாம் வாழும் வாழ்வை ஏதேனும் ஒரு விதத்தில் அர்த்தமுள்ளதாக்க முயல்வோம்..

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள் எழில். மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...