Friday, May 21, 2010

பள்ளியெனும் பழக்காடு



வெள்ளக் கோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் சுமார் பத்து கிலோ மீட்டர் பயணித்தால் அமராவதி ஆறு. அதன் பாலத்தைக் கடந்தவுடன் வலது பக்கமாக திரும்பும் சற்றே குறுகலான சாலையில் மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாகவே இருக்கிறது பட்டத்திப் பாளையம்.

பேருந்துகளே வராத அந்தக் கிராமத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம், பார்க்கிற இடமெல்லாம் வண்ண வண்ணமாய், அழகாய், நேர்த்தியாய் அன்றைய நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரத் தட்டிகள். நிகழ்விடம் வரைக்கும் சாலையின் இரு மருங்கும் கம்புகளை ஊன்றி குழல் விளக்குகளை எரிய விட்டிருந்தார்கள். அறுபது எழுபது இரு சக்கர வாகனங்கள் ஒழுங்கான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்தன. ஏழெட்டு கார்கள் ஓரமாய் ஒழுங்காய் நிறுத்தப்பட்டிருக்க அந்த சின்னப் பாதையில் மாட்டு வண்டிகளும் டிராக்டர்களும் எந்த வித இடயூருமின்றி பயணித்தன

கம்பீரமான பெரிய மேடை. மேடையின் முதுகு சுவராய் நிகழ்வுகளை சொல்லும் கலையழகு பொங்கிக் கசியும் வண்ண பேனர். நன்கு தண்ணீர் தெளிக்கப் பட்டு மண் வாசனை கமழும் திடலில் முன்னூருக்கு குறையாத எண்ணிக்கையில் நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. காம்பௌண்ட் வாசலில் நின்று வருபவர்களை கைகூப்பி வணங்கி குங்குமம் சந்தனம் கல்கண்டு கொடுத்து புன்னகையோடு ஒரு குழு வரவேற்றார்கள். வந்த அணைவருக்கும் சுண்டலும் தேனீரும் ஒரு குழு வழங்க இன்னொரு குழு காலி காகித தட்டுகளையும் குப்பிகளையும் சேகரித்து தொட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள்

ஒரு கலை இரவுக்குரிய அத்தனை தயாரிப்புகளோடும் அம்சங்களோடும் நகர்ந்து கொண்டிருந்த விழா ஒரு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்றால் வியப்பாய்தான் இருக்கும். இருபத்தி மூன்றே குழந்தைகள், அதிலும் பெரும்பகுதி முதல் தலைமுறை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்பது வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடும்.

"நீங்க படித்த பள்ளிதானே, சார்? காலையிலிருந்து வேட்டியோடு வந்து பிள்ளைகளோடு பிள்ளைகளாய் தரையில் அமர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்மையாய் கவனித்து கொடி ஒட்டி, நிகழ்ச்சிதொடங்கும் முன் அவசர அவசரமாய் வீடு போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் அவர்களை கேட்டபோது சொன்னார் "அப்படி இல்ல எட்வின், என்னை மனுஷனா செதுக்கிய பள்ளி"


ஒரு நாள் நள்ளிரவுக்கு கொஞ்சம் முந்தி செல் ஒலித்தது. ஒன்று விஷ்ணுபுரம் சரவணனாக இருக்க வேண்டும் அல்லது கார்மேகம் சாராக இருக்க வேண்டும். கணிணியிலிருந்து சன்னமாய் விலகி செல்லை எடுத்தால் சார்தான்.

"எங்க கிராமத்துல நான் படித்த துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா. ஒரு நல்ல நாடகக் கலைஞன் வேண்டும். அவர் மேடையை விட்டு இறங்கும் வரைக்கும் குழந்தைகள் கொண்டாடிக் குதூகலித்து கூத்தாட வேண்டும்." "பிள்ளை பிடிக்கிற குழந்தைகளுக்கான கலைஞன் இருக்கான். மேடையை விட்டு அவன் இறங்கும்போது பிள்ளைகள் அவனோடே கிளம்பத் தயாராகி விடுவார்கள். ஆனால் அவனும் அவனது குழுவும் பாண்டியிலிருந்து வரணுமே சார்"

"அது ஒரு பிரச்சினையே இல்ல எட்வின். பாத்துக்கலாம்,குழந்தைங்க கல கலன்னு சந்தோசமா இருக்கனும் அவ்ளோதான். ஆமாம் யாரு?"

"பாண்டியிலிருந்து வேலு சரவணன் ."

"ஓஓஓ தெரியும் தெரியும், 'மக்கள் தொலைக் காட்சியில்' வருவாரே அவர்தானே? இந்தக் கிராமத்துக்கெல்லாம் வருவாரா?"

"வருவார்."

"அப்ப பேசிடுங்க"

அப்படியாகப் பேசிக் கூட்டி வரப்பட்ட வேலு சரவணன் உள்ளே ஒப்பனை செய்து கொண்டிருந்த போதுதான் நானும் சாரும் வேலு சரவணனை எப்போது மேடை ஏற்றுவது, மேடையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து நீர் முட்டவே கழிவறை எங்கிருக்கிறது என்று சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி நெளிவதை புரிந்து கொண்ட சார் என்ன பிரச்சினை என்றார். தயங்கித் தயங்கி ஒரு வழியாய் சொல்லவும் "இதுக்குத்தானா இவ்வளவு தயக்கம்?" என்றவர் "நாம் இப்போது நிற்பதே கழிவறைதானே" என்றார்.

புடனியில் அரை வாங்கியது போல் இருந்தது. ஏறத்தாழ அரைமணி நேரமாக அங்குதான் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். கழிவறை என்பதற்கான அறிகுறியயே இல்லை. அங்கு நின்று கொண்டுதான் தேநீர் குடித்திருக்கிறேன். அவ்வளவு சுத்தம். மூக்கைப் பிடிக்காமல், முகத்தை சுளிக்காமல் அதற்குப் பிறகும் அங்கு நின்றுதான் பேசிக் கொண்டிருந்தோம்.

பெரிய பெரிய பள்ளிகளில், வெளிப்படையாக பேசி விடுவதெனில் கோடீஸ்வரக் குழந்தைகள் கொட்டி அழுது படிக்கும் தனியார் சர்வதேசப் பள்ளிகளில் காணக் கிடைக்காத சுத்தம், உள்மறைந்து கிடக்கும் ஒரு சிற்றூரில், ஏழைக் குழந்தைகளே பெருமளவு படிக்கும் ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் கழிவறையில் எப்படி சாத்தியம்?


கேட்டே விட்டேன்.

"நம்ம பள்ளிக் கூடம்"ங்கிற அக்கறையும் அர்ப்பணிப்பும் அதோடு கொஞ்சம் திட்டமிடலும் இருந்தா எல்லாமே சாத்தியம்தான் சார்," சொல்லிக்கொண்டே மேடையிலிருந்து கீழே இறங்க வேண்டிய குழந்தையை இறக்கி விட நகர்ந்துவிட்டார் அந்தப் பள்ளியின் உதவி ஆசிரியர் திரு. பொன்.ராஜ்

வேலு சரவணன் தயாரா எனப் பார்க்கலாம் என உள்ளே நுழைந்தால் ... இத்தனையா? எத்தனை என்று எண்ணிதான் பார்த்து விடுவோமே என்று எண்ணிப் பார்த்தால் ஒன்பது கணிணிகள் ஒவ்வொன்றும் தனித் தனியே யூ பீ எஸ் உடன் இணைக்கப்பட்டு. ஆச்சரியம் கண்களிலிருந்து முழுதாய் கழன்று போவதற்கு முன்னமே மேடையில் இன்னொன்று. ஆண்டறிக்கையை மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் வாசிக்க ஆரம்பித்து இருந்தான். ஒரு ஸ்டூலில் அவனை ஏற்றி ஃபுல் ஃபிட் ஸ்டேண்டிற்கு அவனை சமப் படுத்தி இருந்தார்கள். இந்த வேலை எவ்வளவு கடினம் என்பது பல பள்ளிகளில் "வேண்டாம் விடுங்கப்பா" என்று பாய்ந்து ஓடும் ஆசிரியர்களின் வேகத்தைப் பார்த்தாலே புரியும். எந்தப் பயமும் இன்றி பொடிசு சும்மா பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு விஷயமாய் அவன் முடிக்கும் போதும் யுவராஜின் "ஆறு"கள் கண்டு கொந்தளிக்கும் ரசிகர்களைப் போல் கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது.

"ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு அமெரிக்காவில் உள்ளது போல் மலர்களின் பெயரை சூட்டுங்கள்." தங்கள் குழந்தையின் நியாயமான கோரிக்கையை மக்கள் மிக நீண்ட கரவொலியால் ஆமோதிக்கிறார்கள். ஆபத்தான விஷயங்களில் எல்லாம் ஒன்...டூ...த்ரீ என்று எல்லா எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவை பின் பற்றும் அரசியல் வாதிகள் பிஞ்சுகளின் கோரிக்கையை அமல் படுத்த வேண்டும்.

"எங்கள் பெற்றோர்களும் பெரியோர்களும் கேஸ் அடுப்பு வாங்கித் தந்து ஈர விறகோடும் புகையோடும் அல்லல் படும் லட்சுமி அக்காவை காப்பாற்ற வேண்டுமாய்" அவன் சொன்ன போதும் அனைவரும் ஆர்ப்பரித்தனர். நாடு முழுவதும் சத்துணவு சமையல் கூடங்களில் அம்மாக்களும் , அக்காக்களும் ஈர விறகோடும் புகையோடும் படும் அல்லல்களுக்கு ஒரு விடிவு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் நாமும் கை தட்டினோம்.

பரிசளிப்பின் போது நாங்கள் வியப்பின் எல்லை தாண்டினோம். ஒவ்வொரு குழந்தையும் ஐந்தாறு பரிசுகளாவது அள்ளிச் சென்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒன்று அல்லது இரண்டு முதல் பரிசுகளாவது வாங்கினர்.


எங்களது வியப்பை துடைக்க முன் வந்தார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.கலைச்செல்வி." கொஞ்சம் மாத்தி யோசிச்சா வழி பிறக்கும். எல்லாரும் போட்டிய வச்சுட்டு யாரு முதல் பரிசு என்று தீர்மானிப்பார்கள். நாங்க இந்தப் புள்ள முத பரிசு வாங்க என்ன போட்டி வைக்கலாம்னு யோசிச்சோம். பலன் கிடச்சுது."

"எதுக்குமே லாயக்கு இல்லாத.."

முடிக்க விடாமல் வேக வேகமாய் இடை மறித்தார்கள் " அப்படி யாரும் உலகத்துல இல்லீங்க சார். ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. உடுக்கு அடிக்கிறது அல்லது ஓணான் பிடிக்கிறது. இப்படி அவனுக்கு தோதான ஏதாவது ஒன்னு வச்சு அவன பரிசு வாங்க மேடை ஏத்திடுவோம்"
ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் தான் பார்த்த மிக நல்ல பள்ளி இது என்றும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன் வர வேண்டும் என்றும் மிக சரியான வேண்டுகோளை முன் வைத்தார்.

வந்திருந்த அணைவருக்கும் பொங்கல், பூரி, தோசை, கம்மங்கூழ், இனிப்பு என விருந்து. கூலித் தொழிலாளி முதல் பெரிய செல்வந்தர் வரை அணைவரும் ஒன்றாய் சாப்பிட்டு விட்டுதான் சென்றனர். நிதி மற்றும் அணைத்தும் எப்படி சாத்தியப் படுகிறது?

"கோயில் திருவிழாவுக்கு மாதிரியே ஊர்க்காரங்க பூராம் ரெண்டு வாரத்துக்கு நேரங் கிடைக்கறப்ப எல்லாம் இங்கேயே தானே கிடந்து உழலுவோம்" பரிமளம் கூற்றில் கிடைத்தது வெற்றியின் ரகசியம்.

எத்தனையோ பள்ளிகளுக்கு தான் சென்றிருப்பதாகவும் இது போன்ற ஒரு பள்ளியை இப்போதுதான் முதன்முறையாக பார்ப்பதாகவும் , தன் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத பள்ளியென்றும் வேலு சரவணன் சொன்னார்.

நன்றியுரை சொல்ல வந்த குழந்தை சொன்னாள்
"ஊரோரம் கிளிக்காடு
ஒவ்வொன்றும் பஞ்சவர்ணம்
பஞ்ச வர்ண கிளி உறங்க
பழத்தாலே கூடு செஞ்சோம்"

தங்கள் குழந்தைகளுக்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடத்தை பழக் கூடாக மாற்றி , நாடு முழுமையும் சுமை தூக்கிகளாகவே பிள்ளைகள் இருக்கையில் தங்கள் பிள்ளைகளுக்கு சிறகு கட்டி பறக்க வைத்து அழகு பார்க்கிறார்கள் ஊர்க் காரர்களும் ஆசிரியர்களும்.

நானும், வேலு சரவணனும், விஷ்ணுபுரம் சரவணனும் அழ்தப் பள்ளியை பற்றியே அசை போட்டுக் கொண்டு வந்தோம்

கல்வியும் மருத்துவமும் பொதுப்பட வேண்டும். தமிழ் நாட்டில் தோராயமாக 34500 ஊ.ஒ.துவக்கப் பள்ளிகளும், 10000 ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிகளும், 4500 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. எழுபது சதம் மாணவர்கள் இவற்றிலும் . பத்து சதம் மாணவர்கள் அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளிலும் படிக்கிறார்கள். இந்த பள்ளிகள் எல்லாம் பட்டத்திப் பாளையம் பள்ளியைப் போல் பழக்காடுகளாக மாறிவிட்டால் பொதுக் கல்வி தானாய் வெற்றி பெரும்.

என்ன செய்யலாம்?
நன்றி: "கல்கி" ( இதன் பெரும்பகுதி கல்கியில் வெளியானது)

2 comments:

  1. தமிழகமெல்லாம் பட்டத்திப் பாளையம் பெருக வேண்டும் என்று விரும்பவும், வாழ்த்தவும்தான் முடிகிறது.. என்ன செய்ய???? மிக அற்புதமான ஒரு பள்ளியை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி திரு எட்வின் அவர்களே....

    ReplyDelete
  2. நெசத்துக்கும் மிரண்டே போனேன் ஆதிரா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...