Saturday, May 2, 2015

21 வட்டிக்கு எதற்கு மீட்டர்


இடம்விட்ட மீனைப் போலும்
எரிதணல் மெழுகுபோலும்
படமெடுத் தாடுகின்ற
பாம்பின் வாய்த்தேரை போலும்
தடங்கொண்ட ராமபாணம்
செருக்களத்துற்றபோது
கடன்பட்டார் நெஞ்சம்போல
கலங்கினான் இலங்கை வேந்தன்

என்கிறார் அருணாசலக் கவிராயர்.

ராமர் விட்ட அம்பு குறிபிசகாமல் ராவணனை அடைகிறது. சாக வீழ்கிறான் ராவணன். மரணத்திற்கும் அவனுக்கும் நிமிடங்களே மிச்சமிருந்த தருணத்தின் அவனது வலியை, ரணத்தை கவலையை குறித்து சொல்லும்போது கவிராயர் இப்படிக் கூறுகிறார்.

நீர் விட்டகன்ற மீனைப் போலவும், தணலில் விழுந்த மெழுகு போலவும் பாம்பின் வாயில் சிக்கிக் கொண்ட தேரையைப் போலவும் என்று சொன்னாலே போதும் அனைத்தையும் இழந்த நிலையிலான அவனது மனநிலையப் புரிந்து கொள்ள. இதையெல்லாம் விட வலிமிகுந்த கவலையோடு இருந்தான் என்பதைச் சொல்வதற்காகத்தான்கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்என்று சொல்கிறார்.

ஆக, வேறு எதைவிடவும் பெருங்கொடூரமான கலக்கம் என்பது சாகும் தருவாயில் ஒருவனுக்கு தன் கடன் குறித்த நினைவு கொண்டுவரும் கலக்கம்தான் என்று உணர முடிகிறது. எனவேதான் ராவணன் தனது மரண நொடிகளில் அனுபவித்த வேதனையின் அழுத்தத்தை சொல்ல வரும்போது கடன்பட்ட ஒருவன் படும் வேதனையை ஒத்திருந்தது அவனுடைய வேதனை என்று கூறுகிறார்.

சாக்ரடீஸ் தனது மரணத் தருவாயில் தான் தனது பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து கடனாகப் பெற்றிருந்த ஒரு கோழியைப் பற்றிய கவலையோடு இருந்ததாகவும், அருகிருந்த தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் பக்கத்து வீட்டில் தன் சார்பில் ஒரு கோழியைக் கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் எங்கோ படித்திருக்கிறேன்.

கடன் என்பது ஒரு மனிதனை உயிரோடும் இருக்க விடாது, சாகவும் விடாது. மொத்தத்தில் ஒரு மனிதனை உயிரோடே உயிரற்றவனாய் முடக்கிப் போடும்.

சென்ற ஆண்டின் இறுதியில் கடன் ஒரு வல்லரசையே சில வாரம் முடக்கிப் போட்டது. அமெரிக்காவின் கஜானா அந்தக் காலகட்டத்தில்.சுத்தமாய் காலியானது. அந்தக் காலக் கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூட காசில்லாத ஒரு பரிதாப நிலையினை அது அடைந்திருந்தது. இது ஒன்றும் அமெரிக்காவிற்கு புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் இது போன்றுதான் நிகழும் ஆனால் உடனே கடன் வாங்கி பிரச்சினையை சரி செய்து கொள்ளும். சென்ற ஆண்டு அப்படி கடன் வாங்குவதற்கு ஒபாமாவிற்கு சில நிபந்தனைகளைப் போட்டது. அவர் முறுக்க, எதிர்க் கட்சிகள் இன்னுமாய் முறுக்க தேவையில்லாத துறைகளை இழுத்து மூடுவது என்ற முடிவினை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை ஒபாமாவிற்கு. பிறகு ஒரு கட்டத்தில் அரசு எந்திரம் இந்த வகையில் முடங்குவது என்பது தங்களுக்கும் பாதகமான சூழலையே கொண்டுவந்து சேர்க்கும் என்பதை அமெரிக்காவின் எதிர்கட்சி உணரத் தலைபட்டது.

மக்கள் இருவர்மீதும் சமாளவு கோவத்தில் இருப்பதை இருவருமே உணர ஆரம்பித்தார்கள். ஏதோ ஒரு வகையில் தங்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அமெரிக்கா கடன் வாங்கியது. உலகப் பொருளாதாரம் தேக்க நிலையிலிருந்து ஒரு வழியாக மீண்டது.

ஆக கடன் என்பது தேசங்களையும் ஆட்டிவைக்கிற ஒரு ஆகப் பெரிய சக்தி. இயங்கப் பணமற்று அல்லது தொழில் நடத்தப் பணமற்று முடங்கிக் கிடக்கிற தனி மனிதனை கடன் எப்படி தொழில் நடத்த உதவுகிறதோ அதேமாதிரி இயங்கப் பணமற்று முடங்கிக் கிடக்கிற நாடுகளையும் கடன்தான் மீட்டெடுத்து இயங்க வைக்கிறது.

நமது கேள்வியெல்லாம் அமெரிக்காவிற்கு கடன் கொடுக்குக்கும் போது கையிலெடுக்கும் அதே அளவுகோலைத்தான் மற்ற நாடுகளுக்கு கடன் கொடுக்கும்போதும் உலகவங்கி கையெடுக்கிறதா?

கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லலாம் இல்லையென்று. இன்னும் சொல்லப் போனால் அமெரிக்கா திணிக்கும் நிர்ப்பந்தங்களை ஏற்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே மற்ற நாடுகளுக்கு கடனை வழங்க முன்வருகிறது உலக வங்கி.

இதே மாதிரிதான் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் வங்கிகள் இயங்குகின்றன. விலக்குகள் உள்ளனவா என்று தெரியவில்லை. இருக்கலாம், இருந்தாலும் விலக்குகள் உலக இயல்பை தீர்மானிக்கப் போவதில்லை.

டாட்டாவிற்கு ஒரு அளவுகோலும் உழைப்பவனுக்கு ஒரு அளவுகோலும் என்பதுதான் பெரும்பான்மை இந்திய வங்கிளின் வாடிக்கையாக உள்ளது.

பொதுவாக ஒரு லட்சம் ரூபாய்க்கான சொத்தினை பிணையமாக பதிவு செய்து கொடுத்தால் அப்படிக் கொடுப்பவருக்கு 75000 ரூபாய் வரை கடன் கொடுக்கலாம் என்பதுதான் வங்கிகள் பின்பற்ற வேண்டிய ஒரு பொது விதி.

ஒரு சாதாரணக் குடிமகன் ஒரு லட்சம் ரூபாய்க்கான சொத்திற்கான ஆவணங்களோடு வங்கியை அணுகினால் போதுமான அளவு இழுத்தடித்தபின் எப்படி திருப்பி செலுத்த இயலும் என்பதற்கான என்ற விவரங்களோடு வரச் சொல்லுவார்கள். கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி, வட்டாட்சியர் என்று அலையோ அலை என்று அலைந்து கடன் வாங்கி அழுது கேட்ட ஆவணங்களோடு போனால் இன்னொன்று கேட்பார்கள். இப்படியே அவர்கள் திருப்திபடும் வரைக்கும் இழுத்தடித்தபின் போகட்டும் என்று 50000 ரூபாயை அனுமதிப்பார்கள்.

இதுவே டாடா கேட்பதாக இருக்கிறார் என்று தெரிந்தாலே போதும். அவர் வங்கிக்கு வரத் தேவை இல்லை. வங்கியே அவரது இருப்பிடத்திற்கு போகும். அவரது வீடு தேடியே அதிகாரிகள் வருவார்கள். அணைத்தும் சரிகட்டப் படும். இரண்டு லட்சம் ரூபாய் பொருமானமுள்ள சொத்துப் பிணையின் பேரில் பத்து லட்சம் ரூபாய் வழங்குமளவிற்கு வங்கியின் பெருந்தன்மை நீளும்.

ஆக பணம் உள்ளவனுக்கே கடனைத் தருகிறார்கள் வங்கிக்காரர்கள். கேட்டால், பணம் உள்ளவரிடம் கடன் கொடுத்தால் கடன் ஒழுங்காகத் திரும்பிவிடும். வேலைக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அப்படித்தான் வாங்கிய நடுத்தர மற்ரும் பெருமுதலாளிகள் வாங்கிய கடனை ஒழுங்காக் கட்டுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
வராக்கடன் பட்டியலில் உள்ளோரின் பெயர்ப் பட்டியலைநீங்கள் வெளியிடுகிறீர்களா அல்லது நாங்கள் வெளிடட்டுமா? என்று பொதுத் துறை வங்கி ஊழியர்களின் சங்கங்கள் எத்தனையோ முறை கேட்டும் போராடியும் எந்தப் பலனும் இதுவரை ஏற்பட்டிருப்பதாத் தெரியவில்லை. இதில் விநோதம் என்னவென்றால் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் படிப்பை முடித்த அடுத்த மாதமே வட்டியைக் கட்டவில்லை என்பதற்காக வங்கியை ஏமாற்றியவர்கள் போல தட்டிகளை வைத்ததுண்டு. ஆனால் பல கோடிகளை திருப்பாமல் இருக்கும் பெரு முதலாளிகளை இவர்கள் கண்டு கொள்வதேயில்லை.

இவை எல்லாம்கூட பரவாயில்லை. பிணையாகக் கொடுப்பதற்கு ஏதுமற்ற தள்ளுவண்டி வியாபாரிகளும், தட்டுக்கூடை பழ வியாபாரிகளும், நடைபாதை வியாபாரிகளும், சமயபுரம் போன்ற கோவில்கள் உள்ள ஊர்களில் ஒரு சின்னத் கூடைத்தட்டை கழுத்தில் மாட்டிக் கொண்டு உப்பு மற்றும் கண்ணடக்கம் போன்றவற்றை விற்கும் பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சிகளான வியாபாரிகளின் நிலையை என்னவென்று சொல்வது?

அவர்களை வங்கிகள் மனிதர்களாகவே மதிப்பது இல்லை. எனவே அவர்கள் வட்டிக்கு விடும் தனியார்களை அணுக வேண்டியவர்களாக உள்ளனர். ஒரு கால கட்டம் வரைக்கும் இரண்டு வட்டி மூன்று வட்டிக்கு தந்து கொண்டிருந்தார்கள். அதில் வட்டி மட்டுமே பெரும்பாலும் திரும்புவதற்கான சாத்தியங்களே தென்பட்டன.

எனவே வட்டிக்கு விடுபவர்கள் கொடுக்கல் வாங்களுக்கான நடைமுறையை மாற்றினர். தின வசூலுக்கு மாறினர். அதாவது 8750 ரூபாயைத் தருவார்கள். தினமும் 100 ரூபாய் வீதம் நூறு நாட்களில் பத்தாயிரம் ரூபாயைத் திரும்பக் கட்ட வேண்டும். ஒன்றிரண்டு நாட்கள் தவறுகிற பட்சத்தில் அபராதம் தீட்டியவர்கள் ஏராளம். இது நல்ல வருவாயைத் தரவே இன்னும் ஆசைப்படத் தொடங்கினார்கள். வடிவத்தை மாற்றினார்கள். கந்து வட்டி பிறப்பெடுத்தது. பைனான்ஸ்காரர்கள் கந்துக்காரர்கள் ஆனார்கள்.

இப்போது காலையில் 900 ரூபாய் தருவார்கள். தட்டுக்கூடை வியாபாரி அதை எடுத்துக் கொண்டு போய் மார்க்கட்டில் பழங்களோ வேறு எதுவோ வாங்கி வந்து நாள் பூராவும் வெய்யிலென்றும் பாராமல் மழை என்றும் பாராமல் விற்று மாலையில் 1000 ரூபாயாகத் தர வேண்டும். ஒருக்கட்டம் வரைக்கும்தான் இதில் இவர்கள் திருப்திப் பட்டார்கள். பிறகு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தார்கள். காலையில் 750 ரூபாய் தருவார்கள். மாலையில் 1000 ரூபாயாகத் தரவேண்டும். இது மீட்டர் வட்டி என்றழைக்கப் பட்டது. பிறகு இது கிலோமீட்டர் வட்டி என்று நகர்ந்தது. இப்போது காலையில் 500 ரூபாய் தருவார்கள். மாலையில் 1000 ரூபாய் தர வேண்டும்.

இருபது ஆண்டுகள் வரை வட்டி வேண்டாம், அதன் பிறகு நூறு ரூபாய்க்கு இருபது பைசா வட்டி என்கிற அளவில் வங்கிக் கடன் கிடைக்கிற இதே தேசத்தில்தான் ஒரு தட்டுக்கூடை வியாபாரி காலையில் 1000 ரூபாய் வாங்கி பொருளாக்கி விற்று மாலைக்குள் மீட்டர் கந்துக்காரருக்கு 2000 ரூபாயை அழுது மிச்சத்தில்குடும்பத்தின் வயிறுகளைக் கழுவ வேண்டும்.

இவற்றை சாத்தியப் படுத்த வேண்டுமெனில் இவர் தனது வாடிக்கையாளர்களிடம் வழிப் பறிக் கொள்ளைக்காரனைப்போல நடந்து கொள்ள வேண்டும். 10 ரூபாய் பொருமானமுள்ள பொருளை 30 ரூபாய்க்கு விற்றால்தான் இது ஓரளவிற்கு சாத்தியம். சொந்தப் பணத்தில் இவர் செய்யும் வியாபாரத்தை செய்கிற ஒருவர் 12 ரூபாய்க்கு அதை விற்க முடியும். எனில், இவரது வியாபாரம் படுத்துவிடும்தானே. அப்படிப் படுத்துவிடுகிற பட்சத்தில் இவரால் வாங்கிய கடனை அடைக்க முடியாது.

இனிதான் அவருக்கு கந்து வட்டியின் கொடுமை புரிய வரும். உச்சமாக குடும்பத்தோடு தற்கொலைகள் என்பதுவரை அது இன்றளவும் நீண்டு கொண்டுதானிருக்கிறது. நான்கு வயிறுகளை கழுவுவதற்கு திருடாமல் பிச்சை எடுக்காமல் சம்பாரிக்க நினைக்கும் ஒருவர் கந்து வட்டியில் விழும்போது அதன் விலை நான்கு உயிர்கள் என்றாகிறது.

இதே மீட்டர் வட்டி திரப்படத்துறையிலும் மூக்கை நீட்டியது. ஒரு மிகப் பெரிய நடிகரின் அண்ணன் மாப்பிள்ளையும், மிகப் பிரபலமான நடிகையின் கணவரும் மிக மிக பிரபலமான இயக்குனருமான ஒருவரின் அண்ணனான மிகப் பெரியத் தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்டதுகூட இந்தக் கந்துவட்டிக் கொடுமையினால்தான் என்ற ஒரு கருத்தும் பரவலாக உண்டு.

இறுதியாய் நாம் இரண்டு விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

1 கந்துவட்டித் தடுப்புச் சட்டம்
************************************************
தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு கந்துவட்டித் தடுப்புச் சட்டம் என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தை ஒழுங்காக நடைமுறைப் படுத்தினாலே போதும். கந்து வட்டி அட்டூழியங்கள் முற்றிலுமாக மறைந்து போகும். ஆனால் நடைமுறையில் அது கனவாகவே உள்ளது.

23.09.2013 அன்றைய தி இந்து நாளிதழில்கந்து வட்டி கும்பல் பிடியில் திணறும் திருப்பூர்என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. சிறு வியாபாரிகளும் உழைக்கும் மக்களும் கந்துவட்டிக் கும்பலிடம் சிக்கிக் கொண்டு படும் பாட்டினை அது வெளியிட்டிருந்தது. அதைப் படித்த உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை கிருபாகரன் அவர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு ஒரு விண்ணப்ப மனுவினைத் தருகிறார். அதில், அந்த செய்தியையே பொதுநல வழக்காகக் கருதி நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்காக ஏற்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டார். உயர்நீதிமன்ற உதவிப் பதிவாளர் ரிட் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மாண்பமை கவுல் மற்றும் மாண்பமை சத்திய நாராயணா அவர்கள் முன்னிலையில் வருகிறது. இறுதியாக கீழ்க் கண்டவாறு தீர்ப்பு வருகிறது.

கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர். “கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி வசூலிப்போர் போலீஸ் கூட்டை தடுக்கவும் மாவட்ட, வட்டார அளவில் கமிட்டிகளை ஏற்படுத்துவது பற்றி அரசு ஆராய வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெறலாம்.
மேலும், கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான சாத்தியம் பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி புகார்கள் தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றோர் பற்றிய விவரங்களைக் கொண்ட அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், “இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர் பான அறிக்கையை நீதிமன்றத் தில் தாக்கல் செய்ய வேண்டும்
இதை ஒழுங்காக செய்தாலே போதும்,. கந்து வட்டிக் கொடுமைகள் ஓரளவிற்கு முற்றாய் நீங்கும். ஆனால் இது போதுமா? கந்து வட்டிக் கொடுமை ஒழிந்தால் போதுமா? இதுவும் இல்லாமல் எப்படி இத்தகைய விளிம்பு நிலை மக்கள் பிழைப்பார்கள். இப்போது நாம் இதற்கான மாற்று ஏற்பாடுகளைத் திட்டமிட வேண்டும்.
2 வங்கித் தினக்கடன்
*********************************
இப்படி ஏதுமற்ற தெரு வியாபாரிகள் ஊருக்கு நூறு பேர்தான் இருப்பார்கள். இவர்களது மொத்தத் தேவை நூறு கோடிகூட கிடையாது. ஆளுக்கு பத்தாயிரம் கிடைத்தால் போதும். ஆக மொத்தம் ஒரு ஊருக்கு பத்து லட்சம். எந்த நிபந்தனையும் இன்றி இவர்களுக்கு அது தங்கள் கடமை என்று உணராவிட்டாலும் கருணையோடேனும் செய்தால் போதும். இந்தக் கடனை தினசரியும் வசூலித்துக் கொள்ளலாம். அதற்கொரு ஆளைப் போட்டுக்கொள்வதென்பது வங்கி நடைமுறையில் சாத்தியமே.
ஆட்டோவிற்கு மீட்டர் அவசியம். வட்டிக்கு எதற்கு மீட்டர்?


65/66, காக்கைச் சிறகினிலே மே 2015


அடுத்த நாள் கூட்டத்திற்காக தயாரித்துக் கொண்டிருக்கிறேன். குணங்குடி மஸ்தான் அவர்களைப் பற்றியும் கொஞ்சம் பேசினால் நன்றாக இருக்கும் என்று படுகிறது. மஸ்தானைப் பிடிப்பதற்காக வலையை வீசுகிறேன். அகப்படுகிறார். வாசிக்க ஆரம்பிக்கிறேன். வாசிக்க வாசிக்க ஆச்சரியத்தால் விரிகிறேன், விரிகிறேன், விரிந்து கொண்டே இருக்கிறேன்.

ஆண்டாளும், பட்டினத்தாரும், சித்தரும் சேர்ந்த கலவையாக இருக்கிறார்.

காதலை, காமத்தை அறவே துறந்து கடவுளை அடைய வழிகாட்டும் பட்டினத்தாரும், காதலையும் காமத்தையும் ஊடகமாக்கி அதன்வழி இறைவனை சேரும் வழி சொல்லும் ஆண்டாளும் ஒருங்கே ஒரு மனிதனுள் நுழைந்தால் அவரை குணங்குடி மஸ்தான் சாகிப் என்று சொல்லிவிடலாம் போல.

தாயைத் தவிர ஏனைய பெண்களை நிராகரிக்கும் பாங்கும், எல்லா பெண்களையுமே தாயாகப் பார்ப்பதுவும் குணங்குடியாரின் அடையாளமாக இருக்கிறது. எழுதுகிறார்,

தையலவர்களின் கொங்கையை
 நான்
 பாராத குருடாவது எக்காலம

 மையலெனு மாலை
 மார்பு நிறையப் பூண்ட
 தையலர்கள் எல்லாமென்
 தாயாவது எக்காலம்

வானிடை வாலுமவ் வானவர்க்கு
 மறையவர் வேள்வியில் வகுத்த அவி
 கானிடை திரிவதோர் நரி புகுந்து
 கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
 ஊனிடை யாழிசங் குத்தமர்க்கு
 உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
 மானிடர்க்கென்று பேச்சுப்படில்
 வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே

என்று காதலின்பார்பட்ட காமத்தின் ஊடே பக்தியில் திளைக்கும் ஆண்டாளாகவும் இவரைப் பார்க்க முடிகிறது. ஆண்டாளுக்கேனும் அவர் பெண் அவள் காதலிக்கும் இறைவன் ஆண். ஆனால் குணங்குடியார் அவரது உருவ நம்பிக்கையற்ற மார்க்கத்தின் இறைவனை பெண்ணாகப் பார்க்கிறார். ஆணாதிக்கம் கொஞ்சம் அதிகமாய் உணரப்படு ஒரு சமூகத்தில் அந்தச் சமூகத்தின் இறவை பெண்ணாகப் பார்ப்பதும் அந்தப் பெண்ணை மனோன்மணி என்று விளிப்பதும்உனக்கொரு மணவாளன் கிடைத்து விட்டாலும் என்னை கள்ள மணவாளனாகவேனும் ஏற்றுக் கொள்என்பது மாதிரியும் எழுதுவதற்கு எவ்வளவு பக்குவமும் பெருந்தன்மையும், தைரியமும் வேண்டும்.

இஸ்லாமியக் கவிஞர் ஒருவர் அல்லாவை பெண்ணாக பாவித்து கவிதை எழுதியிருப்பது தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் இருப்பதற்கான வாய்ப்புகளேயில்லை. இது தமிழ் வாசகனுக்கு சரியானபடி போய் சேரவில்லை என்பதுதான் சோகத்தினும் சோகம்.

தாவாரம் இல்லை
தங்க ஒரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடிஎன்கிற மாதிரியோ அல்லதுநட்ட கல்லும் பேசுமோஎன்கிற அளவிற்கோ இல்லை எனினும் இந்த வகையான சித்தர்களை நெருங்கி வருகிறார் குணங்குடியார்.

சொல்லொன்றும் செயலொன்றுமாய் வாழும் மனிதன் எவனாயினும் அவன் குருவேயாயினும் துவைத்து எடுக்கிறார் மனிதர். எழுதுகிறார் பாருங்கள்,

மோட்சம் பெறாமல் போனாலும் போகட்டும்
முடி தரித்து
முடிய வாழ்ந்து
முடிந்து போனாலும் போகட்டும்
குடிக்கக் கஞ்சியின்றி
குண்டிக்குத் துணியின்றி
குருடனாய் போனாலும் போகட்டும்
என்னை அடித்தாலும்
எலும்புகளை ஒடித்தாலும்
அவர்களுக்கு அஞ்ச மாட்டேன்
அந்தக்
கெடுதல் செய்பவர்கள்
என் கடை மயிர்தான்
அப்ப்ப்பா விடக் கூடாது அவரை
**************************************************************************************************************************** 

தொடங்கிய இதழில் இருந்து சரியாகக் கணக்குப் பார்த்தால் இதுவரை இந்த இதழையும் சேர்த்து நாற்பத்தி நான்கு இதழ்கள். ஆமாம் தோழர்களே உங்கள் கைகளில் இருப்பது நாற்பத்தி நான்காவது இதழ். நாங்கள் சைதாப்பேட்டையில் ஒரு பத்துக்கு பத்து அறையில் கூடி இதழை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தபோது தொடர்ந்து கொண்டுவர வேண்டும் என்றுதான் முடிவெடுத்தோம். ஆனாலும் அதை நாங்கள் பிரகடனப் படுத்திய போது ஒரு இலக்கிய இதழை தொடர்ந்து கொண்டு வருவது என்பது சாத்தியமே இல்லை என்று நிறைய பேர் யோசித்தார்கள். ஏன், சிலர் அதை எங்களிடம் சொல்லவும் செய்தார்கள். அவ்வளவு ஏன், உண்மையை சொன்னால் நாற்பத்தியெட்டு இதழ்களையும் தாண்டி எந்தவிதமான தொய்வுமின்றி இப்படி நகரும் என்பதை நாங்களேகூட நினைத்துப் பார்க்கவில்லைதான்.

இவர்களால் ஏலாது இனி. எப்படி நடத்துகிறார்கள் பார்க்கலாம்? என்றுகூட சிலர் இடையிலே யோசித்தார்கள். பூனை கண்களை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டுவிடாது என்பதை காக்கையின் பாய்ச்சல் நிரூபித்திருக்கிறது.

நான் போகிற திக்கெல்லாம் காக்கையே எனக்கு அடையாளமாக இருக்கிறது. காக்கையின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த என்றும் காக்கையின் இணை ஆசிரியர் என்றும், சிலர் ஆர்வக் கோளாறில் காக்கையின் ஆசிரியர் என்றும்கூட அழைப்பிதழ்களில், சுவரொட்டிகளில் ப்லக்ஸ்களில் போடுகிறார்கள். என் அமைப்பு சார்ந்த கூட்டங்களில்கூட அமைப்பில் நான் வகிக்கும் பொறுப்பைவிடவும் காக்கையே எனது அடையாளமாகப் பேசப் படுகிறது. நான் தாய்த் தமிழ்ப் பள்ளியில் பேசிவிட்டு வருகிறேன். அவர்கள் அதுபற்றி முகநூலிலே எழுதுகிறார்கள். அதற்கு பின்னூட்டமாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயளாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் அகில இந்திய பொறுப்பாளர்களில் ஒருவருமான தோழர் நடராசன் அவர்கள் காக்கைச் சிறகினிலே எட்வின் தானே, அவரது பேச்சை பதிவு செய்திருக்கிறீர்களா என்று கேட்கிறார். அவருக்கு என்னை நன்கு தெரியும். பல இயக்கங்களில் அவரது வழிகாட்டுதலை செயல் படுத்திய அவரது தோழமை அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர் என்பது நன்கு தெரியும் அவருக்கு. என்றாலும் எட்வின் என்றதும் காக்கைதான் முன்வந்து நிற்கிறது. இதே நிலைதான் தோழர்கள் முத்தையாவிற்கும் சந்திரசேகருக்கும்.

மூத்த எழுத்தாளர்கள் காக்கையை அங்கீகரிக்கிறார்கள், இளையவர்கள் மரியாதையோடு பார்க்கிறார்கள். காக்கையில் தங்களது ஒரு படைப்பு வருவதைக் கூட பெருமையாகப் பார்க்கிறார்கள். நடந்து முடிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டில் நடந்த பிரதிநிதிகளின் விவாதத்தில் சில தோழர்கள் தங்களது மாவட்டத்து படைப்பாளிகளின் படைப்புகள் காக்கையில் வந்திருக்கும் செய்தியை மிகவும் பெருமையோடு பதிவு செய்திருக்கிறார்கள் என்பதைக் கேள்விப் படும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

தோழர் ஞாநி அவர்கள் போகிற திக்கெல்லாம் காக்கைகுறித்து பேசுகிறார். ஒரு முறை அவர் விஜய் தொலைக் காட்சியின் விருதுக்கு காக்கையை முன்மொழிகிறார். கரிசல் காட்டு எழுத்தாளர் ராஜ நாராயணன் அவர்கள் தனது 90 ஆவது பிறந்த நாளின் பொழுது அந்த ஆண்டின் சிறந்த சிறு இலக்கியப் பத்திரிக்கைக்கான விருதினைதீரா நதிமற்றும்காக்கைச் சிறகினிலேஇதழ்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்.

புலம் பெயர்ந்து வாழும் தோழர்கள் காக்கையை தங்களுக்கான சிறகாக, ஆயுதமாக, கேடையமாகப் பார்க்கிறார்கள்.

தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் காக்கைக்கு தொடர் தர சித்தமாயிருக்கிறார்கள். உடல்நிலை ஒத்துழைக்க மறுத்தபோதும்கூட ஞாநியும், தோழர் இன்குலாப் அவர்களும் காக்கைக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

காக்கை நன்கு போய் சேர்ந்திருக்கிறது. காக்கை மதிக்கப் படுகிறது. காக்கையை யாராலும் தவிர்க்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இவை எல்லாமும் இருக்கிறதுதான். இதற்கு எங்களது உழைப்பு மட்டுமல்ல வாசகர்களின் பங்கும் நிறைய இருக்கிறது. காக்கையின் வெற்ரியில் என் பங்கு இல்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். என் உழைப்பும் இருக்கவே இருக்கிறது. ஆனால் தோழர்கள் சந்திரசேகர் முத்தையா மற்றும் தோழர் ஏகன் அவர்களின் பங்கும் உழைப்பும் மிக அதிகம். அதிலும் தோழர் முத்தையாவின் உழைப்பும் இழப்பும் பேரதிகம்.

ஏன் எட்வின் இவ்வளவு நீட்டி இழுக்கிறாய்?

காரணம் இருக்கிறது. இதே வீச்சில் இதழ் தொடர்ந்து வரவேண்டும் என்றே நாங்களும் உங்களைப் போலவே ஆசைப் படுகிறோம். அதற்கு புதிது புதிதாய் படைப்பாளிகள் தேவை. அது கடந்து நிதி தேவை.

1)   வாய்ப்புள்ள தோழர்கள் விளம்பரங்கள் வாங்கித் தாருங்கள்.
2)   தங்களது ஊர்களில் காக்கையை விற்பனை செய்வதற்கு அருள் கூர்ந்து முயற்சி செய்யுங்கள்
3)   சந்தா அனுப்புங்கள். சந்தா முடிந்தவர்கள் அருள்கூர்ந்து புதுப்பியுங்கள்
4)   வாய்ப்புள்ள இடங்களில் வாசகர் வட்ட்த்தை கூட்ட இயலுமா பாருங்கள்
5)   நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் திருமணங்களின் போது அவர்கள் பெயரில் சந்தா செலுத்தி அவர்களை நமது வாசகர்களாக்குங்கள்
6)   சந்தா சேகரிப்பை இயக்கமாக நடத்த முடியுமா பாருங்கள். வருகிறோம்.

இதழ் தொய்வின்றி தொடர்வதில் உங்களது கரங்களும் இணையட்டும்.


02.05.2014

இன்று காலை ஏழு மணிக்கு என்னை எழுப்பிய செல்வம் புதிய தலைமுறையில் எனது பதிவு ஒன்று புகைப் படத்துடன் வந்திருப்பதாகச் சொன்னான்.
ஏட்டரை மணி வாக்கில் என் தம்பியின் வகுப்புத் தோழன் அழைத்து புதிய தலைமுறையில் பார்த்ததாக சொன்னான். சற்று நேரத்திற்கெல்லாம் ஆளவந்தார் இதே தகவலோடு பேசினார்.
இடையில் பொன்மலை ராஜா இதே தகவலோடு வந்தான்.
மதியம் கல்விச்சோலை தேவதாஸ் Kalvisolai Devadosskk"என்னன்னா கலக்குறீங்க. பூனைக்கு மணியக் கட்டீடிங்க அண்ணா” என்கிறான்.
Geevee Kavi புதிய தலைமுறையில் பார்த்தேண்டா மாப்ள என்கிறான்.
Kannamma Vijayaraj காலை எட்டு மணிக்கே பார்த்துட்டேனே என்று எழுதுகிறார்.
புதிய தலைமுறை கொடுப்பா என்று கேட்டதும் கடைக்காரத் தம்பி எட்டாம் பக்கத்துல இருக்குங்க அண்ணே என்ற தகவலோடு தருகிறான்.
இவைதாண்டி 20 அழைப்புகள்.
மண்டை காய , கண்களெரிய, உடல் வலிக்க வலிக்க உட்கார்ந்து எத்தனையோ நூறு பக்கங்களை எழுதியிருப்போம். அதற்குரிய வீச்சும் ஆழமும் வேறுதான்.
வெகுஜன ஊடகத்தில் ஒரு சின்ன பதிவு இப்படி ஒரு வெடிப்பைத் தருகிறதே. இப்படித்தான் கல்கியில் கதை வரும் ஒவ்வொரு முறையும் நடக்கிறது.
வெகு ஜன ஊடகங்களில் எழுதுவதில்லை என்கிற என் விரதம் பைத்தியக் காரத் தனமோ என்று படுகிறது. சிற்றிதழ்களுக்கு எழுதியது போக கொஞ்சம் நேரத்தை வெகுஜன ஊடகங்களுக்கு ஒதுக்கலாமோ என்று தோன்றுகிறது.

Friday, May 1, 2015

22 வீட்டுக்கொரு மரம் ....வகுப்புக்கொரு இதழ்

நடத்த முடியுமா?

நடத்துகிறார்கள்.

நடத்தலாம் சரி. தொடர்ந்து  நடத்த முடியுமா?

தொடர்ந்தும்  நடத்துகிறார்கள்.

அப்படியா? அப்படி எனில் அவர்கள் தேர்வில் தோல்வியுற்று அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்று வாழ்க்கையை நாசமாக்கொண்டிருப்பார்கள்.
சத்தியமாய் இல்லை. அனைவரும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று சமூக அக்கறையோடு கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

”என்னதிது?  நல்லா இல்லைனாலும் புரியற மாதிரி எழுதுவாயே. என்ன ஆச்சு எட்வின் உனக்கு?”

ஒன்றுமில்லை. நடத்த முடியுமா? தொடர்ந்து நடத்த முடியுமா? என்பதாக மேலே நீண்ட உரையாடல் சிற்றிதழ் நடத்துவது சம்பந்தமானது. தொடர்ந்து நடத்தி சாதித்துக் காட்டி தொடர்ந்து கொண்டுமிருப்பவர்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்தான் இந்த தொடரோட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலே நிகழ்ந்த உரையாடல் என்பது எனக்குள்ளே நிகழ்ந்ததுதான். கேள்விப் பட்டதிலிருந்து என்னாலேயே நம்ப முடியாமல்தான் குழம்பிக் கிடந்தேன். ஆனால் குறிப்பிட்ட சீரான இடைவெளியில் ( மாதா மாதம் ) வந்துகொண்டிருக்கும் “சமூகமே எந்திரி” , “பேனா முனை” , “சிற்பியின் விதைகள்”, மற்றும் “சுழல்” ஆகிய இதழ்கள் என் முன்னே கிடக்கின்றன.
தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் எந்த வித ஆரவாரமுமின்றி தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் ஒரு மாத இதழோடு தொடர்புடையவன் என்கிற வகையில் மிகுந்த ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிற விஷயமாகவே எனக்கிது படுகிறது.

சிற்றிலக்கிய இதழ்களைப் பொறுத்தவரை முப்பது வருடங்களுக்கு முன்னால் ”செந்தூரம்” தொடக்கவிழாவில் பேராசிரியர் பெரியார்தாசன் பேசியதைத்தன் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சொன்னார்,
“சிறு பத்திரிக்கை நடத்துவதென்பது ஒரு காஸ்ட்லியான தற்கொலை”
அவர் ஏதோ போகிற போக்கில் உதிர்த்துவிட்டுப் போன நகைச்சுவைத் துணுக்கல்ல அது. ஒவ்வொரு இதழும் ஒரு பிரசவம் போன்றது என்பார்கள். அது உண்மைதான். ஆனால் அது ஒரு தற்கொலைக்கு சமம் என்பதை சிற்றிதழோடு தொடர்புடையவர்கள் நன்கு உணர்வார்கள்.
சத்தியமாய் தற்கொலைதான். ஆனால் ஒவ்வொரு இதழ் கொண்டு வருவதற்காகவும் தற்கொலை செய்து கொள்பவன் இதழ் வந்த அடுத்த கணமே உயிர்த்தெழுந்து விடுகிறான்.

இப்படியும் சொல்லலாம், உயிர்த்தெழும் வல்லமை உள்ளவனால் மட்டுமே ஒரு சிற்றிதழை தொடர்ந்து நடத்த முடியும். எனில், மேற்சொன்ன இதழ்களை நடத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் உயிர்த்தெழும் வல்லமை கொண்டவர்களே.

” ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” என்றாள் கிழவி. அது பிள்ளைகளுக்கு சொன்னது. நமக்கல்ல என்பதாக ஆசிரியர்களின் மனோபாவம் சுறுங்கிப் போனதோ என்று அச்சப் படுமளவில்தான் இன்றைய ஆசிரியத் திரளின் ஒரு பகுதி வாசிப்பை விட்டு விலகி நிற்கிறது. பாடத் திட்டத்தை தாண்டி நகரமறுக்கும் ஒரு திரளும் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசினால் செய்தித்தாள்களை வாசிக்காத ஆசிரியர்களையும் நானறிவேன்.

விதி விலக்காக வாசித்துக் குவிக்கிற ஆசிரியப் பெருமக்களும் இருக்கவே செய்கிறார்கள். சொறிபிடித்தவன் கையும் பேனா பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்பாகள். அது மட்டுமல்ல நல்ல புத்தகத்தைப் படித்தவனாலும் சும்மா இருக்க முடியாது. அதுவும் நல்லதை வாசித்த நல்லவன் ஒருவனுக்கு சும்மா இருப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

இதுதான் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியிலும் நடந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தீவிரமான வாசிப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். தீவிர வாசிப்பாளனால் சும்மா இருக்க இயலாது. வாசித்தவை பற்றி அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அது விவாதம் வரை நீண்டிருக்கிறது. ஆழமாய் விவாதித்திருக்கிறார்கள். வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வரைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று ஒரு புள்ளியில் அக்கறை கொள்கிறார்கள். வாசிப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நல்ல இதழ்களை வாசிக்க கொடுத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் கொடுத்த பத்திரிக்கைகளுள் ”காக்கைச் சிறகினிலே” வும் ஒன்று என்பதுமகிழ்ச்சியைத் தருகிறது.

இதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறார்கள். வாரா வாரம் வாசித்தவைகளைப் பற்றி கட்டமைக்கப் படாத அமைப்பாகக் கூடி விவாதிக்கிறார்கள். பையப் பைய இந்த நிகழ்வுகளுக்குள் மாணவர்களும் வருகிறார்கள். இவற்றிற்கு இவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளரிடமிருந்து ஆதரவு கிடைக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்களில் சிலர் எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்கள். எழுதியவற்றை கொண்டுசெல்ல தாங்களே ஒரு இதழைத் தொடங்கினால் என்ன என்று சிந்திக்கிறார்கள். தலைமை ஆசிரியர் “ஆஹா” என்கிறார்.   என் ஆசி எப்போதும் உண்டென்கிறார்  தாளாளர்.
விளைவு அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நடத்தும் “சுழல்” என்ற இதழ் பிறக்கிறது. அந்த இதழின் வெளியீட்டு விழாவை பள்ளி நிர்வாகம் மிகச் சிறப்பாக நடத்துகிறது. ஆசிரியர்களை உச்சி முகந்து கொண்டாடுகிறார் தாளாளர்.

ஆயிரம் பிரதிகள் போடுகிறார்கள், கொண்டு சேர்க்கிறார்கள் என்பது நினைத்தும் பார்க்க முடியாத விஷயம். வந்தவாசியில் இந்த இதழை நான் பார்த்திருக்கிறேன். நேற்று புதுக்கோட்டையில் முத்துநிலவன் வீட்டிலும் சுழலைப் பார்க்கிறேன். பரவலாய் நாடு முழுக்கக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆயிரம் பிரதிகள் என்பது லேசான காரியமே இல்லை. அது எவ்வளவு கடினமென்பது எனக்குத் தெரியும். வெறும் 300 பிரதிகளைத் தாண்டாத வலுவான சிற்றிதழ்களை நானறிவேன். எப்படி இந்த அதிசயத்தை இவர்கள் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள்?

ஒரு சிறு பத்திரிக்கை நடத்த முதலில் பணம் தேவை. அதைத் தொடர்ந்து படைப்புகள். அதனைத் தொடர்ந்து இதழை நடத்த ஒரு குழு.
சுழல் நடத்த மாதா மாதம் தோறாயமாக எட்டாயிரம் ரூபாய் தேவைப் படுகிறது என்கிறார் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர். இதை எப்படி சமாளிக்கிறார்கள்?

500 சந்தாதாரர்கள் இருப்பதாக அவர் சொன்னபோது நான் வியப்பின் உச்ச்சிக்கே போனேன். முழுநேரமாய் பத்திரிக்கைத் தொழிலை செய்யக்கூடிய நண்பர்களுக்கே இது சாத்தியப் படாத ஒன்றுதான்.

வருட சந்தா எண்பது ரூபாய் என்கிறார்கள். எனில் இந்த வகையில் 40000 ரூபாய் வருகிறது. இந்த வகையில் மாதம் 3000 ரூபாய் ஒதுங்குகிறது. விற்பனையில் 3000 வருகிறது என்கிறார். எவ்வளவு ஆச்சரியமான விஷயம். மிச்சத்தை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதைப் பார்த்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஏன் நமக்கென நாமே ஒரு இதழைத் தொடங்கக் கூடாது என்று சிந்திக்கிறார்கள். விளைவு, “சமூகமே எந்திரி” என்ற இதழ் உதயமாகி உள்ளது. தஙளது ஆசிரியர்களுக்கு இதழ் நடத்துவதில் ஏற்பட்ட அனுபவங்களை உள் வாங்கியவர்களாக அவர்கள் இதழை ஆரம்பித்துள்ளார்கள்.. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இதழ் இது எனில் அடுத்த ஆண்டு இந்த மாணவர்கள் வெளியேறிவிடுவார்களே? என்றேன். அடுத்த ஆண்டும் பத்தாம் வகுப்பு இருக்கும். அதிலும் மாணவர்க இருப்பார்கள். அவர்கள் தொடர்வார்கள் என்கிறார்.

இப்படித்தான் “பேனா முனை” “சிற்பிகளின் விதை” ஆகிய இதழ்களும் வெளி வருகின்றன

“அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாகவும் அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாகவும் மாற்றுவது கல்வி. ஆனால், இன்றைய நிலையில் கல்வியானது வெறும் பணம் சம்பாரிக்கும் தொழிலாக மாறிவிட்டது”
இது எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் எழுதிய தலையங்கம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை

கூடங்குளத்தைப் பற்றி இப்படி கவிதையாக்குகிறான் ஜா. முத்து என்கிற ஒன்பதாம் வகுப்பு மாணவன்,

“கரண்டுக்காக
கல்லறையைக் கட்டி ஏமாந்தான்
இந்தியன்.”

இதுபோல நிறையத் தெறிப்புகளை இந்த இதழ்களில் நம்மால் பார்க்க முடிகிறது.

இதில் வெளிவந்த கவிதைகளை தொகுத்து “மொட்டுகளின் வாசம்” கவிதை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள் பள்ளியின் நிர்வாகக் குழுவினர். பெரிய விழாவெடுத்து இந்தத் தொகுப்பினை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறர்கள் பள்ளியின் தாளாளரும் தலைமை ஆசிரியரும். இதைப் பள்ளியின்
69 வது ஆண்டுவிழா வெளியீடு எனச் சொல்லி பெருமை பட்டிருக்கிறார்கள்.
நிறைய பிம்பங்களை கட்டுடைத்திருக்கிறார்கள் இந்தப் பள்ளியின் நிர்வாகிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும்.

1 ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சமூக அக்கறை அவ்வளவாக இல்லை என்று விஷம்போலப் பரவி வரும் பொதுப் புத்தியைத் தகர்த்து தூளாக்கியிருக்கிறார்கள்.

2 இதுமாதிரி நடவடிக்கைகள் மாணவர்களை கல்வியிலிருந்து அப்புறப் படுத்தும் என்கிற பொதுவான குற்றச்சாட்டினையும் தங்களது தேர்ச்சி விழுக்காடு மற்றும் அதிக மதிப்பெண்கள் மூலம் சரித்துப் போட்டிருக்கிறார்கள்.

3 படிப்பு படிப்பு படிப்பு என்கிற நிலை மட்டுமே மாணவனின் எதிர்காலத்தை செறிவாக்கும் என்கிற பிம்பத்தையும் தகர்த்துப் போட்டிருக்கிறார்கள்.
4 ஆசிரியர்களும் மாணவர்களும் நிர்வாகமும் எந்தப் புள்ளியிலும் ஒன்றிணைய முடியாது என்கிற கருத்தையும் துடைத்தெறிந்திருக்கிறார்கள்.
இதுமாதிரியான ஒன்றிணைவும் புரிதலும் இருந்து விட்டால் எந்த மாணவனும் ஆசிரியனுக்கெதிராக கத்தியைத் தூக்கமாட்டான். அந்த வகையில் இந்தப் பள்ளி ஒரு முன்னுதாரனமாக விளங்குகிறது.
இன்றைய நமது எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் படித்த பள்ளி, முன்னாள் அமைச்சர் இராம வீரப்பன் அவர்கள் படித்த பள்ளி என்பதிலெல்லாம் எவ்வளவு பெருமையும் மகிழ்வும் கிடைக்கிறதோ அதற்கு சற்றும் குறையாத அளவு மகிழ்ச்சியும் பெருமையும் இதில் இத்தகைய மாணவர்களாலும் மாணவர்களாலும் பள்ளிக்குக் கிடைப்பதாகவே நிர்வாகியும் தலைமை ஆசிரியரும் நம்புகிறார்கள்.

ஆசிரியர்கள் பத்திரிக்கை நடத்துகிறார்கள். பத்தாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களும் பத்திரிக்கை நடத்துகிறார்கள்.

அடுத்து?

ஒரு ஆசிரியர் சொல்கிறார்,

”ஒரு வீடு ஒரு மரம் என்பது போல் ஒரு வகுப்பு ஒரு இதழ் என்பதே எங்கள் கனவு”

கனவு பலிக்கட்டும்.

நன்றி : “ காக்கைச் சிறகினிலே”

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...