Thursday, February 12, 2026

இவரையும் இவரது எழுத்தையும் யாராலும் நேசிக்காமல் கடந்துபோக முடியாது

 



சிறுவயது கீர்த்தியை இப்படிக் கொஞ்சியதில்லை,
விரும்பி இல்லறத்தில் இணைந்து,
மகிழ்ந்து பரத்தை இம்சைப் படுத்துகிற,
அதைவிடவும் மகிழ்ந்து அவனிடம் இம்சைப்படுகிற,
26 வயது கீர்த்தியை அப்படிக் கொஞ்சுகிறேன்
பத்து நாட்களுக்கு முன்பு ஒரு நாள்,
‘MD முடிச்சிட்டு, ஏதேனுமொரு காலேஜ்ல வேலைக்கு சேர்ந்துட்டு, அப்படியே ஒரு கிளினிக்கும் வச்சிட்டு… ஒரு அஞ்சு வருஷம் பொறுப்பா ஒரு கார் வாங்கித் தரேன்’’என்று கீர்த்தி சொன்னாள்
ரகசியமாய் அப்படி ஒரு அழுகை அழுதேன்
இந்த அன்பை, ஈரத்தை, அது தந்த சுகத்தை கவிதையாக்க நினைத்திருந்தேன்
முடியவில்லை
ஆனால் அந்தக் கலை துஷ்யந்த் சரவணனுக்கு அழகாய் வாய்த்திருக்கிறது
அவர்மீது பொறாமையாகக்கூட இருக்கிறது
நண்பானாக, தோழனாக மட்டுமே வாழ்ந்து பழகிய எனக்கு எஞ்சிய காலத்தை அப்பனாக மட்டுமே வாழ்ந்து கடக்க வாய்க்காதா என்று ஆசை வந்திருக்கிற வேளையில் தோழர் துஷ்யந்த் சரவணாராஜ் அவர்களின் ’’மகள் கையளித்த மயிற்பீலிகள்”’ வந்து சேர்ந்திருக்கிறது
புத்தகம் அழகாக வந்திருக்கிறது
அவரும் அவரது குழந்தையும் இறுக அணைந்தபடி குத்துவிளக்கின் ஒளியில் பேரழகாகப் பிரகாசிக்கிறார்கள்
அவர்கள் காலங்காலத்திற்கும் இதே மகிழ்வோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
வாழ்த்துகிறேன்
எனக்கு காடு பிடிக்கும். அடர்காடென்றால் அப்படிப் பிடிக்கும். அதுவும் இருண்ட அடர்காட்டிற்காக அடம்பிடித்து தவமிருப்பவன் நான்
அவருக்கும் அப்படித்தான்
எழுதுகிறார்,
“வாழ்வு
அடரிருட் காடு
மகள்
தூரத்து விளக்கு”’
நட்சத்திரங்களைக் குறித்து எழுதும்போது ‘தூரத்து ஊரின் தெரு விளக்கு’ என்று எழுதுவார் பாரதிதாசன்
இதை மட்டும் இருந்து படித்திருந்தால், ‘ஆகா’ என்று அவர் பாராட்டி இருப்பார்
எனக்கு அடரிருட் காடு. துஷ்யந்த்துக்கு மகளெனும் ஒளிபடர்ந்த அடர்க்காடு.
கிழவனாகி நான் கண்டுணர்ந்த மகளெனும் ஒளியின் மகத்துவத்தை துஷ்யந்த் தனது சிறு வயதிலேயே உணர்ந்து பிடித்துக் கொண்டிருக்கிறார்
’தேடல்
நல்லது
தேட எதையேனும்
தொலைக்கலாம்
முதலில்
தொலைக்க எதையேனும்
தேடலாம்’
என்று நான் எழுதினேன்
அவரோ என்னை மிஞ்சுகிறார்
’தேடுவதற்கு
மகளிருக்கிறாள்
தொலைவதற்கு
வருத்தமில்லை’
என்கிறார்.
இப்பவும்பொறாமையாகத்தான் இருக்கிறது
’ஏகத்துக்கும் சிதைந்து
முகமும் உடலும்
எஞ்சித் தெரிந்த
சிறுபகுதி இட முலையும்
எண்ணெய்ப் பிசுக்கும்
துண்ணூறும் குங்குமமும் போதுமந்த
அசலூர்க்காரனுக்கு
பொம்பள சாமி அது எனப்
பிடித்துக் கொள்ள
நொடிக்கு நொடி
தாயேயெனக் கும்பிட்டான்
சுத்திக் கிடந்த செத்தைகளை
பெருக்கித் தள்ளியவன்
சுகத்தையும் படிப்பையும்
வேலையையும்
கலங்காத நல்ல வாழ்க்கையையும்
தன் ஒத்தை மகளுக்காய் யாசித்தவாறே
வரவா தாயே
மழ ஓஞ்சிருச்சு
என நகர்ந்தவனுக்கு
கேட்டிருக்க நியாயமில்லை
போய்வா தந்தையே என்ற
தெய்வத்தின் குரல்’
என்று எனக்கு நீட்டி முழக்க வேண்டி இருப்பதை இவரோ
‘கோயில் வாசலில்
மகளைக் கொஞ்சுகிறான்
தந்தை
அம்மன்
சன்னதியில் இருந்து
சன்னமாய்க்
கேட்கிறது
விசும்பல்’
என்று போகிற போக்கில் நச்செனத் தெளித்துவிட்டு கடந்து போகிறார்
மகள்களை நேசிக்காத யாரும் இருக்க முடியாது,
எனில்,
இவரையும் இவரது எழுத்தையும் யாராலும் நேசிக்காமல் கடந்துபோக முடியாது
நூல் வாங்க
மௌவல்
21/9 வரதர் தெற்கு மடவிளாகம் தெரு
வலங்கைமான் 612804
திருவாரூர் மாவடம்
9787709687
11.02.2026

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...