Saturday, September 7, 2019

பக்க எண்களுக்குள் கட்டுப்படாத ”இந்த நூற்றாண்டின் போதிமரம்”


நேற்று (23.08.2019) தோழர் பசு கௌதமன் அவர்களது ரிவோல்ட் அமைப்பும் தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறையும் இணைந்து நடத்திய தந்தை பெரியார் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிவிட்டு பெரம்பலூர் வருவத மாலை ஐந்தாகிவிட்டது.
வரும்போது ஒரு ப்ளக்ஸ் கண்ணில் பட்டது
தோழர் ச.மோகன் அவர்களது ”இந்த நூற்றாண்டின் போதிமரம்” என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா
தம்பி நாணல் ( Naanarkaadan Sara ) வருவதாகவும் ப்ளக்ஸ் கூறியது
வீடு சென்று திரும்புவதற்குள் நிகழ்ச்சி முடிந்திருந்தது
தம்பி மோகன் நூலைக் கொடுத்தான்
எப்படி இருக்கு என்று புரட்டத் தொடங்கினேன்
இறுதிப் பக்கத்தில்,
“வீணையோ யாழோ
இன்னபிற எதன் நரம்புகளாலும்
மீட்டிட முடியாத
எல்லையற்ற ஏகாந்த இசை”
என்று மௌனத்தைக் கொண்டாடுகிறான்
அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறான்,
“மௌனத்தின் இசையை
உணாரும் மனதை
அன்பினால் நிறைத்துப் பார்
சொர்க்கமாகும் இந்த பூமி”
ஆச்சரியமாய் இருக்கிறது,
மௌனமும் அன்பும் சேரும் புள்ளியில் சொர்க்கமாகும் பூமி என்கிற ஞானம் கசிகிற வயசா இவனுக்கு?
உற்றுப் பார்க்கிறேன்,
அந்தப் பக்கத்தில் பக்க எண் இல்லை. விடுபட்டு போயிருக்கும் என்று எண்ணியவனாய் தேடுகிறேன்,
எந்தப் பக்கத்திலும் பக்க எண் இல்லை
எனில், வேண்டும் என்றே விட்டிருக்கிறான்
உண்மைதான்
பக்க எண்களுக்குள் கட்டுப்படாதவையாகவே அவனது கவிதைகள் இருக்கின்றன
”உன்னில் இருந்து உன்னைக் கழட்டி எறி” என்று சொல்வதற்கே ஞானிகளுக்குக் கூட ஐம்பது ஆண்டுகள் ஆகிறது
இநதச் சின்னப் பிள்ளை எழுதுகிறான்,
“என்னை நான்
தூர எறிந்துப் பழகுகிறேன்
எதுவும் நிகழவில்லை”
இந்த இடத்தில் இருந்தே நகரமுடியாதவனாய் அதிர்ந்து நிற்கிறேன். அடுத்து அடிக்கிறான்
நிகழ்வுகள் என்பதிலும்
எதுவுமில்லை
எப்படி வாய்க்கிறது இந்தப் பிள்ளைக்கு அறுபது வயதின் அனுபவ முதிர்ச்சி என்று அசைபோடக்கூட அனுமதிக்காமல் அடுத்து சாத்துகிறான்
“”தொலைவில் நம்மை எறிகிறபோது
அருகே முத்தமிடும் வாழ்க்கை
சத்தியமாய் நெஞ்சிலே கை வைத்து கொஞ்சமும் ஆசுவாசப் படுத்த அனுமதிக்காமல்
“நீங்கள் நினைக்கும்
முத்த ரகமல்ல
அது ஒரு குழந்தையினுடையது”
என்கிறான்.
அய்யோ அய்யோ,
என் கண்களில் படாமல் எங்கேடா இருந்தாய் இத்தனை நாளாய்?
மரணத்தைக் கண்டு அஞ்சுபவர்களைப் பார்த்திருக்கிறேன்
மரணத்தை நேசித்தவர்களை நான் அறிவேன்
மரணத்தையும் பிறத்தலையும்
“உறங்குவதுபோலும் சாக்காடு
உறங்கி விழிப்பது போலும்” என்று ஜனனத்தையும் மரணத்தையும் வாழ்க்கையின் மனித செயல்பாடுகளில் ஒன்றாகவே கண்டிருக்கிறார்கள் நம் கிழவர்கள்
“ஒரே ஒரு முறை
செத்துப் பார்
மரண பயம் போய் விடும் “
என்கிறான் ஒரு ஜென்காரன்
மோகனோ
“”பெரு நகரத்தில்
விலாசம்
தொலைந்தவனின்
தேடலைப் போல்தான்
வாழ்க்கையும்
மரணமும்”
என்கிறான்.
வாழ்க்கையும் மரணமும் ஒன்றுதான் என்று நிலை வருவதற்கு ஒருவன் நிறைய வாழ்ந்திருக்க வேண்டும்.
முப்பது வயதிற்குள் ஒரு முன்னூறு ஆண்டுகால வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறான் பிள்ளை
ஒரு கவிதையின் முடிவில் சொல்கிறான்
“”இனி புராணங்களைத்தான்
வாசிக்க வேண்டும்
அவைகளில்தான்
இன்னும் அப்படியே இருக்கின்றன
பொற்றாமரைக் குளங்கள்”
இன்னொரு கவிதை
“மரங்களை நான்
கவிதையாக்கி முடிக்கும்வரை
இலையுதிர்காலமே
நீ கொஞ்சம் எட்டி நில்”
இவை இரண்டும் எனக்கு கீட்ஸின் “ODE ON A GRECIAN URN" என்ற உலகப் புகழ் பெற்ற கவிதையை நோக்கி த் தள்ளுகின்றன
Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal – yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!
என்று கீட்ஸ் எழுதுவான்
ஒரு இளைஞன் ஒரு யுவதியை முத்தமிடப் போகிறான்
அவள் ஓடுகிறாள்
ஒரு தேநீர்க் குவளையில் இருக்கும் படம் இது
இதைப் பார்த்ததும் கீட்ஸ் மேலே சொன்னதை எழுதுகிறான்
எப்படி இவனால் இப்படி முடிகிறது?
அவனே சொல்கிறான்,
“எதிர் வீட்டுக்காரனின்
எப்போதோ
நண்பனாக இருந்தவனின்
மனைவியின்
மகனின்
அவனின் இவனின்
எவனின் வசுவகளையும்
கடந்து போகிறேன்”
இந்தக் கடந்துபோகும் ஞானம் எளிதில் வாய்க்காதது
இவனுக்கு வாய்த்திருக்கிறது
வெகுநாட்களுக்கு அப்புறம் ஒரு நூல் முழுக்க கவிதைகளைப் பார்த்த ஆனந்தம்
தொடர்புக்கு
மோகன்
5/352 - செல்லியம்மன் நகர்
கிருஷ்ணாபுரம்
பெரம்பலூர் மாவட்டம்
621116

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...